"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார்;
                                                அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்."

                                                                                               சங்கீதம் 121:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

      ஒருபகுதி ஊழியத்தின் போது கூட்டம் முடிவிலே ஒருவர் ஜெபிக்க வந்தார். அவருடைய மூச்சு விடுகிற காரியங்களில் சற்று போராட்டம் இருப்பதை உணர்ந்தேன். அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். உங்கள் பக்கத்தில் ஏதாவது குளத்தில்/ஏரியில் தண்ணீரில் விழுந்து யாராவது மறித்து போய் விட்டார்களா என்று கேட்டேன். ஆமாம் என்று கூறியதோடு, மரித்துப்போன மனிதனின் சடலத்தை என் கைகளினால் சுமந்து தரைக்கு கொண்டு வந்தேன் என்றார். அன்று பயந்தீர்களா என்றேன். ஆனால் அவர் இல்ல என்றார். அவரை அறியாமல் அவருக்குள் பயம் வந்த படியால் சிறிய அளவில் அவர் மூச்சு விடுகிற காரியத்தில் பிரச்னை வந்தது. ஆனால் ஜெப வேளைக்குப்பின் அவரில் ஏற்பட்ட வித்தியாசம் அவர் பெலவீனம் நீங்கி புது பெலன் அடையச் செய்தது.

     அன்பின் தேவப்பிள்ளையே, உன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் நீ கலங்கி, பயந்து சோர்ந்து போய் இருக்கிறாயா? உன்னை நேசிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னில் விசுவாசம் வளரவும், சுகமடைந்து சாட்சியாக அநேகருக்குச் சொல்லவும் தெரிந்து கொண்டிருக்கிறார். இன்றே பெலனடைந்து, பயம் நீங்கி, கர்த்தரின் சுகத்தைப் பெற உன்னை அர்ப்பணித்து விடு. அவர் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.

சகோ.C. எபனேசர் பால்.