" உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் ..."

                                                                                             சங்கீதம் 143:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகிறேன்.

                    " கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்". எபேசியர் 5:10. இன்று நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யும்போது , அவர் நம்மீது பிரியமாயிருப்பதோடு நமக்கு ஏற்ற மேன்மையான  காரியங்களை நமக்குச் செய்கிறவராயிருக்கிறார். தாவீது கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்வதற்குத் தன்னை முழுவதும் அர்பணித்திருந்தான். உமக்குப் பிரியமானதை நான் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆர்வமுடையவனாய்  இருந்தபடியினால் தாவீதினுடைய  நாமத்தை அதிகமாக உச்சரிக்கத்தக்கதாக , தாவீதின் சந்ததியை ஆசீர்வதித்திருக்கிறதைப் பார்க்கிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யும்போது, பலவிதமான காரியங்களை நமக்கு அருளுகிற அன்பின் தேவனாயிருக்கிறார்.

                    யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபுக்குப் பிரியமானவனாய் இருந்தபடியினாலே , அந்த வயதான காலத்திலே யாக்கோபு அவனுக்கு அழகான பல வருண அங்கியைச் செய்துக்  கொடுத்தான். 'அவனை அதிகமாய் நேசித்து , அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான் ' என்று  ஆதி. 37:3ல்  பார்க்கிறோம். ஆகவே ஒரு பிரியமான காரியத்தைச் செய்யும்போது , நேசம் அல்லது பாசம் அல்லது அன்பு பெருகுவதைப் பார்க்கிறோம். கணவன் ஒருவேளை மனைவிக்குப் பிரியமானது என்ன என்று அறிந்து உணர்ந்து வாங்கி தருவாரென்றால் , அந்தக் குடும்பத்திலே பெரிய சந்தோஷத்தைப் பார்க்க முடிகிறது. மனைவியானவள் கணவனுடைய கோபத்தைத் தணிக்க அல்லது கணவனுடைய வருத்தத்தை மாற்றும்படியாக , அவருக்குப் பிரியமான காரியங்களைச்  செய்யும்போது , அந்தக் குடும்பத்திலே மகிழ்ச்சி உண்டாகும்.  ஆகவே இன்று நம்முடைய வாழ்க்கையிலே பிரியமானதைக் கர்த்தருக்குச் செய்கிற மக்களாய் மாற வேண்டும்.  அவ்விதமாய்  மாறும்போது , தேவன் அபரிமிதமான ஆசீர்வாதங்களை நம்மில் மாத்திரமல்ல நம்மைச் சார்ந்திருக்கிற  மக்களுக்குள்ளாய் பெருகச் செய்கிறார். கர்த்தருக்குப் பிரியமானது என்ன என்று ஆராய்ந்து அறிந்து அதைச் செய்யும்போது , தேவன் நம்மேல் பிரியமாயிருக்கிறார்.

                            கர்த்தருக்குப் பிரியமானது என்ன என்று நமக்குத் தெரிவிக்கிற  தேவன் , அவருக்குப் பிரியமானதைச் செய்ய நாம் இடம் கொடுக்கும்போது, அதின் மேன்மைகளைச்  சுதந்தரிக்கிற  மக்களாய் இருக்கிறோம். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய  இயேசு கிறிஸ்து பிரயோஜனமானவைகளை  நன்றாக நமக்குப் போதிக்கிற  தேவன். " நான் உனக்குப் போதித்து , நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் ; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு   ஆலோசனை சொல்லுவேன்." என சங்கீதம் 32:8ல் பார்க்கிறோம். மேலும் '... பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து , நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." என்று ஏசாயா 48:17ல்  பார்க்கிறோம். அநேக நேரங்களிலே கர்த்தருடைய போதனைகளை நாம் அறிந்து புரிந்து செயல்பட முடியாதபடி உலகத்தின் காரியங்கள் நம் உள்ளத்தில் பாதிப்பைத் தருகிறது. கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யும்போது , வருகிற ஆசீர்வாதத்தையும் பிரியமானது என்ன என்றும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

I. கர்த்தருக்குப் பிரியமானது என்ன ?

1.கீழ்ப்படிதல்

  " பிள்ளைகளே , உங்களைப்  பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது." கொலோசெயர்  3:20

              கீழ்ப்படிவது கர்த்தருக்குப் பிரியமான ஒரு செயல் . அநேக  நேரங்களில் கீழ்ப்படிவதினால் வருகிற மேன்மைகளை நான் அறியாதபடி , கர்த்தருடைய வார்தையைக் கேட்டும், அறிந்திருந்தும் , தெரிந்திருந்தும் நாம் அவைகளைச்  செய்யாது  தவறானவைகளைச் செய்கிற மக்களாய் இருக்கிறோம்.

