"நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்."

                                                                                                   சங்கீதம் 50:14, 15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

ஒருமுறை அமெரிக்கா நாட்டிலே ஊழியங்களைச் செய்யும்போது, சகோதரி ஒருவர் எனக்கு வேலை போய்விட்டது. என்னுடைய விசா முடிவடைய இன்னும் 3 தினங்கள் மட்டும் தான் இருக்கிறது. அதற்குள் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என கலங்கிய நிலையில் கண்ணீரோடு ஜெபிக்கக் கூறினார்கள். என்ன செய்வது என்று தெரியாத நிலை என்று வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களுக்கு ஆலோசனையாக பொருத்தனையோடு ஜெபியுங்கள். கர்த்தர் அதிசயம் செய்வார். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், உங்கள் விருப்பத்தைக் கர்த்தர் நிறைவேற்றி இந்தத் தேசத்திலேயே இருக்க உதவி செய்வார் என்று ஜெபித்து அனுப்பினேன். ஆறுதலும் தேறுதலும் அடைந்த சகோதரி தான் அவ்வாறே பொருத்தனையோடு ஜெபித்தார்கள். கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு அடுத்த நாளிலே அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்தார். மீண்டும் அடுத்த முறை அவர்களைச் சந்தித்தபோது, தன் சாட்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்ற கர்த்தர், பொருத்தனையின் ஜெபங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார். அந்தச் சகோதரியின் உள்ளம் மகிழவும், விசுவாசத்தில் வளரவும், கர்த்தருக்கென்று வாழவும் தன்னை அர்ப்பணித்தார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரனே, சகோதரியே உங்கள் போராட்டமான காலத்தில் விடுதலையும் மகிழ்ச்சியும் உண்டாக, கர்த்தரை நோக்கி ஜெபியுங்கள். ஜெபத்தைக் கேட்கிற தேவன் இன்று உங்களுக்குப் பதில் தந்து உங்கள் போராட்டத்தினின்று, பிரச்சனையிலிருந்து விடுதலை தருவார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                 சகோ. c. எபனேசர் பால்.