"அவர் சொல்ல ஆகும்,
                                                                            அவர் கட்டளையிட நிற்கும்."
                                                                                                                       
சங்கீதம் 33:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்  இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஊழியத்தின் பாதையில் ஒரு முறை வெளிநாடு ஒன்றிற்கு முதன் முறையாக சென்றேன். நான் தங்க இருந்த குடும்பத்தாருக்கு முன்னதாக யாவற்றையும் அறிவித்து இருந்தோம். எங்களைச் சந்திக்க விமான நிலையத்திற்கு வரவில்லை. அத்துடன் தொலைபேசியின் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. கடைசியில் அருகே இருந்த ஒரு ஹோட்டலில் ரூம் ஒன்றை எடுத்துத் தங்கினோம். ஆறு தினங்கள் ஆகியும் யாரையும் சந்திக்க முடியவில்லை. ஆனால் ஹோட்டல் ரூம்க்கே அந்தக் குடும்பத்தினர் வந்து எங்களைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்ற சகோதரர் வீட்டிற்கு, அவரது 12 வயது மகன் பள்ளியிலிருந்து வந்து சேர்ந்தான். அவனுடன் சற்று நிமிடம் பேசிவிட்டு உன் பெற்றோரிடம் சைக்கிள் வாங்கித் தாருங்கள் என்று இனி கேட்காதே என்றேன். அவனுக்குச் சற்று கோபம் வந்தது. அத்துடன் அவன் அப்பாவை நோக்கி, நான் சைக்கிள் கேட்கிறேன் என்று அதற்குள் சொல்லி விட்டீர்களா? என்றான். தகப்பனார் நான் ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்லியும் நம்பவில்லை. கர்த்தர் அவனை நேசித்து அவனைக் குறித்து காட்டிய தரிசனத்தைக் கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தேன். உன் மஞ்சள் நிற பென்சிலை வைத்து, வகுப்பில் பாடம் கவனியாதபடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே என்றேன். நான் மஞ்சள் நிற பென்சில் வைத்திருக் கிறேன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும் என்று ஒரு கேள்வியைக் கேட்டான். அதற்கு நான் இயேசு கிறிஸ்து அதைச் சொன்னார் என்றேன். உடனே அவன் உங்கள் காதில் இயேசு கிறிஸ்து சொன்னாரா, என் பெற்றோருக்கே நான் மஞ்சள் நிற பென்சில் வைத்திருக்கிறேன் என்பது தெரியாதே என்றான். இயேசு கிறிஸ்து உன்னை நேசிப்பதினால் நீ செய்கிற தவறைக் கூறியுள்ளார். அந்த இயேசு கிறிஸ்துவை நேசிக்க இடம் கொடு. நீ ஆசீர்வதிக்கப்படுவாய் என்றேன். ஊழியமே இல்லாத சூழ்நிலையில் அவன் போய் தன் நண்பர்கள் பத்து பதினைந்து பேர்களை அழைத்து வந்து, இவனுக்குச் சொல்லுங்கள் என்று ஒவ்வொரு பேருக்கும் கேட்டான். அந்த நாளிலேயே ஊழியம் அவ்வாறு ஆரம்பித்தது. அவனது பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் அழைத்தபடியால் அங்கு தங்கியிருந்த எஞ்சிய நாட்களில் ஓய்வு நேரம் இல்லாது ஊழியம் செய்ய, கூட்டங்களில் பேச, கர்த்தர் கிருபை புரிந்தார்.

என் காரியங்கள் போராட்டமாயிருக்கிறதே என்று கலங்காதே. அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்திருக்கிற கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார். சகலத்தையும் செவ்வையாக்கும் தேவாதி தேவன் இன்றும் ஜீவிக்கிறார். இல்லாதவைகளை, இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவர், இன்றே காரிங்களை உனக்காக செய்வார். உன்னை நேசிக்கிற கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, வழியைத் திறப்பார். சகலமும் சீராகும், ஜெயமாகும். குறைவுபடாத நல்வாழ்வைப் பெறுவாய்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                             சகோ. C. எபனேசர் பால்.