 

i.) கர்த்தருடைய சத்தத்திற்குக்  கீழ்ப்படிதல்

                    "...கர்த்தருடைய சத்தத்திற்குக்  கீழ்ப்படிகிறதைப்  பார்க்கிலும் , சர்வாங்க தகனங்களும் ,பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?..." என்று 1 சாமுவேல் 15:22ல் சவுலைப் பார்த்து சாமுவேல் தீர்க்கதரிசி கேட்பதைப்  பார்க்கிறோம். தேவன் சாமுவேல் தீர்க்கதரிசி மூலமாய் அமலேக்கியரை அழித்து  வரவேண்டும் என்று சவுலை அனுப்பினார் . முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் , கர்த்தருடைய வார்த்தையை விட்டுவிட்டு , முதல் தரமான ஆடுமாடுகளையும்  , அமலேக்கிய ராஜாவையும் உயிரோடு கொண்டு வந்ததைப் பார்க்கிறோம். சர்வசங்காரம் பண்ணவேண்டிய இடத்திலே அவன் கீழ்ப்படியாததினாலே அவனுடைய மேன்மையான  ஆசீர்வாதங்களை இழந்துப் போனதைப் பார்க்கிறோம். இன்று கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிற மக்களாய்  நாம் மாற வேண்டும். செவிகொடுத்தல் என்பது கேட்பதோடு மாத்திரமல்ல முழுமனதோடு அதற்குக்  கீழ்ப்படிதலாகும் .

         மேலும் "...கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக்  கீழ்ப்படிவாயானால், உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால் , அவர் உன்னை கைவிடவுமாட்டார் , உன்னை அழிக்கவுமாட்டார் , உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை  மறக்கவுமாட்டார் ." என்று உபா.4:30,31ல்  பார்க்கிறோம். கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியும் போது  கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியினாலே கைவிடாதபடி நம்மைக் காப்பார் . இந்த உலகிலே அநேக மக்கள் கைவிடப்பட்டு கலங்குகிறார்கள். கணவனால் கைவிடப்பட்டவர்கள் , மனைவியால் கைவிடப்பட்டவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் , இப்படியாய் கைவிடப்பட்டு பலவிதமான பாடுகள் நிறைந்திருக்கிற  மக்கள் ஏராளம். மருத்துவரால் கைவிடப்பட்டு கண்ணீரோடு வாழ்க்கையின் எல்லையின் முடிவில் நிற்கிறவர்கள் இன்று அநேகர் உண்டு . ஆனால்  நம்முடைய தேவனோ இரக்கமுள்ள தேவன் . அவருக்கு பிரியமான இந்தக் கீழ்ப்படிதல் நமக்கு இருக்குமானால் , அவர் அதிசயங்களைச்  செய்து நம்மை கைவிடாதிருப்பார். விஞ்ஞான ரீதியாய் , மருத்துவ ரீதியாய் ஞானத்திற்கு அப்பாற்ப்பட்ட விதத்திலே அதிசயங்களைச்  செய்கிற தேவன் நமக்கிருக்கிறார். அவருடைய அன்பின் செயலானது , நம் கண்ணீரைத்  துடைக்கக்கூடியதாய் இருக்கிறது.

