செய்தி

     "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்."            ஏசாயா 45:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே  வாழ்த்துகிறேன்.

நம்முடைய வாழ்க்கையிலே அநேக காரியங்கள் செவ்வையாக்கப்பட  வேண்டியதாயிருக்கிறது. ஒரு பாதையானது செவ்வையாக்கப்படும்போது தான் , அது சிறப்பாகவும்  மனிதர்களுக்குச் சீராகவும் இருக்கமுடியும். ஒரு  பகுதிச்  சாலையானது  வளைந்து வளைந்து செல்கிறபடியினாலே ஒவ்வொரு தினமும் , ஒவ்வொரு முறையும் ஏறத்தாழ விபத்துகள் நடந்து கொண்டேயிருந்தது . சிலர் அதை வேறு விதமாய்ப்  பேச ஆரம்பித்தார்கள். அந்த ஊர் மக்கள் இந்த ரோடானது ஒவ்வொரு நாளும்  சாலை விபத்தைக் கொண்டு வரக்  கூடியதாய் இருக்கிறது என்று சொல்லி ஒரு காலகட்டத்திலே மிகுதியாய் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அப்பொழுது அரசாங்கம் அந்தப் பாதையைச் சரிசெய்வதற்காக  முயற்சிகளை எடுத்து சரி செய்தார்கள். அதைச் செவ்வையாய்ச் செய்து நேராகின பொழுது , அந்தச் சாலை விபத்தானது நின்று போய்விட்டது. யோசித்துப் பாருங்கள் , செவ்வையாக்கப்பட்டபடியினாலே , அங்கு நடைபெற்ற வேதனைக்குரிய காரியங்கள் நின்றுபோயிற்று.

உலக மனிதர்களுடைய வாழ்க்கையிலும் அப்படித்தான் . அவனுடைய சமுதாய வாழ்க்கையில் மாத்திரமல்ல , அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அவன் செவ்வையாக்கப்படும்போது தான் சந்தோஷத்தோடு  தன்  வழிகளில் நடக்க முடியும். ஆனால்  ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்கையில் முன்னணியில்  வைக்கிற மக்களாய் மாறும்போது , அவர் நமக்கு முன்பாகச் சென்று எல்லாக் கோணலான   காரியங்களையும்  செவ்வையாக்குகிற அன்பின் தேவனாய் இருக்கிறார். செவ்வைப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒரு காரியம். நாம் செவ்வையாய்ச் செல்வதற்கு கவனமாய் இருப்போமானால் , ஜெயமுள்ளவர்களாயும் , ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயும்  மாறிவிடுவோம்.

மனிதனுடைய வாழ்க்கையிலே அநேக காரியங்கள் செவ்வையாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது . வேதத்திலே சொல்லப்பட்ட  சில காரியங்களைப்  பார்க்கும்போது , தேவன் எப்படிப்பட்டவராய்  இருக்கிறார்? என்னென்ன காரியங்களை அவர் செவ்வையாக்குகிறார் என்று பார்ப்போம்.

I . செவ்வையாக்கப்பட  வேண்டிய காரியங்கள் என்ன ?

1.வழி

"என்னைப்  பலத்தால்  இடைக்கட்டி , என் வழியைச்  செவ்வைப்  படுத்துகிறவர்  தேவனே ". சங்கீதம் 18:32

தாவீது  அழகாக தன்  அனுபவத்தை , தேவனுடைய மகிமையான காரியங்களைக்  குறித்துச் சொல்வதைப்  பார்க்கிறோம். நாம்  அநேக காரியங்களை முயற்சிக்கிறோம், ஆனால்  வாய்க்காதே  போகிறது. ஆனால் தாவீதினுடைய அனுபவத்தைப் பார்க்கும் போது, அவனுடைய வழிகளைச்  செவ்வையாக்கி , அவனுடைய  வாழ்க்கையை மற்றவர்களுக்கு மத்தியிலே உயர்த்தி , கால்களை மான்களின் கால்களைப்  போலாக்கி உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறவர் தேவனே என்று அறிந்து கொள்ள முடியும். அருமையான தேவஜனமே, நம்முடைய வாழ்க்கையிலே வழியைச் செவ்வையாக்குகிறவர் தேவன். வழி  செவ்வையாகவில்லை  என்றால்   வாழ்க்கையிலே  சமாதானம் இராது, சந்தோஷம்  இராது. நம்முடைய பெலத்தை  அதிகமாய் நாம் செலவிட வேண்டிய நிலை வரும். வீணாக பாடுகளை அனுபவிக்க வேண்டிய மக்களாய் மாறிவிடுவோம்.அநேக  காலங்கள்  பிரச்சனைகளைச்  சந்திக்கிற  மக்களாய் இருப்போம்.

