செய்தி

                                               "கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்."  

                                                                                                                           சங்கீதம் 17:8

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 

கண்மணியைப் போல காக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

இன்று வாழ்க்கையிலே பலவிதங்களில் நாம் காக்கப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது. தாவீது தன் வாழ்க்கையிலே தன் பிராண பகைஞருக்குத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று தன் விண்ணப்பத்தை ஏறெடுத்தான். இதைப்போல நம்முடைய வாழ்க்கையிலும் பலவிதமான காரியங்களில் நாம் காக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். தாவீது 'கண்மணியைப்போல' என்று கண்ணின் காரியத்தை ஒப்பிட்டு கூறியிருக்கிறார். காற்றடிக்கும்போது புழுதி கண்ணை நோக்கி வரும்போது, கண்களின் இமையானது கண்ணைத் தானாகவே நன்கு காக்கிறது. தாவீதும் தனக்கு இவ்விதமான காவல் வேண்டும் என்று தன் போராட்ட சூழ்நிலையினால் வேண்டின வார்த்தைகளைப் பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று கண்மணியைப் போல் நம்மைக் காக்கும் தேவன் ஜீவிக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்த அன்பு நிறைந்த தேவனுடைய சமுகத்திலே நாம் காக்கப்பட வேண்டிய காரியங்கள் பல இருந்தாலும், சில காரியங்களைத் தியானிப்போம்.

 

1. எவைகளில் இருந்து காக்கப்பட வேண்டும்?

 

1. சத்துருவால் வரும் பயத்திலிருந்து காக்கப்பட வேண்டும்     

...சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.”                         சங்கீதம் 64:1

 

சத்துரு என்று சொல்லும்போது நமக்கு எதிரிடையாய் செயல்படும் மக்கள், நம்மைப் பகைக்கிற மக்கள். நம் சமாதானத்தைக் கெடுக்கும் மக்கள். இன்னும் கண்களுக்குத் தெரியாது செயல்படுகிற சத்துருவாகிய பிசாசு பலவிதங்களில் நமக்குப் பயத்தை உண்டாக்குகிறான். பிசாசின் தந்திர செயல்களில் ஒன்று பயமாகும். நாம் பயப்படும்போது அவிசுவாசமும், சந்தேகமும் பெருகி, போராட்டமான நிலையை அடைகிறோம்.

 

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் பெலிஸ்தர் யுத்தம் பண்ண வந்தபோது சவுலும் இஸ்ரவேலரும் கூடி பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணி வகுத்து நின்றார்கள். பெலிஸ்தர் அந்தப் பக்கத்தில் ஒரு மலையின் மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின் மேலும் இருந்தார்கள். அவ்விதமான நேரத்தில் காத் ஊரானாகிய கோலியாத் பாளையத்திலிருந்து புறப்பட்டு வந்து நிற்பான். அவனுடைய தோற்றம் மற்ற மனிதர்களைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருந்தது. இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்து நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறதென்ன? நீங்கள் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும். நான் ஜெயித்தால் நீங்கள் எங்கள் வேலைக்காரராய் இருந்து சேவிக்க வேண்டும் என்றும், நீங்கள் அனுப்புகிற மனுஷன் ஜெயித்தால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம் என்றும் ஒரு சவாலை விடுகிறவனாய் இருந்தான். இஸ்ரவேலின் சேனைகளை நிந்தித்தான். இந்தச் சேனையும் கலங்கி பயப்பட்டார்கள். சத்துருவினால் உண்டான பயத்தினால் அவனோடு யுத்தம் பண்ண ஒருவனையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிற மனிதன் கிறிஸ்துவின் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல. இன்னும் யோபு 3:25ல் 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது' என்று யோபு தன் பயத்தினால் ஏற்பட்ட தீங்கை, வேதனையை உணர்ந்து தெரிவிப்பதைப் பார்க்கிறோம். இன்று பலசூழ்நிலைகளிலே ஏற்படும் பிரச்சனை கோலியாத்தைப் போல பெரிதாய் இருக்கிறது என்று கலங்கி பயந்து கொண்டே இருக்கிறோம். பயம் தோல்வியையும் துக்கத்தையும் உண்டாக்கிவிடும்.

