செய்தி

"...இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது."  

                                                     மாற்கு 14:24

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகிறேன்.

இயேசு கிறிஸ்துவை கபாலஸ்தலம் என்று அர்த்தங் கொள்ளும் கொல்கொதா என்ற இடத்திற்குக் கொண்டு வந்து, சிலுவையில் அறைந்தனர். அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர்கள் அறையப்பட்டார்கள். இவ்விதமாய் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து முள்முடி சுட்டப்பட்ட காயங்களில் இருந்து இரத்தம் வழியவும், வாரினால் அடிக்கப்பட்ட அடிகளின் வேதனையினாலும் நிறைந்து பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்தார். இவ்விதமான நிகழ்ச்சி நடைபெறும் என முன்னறிந்த இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையை, தம்மை விசுவாசிக்கிற மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்தினார்.

இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது (எபி.9:22). லேவி.17:14ல் 'சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே...' என்று பார்க்க முடிகிறது. '(பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே...' 1யோவான் 5:8. இரத்தமானது பூலோகத்தில் சாட்சியிடுகிறதாயிருக்கிறது.

  1. உடன்படிக்கை இரத்தத்தின் தன்மை என்ன?

" போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை யாயிருக்கிறது; நீங்கள் இதைப் பனம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்." 1கொரிந்தியர் 11:25

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையிலே நாம் அவரை நினைக்கும் போதெல்லாம் பல ஆசீர்வாதங்கள் உண்டாகும். நீதி. 3:6ல் 'உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச்  செவ்வைப்படுத்துவார்.' எனப் பார்க்கிறோம். இவ்விதமாய் நாம் நினைவுகூரும்போதெல்லாம் அவர் அதிசயமாய் நம்முடைய வழிகள் ஆசீர்வதிக்கப்பட உதவிச் செய்வார். எசேக்கியா ராஜா தன் மனஉத்தமத்தை நினைவுகூரும்படி கேட்டபோது, கர்த்தர் அவன் விண்ணப்பத்தைக்கேட்டு, கண்ணீரைக் கண்டு பதினைந்து ஆண்டுகள் ஆயுசு நாட்களைக் கூட்டினார். குழந்தையில்லாத அன்னாள் நினைந்தருளும் என்று ஜெபத்தை ஏறெடுத்த போது, அற்புதமான கர்ப்பத்தின் கனியைக்  கட்டளையிட்டு, சாமுவேலைக் கொடுத்தார். நாம் கர்த்தருடைய செயல்களையும், அவருடைய வார்த்தை களையும் வல்லமையையும் நினைவுகூரும்போது ஆசீர்வதிக்கப்படுவோம். கர்த்தருடைய வார்த்தையை நினைவுகூர்ந்தபோது, மறுதலித்த பேதுரு மனங்கசந்து ஒப்புரவானான்.

இன்று நாம் அவருடைய பாடுகளையும் மரணத்தையும் நம்மீது வைத்திருந்த அன்பையும் நினைவுகூரும்போது, அவருடைய மகத்துவமான செய்கைகளைக் காணவும், பெறவும் முடியும்.

2. இரத்தத்தினால் நித்திய ஜீவன் உண்டாகும்

'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்." யோவான் 6:54

இயேசு கிறிஸ்துவின் மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் நாம் பாங்குடையவர்களாய் மாறும்போது, நமக்கு நித்தியஜீவனைத் தருகிற தேவனாய் அவர் இருக்கிறார். நாம் இயேசு கிறிஸ்துவை நம்முடைய மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு அவர் வழி செல்லும்போது, அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன் என்ற யோவான் 10:28ன் வார்த்தை நிறைவேறும். மெய்தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவே நித்தியஜீவனை அடைவதற்கு வழியாய் இருக்கிறது. மரணமானது இயேசுகிறிஸ்துவை ஆண்டுகொள்ளவில்லை. அவர் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். அவர் நமக்கு நீடித்த ஜீவ காலத்தையும், மரணத்திற்குப் பின் உள்ள நல் வாழ்வையும் தருவதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.