ஒருமுறை ஒரு பகுதி ஊழியங்களைச் செய்ய ஏற்றுக்கொண்டேன். அப்பகுதிக்கு  எளிதாய்ச் சென்று விடலாம் என்று எண்ணி செல்ல ஆரம்பித்தேன். ஆனால் 75 கி.மீ. தொலைவில் உள்ள  அந்த ஊருக்குச் செல்ல முடியாதபடி  சாலையானது  மிகவும்  பழுதடைந்ததாய் இருந்தது. பெய்த மழைகளினாலே  பழுதடைந்த , 75 கி.மீ  தொலைவுள்ள  அந்தப் பாதையை, சாதாரணமாக  ஒன்றரை மணி அளவில் கடந்து செல்லலாம். இப்போது மூன்றரை மணி நேரம் அளவில் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்த நிலை வந்தது. ஆகவே நம் வாழ்க்கையின் பாதையானது  செவ்வையாய் இருக்க வேண்டும். சாதாரண உலகப் பிரகாரமான பாதை செவ்வையாய் இராதபடியினாலே  எவ்வளவு வேதனை.  ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நம்மைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. தாவீதின் வாழ்க்கையில்  அநேக கோணலானவைகளை செவ்வையாக்கின படியினாலே  அவன் இராஜாவாக  ஏற்றக் காலத்திலே அபிஷேகம் பண்ணப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டான்.

            இன்னுமாய் ' கர்த்தாவே , உமது வழியை எனக்குப் போதித்து , என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.' என்று சங்கீதம்27:11ல்  பார்க்கிறோம். வழியைச்   செவ்வைப்படுத்துகிறவர் மாத்திரமல்ல செவ்வையான பாதையில் நடத்தும் தேவன் நமக்கிருக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் பாதையிலே செவ்வையாய் எவ்விதமாய்ச் செல்ல முடியும் என்று சிறிய பெரிய காரியங்கள் எல்லாவற்றிலும் நம்மைப் போதித்து நடத்துகிறவர் இன்னும் ஜீவனோடிருக்கிறார். ஒருவேளை இன்று பல காரியங்களிலே  என்ன செய்வது என்று தெரியாதிருக்கலாம். எவ்விதமாய்ச் சென்றால் நமக்குச் சமாதானம் உண்டு, சந்தோஷம்  உண்டு என்று எண்ணிக்  கொண்டிருக்கலாம். கர்த்தரோ நமக்கு உதவிச் செய்கிறவர். நம்முடைய வழிகளை நமக்குப்   போதித்து ஆசீர்வதிக்கிற  தேவன் நம்முடைய தேவன். 'நான் உனக்கு முன்னேபோய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் ' என்று சொன்னவர் நம்மைப்  போதிப்பதற்கு நலமான தேவனாயிருக்கிறார். போதனையானது மனிதனுடைய வாழ்க்கையிலே மகிழ்ச்சியைத் திரும்பிக் கொண்டுவரக் கூடியது.

அதோடு ' கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய  நீதியிலே நடத்தி , எனக்கு முன்பாக உம்முடைய வழியைச்  செவ்வைப்படுத்தும்.' என்று சங்கீதம்5:8ல்  பார்க்கிறோம். அவர் வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர் மாத்திரமல்ல , நம்மை நித்தமும் நீதியின் பாதையில் நடத்தி , நம்மை மகிழ்ச்சியாக்குகிற தேவனாய் இருக்கிறார். நமக்கு முன்சென்று எல்லாவற்றையும் செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார்.