இன்னும் அநேகர் மரண பயத்திற்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஒரு வாலிப சகோதரி கல்லுாரி படித்துக் கொண்டிருந்தாள். நன்றாய் எல்லாரிடமும் பழகி, பேசி வந்தாள். கோவிட் நோய் வந்தபோது யாரிடமும் பேசாது தன் அறையிலே அமைதியாக வாழ ஆரம்பித்தாள். அந்த வீட்டாரோடும் பேசுகிறதை விட்டுவிட்டாள். பயமானது வாழ்க்கையின் பண்புகளை மாற்றிவிடும். கலக்கத்தை உருவாக்கிவிடும்.

2. உபத்திரவத்தினின்று காக்கப்பட வேண்டும்

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” சங்கீதம் 22:24

உபத்திரவம் மனிதனுடைய நல்வாழ்வின் சமாதானத்தைக் கெடுத்து அவனது எண்ணங்களை, சிந்தைகளைச் சீர்கெட்டுப் போகச் செய்கிறது. என்ன செய்வது, இனி எப்படிக் காரியங்களை நடப்பிக்கலாம் என்று உள்ளத்தின் நிலைவரமான நிலையை சிதைத்துப் போடுகிறது. அத்துடன் இவர்களுக்கெல்லாம் ஒரு உபத்திரவமும் இல்லையே என்று தாங்கள் விரும்பாத மக்களைக் குறித்து சிந்திக்க வைக்கிறது. உபத்திரவமானது பலவிதமான நிலைகளிலே போராட்டங்களைப் பெருகச் செய்தாலும் அந்த உபத்திரவங்களைக் கர்த்தர் நலமாக மாற்ற வல்லவராக இருக்கிறார்.

 

தாவீது நான் நன்மை செய்தும், நன்மைக்குப் பதிலாக தீமை செய்கிறார்களே என்று கலங்கின நேரத்தில் அவர்களுக்காக உபவாசித்து ஜெபித்தான். . உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன் என்று சங். 35:13ல் சொல்வதைப் பார்க்கிறோம். மேலும் சங். 31:7ல் நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர் என்று சொல்வதைப் பார்க்கிறோம். உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன் (ஏசாயா 48:10) என்று சொன்ன அன்பின் தேவன் துன்பத்தின் அப்பத்தையும் உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும் கர்த்தர் நம் வாழ்க்கையை மாற்றி மகிழ்ச்சியினால் நிறைக்கிறவராய் இருக்கிறார். சங். 119:71ல் 'நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.' என்று சொன்னதுபோல உபத்திரவம் கர்த்தரின் வார்த்தைகளை அறிவதற்கு நடத்துகிறது. உன்னை நேசிக்கிற கர்த்தர் உபத்திரவத்தில் வேதனையோடு வாழ்கிற மக்களைப் பார்க்கிறவராய் இருக்கிறார். யாத். 3:7ல் 'என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். என்று தேவன் மோசேயிடம் கூறியதைப் பார்க்கிறோம். நம் வாழ்வின் உபத்திரவத்தைப் பார்க்கிற தேவன் அதிலிருந்து நம்மை விடுவிக்கிறவராயும் இருக்கிறார்.

3) துக்கத்திலிருந்து காக்கப்பட வேண்டும்

“...தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்...” 1 நாளாகமம் 4:10

 

