"…கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்;
                                                 உன் துக்க நாட்கள் முடிந்துபோம்."

                                                                                                                       ஏசாயா 60:20

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இன்று மனிதர்களுடைய வாழ்க்கையில் துக்கமும் துயரமும் நிறைந்து கலங்கி கண்ணீரோடு வாழ்கிறதைப்  பார்க்க முடிகிறது. இவ்விதமமாய் வாழ்கிற மக்கள் நான் ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை  உடையவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பிசாசானவன் துக்கம் பெருகியிருக்கிற நேரத்தில் தந்திரமான களைகளை விதைத்து மனிதர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட நிலையில் வாழ்கிற மக்களுக்கு வேதம் ஒரு மனமகிழ்ச்சியாயிருக்கிறது, ஆறுதலாயிருக்கிறது, ஆசீர்வாதமாயும் இருக்கிறது. அவர்களின் உடைந்த உள்ளத்தை தேற்றுகிறதாய் மாற்றுகிறதாய் இருக்கிறது. அவர்களுக்கு இந்த ஆவியும் ஜீவனும் நிறைந்த வசனங்கள் வாழ்க்கையில் மெய்யான சந்தோஷம் உண்டாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு வருகிறது. மனிதர்களின் துக்கமானது ஆத்துமாவை நிறைத்து விடுகிறது (சங்.88:3). ஆனால் இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் துக்கத்தையெல்லாம் சந்தோஷமாக மாற்றுவேன் என்று யோவான் 16:20ல் சொல்கிறார்.

 

I. துக்கத்தினால் வரும் தீமைகள்? 

 

1)ஆத்துமா, வயிறு, கண்ணும் கருகிப்போகிறது

"...துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று." சங்கீதம். 31:19.

        கருகின நிலை என்றால் செயலிழந்த நிலை. இனி தழைத்து செழிப்படைய முடியாத போராட்டமான நிலை. நாம் ஒரு செடி வளர்ப்போமானால் அதின் இலைகள் கருகும் என்றால் இனி அது வளரமுடியாது, பிரயோஜனமற்றது என அதைப் பிடுங்கி தூக்கி எரிந்து விடுவோம். வயிறு கருகுதல் என்றால் எந்த சாப்பாடும் சாப்பிடுவதற்கு  மனதில்லாத வேதனை நிறைந்த ஒரு நிலமை. ஒரு முறை ஒரு சகோதரிக்காக ஜெபிக்க அழைக்கப்பட்டேன். அந்த குடும்பத்தார் முதலாவது சொன்ன பிரச்சனை, இவள் சாப்பிட மாட்டேன் என்கிறாள். அவ்வப்போது தண்ணீர் குடிக்கிறாள். ஆகவே நாங்கள் சத்துவமுள்ள குடிக்கக் கூடியவைகளைக்  கொடுக்கிறோம். எத்தனையோ கிலோ குறைந்து விட்டாள் என்று கூறினார்கள். எந்த வேலையும் செய்ய முடியாது எப்பொழுதும் படுத்தேயிருக்கின்ற ஒரு வாழ்க்கை தான் வாழ்கிறாள் என்றார்கள். அவளுக்குள் உண்டான துக்கம் அவளுடைய மனக்கண்களைக் குருடாக்கி, ஆத்துமாவைச் செயலற்றதாய் மாறச் செய்துவிட்டது.

       இன்று அநேகர் துக்கத்தினால் ஒரு வேலையும் செய்ய முடியாது எப்பொழுதும் படுத்துக்கொண்டே துக்கத்திற்கு காரணமான காரியங்களை எண்ணி புலம்பிக் கொண்டிருக்கிறதை நாம் பார்க்க முடிகிறது. சிலருடைய வாழ்க்கையிலே துக்கமானது அவர்களை பைத்தியக்காரர்களைப் போல மாற்றிவிடுகிறது.