 2. பேச்சு

"உடனே  அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு , அவனுடைய நாவின் கட்டும்  அவிழ்ந்து , அவன் செவ்வையாய்ப் பேசினான்." மாற்கு  7:35

வழிகள் செவ்வையாக்கப்படுவது மாத்திரமல்ல , செவ்வையாய்ப் பேசுகிற காரியம் இன்றைக்கு அவசியமாய் இருக்கிறது. சிலருடைய வாழ்க்கையிலே அவர்களின் பேச்சு செவ்வையாய் இராதபடியினாலே , பலவிதமான ஆசீர்வாதங்களை , நன்மையானவைகளைப் பெற முடியாதபடி குறைவோடு இருக்கிறார்கள். ஒரு மனிதனுடைய பேச்சுத் திறமையினாலே  அவன் மேன்மையடைய முடியும், நன்மைகளை சுதந்தரிக்க முடியும். நாவானது மிக  முக்கியம் என நம்முடைய நாவைக்  குறித்து 'மரணமும் ஜீவனும் நாவின்  அதிகாரத்திலிருக்கும் ; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.’ என்று நீதி. 18:21ல்  பார்க்கிறோம். நம்முடைய நாவானது  தேவனுடைய வார்த்தைகளை உச்சரிக்க வேண்டியது. தேவனுடைய நாமத்தைத் துதிக்க வேண்டிய வார்த்தை இல்லையானால் , வாழ்க்கையிலே ஜீவனையே இழந்து போக வேண்டிய நிலமை  ஏற்படலாம்.  மரணமும் ஜீவனும் நாம் பேசுகிறதில் இருக்கிறபடியினாலே , செவ்வையாய்ப் பேச வேண்டும். சுகமடைந்த அந்த மனிதனுடைய வாழ்க்கையிலே தன்  வியாதி நீங்கி சுகமடைந்த  பொழுது , அவன் தேவனை மகிமைப்படுத்தினான் என்று பார்க்கிறோம். இன்றைக்கு நம்முடைய தேவன் , வழிகளைச்  செவ்வையாக்குவதோடு , வாயைச் செவ்வையாக்குகிறார்.

3.இருதயம்

" இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும் , தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும்..." சங்கீதம் 78:8

இருதயம் செவ்வையாக்கப்படாத நிலையைப் பார்க்கிறோம். இன்று நம்மை ஆசீர்வதிக்க  வேண்டும் என்று விரும்புகிற தேவன் , நம்மை எல்லாவிதங்களிலும் செவ்வையாக்க ஆற்றல் உடையவர். இருதயமானது  செவ்வையாக்கப்பட வேண்டும். மனிதனுடைய இருதயமானது  திருக்குள்ளதாயும்  கேடுள்ளதாயும்  இருக்கிறது. ஆகவே தான் பலவிதமான கேடுபாடுகள்  உண்டாகிறது. அருமையான தேவஜனமே , இன்றைக்கு  நம்முடைய வாழ்க்கையிலே  இருதயமானது  செவ்வையாயிருக்குமானால் , நாம் பேசுகிற காரியங்களும் செவ்வையாயிருக்கும் . இருதயத்தின் நிறைவினாலே வாய் பேசுகிறது . 'எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா  கேடுள்ளதுமாயிருக்கிறது ..' என்று   எரேமியா  17:9ல்  பார்க்கிறோம். இருதயமானது  செவ்வையாக்கப்படுமானால்  மனிதனுடைய வாழ்க்கையானது சீரடைந்து விடும். சமுதாயத்திலே சிறப்பான ஒரு கருவியாயும்  மாறி விடுவான். இருதயம்  செவ்வையாக்கப்படாதபடியினாலே பலதரப்பட்ட தவறான காரியங்களைப்  பேசித்திரிகிற மக்களைப்  பார்க்கிறோம். அநேக நேரங்களில் தவறாய்ப் பேசுகிற பழக்கம் வழக்கமெல்லாம் இருதயத்தினுடைய கேடான நிலைகளினால் உண்டாகிறது .  

4.பார்வை

" உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது." நீதிமொழிகள் 4:25

உன் கண்ணிமைகள்  செவ்வையாய்ப் பார்க்கக்கடவது . பார்வையானது மிகவும் முக்கியமானது. நம்முடைய தேவன் நம்முடைய   பார்வையையெல்லாம் விசாரிக்கிற தேவன். அவருடைய காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. ஏசாயா 10:12ல்  ' ஆதலால் :  ஆண்டவர் சீயோன் மலையிலும்   எருசலேமிலும்  தமது  செயலையெல்லாம் முடித்திருக்கும்போது , அசீரிய  ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின்  வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும்  நான் விசாரிப்பேன்  என்கிறார்.' என்று பார்க்கிறோம். விசாரிக்கக்கூடியவகைகளில்  ஒன்று    பார்வை. அநேகருடைய பார்வையானது பாவமான காரியத்தைப்  பார்க்கக்கூடியதாய் இருக்கிறது . அருவறுப்பானதைப் பார்க்க வேண்டும்  என்று  விரும்புகிறது. தவறானதைப்  பார்க்கிற மக்களாய்  இருக்கிறார்கள். You tube -ல்  பலவிதமான அவலட்சணமான  காரியங்கள் , அருவருக்கப்பட  வேண்டிய காரியங்கள் இருக்கிறது. அதை ஆவலோடு பார்க்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். ஆகவே தான்  உன் பார்வையைச் செவ்வையாக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவனுடைய சமூகத்திலே எல்லாவிதங்களிலும் செவ்வையாய் பேசி , செவ்வையாய்ப் பார்த்து, செவ்வையான காரியங்களை இருதயத்தில் சிந்தித்து செயல்படும்போது , தேவனுடைய ஆசீர்வாதங்கள் உண்டு.