துக்கமானது மனிதனின் வாழ்வில் பல காரணங்களினால் தோன்றி வாழ்க்கையைக் கண்ணீரும் கசப்புமாய் மாற்றிவிடுகிறது. துக்கமானது மெய்யான சமாதானம் சந்தோஷத்தைக் கெடுப்பதோடு பலவிதமான பாடுகளை, வேதனைகளைப் பெருகச்செய்து விடுகிறது. என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது என்று சங். 38:17ல் பார்க்கிறோம். இந்த உலகத்தின் மக்களைப் பார்க்கும்போது அவர்கள் துக்கமில்லாதபடி மிகுதியான சந்தோஷத்தோடு சகலவற்றையும் பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இயேசு கிறிஸ்து யோவான் 16:20ல் 'நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்றார். யாபேஸ் என்ற மனிதன் தன் தாய் என்னைத் துக்கத்தோடு பெற்றபடியினால் யாபேஸ் என்று பேரிட்டாள் என்று 1நாளா. 4:9ல் பார்க்கிறோம். ஈசாக்கு தன் தாயின் மரணத்தினால் துக்கத்தினால் நிறைந்திருந்தான். ரெபெக்காளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்த போது, அவன் துக்கம் நீங்கிற்று. இன்று அநேகருடைய வாழ்க்கையிலும் துக்கம் பலவிதங்களிலே பல பாடுகளை, நோய்களை விளைவிக்கிறது. நீதி. 15:13ல் மனோ துக்கமானது ஆவியின் முறிவைத் தருகிறது என்று பார்க்கிறோம். இன்று மனநோய் என்றும் மனஉளச்சல் என்றும் சொல்லப்படுகிற வேதனையான நோயின் தன்மை துக்கத்தினால் பெருகுகிறது. என்று மனிதனுடைய வாழ்க்கையிலே கர்த்தர் நித்திய வெளிச்சமாய் மாறுவாரோ அன்றே அவன் துக்க நாட்கள் முடிந்து போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் பாடுபடும் முன்பாக ஏசாயா தீர்க்கதரிசி அவர் அசட்டைப் பண்ணப்பட்டவரும். மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும் பாடு அநுபவித்தவருமாயிருந்தார் என்று இயேசுவைக் குறித்து விவரிக்கிறதைப் பார்க்கிறோம். நம்முடைய துக்கங்களைச் சுமந்து தீர்க்கும் படி அவர் சிலுவையிலே நமக்காக பாடுபட்டார்.

 

அன்பு நிறைந்த சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையில் துக்கம் மிகுதியினால் கண்ணீரோடு கலங்கிக் கொண்டிருக்கிறாயா? என் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று துக்கத்தோடு இருக்கிறாயா ? உன் துக்கம் ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறதோ ? இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார். அவர் நன்மையானவைகளைப் பெருகச்செய்து உன் துக்கத்தை நீக்கி, உன்னை சந்தோஷப்படுத்துவார். உன் சஞ்சலமும் தவிப்பும் ஒடிப்போம்.

 

4) நிந்தனையிலிருந்து காக்கப்பட வேண்டும்

“...மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.”

                                                                                                            சங்கீதம் 39:8

இவ்வுலகத்தில் பெருமையோடு வாழ்கிறவர்கள் மற்றவர்களை அற்பமாய் எண்ணுகிறவர்கள், மேலான பணியில் உள்ளவர்கள் மற்றவர்களை நிந்தித்து பேசுகிற காரியத்தைப் பார்க்கிறோம். கோலியாத் இஸ்ரவேல் இராணுவங்களை நிந்தித்துப் பேசுகிறான் என்று 1 சாமு. 17ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். 2 சாமு. 16:7ல் சீமேயி என்னும் பேருள்ள மனுஷன் தாவீதை தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ என்று துாஷித்தும் நிந்தித்தும் பேசினான். தாவீதோ கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்று அமைதியாக இருந்தான். உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது என்று சங். 69:9 ல் பார்க்கிறோம். கர்த்தருடைய ஆலயத்தின் காரியங்களை நாம் செய்யும்போது அநேகருடைய நிந்தைகள் வரும். இன்று நிந்தித்துப் பேசுகிற மக்கள் ஏராளம் உண்டு. தேவனுடைய சமுகத்திலே மக்கள் குற்றப்படுத்துகிற மக்கள் அநேகர் உண்டு. 'என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் துாஷணங்களால் கலங்காமலும் இருங்கள்` என்று ஏசாயா 51:7ல் பார்க்கிறோம். நம்முடைய தேவன் நம் வாயிலிருந்து புறப்படுகிற சொல்லைக் கேட்கிறவராய் இருக்கிறார். 'நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்` என்று எசே. 35:12ல் பார்க்கிறோம். “மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்' செப். 2:8ல் பார்க்கிறோம். மரணத்தை ஜெயமாக விழுங்க இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவோ எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கிற தேவன்.‘... தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.' ஏசாயா 25:8

இன்று பயத்திலிருந்து, உபத்திரவத்திலிருந்து, துக்கத்திலிருந்து, நிந்தையிலிருந்து நம்மைக் காக்கும் தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறவர். அவர் தாம் சொன்னபடியே நமக்காக யாவையும் செய்து முடிப்பார்.

