"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;

அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்."

சங்கீதம் 37:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

       இன்று மனிதன் தன் மனதில் தோன்றுகிறபடி வாழவேண்டும் என்று விரும்புகிறான். மனதில் பலவிதமான விருப்பங்கள் உண்டாகிறது. பலவிதமான கசப்பான காரியங்கள், வேதனைக்குரிய எண்ணங்கள், பலவிதமான யோசனைகள் உருவாகிறது. 'மனதின் யோசனைகள் மனுஷனுடையது...' நீதி. 16:1. இப்படியாகத் தோன்றுகிற பலவிதமான காரியங்களினாலே நிலையற்ற நிலையில் வேதனைப்படுகிற மனதிலே மகிழ்ச்சியானது மிகவும் அவசியமாயிருக்கிறது. 1பேதுரு 1:13ல் '...உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.' என்று பார்க்கிறோம். 1கொரி. 7:36ல் '...தன் மனதின்படி செய்யக்கடவன்...' என பார்க்கிறோம். நம்முடைய மனதின் பிரமாணத்திற்கு விரோதமாக போராடுகிற வேறொரு பிரமாணம் நம் அவயவங்களில் இருக்கிறது என்று பவுல் ரோமர் 7:23ல் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகவே மனதானது கர்த்தருக்குள்ளாக மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். சில காரியங்களில் நாம் நம் மனதில் தோன்றுகிறபடி செய்வதால், சில போராட்டங்கள், பிரச்சனைகள் தோன்றுவதைப் பார்க்கிறோம். என்றைக்கு நம்முடைய மனதில் மகிழ்ச்சி உண்டாகிறதோ அன்று நாம் கர்த்தருக்குள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

I. எப்பொழுது எவ்விதமாய் மனமகிழ்ச்சியைப் பெற முடியும்?

1. விசுவாசமுள்ளவர்களாய் மாறும்போது மனமகிழ்ச்சி உண்டாகும்

"...தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் மனமகிழ்ச்சியாயிருந்தான்." அப்போஸ்தலர் 16:34

பிலிப்பி  பட்டணத்திலே பவுலும் சீலாவும் ஓய்வுநாளில் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து கூடி வந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தார்கள். இவ்விதமாய் ஜெபம் பண்ணுகிற இடத்திற்கு போகும் போது, குறி சொல்லுகிறதினால் தன் எஜமானுக்கு மிகுந்த ஆதாயத்தைக் கொண்டு வந்த பெண் ஒருத்தி, 'இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்' என்று சத்தமிட்டாள். இவ்விதமாய் அநேக நாள் சத்தமிட்டு வந்த அந்த மகளை பவுல் குறி சொல்லுகிற ஆவியை அந்த மகளை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டான். அந்நேரமே அந்த ஆவி அந்த மகளை விட்டு நீங்கியது. அந்த ஆவி புறப்பட்டு போயிற்று. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்திற்கு உதவின அந்த மகளில் இருந்த குறி சொல்லுகிற ஆவி நீங்கிற்றே என்று கண்டபோது, பவுலையும் சீலாவையும் பிடித்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள். இவர்கள் கலகம் பண்ணுகிறவர்கள், நாம் ஏற்றுக் கொள்ளவும், அநுசரிக்கவும் முடியாத தகாத காரியங்களைப் போதிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். ஜனங்கள் கூட்டம் கூடி விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் வஸ்திரங்களைக் கிழித்து அவர்களை அநேக அடி அடித்த பின்பு, சிறைச்சாலையிலே வைத்து பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக் காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.    

      இவ்விதமான கட்டளையைப் பெற்ற சிறைச்சாலையின் அதிகாரி சிறைச் சாலையின் மிகப் பத்திரமான உள் காவலறையில் வைத்து, அவர்களின் கைகளையும் கால்களையும் தொழு மரத்திலே கட்டி வைத்தார்கள். ஆனால் அன்று ராத்திரியிலே பவுலும் சீலாவும் தேவனைத் துதித்துப் பாடினார்கள்.

     அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தரால் வழி நடத்தப்பட்டு ஊழியங்களைச் செய்த பவுலுக்கும் சீலாவுக்கும் பாடுகளும் வேதனைகளும் உண்டானது. அந்தப் பாடுகளின் மத்தியிலே பவுலும் சீலாவும் தேவனைப் புகழ்ந்து போற்றுகிற தன்மையை நமக்கு மாதிரியாக வைத்திருக்கிறார். தங்கள் பாடுகளிலே சோர்ந்து போகாமல் தேவனை, வேதனையிலும் இக்கட்லும் பிரச்சனையிலும் துதித்தார்கள். நேற்றும் இன்றும் மாறாத தேவனுடைய வல்லமை துதி சத்தத்தால் இறங்கிற்று. சிறைச்சாலையானது ஒருபோதும் இருக்க முடியாதபடி அதன் அஸ்திபாரங்கள் எல்லாம் தேவ வல்லமையினால் அசைந்தது. அதிர்ந்த அஸ்திபாரங்கள் எல்லாருக்குள்ளும் பயத்தை உருவாக்கும்படி அமைந்தது.

      இன்று பிரச்சனை வரும்போது சோர்ந்து போகாமல் தேவனைத் துதித்துப் போற்றி புகழும்போது, கைவிடாத நேசர் நம்மைக் காத்து வழி நடத்துவார். தேவ வல்லமையினால் சிறைச்சாலை கதவுகள் திறந்தது. துதிப்பாடலைக் கேட்டவர்களின் கட்டுகளெல்லாம் நீங்கி விடுதலையானார்கள். நித்திரையாயிருந்த சிறைச்சாலைக்காரன் விழித்து, சிறைச்சாலைக் கதவு திறந்திருக்கிறதைக் கண்டு, சிறையில் உள்ளவர்கள் சிறைச்சாலையிலிருந்து ஓடிப்போனார்கள் என்று தற்கொலை செய்து கொள்ள சென்றபோது, உனக்குக் கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே என்று சொன்னதுடன், நாங்கள் எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் என்றான், சிறைச்சாலைக்காரன், தீபங்களைக் கொண்டு வரச்சொல்லி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து அவர்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்து, ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள் 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்' என்று சொன்னார்கள். அத்துடன் அவனுக்கும் அவன் வீட்டில் இருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். அதினால் அந்த ராத்திரியிலே அவர்களை அழைத்துக் கொண்டுபோய் காயங்களைக் கழுவி,  அவனும்  அவனுடைய வீட்டார் அனைவரும் விசுவாசமுள்ளவர்களாய் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

எந்த மனிதன் தேவனிடத்திலே விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்று வாழ்வதற்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறார்களோ, அவர்களுடைய மனதில் மெய்யான மனமகிழ்ச்சி பெருகுவதைக் காணமுடியும்.

   என்னுடைய வாழ்க்கையிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சர்வ அதிகாரமும், சர்வ வல்லமையும் உடையவர் என்றும், அவர் நம்முடைய நோய்களைச் சுமந்தார், அவரின் தழும்புகளால் குணமடைகிறோம் என்பதை அனுபவித்த பொழுது, அவருக்கு மிகுதியாய் நன்றி சொல்லி ஸ்தோத்திரங்களையும் துதிகளையும் ஏறெடுத்தேன். அன்று என் வாழ்க்கையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற  நிச்சயத்தை என் மனத்திரையிலே தோன்றின காட்சிகளின் மூலமாய் நிச்சயித்து, இரட்சிப்பின் சந்தோஷத்தைச் சுதந்தரித்துக் கொண்டேன்.

      அருமையான சகோதரனே, சகோதரியே, இரட்சிப்பின் சந்தோஷத்தைச் சுதந்தரித்ததற்கு அடையாளமாக வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை முத்திரையாகப் பெற்றுக்கொண்டேன். அன்று எனக்குள் உண்டான மனமகிழ்ச்சி என்னைச் சுற்றியுள்ள பிரச்சனைகள், என்னில் உள்ள பிரச்சனைகள், பெலவீனங்களை எண்ணாதபடி கர்த்தருக்காய் வாழ, உழைக்க என்னை நிறைவாய் நடத்தியது. மனதில் தோன்றுகிற இந்த மகிழ்ச்சியானது வாழ்க்கையை சமாதானத்தோடு, வேத வார்த்தையின்படி வாழ்வதற்கு வழி நடத்தும் வல்லமை உடையதாய் இருக்கிறது. 