 

2.ஆவியின் முறிவை உண்டாக்குகிறது

"...மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்." நீதிமொழிகள் 15:13

               சிலருடைய வாழ்க்கையிலே ஆவி முறிவு ஏற்படுமானால் அவர்கள் எதையுமே செய்ய முடியாத மனநோயாளிகளாய் மாறிவிடுவார்கள். அவர்களுக்குள்ளாய் உண்டாகும் இந்த மனநோய் எந்த வேலையும் செய்ய முடியாமல் எந்த படிப்பும் படிக்கமுடியாதவர்களாய் மாறி விடுவார்கள். அவர்களுக்குள்ளாய் இருந்த ஞானம் தாலந்துகள் அனைத்தும் வீணாக மாறி விடும். நான் வாலிபனாய் இருந்தபோது நன்றாக பாடக்கூடிய தாலந்துடைய ஒருவன் இருந்தான். அவனுக்குள்ளாய் மனநோயின் தாக்குதல் ஏற்பட்டது. அவன் ஆவியின் முறிவினாலே சில நேரங்களில் சிரிப்பான், சில நேரம் பாட்டுபாடுவான். சில நேரம் வீட்டில் உள்ள எல்லார் மீதும் கோபப்படுவான். அவனுக்குள் துக்கத்தினால் ஏற்பட்ட ஆவியின் முறிவு அவனது வாழ்க்கையை சமாதானமற்றதாய் மாற்றியது. அவன் பெற்றோருக்கும் சகோதரிகளுக்கும் மிகுந்த பாரச்சுமையாய் மாறினான். இளம் வயதிலேயே அவன் தன் ஜீவனை இழந்தான். அவனுக்குள் தன் பெற்றோர்களின் நிமித்தமாக உண்டான கவலை அவன் ஆவியை முறியச்செய்துவிட்டது. இன்றைக்கு அநேக பெற்றோர்களுடைய வாழ்க்கை பிள்ளைகளிலே மனதுக்கத்தைப் பெருகச் செய்து, ஆவியின் முறிவை உண்டாக்கி, அவர்களை மனநோயாளிகளாய் மாற்றுகிறதைப் பார்க்கிறோம். இந்த மனநோயின் தன்மை அதிகரிக்கும் போது தாங்கள் செய்வது என்ன என்று அறியாதபடி தீதானவைகளை, தவறானவைகளை உணராது, அறியாது செய்துவிடுவார்கள். மனோதுக்கத்தினாலே அவர்கள் வாழ்க்கை சஞ்சலம் நிறைந்ததாய் மாறுவதோடு, தன்னுடன் யாரோ பேசுவதைப்போலவும் சத்தங்களைக் கேட்கிறபடியே தங்கள் காரியங்களை தவறாய் செய்வார்கள். இவ்விதமான மக்களை அதிகமாக பார்க்க முடிகிறது. எந்த வேலையும் நிலைவரமாய் செய்ய முடியாதவர்களாய் தங்களின் வேலையை, தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

 

3) மரணத்தை விளைவிக்கும்

"...லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." 2 கொரிந்தியர் 7:10

      இன்று உலகப்பிரகாரமான துக்கங்கள் வேதனையான முடிவைக் கொண்டு வருகிறது. பல தவறான விருப்பங்கள், வாஞ்சைகள், கேடான காரியங்கள் அநேகரில் மரணத்தை விளைவிக்கிறதைப் பார்க்கிறோம். நாங்கள் விளையாடக்கூடிய இடத்திலே ஒருசில வாலிப மக்களும் உட்கார்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அதில் ஒருவன் உலகப்பிரகாரமான பாடல்களை இயற்றி பாடுகிறவனாய் இருந்தான். அவன் வசித்த வீட்டிற்கு எதிர்புறத்தில் இருந்த ஒரு பெண்ணை தன் உள்ளத்தில் நேசிக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் பெற்றோர்கள் அந்த மகளுக்கே திருமணத்தை ஒழுங்கு செய்தார்கள். திருமணம் நடைப்பெற் நாளில் அவனில் தோன்றின துக்கம் தவறான நிலைக்கு வழிநடத்தியது. அவன் தற்கொலை செய்துகொண்டான். இன்று அநேகர் பல தவறான இவ்வுலக ஆசைகளைக் கொண்டு தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள்.