II யார் காக்கப்படுவார்கள்?

1) கர்த்தரை நம்பியிருக்கிறவர்கள்

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ஏசாயா 26:3

 

இன்று மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து மாம்சமானதைப் புயபலமாக்கிக் கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்கிறார். இன்று அநேகர் கர்த்தரை விட்டு விட்டு மனிதர்களை நம்பி தன் காரியங்களைச் செய்கிறபடியால் வேதனையான துயரமான முடிவை அடைகிறார்கள்.

 

ஒருமுறை திருமணமாகி ஒரு குழந்தையோடு வாழ்ந்த ஒரு மனிதர், தன் நண்பருடைய வார்த்தையினால் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றார். வீடு திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்தபோதெல்லாம் நமக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வீடு கட்ட தன் மனைவியின் பெயரில் காரியங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவருடைய மனைவியும் பணத்தை வாங்கி வீட்டைக் கட்டினாள். சில ஆண்டுகள் கழித்து தன் சொந்த ஊரிலே சென்று வாழலாம் என்று எண்ணி தன்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் மனைவிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பினார். அவருடைய வீடு கட்டப்பட்ட இடத்திற்கு வந்தார். கதவைத் தட்டியபோது, ஒரு மனிதன் கதவைத் திறந்தான். நீங்கள் யார் என்று விசாரித்தார். வீட்டுக்குள் சிறு பிள்ளைகளின் சத்தமும் கேட்டது. கடைசியில் அவருடைய மனைவியும் எட்டிப்பார்த்து நான் இவருடன் வாழ்கிறேன். நீங்கள் போய் விடுங்கள் என்று கூறினபடியால் மிகுந்த துக்கமடைந்து நான் ஏன் வாழ வேண்டும் என்று தற்கொலை செய்ய எண்ணினார். அவரைச் சந்தித்த சகோதரர் ஜெபத்திற்கு அழைத்து வந்தார். தன் சொந்த மனைவியை நம்பினவருடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து வேதனை அடைந்தார்.

 

எந்த மனிதன் கர்த்தரை நம்புகிறானோ, அவனைக் கர்த்தர் விடுவிக்கிறார். சங். 22:4ல் 'எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.' எனப் பார்க்கிறோம். கர்த்தரை நம்புகிறவர்களின் வாழ்க்கையில் விடுதலை உண்டு. அருமையான தேவப்பிள்ளையே, உன் நம்பிக்கையைக் கர்த்தர் மேல் வைத்து, கர்த்தரையே நம்பியிருப்பாயானால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பீர். இன்று அநேகருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையில் குறைவும் தடுமாற்றமும் உண்டாவதால் பலவித தோல்விகள், துக்கங்கள், நஷ்டங்கள் அடைந்து கலங்குகிறார்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது என்று சொன்னவர் கர்த்தர்மேல் வைத்திருக்கிற உன் நம்பிக்கையை கனப்படுத்தி உன்னை ஆசீர்வதிப்பார். இன்றைக்கு பூரணமான நம்பிக்கையுடைய மனதை நாம் கொண்டிருப்போமானால் நேற்றும் இன்றும் மாறாத நம் தேவன் நம்மைக் கண்மணியைப்போல காத்துக்கொள்ளுவார்.