2. கர்த்தர் அருளும் நன்மையினால் மனமகிழ்ச்சி உண்டாகும்

"...அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்." 1இராஜாக்கள் 8:66

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். அந்த அன்பு நிறைந்த தேவன் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே நன்மைகளை அருளுகிற தேவனாக இருக்கிறார். அவர் அருளும் ஒவ்வொரு நன்மையினாலும் மகிழ்ச்சி அடைகிற மக்களாய் இருக்கிறோம். அநேக நேரங்களிலே நன்மை செய்வதற்கு ஒருவரும் இல்லை, நன்மையைப் பெற்றுக்கொள்ள வழியுமில்லை என்று தவிக்கிற மக்களாய் இருக்கிறோம். ஆனால் கர்த்தர் அநேக விதங்களிலே நன்மைகளை வைத்து வைத்திருக்கிறார். அந்த நன்மைகளிலே சில காரியங்களைத் தியானிப்போம்.

அ) அவரை நம்பும்போது, பெரிதான நன்மையை வைத்திருக்கிறார்.

சங்கீதம் 31:19,20ல் கர்த்தரை நம்புகிற மக்களுக்கு வைத்திருக்கிற நன்மையைப் பார்க்கிறோம். எவ்விதமான நன்மை? சத்துருக்களுடைய தந்திரமான காரியங்களுக்கும் சூனியத்தின் செயல்களுக்கும் நம்மை மறைத்து ஒளித்து வைத்து காப்பாற்றுகிற ஒரு நிகழ்ச்சி. தாவீது தன் வாழ்க்கையில் இதை அனுபவித்தபடியினாலே அந்த நன்மையைக் குறித்து சொல்கிறார். அதில் குறிப்பாக நாவுகளின் சண்டைகளுக்கு விலக்கி என குறிப்பிடுகிறார். நாவுகளின் சண்டை என்பது சில சாதாரண சண்டைகளும் உண்டு. ஆனால் சில காரியங்களில் நாவுகளின் சண்டை என்பது சூனியங்களைச் செய்வதற்கு தங்களுடைய நாவுகளை பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி மறைவிடங்களிலே உத்தமர்கள் மேல் அம்புகளை எய்தார்கள் என்று சங்கீதம் 64:3,4ல் பார்க்கிறோம். அதுபோல சங்கீதம் 10:7,8ல் குற்றமற்றவனை எப்படியாவது தங்களுடைய வலைகளிலே இழுப்பதற்காக, அவனுடைய வாழ்க்கையைக் கெடுப்பதற்காக சாபகரமான வார்த்தைகளைக் கொண்டு செய்கிற காரியங்களைக் குறித்துப் பார்க்கிறோம். ஆகவே கர்த்தருடைய நன்மை என்ன? இவ்விதமாய் சூனியம் செய்கிற மக்களுடைய காரியங்களுக்கு நம்மை விலக்கி, மறைத்து, ஒளித்து, காப்பாற்றி, உயர்த்துகிற தேவனாக இருக்கிறார். 

இன்றைக்கு அநேக விதமான துன்மார்க்கர் நிறைந்த ஒரு பூமியாக, உலகமாயிருக்கிறது. இந்த துன்மார்க்க உணர்வோடு, எண்ணத்தோடு செயலோடு வாழ்கிற மக்கள் பெருகியிருக்கிற இந்தக் காலத்திலே போட்டியினாலே பொறாமையினாலே வேறு விதமான சண்டைகளினாலே, சச்சரவுகளினாலே விரோதமாய் செயல்படுகிறவர்கள் மறைவான கண்ணிகளை வைக்கிறார்கள். மனிதனுக்குப்  பின்னாக அவனை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். ஆனால் இவ்விதமான செயல்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிற தேவன் அல்ல. உனக்கு விரோதமாக உண்டாகிற எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்று தேவன் நமக்கு நன்றாய் போதித்திருக்கிறார், சொல்லிருக்கிறார். ஆகவே தான் துன்மார்க்கன் நம்மைக் கொல்லவகை தேடும்போது, நம்மை அவன் கையில் விடுவதில்லை என்று சங்கீதம் 37:32ல் பார்க்கிறோம்.

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே மனமகிழ்ச்சியாய் இருப்பதற்கு முதலாவதாக சூனியங்களைச் செய்கிறவர்களுக்கு நம்மை விலக்கிக் காக்கிற அன்பின் செய்கையாய் இருக்கிறது. தம்முடைய கூடார மறைவிலே மறைத்துவைத்து கன்மலைமேல் உயர்த்துகிற தேவன், நாம் சேதம் அடையாதபடி, சத்துருக்களின் தொந்தரவுகளினாலே அழிந்து விடாதபடி நலமாய் வாழ்வதற்கு நன்மை செய்கிறார்.

