கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.
இலங்கை நாட்டிலே ஊழியத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஆசிரியர் குடும்பம் ஒன்று இருந்தது. திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதிருந்தார்கள். மிகுந்த உற்சாகத்தோடு இலங்கையில் நடைபெறும் கூட்டங்களில் பங்குபெறுவார்கள். சில இடங்களில் அவர்களே கூட்டங்களை ஒழுங்கு செய்வார்கள். இலங்கையில் நடைபெற்ற 3 நாள் camp ல் அவரும், அவரது மனைவியும் பங்கு பெற்றார்கள். அவருக்கு வயது 52ம் மனைவிக்கு 48ம் ஆகிவிட்டது. சகலத்தையும் தர வல்லவர் என்று இயேசு கிறிஸ்துவை உயர்த்திச் சொல்லுகிற இவருக்கு குழந்தை இல்லாதிருந்தது. நிந்தையான வார்த்தைகளுக்கு மத்தியிலும் உற்சாகத்தோடு ஆலய ஆராதனைகளிலும், ஊழியங்களிலும் விடாது பங்கு பெற்று கொண்டிருந்தார். என்னிடம் நாங்கள் இந்தியாவிற்கு தங்கி ஜெபிப்பதற்கு வருகிறோம் என்று கேட்டபோது, நீங்கள் இந்தியாவிற்கு வரவேண்டாம் இங்கேயே உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்று சொல்லி ஜெபித்தேன். கர்த்தர் அவர்களை நேசித்தபடியினால் ஒரு ஜெப நேரத்தில் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். அதை அவர்களுக்கு அறிவித்தேன். ஒரு புறா தன் கூட்டைக் கட்டுகிற காட்சியைக் கண்டேன். இதற்கு என்ன அர்த்தம் என்றால் புறா எப்படி கூடுகட்டி முட்டை போட்டு குஞ்சுகள் தோன்றுகிறதோ, அதைப்போல் உங்கள் சந்ததியைக் காண கிரியைச் செய்கிறார். நீங்கள் எங்கும் செல்லவும் அலையவும் வேண்டாம் என்று கூறி ஆலோசனையும் ஆறுதலான வார்த்தைகளையும் கூறினேன். கர்த்தர் தாம் காண்பித்தபடியே அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தார்.நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்து அவர்களின் குறைவை மாற்றினார். கண்ணீரைத் துடைத்தார். புலம்பலை ஆனந்தக் களிப்பாய் மாறப்பண்ணினார். குற்றப்படுத்தி குறைபேசினவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்பத்தக்கதாக அற்புதமான காரியங்களை அவர்கள் வாழ்க்கையில் செய்தார்.
அன்பு சகோதரனே, குறைகளை நீக்கக்கூடிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். 'அவர் சொல்ல ஆகும்' என்ற வார்த்தையின்படியே உங்கள் வாழ்க்கையிலே நன்மையும் மேன்மையுமான காரியங்கள் நடைபெறும். நிந்தை, வேதனை, துக்கம் என்று கலங்கித் தவிக்கிற உங்கள் வாழ்க்கையிலே இன்றோடு அவைகள் மாறும்படி அவர் கட்டளையிடுவார். அனுதினமும் உங்களைப் போஷித்து பராமரித்து, பலப்படுத்தி வழிநடத்தக்கூடிய இந்த அன்பின் இயேசு கிறிஸ்துவை உங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வீர்கள் என்றால் உங்களிலும் இவ்விதமான அற்புதங்கள் நடைபெறும். உலக மனிதர்கள் இது எப்படி நடைபெறும் என்று கூறினாலும், அன்பின் தேவனால் நடைபெறக் கூடும் என்று அறிந்து உணர்ந்து தீர்மானம் செய்யுங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். மேலான நன்மைகளைத் தொடர்ந்து பெறுவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. c. எபனேசர் பால்.