II).யாருடைய வழிகளைச் செவ்வையாக்குகிறார் ?

1. விடுதலைப்  பெற்றவர்களைச்  செவ்வையாக்குகிற தேவன்.

 " தங்கள் ஆபத்திலே  கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் , அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். தாபரிக்கும் ஊருக்குப்போய்ச் சேர , அவர்களைச்  செவ்வையான வழியிலே  நடத்தினார் ". சங்கீதம் 107:6,7

செவ்வையான வழியிலே யாரை நடத்தினார் என்று பார்க்கும்போது , விடுதலைப் பெற்றவர்களை. பல காரியங்களில் இன்று விடுதலை தேவை. அடிக்கடி நான் சொல்லக்கூடிய ஒன்று   நமக்கு பயத்திலிருந்து விடுதலை தேவை. பயமானது வாழ்க்கையில் வேதனையான காரியம். இந்தப் பயத்தினுடைய அடிமைத்தனத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நம்முடைய அடிமைத்தனத்திலிருந்து நம்மைவிடுவித்து தைரியசாலியாய்  மாற்றுகிறவர். சத்துருவுக்குப் பயந்து கொண்டிருக்கிற ஒரு மனுஷன் ,சத்துருவுக்கு விரோதமாய் எழுந்து ஜெயங்கொள்ள முடியாது. அதினிமித்தமாய் ஏற்றத்தாழ்வுகள் , அருவருப்பான காரியங்கள் தோன்றி அவனுடைய வாழ்க்கையைக் கெடுத்து விடும். ஆனால்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்கு விடுதலைக்  கொடுக்கிற தேவன். குமாரன்  உங்களை விடுதலையாக்கினால் , மெய்யான விடுதலை அடைவீர்கள். விடுதலையானது மிகவும் முக்கியம். விடுதலை  அடைந்தவர்களை  அவர் வழி  நடத்துகிற தேவனாயிருக்கிறார்.  அவர்களுடைய  வழிகளைச்  செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே செவ்வையான வழியிலே நடக்க வேண்டுமானால் , விடுதலை அவசியமாய் இருக்கிறது.  பயத்திலிருந்து விடுதலைத் தேவை. பிசாசின் பிடியிலிருந்து விடுதலைத் தேவை . பாரம்பரிய பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலைத் தேவை. குடிப் பழக்கத்திலிருந்து விடுதலைத் தேவை. வீணான காரியங்களுக்கு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களாய்  நாம் மாறி  விடாதபடி , கர்த்தர் விரும்புகிறபடி அவருடைய வழியிலே அவரால் நடத்தப்படுவதற்கு , முதலாவது அடிப்படையாய் அமைந்திருப்பது விடுதலையின் வாழ்க்கையாயிருக்கிறது.  இன்று அநேகர் விடுதலையின் வாழ்க்கையைப் பெற எண்ணுகிறார்கள். ஆனால் பெற்றுக்கொள்ள இயலாதிருக்கிறார்கள். இன்று விடுதலைப் பெற்றவர்களாய்  மாறுவோம் , ஆசீர்வதிக்கப்படுவோம்.