                 கர்த்தருக்குப் பிரியமான கீழ்ப்படிதலின்  காரியத்தை முழுமையாய் முழுமனதோடு நிறைவேற்றுகிற  மக்களாய் நாம் மாற வேண்டும்.

ii). தேவ ஊழியர்களுக்குக்  கீழ்ப்படிதல்

                           தேவ ஊழியர்களுக்குக்  கீழ்ப்படியும்போது , கர்த்தருக்கும்  நமக்கும் உள்ள தொடர்பு நலமாய் உருவாவதை நாம் பார்க்க முடியும். 1சாமுவேல் 3ம்  அதிகாரத்தில் தேவன் சாமுவேலை அழைக்கிறதைப்  பார்க்கிறோம். சாமுவேல் தேவனுடைய ஆலயத்தில் தங்கியிருந்து ஏலியினுடைய  தலைமைக்குக்  கீழாய்  இருந்தவன். ஒருநாளில் படுத்து உறங்கிக்  கொண்டிருக்கும்போது , கர்த்தர் வந்து அவனைக் கூப்பிட்டார். கர்த்தருடைய சத்தத்தை அதுவரை அறியாத இந்த சிறு சாமுவேல் உடனே எழுந்திருந்து ஏலியினிடத்தில்  ஓடினான். இதோ இருக்கிறேன், என்னைக் கூப்பிடீரே என்று சொன்னவுடனே , அதற்கு ஏலி  நான் கூப்பிடவில்லை , திரும்பிப் போய்  படுத்துக்கொள்  என்றான். அவன் போய்  படுத்துக்கொண்டான். மறுபடியுமாய் கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார். அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியிடம்  போய் இதோ  இருக்கிறேன் , என்னைக் கூப்பிட்டீரே  என்று முன்போல  சொன்னான் . மறுபடியுமாய் ஏலி  அவனை அனுப்பி வைத்துவிட்டான். மூன்றாம் விசை சாமுவேல் என்று கூப்பிட்ட  சத்தத்தை அவன் கேட்டு , ஏலியினிடத்தில்  ஓடினான் . ஏலி  அவனை நோக்கி , நீ போய்  படுத்துக்கொள் . உன்னைக் கூப்பிட்டால் , நீ கர்த்தாவே , சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய்  தன்னுடைய ஸ்தானத்திலே  படுத்துக்கொண்டான் . அப்பொழுது கர்த்தர் முன்போல வந்து நின்று சாமுவேலே  சாமுவேலே  என்று கூப்பிட்டார். அதற்குச் சாமுவேல் சொல்லும் ; அடியேன் கேட்கிறேன் என்று ஏலியினுடைய  அந்தப் போதனையின்படியே செய்தபடியினாலே சாமுவேல் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கிற மனிதனாய் மாறினான். கர்த்தருடைய சத்தத்தை அறிந்து ஒரு பெரிய தீர்க்கதரிசியாக மாறின நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.

                        கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , தேவனுடைய ஊழியர்களுடைய  முக்கியமான தலையாய பொறுப்பு என்னவென்றால் , உங்களுடைய உறவை கர்த்தருடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது . கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டுக்  கீழ்ப்படிய வேண்டும் என்கிற உன்னதமான ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது தான் தேவ  ஊழியருடைய முக்கிய பொறுப்பாயிருக்கிறது. ஊழியர்களுடைய ஆலோசனைகளுக்கும் போதனைகளுக்கு   கீழ்ப்படியும் போது , கர்த்தருடைய நெருங்கின நல்ல  உறவை உருவாக்கிக் கொள்ள முடியும்.

iii). மாயமற்ற சகோதர சிநேகத்தோடு கீழ்ப்படிதல்

 " ஆகையால் நீங்கள் மாயமற்ற  சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி , ஆவினாலே  சத்தியத்திற்குக்  கீழ்ப்படிந்து , உங்கள் ஆத்துமாக்களைச்  சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் , சுத்த இருதயத்தோடே  ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள் ." 1 பேதுரு 1:22

           நம்முடைய ஆத்துமாவை சுத்தமாக்குகிற செயல் தான் மாயமற்ற சகோதர சிநேகம். இன்று நம் வாழ்க்கையிலே நம்முடைய ஆத்தும நேசராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய ஆத்துமாவைப் பெலப்படுத்துகிறவர் , ஆத்துமாவைத் திருப்தியாக்குகிற தேவன். நம்முடைய  வாழ்க்கையிலே இந்த அன்பை ஊற்றி , நாம் ஒருவருக்கொருவர் மாயமற்ற அன்பினால் நிறைந்து , ஆத்துமாவை சுத்தப்படுத்திக் கொள்கிற மேலான பாக்கியத்தைக்  கீழ்ப்படிதலின்  மூலமாய்த் தருகிறார்.

