பின்மாற்றம் அடைந்த மக்களின் மாற்றத்திற்காக ஒரு ஜெபம்

         அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கிருபையாய் இரங்கி, என் ஜெபத்திற்கு இம்மட்டும் பதில் தந்து என்னை ஆசீர்வதித்தீர். இப்பொழுதும் கர்த்தாவே எனக்குள் போராடுகிற பாவ சிந்தைகள் என்னை முன்போல உம்மோடு நெருங்கி ஜீவிக்க இடம் தராது, வீணானவைகளினால் என் எண்ணங்களை, சிந்தைகளைக் கெடுக்கிறது. கர்த்தாவே, முன்போல நான் வேதத்தை நேசித்து தியானிக்க முடிய வில்லை. இயேசு கிறிஸ்துவே, என் ஜெப ஜீவியத்திலும் அவ்வாறே பிரச்சனைகள் வருகிறது. எனக்கு இரங்கும் இயேசு கிறிஸ்துவே. ஆதியில் உம் சத்தத்தைக் கேட்டு அதன்படியே செய்து வந்தேன். அப்பொழுது எனக்கு சமாதானமும் உள்ளத்தில் சந்தோஷமும் நிறைந்து பெருகியிருந்தது. ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைகளைக் கேட்டாலும் அதன்படி செய்வதற்கு மனதில்லாமல் போவதால் போராட்டமாக இருக்கிறது. கர்த்தாவே, நான் கீழ்ப்படியாமையின் மகனாய்/மகளாய் மாறிவிடாதிருக்க எனக்கு இரங்கும். நீர் பாராட்டின இரக்கங்கள், கிருபைகளை அதிகமாக நினைக்கிறேன். பாவ சிந்தைகள், பாவ எண்ணங்கள் எனக்குள் தோன்றுகிறது. சிற்சில சமயங்களில் நான் மீண்டுமாய் வேதத்தை நேசித்து அதை தியானிக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது, உலகக் காரியம் தோன்றி, வீட்டுப் பிரச்சனைகள் தோன்றி என்னை பின்மாற்ற நிலையிலே நிறுத்துகிறது. கர்த்தாவே, நீர் எனக்கு பாராட்டின கிருபைகள், இரக்கங்களை நினைத்து கண்ணீர் சிந்துகிறேன். உம்முடைய இரக்கத்தினால் நான் மீட்கப் படவும், ஆதி அன்பிலே நிலைக்கொண்டு என் ஆவிக்குரிய வாழ்க்கையிலே மீண்டும் வளர எனக்கு உதவி செய்யும். நான் இன்று உம் சமுகத்திலே என்னைத் தாழ்த்தி ஜெபிக்கிற ஜெபத்திற்கு பதில் தாரும். நீர் ஒருவரே எனக்கு விடுதலைத் தரக்கூடியவர். இந்த ஆவிக்குரிய போராட்ட வாழ்க்கையிலே நான் முழுமையாய் ஜெயம் பெற்று முன்போல உம் நாமத்தை சொல்லத்தக்கதாக என்னைப் பெலப்படுத்தி, ஸ்திரப்படுத்தும். எந்த மறைவான பாவங்களும் என்னை அணுகாது காத்துக் கொள்ளும். நான் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு உமக்காக வாழ, உழைக்க உதவி செய்யும். நீர் அப்படிச் செய்கிறபடியினால் ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.