        விசுவாசிகள்கூட பல தவறான உபதேசங்களினால் லௌகிக ஆசைக்கு அடிமையாகி வேதனையான முடிவை அடைகிறார்கள். ஒரு முறை போதகர் ஒருவர் தன்னுடைய ஆலயத்திற்கு எதிராக இருந்த பள்ளிக்கூடம் தன் ஆலய விஸ்தீரணத்திற்குத் தேவை என்று இரவிலே அதை மூன்று முறை சுற்றி வருவார். அவர்களோடு நான் தங்கியிருந்த போது ஏன் இதைச் சுற்றி வருகிறீர்கள் என்ற போது, வெளி வந்த ஒரு தேவ மனிதரின் புஸ்தகத்தை எனக்கு காண்பித்தார். இதில் சொல்லியிருக்கிற காரியத்தின்படி நான் சுற்றி வருகிறேன் என்று சொன்னார். தவறான போதனைகளுக்கு இடங்கொடாது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். பிறனுடைய பொருளை இச்சியாதிருப்பாயாக என்று வேதம் சொல்கிறது. அதை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். கர்த்தர் இந்த இடத்தைத் தருவார் என்று சிலர் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார்கள் என்றும் சொன்னார். நீங்கள் இந்த இடத்தை ஒருக்காலும் பெற மாட்டீர்கள். தவறான போதனையினால் உண்டான ஆசை உங்கள் ஜீவனையும் கசப்பாக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினேன். அந்த போதகரின் வாழ்க்கையில் திடீரென தோன்றின வியாதியினால் மரித்தும் போனார்.

           இன்று லௌகிக ஆசைகளைத் தூண்டுகிற தவறான தரிசனத்தை நம்பி பாதிக்கப்படுகிறவர்கள் அநேகர். கர்த்தர் எனக்குச் சொன்னார், எனக்குச் செய்யவில்லை என்று கர்த்தரைக் குறை கூறி துயரமடைகிற பின் மாற்றம் அடைகிற மக்கள் மிகுதி. இந்த லௌகிக ஆசைகளுக்கு அல்ல, ஆவிக்குரிய நல் ஆசீர்வாதங்களைப்  பெற உள்ளத்தில் எண்ணம் கொண்டு வாழ்வோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

 

II.துக்கம் ஏன் தோன்றுகிறது?

1)பாவத்தினால் துக்கம் உண்டாகிறது 

"ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே." நீதிமொழிகள் 23:29,30

இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் சந்தோஷத்தை, சமாதானத்தை, சுகத்தை இழந்து துக்கத்தோடு திரிகிற மக்களை நாம் பார்க்கிறோம். இந்தத் தீய பழக்கத்தினாலே மேலான நல்ல வேலையை இழந்து அறிமுகமான நபர்களிடத்திலே 5ரூ, 10ரூ, கொடு என்று கேட்டு வாங்கி குடித்துக் கெடுத்துக் கொள்கிற மக்கள் ஏராளம் உண்டு. நான் கல்லூரியில் படிக்கும்போது, இந்தியாவிற்கு விளையாடவேண்டிய ஒரு விளையாட்டு வீரர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மேன்மையான விளையாடும் தகுதியை இழந்து போனார். இன்னும் அவருடைய வாழ்க்கையிலே ஒரு  பெரிய கம்பெனியிலே கால்பந்தாட்ட பயிற்சியாளராக வேலை கிடைத்தது. சிறிது காலம் வேலை செய்தார். அந்த பாவப்பழக்கம் அங்கும் இருக்கமுடியாதபடி கம்பெல்சரியாக வேலையைவிட நேரிட்டது. அவருடைய மனைவி பிள்ளைகள் அவரின் பக்க வழக்கத்தினால் துக்கம் அடைந்தார்கள் அவருடைய வாழ்வும் துக்கமும் துயரமுமாய் மாறியது. இன்று அநேகர் இந்த குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தங்கள் வாழ்க்கையிலே வேதனையையும், சரீர பெலவீனத்தையும் அடைந்து தங்கள் வாழ்நாட்களை கசப்பாக்கிக் கொள்கிறார்கள். பல I.T. கம்பெனிகளிலே பணிபுரிபவர்கள் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை பார்ட்டி என்று குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தாங்கள்  உணராதபடி அறியாதபடி இப்பழக்கத்தினால் உண்டாகிற துக்கத்தை அடைகிறார்கள்.