            தேவனுக்குக்  கீழ்ப்படியும்போது , அவர்  சந்ததியின் ஆசீர்வாதத்தை  அருளுகிற தேவனாயிருக்கிறார்.'நீ என் சொல்லுக்குக்  கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள்  பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் ...' என்று ஆதி 22:18ல்  பார்க்கிறோம். ஆபிரகாமுடைய  உண்மையான ஒப்புக்கொடுக்கும் செயலை அறிந்து , அவன் உள்ளத்தை மகிழ்விக்கும்படியாக நெடுங்காலத்திற்குரிய பெரிதான ஆசீர்வாதத்தை  தந்தார். கீழ்ப்படிதல் கர்த்தருக்குப் பிரியமான ஒரு  செயல்.  அதை நிறைவேற்றும்போது , சந்ததியின் ஆசீர்வாதத்தை  சுதந்தரித்துக் கொள்கிற பாக்கியவான்களாய் இருக்கிறோம்.

2.தேவனைப் பாட்டினால்  துதிப்பது  அவருக்கு பிரியம்.

   " தேவனுடைய நாமத்தைப்  பாட்டினால்  துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும் இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்." சங்கீதம் 69:30,31

            '...ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன் ' யாக்.5:13ல் பார்க்கிறோம். சிலர் குளிக்கும்போது மிகுந்த சத்தமாய் பாடுவது வழக்கம் . சிலர் தனிமையாய் அல்லது பயம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் கடந்து செல்கிற வேளையிலே பாதையில் உரத்த சத்தமாய் விசிலடிப்பது அல்லது பல பாடல்களின் டியூனை நன்கு சத்தமாய்ப்  பாடுகிறதைப் பார்த்திருக்கிறோம். நாம் மகிழ்ச்சியாயிருக்கும் போது  பாடுகிற சுபாவம் உடையவர்களாயிருக்கிறோம்.

i). புதுப்பாடலைத் தருகிற தேவன்.

         தேவன் நம்மை உளையான  சேற்றிலிருந்து தூக்கியெடுத்தபிறகு கன்மலையின்  மேல் நிறுத்தி , புதுப்பாடலை நமக்கு தருகிறவர். 'நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு , பயந்து , கர்த்தரை நம்புவார்கள் ' சங்கீதம். 40:3ன் படி , துதித்து புதுப்பாடல் பாடுவதற்குரிய கிருபையை அருளுகிறார். மகிழ்ச்சியாயிருப்பதினால் பாடக்கூடிய உள்ளத்தை  நம்முடைய தேவன் தருகிறார். உளையான  சேற்றினின்று தூக்கியெடுத்த படியினாலே  துதித்துப்பாடுகிற  பாடல்களை நமக்கு தருகிறார். ' கர்த்தரைத் துதியுங்கள் ; நம்முடைய தேவனை  கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே  இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது ' என்று சங். 147:1ல்  பார்க்கிறோம். கர்த்தரைத்  துதிக்கும்போது  நம்முடைய எண்ணங்கள் சிந்தைகள் எல்லாம் கர்த்தருக்குள் சீர்படத்தக்கதாக , அவருடைய காரியங்களைக் குறித்து ஆராய்கிற  உணர்வுள்ள இருதயத்தைத் தருகிறார். பலவிதமான சிந்தைகளோடு கர்த்தருடைய ஆலயத்தில் கூடிவரும்போது , பாடல்களைப்  பாடுகிறோம். ஏனெனில் பாடல்கள் மூலமாக நம்முடைய எண்ணங்கள்  சிந்தைகள் எல்லாம் சிதறடிக்கப் படாதபடி , கர்த்தருடைய சமூகத்தை நாடுகிறதாய் , தேடுகிறதாய் , துதிக்கிறதாய் நம்மை மாற்றுகிறது. வீணான உலகக் கவலைகள் , பிரச்சனைகள் , போராட்டங்கள் , என்ன ஆகுமோ என்ற வேதனைக்குரிய எண்ணங்களை நீக்கி , நம்மைக் கர்த்தருக்குள்ளாய் சீராக்கக்கூடிய ஒரு செயல்தான்  பாடல்களின் வல்லமையின் செயலாய் இருக்கிறது.  ஆகவே தேவனுக்கு முன்பாக துதித்து பாடுவது இன்பமானது, தகுதியானது. ஏனெனில் தவறான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக கர்த்தரை நம்பி சார்ந்து வாழ்வதற்கு ஏற்ற உணர்வை , உள்ளத்தை உருவாக்கக்கூடியது பாடல்கள் ஆகும்.