2. வழிகளிலெல்லாம்  நினைப்பவர்களை

" உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள் ; அப்பொழுது அவர் உன் பாதைகளைச்  செவ்வைப்படுத்துவார்." நீதிமொழிகள் 3:6

நம்முடைய வழிகள் எவ்விதமாய்  இருக்கிறது ?  நம்முடைய வழிகளைச்  செவ்வையாக்குகிற தேவன் , பாதையிலே அவரை நினைக்கிற  மக்களாய்  இருக்கிற ஒவ்வொருவரையும் நினைந்து அவர்களை ஆசீர்வதிக்கிற  தேவனாயிருக்கிறார். நம்முடைய  பாதை செவ்வையாக்கப்படுவதற்கு இரண்டாவது காரணமாக அவரை நினைக்கிற மக்களாய் மாற வேண்டும். நம்முடைய நினைவுகள் அவரைப் பற்றியதாய் மாறுவதற்கு இடம் கொடுக்க வேண்டும். உதாரணமாக , திருமணமாவதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற  ஒரு மகனையும்  மகளையும் பார்க்கும்போது , ஏறத்தாழ ஒவ்வொரு நாளும்  ஒருவருக்கொருவர்  பேசிக்கொள்வார்கள். என்ன பேசிக்கொள்வார்கள்? சாப்பிட்டாயா ? படுக்கப்போறீயா ? என்று  ஒருவரையொருவர் கேட்டுக்  கொண்டிருப்பார்கள். அவர்கள் அதிகமாய் ஒருவரையொருவர் நினைந்து அடிக்கடி பேசிக்கொள்வதைப்  பார்க்கலாம். நம்முடைய தேவனோ இதைத்  தான் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நம்முடைய நினைவுகள் எல்லாம் அவரைக் குறித்துத்தான்  இருக்க வேண்டும். அநேகர் தங்கள் வழிகளில் துன்மார்க்கமான எண்ணங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிந்தைகளிலே தேவ  பயம் கிடையாது. இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத நினைவுகளோடு இருக்கிற மக்கள் இன்று அதிகமாய் இருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய சமூகத்திலே நம்மை ஒப்புக்கொடுத்து , வழிகளிலெல்லாம் அவரை நினைப்போமானால் , எல்லாக் காரியங்களையும்  அவர் செவ்வையாக்கி ஆசீர்வதிப்பார்.

3. கர்த்தரால் நடத்தப்படும்போது  செவ்வையாக்குகிறார்.

  " குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி , அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து , அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும் , கோணலைச் செவ்வையுமாக்குவேன் ..." ஏசாயா 42:16

அவரால் வழிநடத்தப்பட  இடம் கொடுக்கும்போது , கோணலை செவ்வையாக்குவார். கர்த்தர் நம்மை நித்தமும் நடத்துகிற  தேவன். அவரால் நாம் நடத்தப்படும்போது , பலவிதமான மேன்மைகளை , நன்மைகளை அடைகிறோம்.  அவர் நித்தமும் நம்மை நடத்தி நம்முடைய ஆவிக்குரிய காரியங்களில் நம்மை நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்  போல மாற்றுகிறவர். ஆத்துமாவைத் திருப்தியாக்குகிற தேவன். நம்முடைய சரீரத்தை நிணமுள்ளதாய் மாற்றுகிற தேவன். ஆகவே தேவனுடைய வல்லமையான செயலினாலே  நடத்தப்படுவதற்கு இடம் கொடுக்கும்போது , அவர் நம்முடைய கரங்களைப்  பிடித்து நடத்திச்செல்கிறவராய் இருக்கிறார். அவரால் நடத்தப்படுகிறவர்களின் வாழ்க்கையில் வெற்றியும் , மகிழ்ச்சியும் காண முடிகிறது. பாதுகாவலையும்  ஆச்சரியமாய்ப் பெற முடிகிறது.

ஒருமுறை ஒரு சகோதரனை கர்த்தருடைய ஆவியானவர் நடத்தினார். அவர் அருமையான வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவரை நீ   இன்றைக்கு  வேலையை ராஜினாமா செய்து விடு என்று கர்த்தர் சொன்னபடியினாலே , அந்த மகனும் அந்த வேலையை  ராஜினாமா செய்து தன்  வீடு திரும்பினார். அடுத்த தினமே அவர் பணி  செய்த கம்பெனியின் அத்தனை  மக்களிலும் பெரிய Raid  நடந்தது. அரசாங்க அதிகாரியின் மூலமாய் சோதிக்கப் பட்டார்கள். சோதிக்கப்பட்டதோடு மாத்திரமல்ல ,  அவர்கள் செய்த தவறான காரியத்தை போலீஸ்  கண்டுபிடித்தபடியினாலே  அவர்கள் எல்லாரையும்   லாக்கப்பில் வைத்தார்கள். கஞ்சாவை ஏற்றுமதியின்  ஒவ்வொரு பொருட்களுக்குள்ளாய் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள். வாழ்க்கையிலே கோணலானதைச் செய்யும்போது , மேன்மையையும் , மகிழ்ச்சியையும் , சமாதானத்தையும் , சந்தோஷத்தையும் இழந்து போகிறோம். ஆனால் கர்த்தரால் வழி  நடத்தப்படுவோமானால் , நம்முடைய வழிகள் செவ்வையாக்கப்படுவதோடு , வாழ்க்கையானது மேன்மையும் , சந்தோஷம்  நிறைந்ததாயும்  மாறிவிடும்.