3. ஐக்கியம் உண்டாகும்

"நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்து வினுடைய சரீரத்தின் ஐக்யமாயிருக்கிறதல்லவா?" 1கொரிந்தியர் 10:16

கிறிஸ்துவோடு கூட ஐக்கியப்பட்ட வாழ்க்கை சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நமக்கு அருளுகிறது. அநேக நேரங்களிலே இந்த ஐக்கியம் இல்லாதபடியினால் நாம் சோர்ந்து விடுகிறோம், விழுந்தும் விடுகிறோம். ஐக்கியமானது வாழ்க்கையில் நன்மைகளையும் மேன்மை களையும் தரக்கூடியது. ஆதிமனிதனை தேவன் உண்டாக்கிய போது,அவன் தனித்திருப்பது நல்லதல்ல என்று ஏற்றத் துணையை உண்டாக்கினார். அதோடு தம்முடைய குமாரனும், நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். "...பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?" என்று 1கொரி 10:18ல் பார்க்கிறோம். மேலும் அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப் படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? என 2கொரி.6:14,15ல் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய  அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக என்பதில் இரத்தத்தினால்  உண்டாகிற  ஐக்கியத்தை நாம்  உணர முடிகிறது. "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்...' என்று 1யோவான் 1:7ல் பார்க்கிறோம். ஒளியில் நடக்கிற பிள்ளைகளுக்கும், இருளில் நடக்கிற பிள்ளைகளுக்கும் வித்தியாசத்தை உண்டுபண்ணி அவர் ஒளியில் இருக்கிறது போல, நாமும் ஒளியில் இருக்கும் போது, அவரோடு ஐக்கியமாயிருக்கிற மக்களாய் இருக்கிறோம். இந்த ஐக்கியம் அவருக்குள் பெருகும்போது, நாம் கர்த்தருக்குள்ளாக அவரின் பண்புகளையும், தன்மைகளையும், நன்மைகளையும் சுதந்தரிக்கிற சுதந்தரவாளிகளாய் இருக்கிறோம்.

ஒருவர் இந்த அன்பின் ஐக்கியத்தை விட்டு விட்டு விலகிச் செல்லும் போது, பாடுகளும் வேதனைகளும் உண்டாகிவிடுகிறது. இயேசுகிறிஸ்து உவமானமாக சொன்ன ஒரு காரியத்தை அறிந்திருக்கிறோம். இரண்டு குமாரருடைய தகப்பனிடத்தில் இளைய மகன் தனக்குரியவைகளைப் பெற்றுக்கொண்டு, தூரமான தேசம் சென்றான். தகப்பனின் ஐக்கியத்தையும் சகோதரனின் ஐக்கியத்தையும் விரும்பாத வாழ்க்கை, பாடுகளும் பரிதாபமுமாய் மாறியது. பிரிந்துபோன இந்த வாலிபனுடைய வாழ்க்கையிலே எல்லாவற்றையும் இழந்தவனாக அனாதையைப் போல தவிக்கிறவனாய் மாறினான்.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே /சகோதரியே, உன் ஐக்கியத்தைச் சரியாக வைக்கவில்லை என்றால், உன் மேன்மைகளையும் நன்மைகளையும் இழந்து, உன் ஆசைகள் நிராசையாய் மாறி பலவிதமான கண்ணீர் நிறைந்த வாழ்க்கையாய் உன் வாழ்க்கை மாறிவிடும். கிறிஸ்துவின் அன்பின் ஐக்கியத்தில் இருக்கும்போது, சகல வற்றையும் சுதந்தரிக்கும் சுதந்தரவாளிகளாய் இருக்கிறோம்.