ii ).இரட்சணியப்  பாடல்களினால் சூழ்ந்து கொள்கிற தேவன்

'நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர் ; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்  காத்து , இரட்சணியப்  பாடல்கள் என்னைச் சூழ்ந்துக்கொள்ளும்படி செய்வீர்.' சங்கீதம் 32:7

                       நம்முடைய தேவன் நம்மைச் சூழ்ந்து கொள்ளுகிற தேவன் . அவருடைய வல்லமையான செயலினால் நமைச் சூழ்ந்து கொள்ளுகிற அநேகக் காரியங்கள் உண்டு. காருண்யம் என்னும் கேடகத்தினாலே நீதிமானைச் சூழ்ந்துகொள்ளுகிறார் என்று சங். 5:12ல் பார்க்கிறோம். கர்த்தரை நம்புகிறவனை கிருபை சூழ்ந்து கொள்ளுகிறது என்று பார்க்கிறோம். நம்முடைய தேவன் பலவிதங்களில் நம்மை சூழ்ந்திருக்கிறதினாலே நாம் பாதுகாக்கப்படுகிறோம். பலவிதங்களிலே  மேன்மையான  நன்மைகளைப்  பெற்றுக்கொள்வதற்குப் பாக்கியசாலிகளாய்  மாறுகிறோம். ' பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல் , கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்' சங். 125:2ல்  பார்க்கிறோம். நம்மைச்  சுற்றியிருக்கக்கூடிய தேவன் இன்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார்.'நான்  அதற்குச் சுற்றிலும்  அக்கினி மதிலாயிருந்து , அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்...' என்று சகரியா 2:5ல் பார்க்கிறோம். நம்மை எல்லா விதங்களிலும் பாதுகாக்கும் படியாக, எல்லாவிதமான நன்மைகளைத் தரும்படியாக , இந்தப் பாடல்களின் மூலமாய் அவர் அதிசயமானவைகளைச் செய்கிற தேவன்.

          ஒரு அருமையான சகோதரன் தன்  வாழ்க்கையில் உள்ள பிரச்சனையின் நிமித்தமாய் தற்கொலை செய்ய வேண்டும்  என்ற எண்ணம் அவருக்குள் உதித்துக்கொண்டிருந்தது. ஆனால்  திடிரென்று  இரட்சணிய  பாடலை அனுப்புகிற தேவன் , அற்புதமாய் அவருடைய வாழ்க்கையை மாற்றினார். நான் பாவி தான் , ஆனாலும் நீர்  மாசற்ற இரத்தம் சிந்தினீர் என்று சொல்லப்பட்ட பாடலின் சத்தத்தை அவன் காதுகள் கேட்கத்தக்கதாக கர்த்தர் கிரியைச் செய்தபடியினாலே , அந்நாளில் எடுக்கவேண்டிய தவறான தீர்மானத்தைச் செய்யாது , தன்  வாழ்க்கை நிலைகளை மாற்றிக் கொண்டான். நம்முடைய தேவன் பல காரியங்களிலே  பாடல்களின் மூலமாய் அதிசயங்களைச்  செய்கிற அன்பின் தேவனாயிருக்கிறார்.

Iii). வெற்றியின் பாடல்

        வேதத்திலே பலவிதமான சூழ்நிலைகளிலே  பாடல்களைப்  பாடின  நிகழ்ச்சிகளைப்  பார்க்க முடிகிறது. ' ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்  கையிலே தம்புரை எடுத்துக் கொண்டாள் ; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப்  பின்னே புறப்பட்டுப்போனார்கள் . மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக கர்த்தரைப்  பாடுங்கள் , அவர் மகிமையாய்  வெற்றி சிறந்தார் ...' என்று யாத் . 15:20,21ல் வெற்றியின் கீதமாக பாடின நிகழ்ச்சிகளைப்  பார்க்கிறோம் . நம்முடைய தேவன் நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவன். ஒருவேளை வாழ்க்கையிலே பலவிதமான தோல்விகளைச்  சந்தித்து , துக்கத்தோடு இருக்கலாம்.