கர்த்தர் நம்மை வழி  நடத்தும் போது , நமக்கு முன்னே செல்கிற அவர் இருண்ட  எல்லாக் காரியங்களையும்  வெளிச்சமாக்குகிறார். இருளின் அதிபதியினுடைய தந்திரமான கிரியைகளினாலே பாதை தடுமாறிக் கொண்டிருக்கிறோம். குருடாக்கப்பட்ட கண்களினாலே  கலங்கிக்  கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய வழிகளைச் செவ்வையாக்குகிற தேவன் , நமக்கு முன்னே இருப்பதினாலே  சோர்வடையாதபடி , வாழ்க்கையில் எந்தவிதத்திலும் இடறலடையாதபடி காக்கப்படுகிறோம்.

அநேக காரியங்களை என் வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து எழுத  முடியும். ஒரு சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன். அருமையான ஒரு வாலிப சகோதரி படிக்க முடியாதபடி தவித்துக் கொண்டிருந்தாள். போராட்டமான நிலமை . ஏன் இந்த வாழ்க்கை ? மரித்துப்போகலாம் என்று தற்கொலை எண்ணமும் வந்துவிட்ட நிலமை. அந்தக் குடும்பத்தார் கர்த்தருடைய ஊழியக்காரரோடு இணைந்து  ஜெபித்தப்படியினாலே , கர்த்தர் அதிசயமாய் அந்த மகளை வழிநடத்த ஆரம்பித்தார். பெரிதான விடுதலை வந்ததோடு மாத்திரமல்ல , மகிழ்ச்சி வந்தது. அந்த மகளை வழிநடத்தினபடியினாலே , கர்த்தருடைய கிருபையானது , நலமான வேலை ஸ்தலத்தில் நிறுத்தியது. ஆகவே , தேவன் நம்மை வழிநடத்தும்போது பலவிதமான ஆசீர்வாதங்களைப்  பெறுகிறோம். பலவிதமான தீமைகளிலிருந்து நம்மைக் காக்கிறார். அநேக நேரங்களில் சில சம்பவங்களை நினைக்கும்போது , கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்று அவரைக் குறித்து சாட்சிப் பகிர முடிகிறது.

ஒருமுறை இலங்கைப் பகுதியிலே ஊழியங்களைச்  செய்து கொண்டிருந்தோம். அன்று மாலை  கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால்  தேவ  ஆவியானவரோ  மாலைக்குள்ளாய்  நீ சென்றுவிடு  என்று போதித்தப்படியினாலே , அந்த போதகரிடம் சென்று , ஐயா , நாங்கள்   மாலைக்  கூட்டத்தை நடத்தவில்லை , கர்த்தருடைய ஆவியானவர் என்னைப்  போகச் சொல்கிறார் என்று சொன்னபோது , அந்தப் போதகரும்   ஏற்றுக்கொண்டார். நாங்களும்  அந்த இடத்தை விட்டு உடனடியாக வந்த வாகனத்திலே  திரும்பிவிட்டோம்.   ஆனால் போகும்வழியிலே 15கி .மீ  தொலைவிலே  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? என்று செக் போஸ்டில்  எங்களை நிறுத்தி , அங்கு என்ன நடைபெறுகிறது என்று  கேட்டார்கள். நாங்கள் புறப்பட்ட நேரத்திலே என்ன நடந்தது  என்று தெரியாது , ஆனால் எந்த சண்டையும் இல்லாதபடி சமாதானமாய் சென்றோம். ஆனால் சில  நிமிடங்களிலேயே  அங்கு இரு  திறத்தார்க்கும்  நடுவாக பெரிய சண்டை நடந்தது. குண்டு வீச்சுகள் நடந்தது, பல வீடுகள் எல்லாம் அழிந்து போய்விட்டது. நாங்கள் தங்கியிருந்த எல்லைகளெல்லாம் பாழாக்கப்பட்டது .ஆகவே எங்களைக்  கண்ணின்மணிபோல காப்பதற்காக அவர் நேர்த்தியாய் எங்களை வழிநடத்தி , செவ்வையாய் வாழ்வதற்கு உதவி செய்தார்.