ஒருமுறை ஒரு வாலிப சகோதரனைச் சந்தித்தேன். அவன் பெற்றோர்கள் என்னை அன்பாய் ஏற்று உபசரித்தார்கள். அந்த வாலிபனுக்கு ஜெபிக்கும் போது, நீ தவறான நண்பர்க்ளோடு ஐக்கியப்பட்டு, ஓரிடத்தில் இரவு நேரத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டு, நேரத்தைச்  செலவுசெய்து கொண்டிருக்கிறாய். இதை விட்டுவிடு. இதினால் நீ சிறைச்சாலைக்குப் போக வேண்டிய நிலை உண்டாகும் என்று ஆலோசனையாக, எச்சரிப்பாக கூறினேன். அந்த வாலிபனோ தவறான ஐக்கியத்தைப் பற்றி உணராதபடி தொடர்ந்து சென்றபடியினால், சில தினங்களிலே அந்த இடத்திற்கு அருகே நடைபெற்ற கொலையின் காரணமாக இவர்களைச் சந்தேகித்து, சிறைச்சாலையில் அடைத்தார்கள். பெற்றோர்கள் என்னைத் தேடி வந்து ஆலோசனைக் கேட்டார்கள். தவறான ஐக்கியம் பாடுகளைக் கொண்டுவந்து விடும். அந்நிய தேவதைகளுடைய பெண்களின் ஐக்கியத்தை விரும்பின சாலமோன், கர்த்தருடைய அன்பின் வழியை விட்டு விலகினான். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் சரீரமும், நமக்காய் அருளப்பட்ட புதிய உடன்படிக்கையின் இரத்தமும் நம்மை கிறிஸ்துவுக்குள் ஐக்கியப் படுத்துகிறதாயிருக்கிறது.

4. அவருக்குள் நிலைத்திருக்கச்செய்யும்.

"என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப்  பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்..." யோவான் 6:56

நாம் கர்த்தருக்குள் நிலைத்திருக்கும் போது மிகுந்த கனிகளைக் கொடுப்போம். ‘ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்: அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்: அவைகள் எரிந்துபோம்.' என யோவான் 15:6ல் பார்க்கிறோம். ‘நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வ தெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’. (யோவான் 15:7). பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல, நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் கிறிஸ்துவின் வார்த்தையிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்போது, நாம் மிகுந்த கனிகளைத் தருவதோடு ஜெபங்கள் கேட்கப்பட்டதாய் மாறுகிறது.

இந்த நாளிலே கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் நாம் உட்கொள்ளும்போது, நாம் கர்த்தருக்குள்ளாய் நிலைத்திருக்கிற மக்களாய் மாறுகிறோம். நம்முடைய வாழ்க்கையும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படவும், ஸ்திரப்படவும், பெலப்படவும் அது நமக்குள் கிரியைச் செய்கிறது.   

ஒருமுறை ஒரு பகுதி ஊழியத்தைச் செய்யும் போது, ஒரு சாட்சியைக் கேட்டேன். அவர் ஒரு கால்நடை மருதுவராக இருந்தார். அவரது வாழ்க்கையில் நினையாத வேதனை தோன்றி, அவரை மிகவும் துக்கப்படுத்தியது. மிருகத்திற்குச் சிகிச்சை கொடுத்தபோது, அந்த விஷக்கிருமிகள் அவரைத் தாக்கிவிட்டது. அவரின் ஒவ்வொரு எலும்புகளின் இணைப்பிலும் வலிகளும் வேதனையும் தோன்றியதோடு, அவரைப் படுத்த படுக்கையாக மாற்றிவிட்டது. வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒரு நாளிலே அவருக்குள் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே எனக்குள் அதிசயம் நடைபெறும் என்ற நிச்சயமும், நம்பிக்கையும் வந்தபடியால், கர்த்தரின் ஆலயத்தில் கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் நினைவுகூரும்படி, ஆலய நற்கருணை ஆராதனையில் பங்குபெற வேண்டும் என்று குடும்பத்தினரிடம் தெரிவித்தார். குடும்பத்தார் போதகர் இங்கே வந்து கொடுத்துவிடுவார், ஆலயத்திற்கு வர வேண்டாம் என்று ஆலோசனைக் கூறினார்கள். ஆனால் அவர் நான் சுகம் பெற்றால் அவரின் சாட்சியாக எங்கும் கூறமுடியும் என்ற உணர்வோடு, உள்ளத்தின் நினைவோடு இருந்தார். ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்று தம் வீட்டாரிடம் கேட்டார். அவருடைய குடும்பத்தாரும் அவரை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச்செய்தார்கள். ஆனால் நற்கருணை பரிமாறும் நேரத்தில் ஆலயத்தின் முன்னாகச் சென்று பங்கேற்கக்கேட்டார். குடும்பத்தாரும் உதவிச் செய்தார்கள். அவருடைய ஜெபத்தையும் வாஞ்சையையும் அறிந்த கர்த்தர் பதில் தந்தபடியால், நற்கருணை முடிந்த பின் தானாகவே எழுந்து நடக்க ஆரம்பித்தார். அன்றுமுதல் ஊழியங்களைச் செய்யத் தொடங்கினார். இப்படியாக அவருடைய இரத்தத்தின் தன்மை அவருக்குள் நிலைத்திருக்கும் ஐக்கியத்தையும், நித்தியஜீவனையும் நமக்குத் தந்து, நம்மை ஆசீர்வதிக்கக்கூடிய தாயிருக்கிறது. அவர் நமக்காகச் சிலுவையில் சிந்தின உடன்படிக்கையின் இரத்தத்தினாலே நம்மை இவ்விதமான மகிமையின் ஆசீர்வாதத்தினால் நிரப்புகிறார்.

 இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை என்ன?

1. பாவமன்னிப்புண்டாக்கும்

"இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது." மத்தேயு 26:28

கிறிஸ்துவின் இரத்தமானது விலையேறப்பெற்றதாயும், மிகுந்த மேன்மைக்குரியதாயும் இருக்கிறது. நம்மில் மிகுதியாய் அன்புகூர்ந்து, தம்முடைய இரத்தத்தை நமக்காக, பாவநிவிர்த்திக்காக சிந்தின இரத்தம், நம்மைச் சுத்திகரிக்க வல்லமை உடையதாய் இருக்கிறது. வாழ்க்கையிலே பாவத்தினால் அநேக காரியங்களை இழந்து தவிக்கிற மக்களாய் இருக்கிறோம். பாவமானது நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிற தடுப்புச் சுவராய் இருக்கிறது. பாவத்தினால் தேவன் வைத்திருக்கிற நல் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியா திருக்கிறது. பாவமானது வியாதிகளை உண்டுபண்ணுகிறது. பாவத்தின் சம்பளம் விலையேறப்பெற்ற ஆத்துமாவில் மரணத்தை விளைவிக்கிறது. இவ்விதமான பாவத்தினால் உண்டாகும் தீதான செய்கைகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அகன்று போகிறது. இன்று பாவத்தை விட முடியாதபடி மீண்டும் மீண்டுமாய் பாவங்களைச் செய்து பாவ சேற்றிலே உழன்று கேண்டிருக்கிற மக்கள் நிறைவாய் இருக்கிறார்கள். நம் பாவங்களை நீக்கி, நமக்குள் தூய வாழ்வைத் தருவதற்கு இயேசு கிறிஸ்து பாவ நிவிர்த்தி செய்யும் பலியாக வந்தார். ஆகவே தான் 1யோவான் 1:7ல் "...அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையிலே ஆவி, ஆத்துமா சரீரத்திலே உண்டாயிருக்கிற அசுத்தங்கள், போராட்டங்கள் எல்லாவற்றையும் நீக்கி, சுத்திகரிக்கக்கூடிய ஆற்றல் உடையதாய் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையிலே இருதய நோயிலிருந்து நான் விடுதலை அடைந்த பின்பு, கவலைகள் நிறைந்தவனாய் இருந்தேன். நானோ விளையாட்டு ஆசிரியராக இருந்தபடியினால், ஓடி ஆடி விளையாட்டைக் கற்றுத்தர வேண்டுமே என்று கவலையோடிருந்தேன். உள்ளத்திலே என்ன செய்வது என்று கலங்கினேன். என் தகப்பனார் ஆலயத்தில் போதகராயும், பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராயும் பணியாற்றினார். நான் என் B.Sc., படிப்பை முடித்தபோது, நீ வேதாகமக் கல்லூரிக்குப் போ என்று சொன்னார். என் தகப்பனாரைப் பார்த்து, இந்த வேதாகமப் படிப்பைப் படிப்பதற்கும், கர்த்தரின் ஊழியத்தைச் செய்வதற்கும் நான் தகுதி அற்றவன் என்று கூறி,என் இளைய சகோதரனை அனுப்புங்கள் என்று கூறினேன். இந்தக்  காரியங்கள் மனதில் தோன்றின போது, விளையாட்டு ஆசிரியராக பணி தொடர வேண்டுமானால், எனக்குப் பெலனையும் சுகத்தையும் தாரும். இல்லையென்றால் வேத ஞானத்தைத் தாரும் என்று ஜெபித்தேன். என்னுடைய மனத்திரையிலே எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் செய்த எல்லாப் பாவங்களும் ஒரு Scroll-ல் எழுதி எனக்கு முன்பாக நீட்டப்பட்டது. இவ்விதமாய் மனதில் தோன்றிய இந்த எழுத்தின் மீது ஒரு சொட்டு இரத்தம் விழவும், அந்த பக்கம் முழுவதும் வெண்மையாக மாறியதையும் என் மனக்கண்களில் காண முடிந்தது. வீணாண வார்த்தைகள், வீணான சண்டைகள், பொய்யான காரியங்கள் எல்லாம் வெண்மையாக மாறியது. உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும், உறைந்த மழையைப்போல் வெண்மையாகும். அவை இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும், பஞ்சைப்போலாகும் என்ற வார்த்தையின்படி எனக்குள் என் பாவம் நீங்கிய மாபெரும் சந்தோஷம் பெருகிற்று. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் சுத்திகரிக்கக்கூடிய ஆற்றல் உடையது என்பதை உணர முடிந்தது. அதோடு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே என் ஆத்துமா மீண்டும் செம்மையாய்ச் செயல்பட பாவநிவிர்த்தி செய்யப்பட்டது. லேவி.17:1ல் 'மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும் படிக்குக் கட்டளையிட்டேன்: ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.’என்று பார்க்கிறோம். அதோடு நம்மிடம் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற கழுவி நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆகவே இயேசுவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்கிற இரத்தமாக, பரிசுத்தமாக்குகிற இரத்தமாயிருக்கிறது.

