சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்..."

ஓசியா 7:1

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

          ஒரு அருமையான சிறுவன் தன் தாயாரோடு ஜெபிப்பதற்காக வந்தான். அவனுடைய காலிலே பூச்சிக்கடியானது அதிக பாதிப்பை உண்டு பண்ணியது. காலைப் பார்த்தால் மிகவும் அருவருப்பாக, ஓட்டை ஓட்டையாக இருந்தது. பல மாதங்களாக அதற்கான சிகிச்சைப் பெற்றான். டாக்டரிடம் காண்பித்தும், பலவிதமான சிகிச்சைகளை செய்தும், எந்த பயனும் இல்லை. சற்றும் குணமடையவில்லை. நாளுக்கு நாள் அது பரவி இன்னும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவனை அழைத்து வந்த தாயாரும் இதைக் குறித்து கூறி காண்பித்தார்கள். அப்பொழுது கர்த்தர் ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார். ஏதோ ஒரு பொருளை கல்லறையின் மேல் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறாய். எங்கேயாவது கல்லறையில் போய் எதையாவது சாப்பிட்டாயா என்று அந்த சிறுவனிடம் கேட்டபோது, அவனுக்கு எதுவும் ஞாபம் வரவில்லை. ஆனால் ஜெபித்து அவனை அனுப்பி விட்டோம். கொஞ்ச நாட்களாக தொடர்ந்து வந்து எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆலயத்திலே கொடுக்கப்படும் சாப்பாட்டை எடுத்து வந்து, கல்லறையின் மீது உட்கார்ந்து அதைச் சாப்பிட்ட சம்பவம் அவனுக்கு திடீரென்று ஒரு நாள் நினைவுக்கு வந்தது. எனவே அதை யோசித்துப் பார்த்தான். அடுத்த நாள் அவன் தன் காலைப் பார்த்தபோது, அந்த ஓட்டைகள் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இரண்டு நாட்களுக்குள்ளாக அது இருந்த இடம் தெரியாதபடி அது அப்படியே மாறிவிட்டது.

     இப்படியே நம்முடைய வாழ்க்கையிலே பலவிமான காரியங்கள் ஏற்படும்போது, அதனுடைய காரணத்தைக் கர்த்தர் நமக்கு உணர்த்துவாரானால், நாம் கவனமாக கர்த்தரிடம், ஏதேனும் தவறு இருக்குமானால் மன்னிப்பு கேட்டு, நம்முடைய குறைகளை அறிக்கையிடும் போது, கர்த்தர் நிச்சயமாகவே நம்முடைய நோய்களைக் குணமாக்க வல்லவராயிருக்கிறார்.

      இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பெலவீனங்களை ஏற்றவர், நம்முடைய நோய்களைச் சுமந்தவர் இன்றைக்கும் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவருடைய வார்த்தையின்படியே நம்மை முற்றிலும் குணமாக்கு கிறவராய், ஆரோக்கியம் தந்து வழிநடத்துகிறவராய் இருக்கிறார். சிறுவனுடைய காலில் காணப்பட்ட அந்தப் பூச்சிக்கடியின் தன்மையை எவ்விதமாய் நீக்கினாரோ அதைப் போல நமக்குள்ளாயும் அற்புதமான சுகத்தைத் தர வல்லவராயிருக்கிறார்.

     நீங்கள் தேவ சமுகத்தில் உங்களைத் தாழ்த்தி ஏன் இந்த வேதனை வந்தது என்று ஆராய்ந்து அறிவதற்கு இடம் கொடுங்கள். அற்புதங்களைச் செய்கிற தேவன், உங்கள் நோய்களைச் சுமந்தவர், இன்றைக்கு அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உங்கள் வாழ்க்கையிலே காரியங்களைச் செய்வதைக் காண்பீர்கள். காயங்களை ஆற்றுவதைக் காண்பீர்கள்.

  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

         சகோ. C. எபனேசர் பால்.