2) இஸ்ரவேலைக் காக்கிறார்

"இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை துாங்குகிறதுமில்லை.” சங்கீதம் 121:4

இவ்வுலக வாழ்க்கையிலே நாம் இஸ்ரவேலராக உருவாக்கப்பட வேண்டும். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே எனக்குப் பிரியம் என்று சொன்ன தேவன் இஸ்ரவேலாக யார் யார் உருவாக்கப்படுகிறார்களோ அவர்களை நேசிக்கிறார், ஆசீர்வதிக்கிறார். இவ்வுலகத்தில் யாக்கோபாக நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். யாக்கோபு என்றாலே ஏமாற்றும் தன்மை உடைய மனிதன். கண் தெரியாத தகப்பனிடம் வந்து நான்தான் ஏசா என்று பொய்யைக் கூறி தகப்பனிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட மனிதன். அத்துடன் சகோதர அன்பும் பண்பும் இல்லாத மனிதன். தன் சகோதரன் பசியாக இருந்த போது, தன்னிடம் இருந்த ஆகாரத்தைக் கொடுக்க மனதில்லாமல் உன் சேஷ்டபுத்திரபாகத்தை எனக்கு விற்றுப்போடு என்று கூறி அதைப் பெற்றபின்தான் தன் சகோதரன் பசியாற தன்னிடம் இருந்த பயிற்றங்கூழைக் கொடுத்தான். இவ்வுலகில் சகோதர சிநேகம் இல்லாதபடி, தன்னயம் நிறைந்தவர்களாய் வாழ்கிற ஏராளமான மக்களைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட தகாத தவறான பண்புகளையுடைய யாக்கோபைத் தேவன் தம்முடைய வல்லமையான செயலினால் இஸ்ரவேலாக உருவாக்கினார். யாக்கோபு தனித்து விடப்பட்டபோது தேவனோடு போராடின ஒரு அனுபவத்தைப் பெற்றான். தேவன் அவன் பெயரைக் கேட்டார். என் பெயர் யாக்கோபு என்று உண்மையாய் சொன்ன போது, இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும் என்றார். பழையவைகள் ஒழிந்து புதிய வாழ்வைப் பெற்றவன்தான் இந்த இஸ்ரவேலன்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்த மாற்றத்தைப் பெற்ற ஒவ்வொரு மனிதரையும் தண்ணீர்களைக் கடக்கும்போதும், ஆறுகளைக் கடக்கும் போதும் அவைகள் உன்மேல் புரளாதபடி காத்துக் கொள்ளுவார். அக்கினியில் நடக்கும்போது, வேகாதிருப்பாய். இந்த மேலான ஆசீர்வாதத்தை இவ்வுலகிலேயே நாம் பெற்று விடுகிறோம். என் பிரச்சனையில் நான் அமிழ்ந்து போவேன், இனி அவ்வளவுதான் என்று எண்ணுகிற ஒவ்வொரு இஸ்ரவேலையும் நான் உன்னோடு இருக்கிறேன் என்று கை தூக்கி விடுகிற தேவன் அவர். எல்லாம் எரிந்து விடும் என்று பயப்படும் சூழ்நிலையில் அவைகள் உன்னை மேற்கொள்ளாது. இன்று இஸ்ரவேலாய் மாறுவோம், அவரின் பெரிதான ஆசீர்வாதத்தையும் கிருபையால் காக்கப்படுவதையும் சுதந்தரித்துக்கொள்வோமாக.

 

3. எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தம் காக்கப்படுவார்கள்

"ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." சங்கீதம் 12:5

 

 

இன்று சீறுகிற மக்களால் அநேகர் பாதிக்கப்படுகிறார்கள். சீறுகிற செயல் என்றாலே தன் கர்வத்தினால் தேவனைத் தேடாதவன். அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை புரிந்து அறிந்து கொள்ள முடியாத நிலமை. எல்லா எதிராளிகளின் மீதும் சீறுகிற பண்புடையவன். தனக்குத் தீங்கு வருவதில்லை என்று உள்ளத்தில் எண்ணம் கொண்டிருக்கிறவன். அவனுடைய வாய் சபிப்பினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது. அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. திக்கற்றவர்களைக் கொல்ல அவன் கண்கள் நோக்கிக் கொண்டிருக்கிறது. ஏழையை தன் வலைக்குள் பிடித்துக் கொள்கிறான். இவ்விதமான செயல் சூனியங்களைச் செய்கிற காரியமாகும். இவ்விதமான மனிதர்களுடைய தந்திர மந்திர செயலினால் பாடுபடுகிற மக்கள் பெருமூச்சாகிய ஜெபத்தைச் செய்யும்போது, அவர்களின் ஜெபம் கேட்கப்பட்டு, சீறுகிற மக்களின் செயல்களுக்கு அவர்களை விலக்கிக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறார்.