         அருமையான சகோதரனே , சகோதரியே , நம்முடைய தேவன் நமக்கு எல்லாவற்றிலும் ஜெயம் தருகிற தேவன்.1கொரி . 15:57ல்  ' நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே  நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.' என்று பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலே ஜெயம்  கொடுக்கிற காரியம் தேவனால் நமக்கு உண்டாகிற ஒரு பாக்கியம். தேர்வுகளில் தோல்வி அடைந்த  மாணவர்கள் , வேலையில்லாததினாலே தோல்வி அடைந்து வாழ்கிற மக்கள், பலவிதமான தோல்வியினாலே  வாழ்க்கை கசந்துபோய் இருக்கிறதே என்று குடும்ப வாழ்க்கையிலே கஷ்டத்தினால் , பிரச்சினைகளினால் கலங்கியிருக்கிற மக்கள் , பிள்ளையில்லாத குறைவினிமித்தமாய்  குடும்ப வாழ்க்கையிலே தோல்வியடைந்து  துக்கத்தோடிருக்கிற மக்கள் என பலவிதங்களில் பார்க்கிறோம். ஆனால்  நம் கர்த்தரும்  இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனாயிருக்கிறார். அவருக்குப் பிரியமான மக்களாய் மாறும்போது , நம்மீது அன்பு வைத்து, அன்பினாலே எப்பொழுது ஜெயம்பெறும்  மக்களாய்  மாற்றுகிறார். அவருடைய ஆலோசனையின் வார்த்தையின்படி செய்யும்போது , நம்முடைய தோல்வியை எல்லாம் ஜெயமாய் மாற்றி , வெற்றியின் கீதங்களைப்  பாடும் கிருபையைத் தருகிறார்.

     கர்த்தர் செய்த பெரிதான காரியத்தினிமித்தமாய்  கர்த்தரைத் துதித்துப்  பாடுகிற  மக்களாய்  இருக்கிறோம். சங். 28:7ல் '...என் இருதயம் அவரை நம்பியிருந்தது ; நான் சகாயம் பெற்றேன் ; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது ; என் பாட்டினால்  அவரைத் துதிப்பேன்.' என்று பார்க்கிறோம். பாடல்கள் மூலமாய் அநேக காரியங்களை நமக்குத் தந்து , நம்முடைய காரியங்கள் எல்லாவற்றிலும் அதிசயங்களைச்  செய்கிற அன்பின் தேவனாயிருக்கிறார்.'இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன் ; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.' ஏசாயா 43:21ன்  படி  நாம் பாட்டினால்  துதிப்பது தேவனுக்கு பிரியமான காரியம். கர்த்தருக்குப் பிரியமான காரியம் செய்யும்போது , பலவிதமான காரியம் நமக்குக்  கிடைக்கிறது. 2 நாளா.20:22லே   அவர்கள் பாடித்  துதிக்க  ஆரம்பித்த போது, கர்த்தருடைய வல்லமை இறங்கி , யோசபாத்துக்கு எதிர்த்து வந்த மக்கள் அழியும்படியாய் ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை எழும்பப்பண்ணி , அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் என்று பார்க்கிறோம். துதித்துக்கொண்டிருந்த போது , தேவனுடைய வல்லமையானது இறங்கினது என்று அப். 16:25,26ல் பார்க்கிறோம். சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது , கட்டுகள் அவிழ்ந்து போயிற்று , வாசல்கள் திறந்தன . நாம் இவ்விதமாய் தேவனைப் பாடித்  துதிக்கும்போது , நம்மைச் சிறைப்படுத்தியிருக்கிற , பிரச்சனைகளும் நம்மை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற எல்லா போராட்டங்களும் நம்முடைய வாழ்க்கையிலே தோன்றாதபடி , அதன் அஸ்திபாரங்கள் எல்லாம் அசையத்தக்கதாய் கிரியைச் செய்வதோடு , நிறைவான மகிழ்ச்சியை அடையத்தக்கதான காரியங்களைக் கர்த்தர் நமக்குச் செய்கிறவராயிருக்கிறார்.