2)தங்கள் கைகளின் பிரயாசத்தில் குறைகள் காணும்போது துக்கம்

"உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக்கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும் வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்." ஏசாயா 17:10,11

        இன்று கர்த்தரை மறந்து நம் காரியங்களை நேர்த்தியாய் செய்ய பலவிதங்களில் செயல்படுகிறோம். எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று பாராட்டுவோரும் மிகுதியாயிருப்பார்கள். ஆனால் பலனைக் காணும் நாளில்தான் அதிலுள்ள குறைவும் போராட்டமும் மிகுந்த கசப்பை, துக்கத்தைக் கொண்டுவந்துவிடுகிறது.

               என் வாழ்க்கையிலே victory sports shop - என்று கடை ஒன்றை ஒருவரோடு இணைந்து நடத்தி வந்தேன். ஒவ்வொரு நாளும் விளையாட்டு சாமான்களை வாங்குகிறமக்கள் கூட்டமாய் வருவார்கள். பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாரும் மிகுதியான அளவிலே விளையாட்டு பொருட்களை வாங்கினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத காலம். அவரை நினைக்கிற நினைவுகள் குறைவானவைகள். ஜெபம் இல்லாத வாழ்க்கை. எனக்குள் வேதனையான நோய் தோன்றினபோது நான் இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் வழி நடக்க என்னை அர்ப்பணித்தேன். அதுவரை நடத்தி வந்த கடையை விட்டுவிலக கணக்குப் பார்த்தபோது, எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. துக்கத்தைத் தான் கொண்டு வந்தது. அத்தனைக்காலமும் உழைத்த உழைப்பு ஒன்றுமில்லாததாய் மாறியது. இன்று நம்முடைய வாழ்க்கையிலே அவரை நினையாது செயல்படுவோமானால் நாம் செய்கிற எல்லாக் காரியங்களின் பலனும் ஒன்றுமில்லாது துக்கத்தைத் தருகிறதாய் இருக்கிறது.

3) இழப்பினால் வந்த துக்கம்

"வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள். யோபு 2:13

      யோபு தன் வாழ்க்கையிலே தன் செல்வத்தையெல்லாம் இழந்து, பிள்ளைகளையும் இழந்து வேதனையான நோயினால் பாடு அனுபவித்துக் கொண்டிருந்த வேளையிலே அவனது மனைவியின் வார்த்தைகள் இன்னும் வேதனையை கூட்டியது. தேவனை தூஷித்து ஜீவனை விடும் என்ற மனைவியின் வார்த்தைகள் அவனை மிகுதியான துக்கத்தினால் நிறைத்துவிட்டது. அவன் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்திருந்த போது, அவனுடைய நண்பர்கள் அவனைக் கண்டு மிகுதியான துக்கத்தினால் அவன் நிறைந்திருக்கிறான் என்று அவனுடன் எந்த வார்த்தைகளும் பேசாது அவனுடன் ஏழு நாட்கள் இருந்தார்கள். யோபுவின் வாழ்க்கையிலே தந்திரமான காரியத்தைச் செய்ய தேவன் சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார். யோபு உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். தேவன் யோபுவைத் தொடுவதற்கு அனுமதி கொடுத்தார். அவனுக்கு இருந்த வேலியை எடுத்தார். அதனால் இந்த இழப்பினால் வேதனை அவனுக்குள் பெருகிற்று. நம்முடைய வாழ்க்கையிலும் பிசாசினாலுண்டான தடைகள், சேதங்கள் கசப்புகளையும் துக்கத்தையும் பெருகச் செய்து விடுகிறது.

