முதிர்வயதின் நல் வாழ்வுக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன்.  நீர் எனக்குச் செய்த எல்லா நன்மைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீயோ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய் என்ற வார்த்தையின் படி எனக்கு அற்புதத்தைச் செய்தபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் எஞ்சிய காலத்தின் வாழ்கைக்காக உம்மை நோக்கி கெஞ்சுகிறேன்.  அவர்கள் முதிர்வயதிலும் கனி, தந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் என்ற வார்த்தையின்படி என் வாழக்கையும் என் முதிர்வயதிலே புஷ்டியும் பசுமையுமாயிருக்க உதவி செய்யும். கர்த்தாவே, இரவிலே எனக்கு நல்ல நித்திரையைத் தந்து ஒவ்வொரு நாளும் நேர்த்தியாய் நடத்தியது போல, என் முதிர்வயதிலும் நான் இரவில் நன்றாய் தூங்க நீர் உதவி செய்யும். அநேக வயதானவர்கள் தங்கள் இறுதி நாட்களில் வீணான கனவுகளை காண்பதுபோல, எனக்கும் நேரிடாதபடி வீணானவைகளுக்கு விலக்கி என்னைக் காத்தருளும். தன் முதிர்வயதில் கண்ணின்பார்வையை இழந்த ஈசாக்கைபோல எனக்கு நேரிடாதபடி, என் வாழ்க்கையின் இறுதிநாள்வரை தெளிந்த பார்வையைத் தாரும். இன்று அனேகருக்குக் காணப்படுகின்ற மறதியானது எனக்கு நேரிடாதபடி என்னைக் காத்தருளும். இன்று எனக்கு கொடுத்துள்ள ஞாபகசக்திக்காக உமக்குத் துதிகளையும் ஸ்தோத்திரங் களையும் ஏறெடுக்கிறேன். முடிவுப்பரியந்தம் எனக்கு இந்த ஞாபகசக்தியைத் தாரும். கர்த்தாவே, இன்று என் காரியங்கள் அனைத்தையும் நான் செய்வதுபோல, முடிவுப்பரியந்தம் என் காரியங்களை நான் செய்ய எனக்குப் பூரணபலத்தையும், சுகத்தையும் கொடுப்பீராக. முதிர்வயதில் உண்டாகும் எல்லா பெலவீனங்களுக்கும், என்னை விலக்கிக் காத்து, வாலவயது போல என் காரியங்களை நானே செய்வதற்கு எனக்கு சுகம், பெலன் தந்தருளும். நான் என் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் நல்வாழ்வைக்கண்டு, அவர்களுக்காக ஜெபிக்கிற ஜெப ஆவியைத் தாரும். இயேசு கிறிஸ்துவே இதை செய்வீரென்று நம்பி உம்மைத் துதிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.