சிந்தி செயல்படு

"கண்டுபிடித்தபின்புதன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன்..."                                                                                                                                                                                                                    லூக்கா 15:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

                சில நாட்களுக்கு முன்பாக Singapore பகுதியிலே நாங்கள் ஊழியங்களைச் செய்யச் சென்றோம். எப்பொழுதும் தங்குகிற அருமையான சகோதரரின் இல்லத்தில் தங்க முடியாத ஒரு சூழ்நிலை வந்த பொழுது அந்த சகோதரன் நாங்கள் தங்கி ஊழியம் செய்வதற்காக ஒரு விடுதியிலே ஏற்பாடு செய்தார். மிகுதியான மகிழ்ச்சியோடு ஊழியம் முடிந்ததும்,அந்த விடுதியை,அந்த தேசத்தை விட்டு இந்திய தேசத்திற்கு வந்தோம். இந்திய தேசத்திற்கு வந்த பிறகு என்னுடைய முக்கியமான செல்போன் காணவில்லை என்று அறிந்தேன். அந்த விடுதியின் அறையை விட்டுச் செல்லும் முன்பாக அந்த அறையின் எல்லாப் பகுதியையும் நன்றாகத் தேடினேன்,ஒன்றும் விட்டு விடவில்லை என்ற நம்பிக்கையோடு கடந்து வந்தோம். செல்போன் காணவில்லை என்றுச் சொன்னவுடனே அதை அங்குதான் விட்டுவிட்டோம் என்று நினைத்து அந்த விடுதிக்கு நாங்கள் தகவல் கொடுத்தோம். அவர்கள் அந்த அறையில் இரண்டு முறைத் தேடியும் அவ்விதமான செல்போன் இல்லை என்றுச் சொல்லிவிட்டார்கள். ஊழியத்திற்கு என்று கொடுக்கப்பட்ட அந்த செல்போனை நான் என்னுடைய அஜாக்கிரதையின் நிமித்தமாக இழந்துவிட்டேனே என்று எண்ணினேன். கர்த்தருடைய சமூகத்தை நோக்கி,என்னுடைய குறையை தயவாய் மன்னியும் என்று வேண்டினேன். பிறகு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் கர்த்தர் அற்புதத்தைச் செய்தார். எப்படி தொலைந்துப் போன வெள்ளிக்காசு கிடைத்ததோ அப்படியான ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அந்த விடுதி நிறுவனத்தார் எங்களுக்கு அறிமுகமானவருக்கு அந்த செல்போன் கிடைத்துவிட்டது பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவித்ததோடு, எங்களுக்கும் அந்தச் செய்தியை அறிவித்தனர். அந்த அறையிலே தங்கிய வேறு நாட்டவர் வேதாகமத்திற்கு அடியில் செல்போன் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதை அந்த விடுதி நிறுவனத்தினரிடம் கொடுத்தனர். ஆகவே அதை நான் திரும்ப பெற்றுக்கொள்ளத்தக்கதாக தேவன் தயை செய்தார். இன்று வாழ்க்கையிலே முக்கியமான ஒன்றை இழந்திருப்பீர்கள் என்றால் அதைத் திரும்பத் தருகிற தேவன் இன்றும் இருக்கிறார். அதைக் கண்டுபிடித்து நமக்குரியவைகளை, சொந்தமானவைகளை திருப்பித் தருகிற தேவன் இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையிலே ஒருவேளை சமாதானத்தை, சந்தோஷத்தை, வேலையை, இழந்திருக்கலாம் , எதிர்பாராத இழப்பின் நிமித்தமாய் துக்கத்தோடு இருக்கலாம். உன் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறவர் உன்னுடைய வாழ்க்கையிலே இழந்தவைகளைத் திரும்பத் தந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். ஒன்றுக்கும் கவலைப்படாதபடி கர்த்தருடைய சமூகத்திலே எல்லாவற்றையும் தெரிவிப்போம். சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். கர்த்தருடைய கரம் நற்கிரியைகளை நமக்குள் செய்யட்டும். இயேசு கிறிஸ்துவின் அன்பு பெருகட்டும்.

                                 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.