அவர் நம்முடைய வாழ்க்கையின் பாதைகளிலே  வழிநடத்தி செவ்வையாக்குகிற தேவன். நலமானதை , நன்மையானத்தைச் செய்கிற இயேசு கிறிஸ்து நம் மத்தியில் அசைவாடிக்கொண்டிருக்கிறார்.

4.நம்மை எழுப்பி , நம்முடனே இருந்து வழிகளைச்  செவ்வையாக்குகிறார்

      " நான் நீதியின்படி அவனை எழுப்பினேன் ; அவன்  வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன் ; அவன் என் நகரத்தைக் கட்டி , சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான்  என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்." ஏசாயா 45:13

யார் யாரோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறாரோ , அவர்களோடு இருந்து வழிகளையெல்லாம் செவ்வையாக்குகிறார். அவர் வழி  நடத்துகிற விதங்கள் வித்தியாசம். நம்மை அநேக காரியங்களில் இருந்து எழும்பச்  செய்கிற தேவன். 'ஆதலால், தூங்குகிற நீ விழித்து , மரித்தோரை விட்டு எழுந்திரு , அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார் .' என்று எபேசி. 5:14 ல்  பார்க்கிறோம். மரித்தோர் என்று சொன்னால் பாவத்தில் மரித்து  வாழ்கிற வாழ்க்கை. பலருடைய வாழ்க்கையிலே பாவத்தைத் துணிகரமாய்ச் செய்து அதினிமித்தமாய் ஆத்துமாவிலே மரித்து  வேதனையடைகிறார்கள்.  அவர்களுடைய வாழ்க்கை  கசப்பால் , சஞ்சலத்தால் நிறைந்திருக்கிறது.

 இந்த வார்த்தைகளை வாசிக்கிற   அருமையான சகோதரனே , சகோதரியே , உன்னுடைய வாழ்க்கையிலே நீ மரித்திருக்கிறாய் என்று சொன்னால் , உன் வாழ்க்கையிலே எதைச் செய்தாலும் , வாழ்க்கையிலே முன்னேற  முடியாதபடி தடைகளும் குறைகளும் போராட்டங்களும் பெருகி விடும். உன் கையின்  பிரயாசங்களிலெல்லாம் நஷ்டங்களும் , கஷ்டங்களும் உண்டாகிவிடும். ஆகவே , இன்றைக்கு உன்னுடைய வாழ்க்கையிலே , தூங்குகிற நீ விழித்து எழுந்திருக்க  வேண்டும். இவைகள் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையில் முக்கியமான காரியம். ஏனெனில் , விழித்திருங்கள் , எதிராளியான பிசாசானவன் யாரை விழுங்கலாமென்று வகைத்தேடி சுற்றித் திரிகிறவனாயிருக்கிறான். நாம் விழித்திராதபடி  இருக்கும்போது , பிசாசானவன் நம்மைச்  சோதிப்பதோடு , நம்முடைய எல்லையில் களைகளை  விதைக்கிறவனாய் இருக்கிறான். நாம் விழித்திராவிட்டால் , பின்னால்  நடைபெற வேண்டிய நற்காரியங்கள் நடைபெறாது, என்ன நடக்கிறது  என்று நமக்கே தெரியாதபடி பலவிதமான சூழல்கள் , போராட்டங்கள் தோன்றிவிடும். அநேகர் இவ்விதமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர் சொன்னபடி மரித்தோரைவிட்டு , எழுந்திருப்போமானால் , பாவ வாழ்க்கையை விட்டு எழுந்திருப்போமென்றால் , உளையான  சேற்றிலிருந்து தூக்கியெடுக்கப்படுவோமென்றால் , மரண வாசல்களிலிருந்து நம்மை மீட்டுக்கொள்கிற தேவன் நம்மை மீட்டு  மிகுந்த சந்தோஷத்தோடு  செம்மையான வழியிலே நடத்துவார்.