 

3.உண்மையாய் நடப்பது கர்த்தருக்குப் பிரியம்

" பொய்  உதடுகள் கர்த்தருக்கு அருவறுப்பானவைகள் ; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம் ." நீதிமொழிகள் 12:22

           நம்முடைய தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். ' கர்த்தரோ உண்மையுள்ளவர் ...'2தெசலோ.3:3. சங்.51:6ல் ' உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர் ...' என்று தாவீது  உடைந்த உள்ளத்தோடு , நொறுங்கிப்போன உள்ளத்தோடு , தான் செய்த பாவத்தினிமித்தமாய் , கர்த்தருடைய சமூகத்திலே தன்னைத் தாழ்த்தின நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது . தேவன் நம்மைக் குற்றப்படுத்துகிற ஒரு காரியம் உண்டு. வாயின் வார்த்தைகளினால் அவரைச் சேருகிறோம் , இருதயமோ  அவரை விட்டு தூரமாயிருக்கிறது என்று ஏசாயா 29:13,14ல் பார்க்கிறோம்.

       பேசுவதிலே  உண்மையற்றவர்களாய் இருக்கிறோம். சங்.94:9ல் காதை  உண்டாக்கினவர் கேளாரோ ? கண்ணை உருவாக்கினவர்  காணாரோ ? என்று சொல்லியிருப்பதினாலே நாம் தேவனுடைய சமூகத்திலே பொய்யான காரியங்களைப்  பேசுவதை விட்டுவிலக  வேண்டும். உண்மையற்ற காரியங்களினிமித்தமாய்  தேவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைச் செய்கிறோம். உண்மையாய் தேவனை நோக்கிக் கூப்பிடுகிற மக்களாய் மாறவேண்டும். உண்மையாய்ப் பேச வேண்டும், உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடும் உள்ளம் இருக்கவேண்டும்.'தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் , உண்மையாய்த்  தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் , கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.' சங்கீதம் 145:18. உண்மையான காரியங்களைச்  செய்யும்போது , கர்த்தர் அதில் பிரியமாயிருக்கிறார் என்று அறிந்து செய்வோமானால் , நிச்சயமாய் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் .

        நம்முடைய தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது நாம் உண்மையாய்ப் பேசுவது , உண்மையாய்க்  கர்த்தரை தொழுதுகொள்வது , உண்மையாய் கர்த்தரிடம் அன்புகூருவது ஆகும். இவ்விதமாய் அவருக்குப் பிரியமானவர்களாய் மாறி  அவரைச் சேவிக்கும்போது  , நம்முடைய காரியங்களை  அவர் ஆசீர்வதிப்பார். 2 நாளா . 34:12ன் படி உண்மையாய் வேலை செய்கிற மக்களாய்  இருக்க வேண்டும். நம்முடைய வேலை ஸ்தலங்களிலே  நாம் உண்மையற்றவர்களாய் இருக்கிறபடியினால் , சாட்சியில்லாத மக்களாய்  இருப்பதினாலே  கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது . நாம் உண்மையாய் வாழும்போது , அவர் அநேக ஆசீர்வாதங்களை  வைத்திருக்கிறார். உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்துக்  கொள்கிறார்.(சங் . 31:23). தானி.6:4ல்  தன்னுடைய  வேலை ஸ்தலத்திலே உண்மையுள்ளவனாய் இருந்தபடியினாலே அவன்மேல் ஒருவரும் குற்றஞ்சாட்ட முடியவில்லை  என்று பார்க்கிறோம். நீதி.28:20ன்  -படி   உண்மையுள்ளவனை பரிபூரண ஆசீர்வாதங்களினால்  நிரப்புகிற தேவன் நம்முடைய தேவன் . அவருக்குப் பிரியமான இந்த உண்மையான காரியத்தைச் செய்வோமானால், உண்மையாகவே அவர் நம்மை ஆசீர்வதித்து  மேன்மைப்படுத்தி வழிநடத்துவார்.