 

4) அளிக்கப்படவேண்டும் என்ற செய்தி துக்கத்தை ஏற்படுத்தும்

"இராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்." எஸ்தர் 4:3

       ஆமான் மொர்தெகாயை வெறுத்தான், அவனையும் அவனுடைய ஜனங்களையும் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தனக்குக் கொடுக்கப்பட்ட மேன்மையான நிலையிலிருந்து ராஜாவுக்குத் தந்திரமான வார்த்தைகளைச் சொல்லி, எல்லா நாட்டவருக்கும் பாஷைக்காரருக்கும் ஆதார் மாதம் 13ம் தேதியிலே ஒரேநாளில் யூதர்கள் அளிக்கப்பட அந்தந்த ஊர்களுக்கும் பிரபுக்களும் ராஜாவின் முத்திரையிலே அஞ்சற்காரர் கையிலே கட்டளை அனுப்பப்பட்டது. இந்தச் செய்தி யூதர்களுக்கு துக்கத்தை மிகுதியாய் உண்டாக்கியது. நாம் என்ன செய்வோம் என்ற வேதனை கசப்பு நிறைந்த போராட்டம் நிறைந்த செய்தியினாலே துக்கம் புலம்பல் நிறைந்து பெருகிற்று. வாழ்க்கையிலே துக்க செய்திகள் நமக்கு எதிரான செய்திகள், நம் உடைமைகள் உரிமைகள் பறிக்கப்பட இருக்கும் நேரத்தில் மிகுந்த துக்கத்தை கொண்டுவரும்.

     ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் Y.M.C.A. ஸ்தாபனத்தார் மூலமாக ஒவ்வொரு ஞாயிறுதோறும் திருச்சி சென்ட்ரல் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு சமுதாய சீர்திருத்தப் பண்புகளை வேதத்திலிருந்து கற்றுக்கொடுக்கச் சென்றேன். அவ்வாறு செல்லும் போதெல்லாம் தூக்கிலிடப்பட வேண்டிய கைதிகள் அழுகையும் மிகுந்த துக்கமும் நிறைந்து ஓலமிடுவார்கள். அந்தச் சிறைச் சாலையின் அறைகளுக்கு நாங்கள் செல்வதற்கு உத்தரவு கிடையாது. மரண நாள் வர இருக்கிறது, தூக்கிலிடப்படுகிற நாள் நெருங்குகிறதே என்ற துக்கத்தினால் மிகுந்த வேதனையோடு பலவிதமான செய்கைகளோடு இருந்தார்கள்.

           அன்று யூதர்களுக்கும் ஆதார் மாதமான பன்னிரெண்டாம் மாதம் 13ம் தேதியிலே அவர்கள் கொல்லப்படவும், சொத்துகள் கொள்ளையிடப்படவும் நியமிக்கப்பட்டிருந்தபடியால் துக்கமும் துயரமும் அடைந்தார்கள்.

            அன்பு சகோதரனே, சகோதரியே, வாழ்க்கையிலே பாவத்தினாலும், இழப்பினாலும், கையின் பிரயாசங்களில் வெற்றி இல்லாதபடியினாலும், அழிக்கப்படுகிற ஒருநாள் நியமிக்கப்பட்டிருக்கிற படியினாலும் துக்கமும் கலக்கமும் வேதனையும் உண்டாகிறது.

III துக்க நாட்கள் முடிய என்ன செய்ய வேண்டும்?

1)கர்த்தரை நித்திய வெளிச்சமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

"...கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்க நாட்கள் முடிந்துபோம்." ஏசாயா 60:20

      ஆதியிலே தேவசாயலாய் உருவாக்கப்பட்ட மனிதன் தேவனுடைய வார்த்தைகளை அசட்டை செய்து மீறி புசிக்க வேண்டாம் என்ற பழத்தை புசித்தபடியினால் தேவசாயலை இழந்தான். ஒளியை வஸ்திரமாய்த் தரித்திருந்த அவனுடைய வாழ்க்கையில் இருள் வந்தது. இருளின் காரியத்திலே பல வித கசப்புகள் வேதனைகள் பெருகின. ஆனாலும் தேவன் நம்மை நேசித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும், நாம் இழந்த தேவசாயலை அடையும்படி மறுரூபமாக்கப்படுவதற்கு அனுப்பினார். யார் யார் இயேசு கிறிஸ்துவைப்  பின்பற்ற அவருடைய அடிச்சுவடுகளைப்  பின்பற்ற இடம் கொடுக்கிறார்களோ அவர்கள் ஜீவ ஒளியை அடைவார்கள். ஆதியிலே சொல்லப்பட்டபடி பூமிக்கு வெளிச்சமாக மாறுவார்கள். அன்பு நிறைந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் நோக்கிப் பார்க்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கை பிரகாசம் அடைந்து வெட்கம், துக்கம் நீங்கின நல்வாழ்வை அடைவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே அந்தகாரத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் தமது ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்து அவரின் வெளிச்சத்தின் பிள்ளைகளாக, ஊழியர்களாக, ஆசாரியர்களாக சொந்த ஜனமாக மாற்றுகிறார். இந்த மேன்மையை அடைகிற யாவரும் கர்த்தரின் நித்திய வெளிச்சத்தைப் பெற்று துக்கம் முடிவடைந்த நல்வாழ்வை பெற்றுக் கொள்வார்கள். இந்த சிலாக்கியத்தை நாம் யாவரும் பெற்று துக்கம் நீங்கின நல்வாழ்வு வாழ்வோமாக.