            நம்முடைய தேவன் நம்முடைய வழிகளை உருவாக்குகிற தேவன். அவரால் உருவாக்கப்படுகிற வழியானது  சிறப்பானது , மேலானது , மகிழ்ச்சிக்குரியது. இந்த மேலான பாக்கியத்தை அடைவதற்கு இயேசு கிறிஸ்துவே , எனக்கு இரங்கும் , என்னில்  வாரும் , எனக்குள்ளாய் இருந்து என்னை நடத்தும் என்று கேட்கிற மக்களாய் மாறுவோமென்றால் , நம்முடைய வாழ்க்கையானது ஆசீர்வதிக்கப்பட்டதாய்  மாறிவிடும்.

III. வழிகள் செவ்வையாக்கப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள்

1.  பூமியிலே செவ்வையாய் வாழ்வார்கள்.

       " செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள் ; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்." நீதிமொழிகள் 2:21

பூமியிலே நலமாய் வாழ்வதற்கு செவ்வையாக்கப்பட  வேண்டும். அதோடு வழிகள் செவ்வையாக்கப்படும் பொழுது தான் , ' தாபரிக்கும்  ஊருக்குப் போய் ச் சேர , அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.' சங். 107:7ன்  படி நடத்துவார். தாபரிக்கும்  ஊர் என்றால்  , விரும்புகிற , வேண்டுகிற , வாஞ்சிக்கிற  ஒரு இடம். அநேக நேரங்களிலே  தாபரிக்கும் ஊருக்குச் செல்வதற்கு தவறாய் வழிநடத்தப்படுவதால் , நாம் நினைத்த எல்லைகளுக்கு செல்லமுடியாதபடி தவறான எல்லைகளுக்கு சென்று விடுவோம். அல்லது அதைக் கண்டுபிடிப்பதற்கு தாமதமாகிக் கொண்டிருக்கும். வழிகள் செவ்வையாக்கப்பட்டு தாபரிக்கும் ஊருக்குப் போய்ச் சேர கர்த்தர் அதிசயம் செய்வார்.

2.சகலவித காரியங்களும் உன்னுடையதாகும்.

 " எகிப்தின் சம்பாத்தியமும் , எத்தியோப்பியாவின்  வர்த்தகலாபமும் , நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும் , உன்னிடத்திற்குத் தாண்டிவந்து , உன்னுடையதாகும் ..." ஏசாயா 45:14

இது எதைக்குறித்து என்றால் , இம்மைக்குரிய மேன்மையான  ஆசீர்வாதங்களை சுதந்தரிகிறவர்களாய்  மாறும் பாக்கியம். இன்று நம்முடைய வாழ்க்கையிலே  அநேக காரியங்களைப் பெற்றுக்கொள்ள இயலாதபடி , பலவிதமான காரியங்களைச்  செய்து வாழ்க்கையிலே தோல்வியடைந்த மக்களாய் இருக்கிறோம். ஆனால் நம்முடைய தேவனோ , நம்முடைய வழிகளெல்லாவற்றையும் செவ்வைப்படுத்தி , நம்மை நடத்தும் போது , எவையெல்லாம் எதிர்ப்பாயிருக்கிறதோ ,  எவையெல்லாம்  கடினமாயிருக்கிறதோ , எவையெல்லாம்  வேதனையாய்  இருக்கிறதோ அவைகளெல்லாம் மாற்றப்பட்டு , அதற்குரிய மேன்மைகளெல்லாம் நாம் பெற்றுக்கொண்டு சுகமாய் நலமாய் மாறமுடியும்.

கர்த்தர் நமக்கு நல்  வாழ்க்கையை அருளுகிறவராய் இருக்கிறப்படியினால் , வழிகள் செவ்வையாக்கப்படுவதற்கு , இருதயம் செவ்வையாக்கப்படுவதற்கு , நம்முடைய பேச்சு  செவ்வையாக்கப்படுவதற்கு, பார்வை  செவ்வையாக்கப்படுவதற்குஅவருக்கு ஒப்புக்கொடுப்போம். அவர் ஆசீர்வதிப்பார் . அவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படும்  பொழுது, நம்முடைய கூடாரமும் ஆசீர்வதிக்கப்படும் . அப்.15:17ல்  தாவீதின் கூடாரத்தைச் செவ்வையாய் நிலைநிறுத்துவேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த மேலான பாக்கியத்தைப் பெறுவதற்கு நம்மை அர்பணிப்போம் , துதிப்போம் , ஆசீர்வதிக்கப்படுவோம்.

    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக .

                            கிறிஸ்துவின் பணியில் ,

                           சகோ.C.எபனேசர் பால்.