4). பாவத்தை விட்டு மனம் திரும்புவது கர்த்தருக்குப் பிரியம்

     " துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ ? அவன் தன்  வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." எசேக்கியேல் 18:23

      துன்மார்க்கமான காரியத்தை விட்டு திரும்புகிற காரியம் என்பது பாவத்தை உணர்ந்து, பாவத்தினிமித்தமாய் வரக்கூடிய வேதனைகளுக்குத் தப்பிக்  கொள்வதற்கு நம்மை முற்றிலுமாய் அர்பணிக்கிற ஒரு செயல். அநேக நேரங்களிலே  கர்த்தருக்குப் பிரியமான செயலைச் செய்கிற மக்களாய்  இராததினாலே , நம்முடைய வாழ்க்கையிலே கேடான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாவத்தைவிட்டு மனந்திரும்புகிற செயல் கர்த்தருக்கு மிகவும் பிரியமான காரியம். ஒரு பாவியின் மனந்திருப்புதலினாலே பரலோகத்திலும் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என்று வேதம் நமக்குச்  சொல்கிறது.

              இன்று நாம் எவ்விதமாய்  இருக்கிறோம்? பாவத்தை விட்டு மனந்திரும்பி இருக்கிறோமா?

                ஒரு  மனிதன் தன்னைக்  கர்த்தருக்குள்ளாய்  திருத்திக்கொள்ளும் போது , அவனுடைய  வாழ்க்கையிலே அவன் இழந்த ஆசீர்வாதங்களைப்  பெற்றுக் கொள்கிறான். தேவன் நமக்கு உவமானமாக ஒரு காரியத்தைப் போதித்தார். இளையகுமாரன் கர்த்தரை விட்டு, பரம தகப்பனை விட்டு தூரமாய் சென்ற ஒரு மனிதன். சகோதரனுடைய அன்பின் ஐக்கியத்தை விரும்பாத ஒரு மனிதனாய் இருந்தான்.  தன்  துன்மார்க்கமான ஜீவியத்தினாலே தனக்கு இருந்த எல்லா  ஆஸ்திகளையும் அழித்துப்  போட்டு  விட்டான். கர்த்தருடைய வழிகளை விட்டுப்  பிரிந்து போவோமானால் , தேவன் கொடுத்திருக்கிற நல்ல சுகத்தை , சமாதானத்தை ,சந்தோஷத்தை  ஆசீர்வாதத்தை  இழந்து விடுவோம். ஆனால்  அவரிடத்தில் திரும்பும் போது , அவர் நம்மை மன்னித்து எந்தவிதமான தகுதி இல்லாமலிருந்தும் , நம்மை ஏற்றுக்கொண்டு இழந்த எல்லாவற்றையும் நாம் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நமக்கு  கிருபை செய்கிறார்.

          ஒரு விசை என்னைக் கேட்டருளும் என்று தான் இழந்துபோன காரியத்திற்காக  தேவசமுகத்திலே சிம்சோன் உண்மையாய்க்  கேட்டபோது , கர்த்தர் அவனுக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்து , பெலிஸ்தரெல்லாம் கூடியிருந்த அந்த மண்டபத்தின் இரண்டு தூண்களையும் இழுத்துவிட மண்டபம் இடிந்து விழுந்து எல்லோரும் மாண்டுபோனதைப்  பார்க்கிறோம். அவன் உயிரோடிருந்ததைக் காட்டிலும் அவன் மரிக்கும் நேரத்திலே அநேக சத்துருக்களை அவன் அழிக்கத்  தக்கதான  ஒரு மனிதனாய் மாறின  நிகழ்ச்சியைப்  பார்க்கிறோம்.

                 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , இந்த நாளிலே கர்த்தருக்குப் பிரியமானது இன்னது  என்று அறிந்து , கீழ்ப்படிகிற மக்களாய் , உண்மையுள்ள மக்களாய் ,  தேவன் எதிர்பார்க்கிற நற்பண்புகள் நிறைந்த மக்களாய் மாறி நம் வாழ்க்கை மாறும்போது , தேவன் நிச்சயமாய் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

                  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக 

                      கிறிஸ்துவின் பணியில் ,              

  சகோ .சி.எபனேசர் பால்.