2) ஜெபத்தினால் துக்கம் மாறும்

" யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதப்படிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்." 1 நாளாகமம் 4:10

தன் தாய் துக்கத்தோடு பெற்றதால் அவன் யாபேஸ் என்று பேரிடப்பட்டிருந்தான். இந்த யாபேஸ் தேவ சமுகத்தை நோக்கி ஜெபிக்கிற ஜெப வீரனாய் இருந்தான். அவனுடைய உள்ளத்தில் தன் எல்லைகள் விரிவடைய வேண்டும் என்ற எண்ணமும், வாஞ்சையும் இருந்தது. கர்த்தருக்கேற்ற நல்வாழ்வு வாழும்போது கர்த்தர் அவனுடைய எல்லைகளை விரிவடையச் செய்வார். இந்த எல்லைகள் விரிவடையும்போது எந்தத் தீங்கும் தன்னை அணுகிவிடக்கூடாது என்று தேவனை நோக்கி வேண்டுதல் செய்தான். ஜெபத்தைக் கேட்கிற தேவன் அவன் ஜெபத்தைக் கேட்டு எந்தவிதத் தீங்கும் அவனை துக்கப்படுத்தாதபடிக்கு காத்துக் கொண்டார். அநேகருடைய வாழ்க்கையிலே எந்தப்  போராட்டமும் இன்றி வேதனையின்றி என் எல்லைகள் பெரிதாக வேண்டும் என்ற வாஞ்சை உண்டு. இவ்விதமாய் எல்லைகளைப் பெருக்கிக் கொள்வதற்கு முயற்சித்து பாடுபட்டு செய்யும்போது, பல இடையூறுகளும் தீங்கான காரியங்களும் தோன்றுவதைப் பார்க்கிறோம்.

எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு மனிதர் 100 வீடுகள் அடங்கிய ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டி முடித்தார். அதில் வசிக்கின்ற ஒருவர் சில அளவு முறைகள் மீறப்பட்டிருக்கிறது என்றும், இந்தக் கட்டிடம் இடிக்கப்படவேண்டும் என்று கார்பரேஷனுக்கு மனு கொடுத்தார். அதனால் அதன் காரியங்களை அளந்து பார்த்த கார்பரேஷன் மக்களோ சட்ட ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே கட்டிடம் இடிக்கப் படவேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பலகோடி ரூபாய் செலவில் பல அடுக்கு மாடிகளாய்  கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட உத்தரவானது. தொடர்ந்த வழக்குகளும் கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட உத்தரவானது. தொடர்ந்த  வழக்குகளும் தோல்வியானது. சுப்ரீம் கோர்ட் அதை இடிக்க உத்தரவிட்டுள்ளது. என் எல்லைகள் விரிவடையவேண்டும் என்று அந்த வீட்டைக் கட்டின அந்த மனிதனுடைய வாஞ்சை எல்லாம் ஒன்றுமில்லாததாய்  மாறியது. அவனது ஆசை நிராசையானதோடு பல கோடி ரூபாய்களை பலருக்கு திருப்பி கொடுக்க வேண்டிய தீங்கின் நிலையை அடைந்திருக்கிறார்.