2. மீட்பைத் தரும் இரத்தம்

"குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே." 1பேதுரு 1:19.

கொலோ.1:14ல் ‘(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.' என்று பார்க்கிறோம். இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த மீட்பானது பாவத்தினின்றும், பொல்லாதப் பிசாசின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பதற்கு ஆற்றல் உடையதாய் இருக்கிறபடியால் ஸ்தோத்தரிக்கிறேன். சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலும் இருந்து நம்மைத் தேவனுக்கென்று தம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டார். மீட்கப்பட்டதோடு மாத்திரமல்ல இந்த இரத்தத்தினாலே கர்த்தருக்குள் சமீபமானீர்கள் என்று எபேசி.2:13ல் பார்க்கிறோம். இப்படியாக நம்முடைய வாழ்க்கையை அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு கொண்டு வந்த நிலையைப் பார்க்கிறோம். மீட்கப்பட்ட வாழ்க்கை கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்தினாலே நமக்கு ஆசீர்வாதமாக, மேன்மையாக, நன்மையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

3. இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறோம்

"இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீடுதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ரோமர் 5:9

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவிகளும், பரதேசிகளும், தேவனை அறியாதவர்களுமாயிருந்த நம்மை அவருக்குள்ளாக நற்பண்புகளால் நிறைத்து நீதி செய்கிற மக்களாய் மாற்றுகிறது. முன்பு நீதிக்குத் துரமாயிருந்தவர்களை, இப்பொழுது இரத்தத்தினாலே நீதி நிறைந்த வர்களாய் மாற்றி சமாதானத்தைச் சுதந்தரித்து விடுதலை அடைந்த மக்களாக கர்த்தர் வாழச் செய்கிறார். இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் நம்மை நீதிமான்களாய், சமாதானம் நிறைந்தவர்களாய் மாற்றி விடுகிறது.

அநீதி நிறைந்த உலகத்திலே அநீதியான காரியங்களை மிகுதியாய்ச் செய்கிற மக்கள் மத்தியிலே இந்த இரத்தம் நம்மைப் பிரித்தெடுத்து, பரிசுத்தப்படுத்தி, சமாதானத்தோடு அநீதியான காரியங்களை உள்ளத்திலிருந்து, உணர்வுகளிலிருந்து, எண்ணங்களிலிருந்து அகற்றி நம்மை ஸ்திரப்படுத்துகிறதாய் இருக்கிறது. ஒரு சகோதரரை நான் அறிவேன். காலை முதல் குடித்து தன் நேரத்தைச் செலவழிக்கிறவர். பொய்யான விதத்திலே பலரிடம் கடன் வாங்கித் திருப்பித் தராதபடி தன் வாழ்வினை நடத்தினார். என்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவராக மாறினாரோ, அன்று முதல் அவர் தன் வாழ்க்கையில் பழைய காரியங்களுக்கு இடம் கொடாது புதிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். நீதியானவைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவருடைய சாட்சி அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக மாற்றுவதற்கு ஏற்றதாய் இருந்தது. நீதிமான்களின் ஆசீர்வாதத்தையும் அடைந்தார்.

4. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் தரும்.

"மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்." வெளிப்படுத்தல் 12:11

இன்றைக்கு மனிதனுடைய வாழ்க்கையிலே பலவிதமான தோல்விகளைக் கொண்டுவந்து, தோல்வியினால் துக்கத்தையும் துயரத்தையும், பயத்தையும் உண்டாக்குவது பிசாசின் செயலாய் இருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலே தோல்வி, பொருளாதார வாழ்க்கையிலே தோல்வி, தங்கள் வேலை காரியங்களிலும் தோல்வி, இப்படியாக பிசாசானவன் பலவிதங்களில் தோல்விகளைக் கொண்டு வருகிறான். ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம் வாழ்வில் நமக்கு விரோதமாய் எழும்பும் சத்துருவின் சகல கிரியைகளையும் அழித்து, அகற்றி ஆசீர்வாதத்தை அருளுகிறதாய் இருக்கிறது.  

ஒருமுறை ஒரு குடும்பத்தில் குழந்தை இல்லாது சமாதானத்தை இழந்து, மிகுதியாக கலங்கின நிலையில் இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதிலும், சாட்சியாய் ஜீவிப்பதிலும் அதிக ஆர்வமுடைய அச்சகோதரருக்கு பிசாசு, மிகுதியான வேதனையைத் தந்து கொண்டிருந்தது.48ம், 53ம் வயதை அடைந்த மனைவி கணவனில் கர்த்தர் அற்புதம் செய்தார். சத்துருவின் தந்திரமான செயலினால் குழந்தை பெறாத நிலை உருவாக்கின அந்த ஆவி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அதன் கிரியைகள் அழிக்கப்பட்டு ஜெயம் பெற்றார்கள். அதே ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்கக் கர்த்தர் உதவிச் செய்தார். தடைகளை    அழிவுகளை வேதனையான காரியங்களைச் சத்துரு கொண்டுவந்தாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை ஜெயமுள்ளவர்களாய் மாற்றும்.

5. மனசாட்சியை உயிர்பிக்கிறது.

"நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" எபிரேயர் 9:14

        இன்று மனச்சாட்சியானது மழுங்கியும் செத்தும் போனதால், குற்றத்தைச் செய்கிற நாமே மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். விபசாரப் பாவத்தில் கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட மகளை, இயேசு கிறிஸ்துவுக்கு முன் நிறுத்தி மோசேயின் பிரமாணம் சொல்கிறபடி இவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றார்கள். இயேசு கிறிஸ்துவோ, உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது இவள்மேல் கல்லெறியக் கடவன் என்றார். இயேசு சொன்ன வார்த்தையினால் மனச்சாட்சியில்  கடிந்து கொள்ளப்பட்டு, அந்த மகளை விட்டுப் போய்விட்டார்கள். அநேகர் குற்றமற்ற மனச்சாட்சி உடையவர்களாய் இருக்க பிரயாசப்படுகிறார்கள். கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும், மாயமற்ற அன்பிலும் பிறக்கும் அன்பே. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு விசுவாசமாகிய  கப்பலைச் சேதப்படுத்தினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ, செத்த மனச்சாட்சியின் காரியங்களை சுத்திகரித்து, ஊழியம் செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை பரிசுத்தப்படுத்தி, மீட்டு, நம்மை நீதிமான்களாக்கி ஜெயம் பெறச் செய்து, ஊழியம் செய்ய நம்முடைய மனச்சாட்சியை சுத்திகரிக்கிறதாய், புதுப்பிக்கிறதாய் இருக்கிறது. அவருடைய இரத்தத்தினாலும் மாம்சத்தினாலும் உண்டாயிருக்கிற மேன்மைகளை நாம் கவனமாய்ப் புரிந்து அறிந்து செயல்படுவோமானால் கர்த்தருக்குள் ஆசீர்வதிக்கப்படுவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                    கிறிஸ்துவின் பணியில்,                                                                                          சகோ.C. எபனேசர்  பால்.