ஒருமுறை ஒருபகுதி ஊழியத்தின்போது அங்குள்ள ஒரு சீறுகிற பழக்கமுடைய மனிதன் தன் தந்திர மந்திரங்களினாலே கூட்டம் நடைபெறாதபடி துர்க்கிரியைகளினால் தடைசெய்து கொண்டிருந்தான். கூடி வந்திருந்த மக்கள் ஜெபிக்க ஆரம்பித்தனர். கர்த்தரின் வார்த்தையின்படியே ஜெபத்தைக் கேட்கிற தேவன், அங்கு கூடியிருந்த மக்களின் பெருமூச்சாகிய ஜெபத்தைக்கேட்டு அந்த மனிதனைச் சந்தித்தார். உடனே தேவ வல்லமையை தாங்க முடியாதவன் கர்த்தருடைய ஜனங்கள் கூடியிருந்த இடத்தில் உருண்டு புரள ஆரம்பித்தான். பெண்கள் அவனைப் பார்த்தவுடன் இவன் பொல்லாத காரியங்களைச் செய்கிற சூனியக்காரன் என்று பயந்து ஓட ஆரம்பித்தனர். அவனுக்கு இருந்த இத்தீங்கின் ஆவி அவனை விட்டு நீங்கியது. தெளிந்த புத்தியுள்ளவனாய் மாறினான். அங்கிருந்த ஆவிக்குரிய சபையிலே அங்கத்தினனாய் மாறினான். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்ற வாக்கு நிறைவேற நாம் ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம்.

 

4) சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனைக் காப்பார் "சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்..." சங்கீதம் 41:1,2

நம்முடைய தேவன் சிறுமைப்பட்டிருக்கிற ஜனங்கள் மீது கரிசனை உடைய தேவன். அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடு தங்கினால் அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என்று சொன்ன கர்த்தர் மாறாதவர். 'உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.' என்று உபா. 15:11ல் சொன்ன தேவன், சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுடைய மனிதனைக் கர்த்தர் நேசிக்கிறார். 'நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.' 1 நாளா. 17:9. சிறுமைப்பட்ட வனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்.

அன்பின் தேவப்பிள்ளையே, இவ்விதமாய் உலகில் சிறுமைப் பட்டிருக்கிற தம்முடைய ஜனங்கள் மேல் யார் யார் சிந்தையுடைய வர்களாய் இருக்கிறார்களோ கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார். தீங்கு நாளில் கர்த்தர் அவனைப் பாதுகாத்து உயிரோடே வைப்பார்.

5) கர்த்தர் உன்னோடு இருக்கும்போது காப்பார்

"நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்"                                                                                                                                                   

                                                                                                                  ஆதியாகமம் 28:15

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் உன்னுடனே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்குத் திரும்பி வரச்செய்து நீ செய்து முடிக்கும் வரை உன்னைக் கைவிடாதிருப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அழைத்தவர் உண்மையுள்ளவர் அப்படியே ஆசீர்வதிப்பார். எதற்காக கர்த்தர் உன்னை அழைத்தாரோ, எந்தப் பகுதி ஊழியத்தைச் செய்வதற்கு உன்னைத் தெரிந்து கொண்டாரோ அந்தத் திட்டத்தை, நோக்கத்தை செய்து முடிப்பதற்கு உன்னைத் தகுதிப்படுத்தி, பெலப்படுத்தி, வழி நடத்தி முடிவுபரியந்தம் உன்னைக் கைவிடாதிருப்பார்.

 

 

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை நம்புகிறவர்களை, இஸ்ரவேலரை, பெருமூச்சு விட்டு ஜெபிக்கிற மக்களை, சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவர்களைக் காத்து நடத்துகிறார். யார் யாரிடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறாரோ, அவர்களைக் காத்து வழிநடத்தி கைவிடாதிருப்பார்.

                                      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                           கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                                           சகோ. C. எபனேசர் பால்.