3) சத்துருவின் மீது ஜெயம் வந்ததால் துக்கம் நீங்கியது

"வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாக்கி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும் அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறினமாதமாகவும் ஆசாரித்து" எஸ்தர் 9:21

மொர்தெகாய் தன் சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தரைக் கொண்டு யூதருக்கு துரோகச் செயலைச் செய்ய திட்டமிட்டிருந்த ஆமானை அழிக்கவும், அவன் குடும்பம் முழுவதும் தூக்கிலிடப்படவும் உபவாச ஜெபத்தினாலே வெற்றி கொண்டான். கிறிஸ்துவுக்குள் உபவாச ஜெபம் அவசியமாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தீங்கு விளைவிக்கிற பிசாசுகளைக் குறித்து சீஷர்களிடம் சொன்னபோது இவ்வகை பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலேயுமன்றி மற்றெவ்விதத்தினாலும்   புறப்பட்டுப் போகாது என்றார் (மாற்கு 9:29). அதைப்போல ஆமானின் தந்திரங்களும், செயல்களும் அழிக்கப்பட உபவாசம் மன்றாட்டுகள் தேவையாயிருந்தது. அதனால் சத்துரு மீது ஜெயம் கொண்டார்கள். கர்த்தர் யூதர்களை அழிவுக்கு விலக்கிக் காத்தார். அவர்களுக்கு இருந்த எல்லா துக்கங்களும் சந்தோஷமாக மாறியது.

இன்றைக்கு இந்த உலகத்திலுள்ளவர்கள் பல விதங்களில் சந்தோஷப்படுவார்கள். நீங்களோ துக்கப்படுவீர்கள். ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று இயேசு சொன்ன யோவான் 16:20 ன் படி யூதர்களுடைய துக்கம் சந்தோஷமாய் மாறியது.

4) கர்த்தரிடத்தில் வரும்போது நன்மை பெற்று துக்கம் மாறும்

"அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும். அவர்கள் இனித் தொய்ந்து போவதில்லை."

"அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள், நான் அவர்கள் துக்கத்தைக் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்." எரேமியா 31:12,13

கர்த்தருடைய சமுகத்திலே நன்மைகளைப் பெற நாம் அவரிடம் துரிதமாய் வரவேண்டும், நம்முடைய தேவன் பல விதங்களிலே  நமக்கு நன்மை செய்திருக்கிறார். சங்கீதம் 31:19 ல் மனுஷருடைய அகங்காரத்துக்கு நம்மைக் காக்கிற நன்மையைப் பார்க்கிறோம். அப்போஸ்தலர் 10:38ல் இயேசு கிறிஸ்து அருளும் சுகமாகிய நன்மையைப் பெற்றுக்கொள்கிறோம்.

இங்கு அவரிடம் வரக்காரணம் அவர் அருளும் முழுமையான நன்மையைப் பெறுவதற்கு. அவைகள் கோதுமை என்கிற தேவ வார்த்தைகள், எண்ணெய் என்ற அபிஷேகத்தைலம், திராட்ச ரசமாகிய ஆவிக்குரிய வரங்கள், இந்த உலகத்திற்குரிய செல்வங்களைக் குறிக்கும் (ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள்) இவைகளைத் தம்மிடத்தில் வருகிறவர்களுக்கு அருளி ஆசீர்வதிக்கிறார். அவர்களின் இருதயம் தொய்ந்து போகாமல் நீர்ப்பாய்ச்சலான தோட்டதைப்போல் மாறிவிடுகிறது. அவர்களுக்கு ஆனந்தக் களிப்பை உண்டாக்கி, துக்கத்தை சந்தோஷமாக மாற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறார்.

இன்றைக்கு நாம் இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வருவோமானால் சகலவிதமான நன்மைகளினால் நம்மை நிறைத்து, சஞ்சலங்களை நீக்கி, நம் துக்கத்தை சந்தோஷமாக மாறப்பண்ணுவார். இவ்விதமாக நம் வாழ்வில் தோன்றும் துக்கம் யாவையும் நீக்கி, நமக்குப் புதிய சமாதான சந்தோஷ நல் வாழவைத் தந்து என்றும் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ.c.எபனேசர் பால்.