ஆ) வாழ்க்கைக்குத் தேவையான ஆசீர்வாதங்களைத் தருவது

"...கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்..." எரேமியா 31:12

இந்த நன்மைகள் என்ன என்று பார்க்கும்போது, இவ்வுலகத்திற்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தருகின்ற ஒரு செயல். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, கோதுமையாகிய வார்த்தையினாலே, தேவனுடைய வசனத்தினாலே நம்மைத் தேற்றுகிற, மாற்றுகிற, மகிழ்ச்சியினால் முடிசூட்டுகிற தேவனாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தைகளை நம்மையாகத் தருகிறார். அவரிடத்தில் வருகிறவருக்கு தேவ வசனத்தைக் கொண்டு அற்புதங்களைச் செய்கிறவராக இருக்கிறார். வசனத்தை அனுப்பி நம்மை குணமாக்கி அழிவுக்கு தப்பிவிக்கிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறவராக இருக்கிறார். இரண்டாவதாக எண்ணெய், திராட்சரசம் என்று பார்க்கும் போது, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால், நன்மைகளினால் நிரப்புகிற செயல்.

அருமையான சகோதரனே, சகோதரியே, வார்த்தைகளினாலே நிரப்புகிற தேவன், எண்ணெய் என்ற அபிஷேகத்தாலே நம்மை போதித்து நடத்துவதற்கு உண்மைஉள்ளவராய் இருக்கிறார். அவருடைய ஆவியின் அபிஷேகம், ஆவிக்குள்ளாய் பெறுகின்ற கிருபையின் வரங்கள்-இவைகள் ஆசீர்வாதங்களைத் தரக்கூடியது. இந்த நன்மை என்பது உலகத்துக்குரிய, ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுகிற பாக்கியம். ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பது உலகத்தின் செல்வங்களைக் குறிக்கிறது. ஆகவே நாம் கலங்காது வாழ்வதற்கு, நலமாய் இருப்பதற்கு ஏற்ற வண்ணமாய் இவ்விதமான காரியங்களை அருளிச்செய்து, நம்மை மனமகிழ்ச்சியினால் முடிசூட்டுகிறவராக இருக்கிறார். மனதிலே மகிழ்ச்சி பெருகச்செய்து கலங்காதிருக்க உதவிச்செய்கிறார்.   

இ) சுகமளிக்கும் தேவ வல்லமை

"...தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்." அப். 10:38

இயேசு கிறிஸ்து பிசாசின் பிடியிலே பாதிக்கப்பட்டிருக்கிற மக்களை விடுவித்து, குணமாக்கி, அவர்களுடைய வாழ்க்கையிலே மனதிலே உள்ள துக்கத்தை, வேதனையை, வெறுமையை, எல்லாவிதமான சந்தேகங்களை நீக்கி மகிழ்ச்சியினால் நிரப்புகிறார். யார் யார் இயேசு கிறிஸ்துவை தங்கள் மேய்ப்பராக, தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவர் பின் செல்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் நன்மையும் கிருபையும் தொடருகிறதாய் இருக்கிறது. இந்த நன்மையினாலே அவர் மனமகிழ்ச்சி யாக்குகிறார்.

3. வேத வாக்கியங்களினால் மனமகிழ்ச்சி

"...உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி." சங்கீதம் 119:174

வேதம் என்று சொல்லும்போது, கர்த்தருடைய வசனங்களை வார்த்தைகளை உள்ளடக்கிய ஜீவ தேவ புஸ்தகம். ஜீவ வார்த்தைகளை உள்ளடக்கிய பரிசுத்த வேத புஸ்தகம். இந்த பரிசுத்த வேதத்தை யார் யார் நேசிக்கிறார்களோ, அவருடைய வாழ்க்கையிலே சமாதானம் உண்டு. இந்த வேத வார்த்தைகளை யார் யார் தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு அற்புதமான காரியங்களைச் செய்து, எல்லாவற்றையும் அவர் வாய்க்கச் செய்கிற தேவனாயிருக்கிறார். இன்று நாம் தேவனுடைய வசங்களை ஆராயும் போது, நாம், நற்குணசாலிகளாய் மாறுவதற்கு வழியாய் அமைந்திருக்கிறது. அப். 17:11ல் பெரோயா பட்டணத்தார் வேத வசனங்களை மிகுந்த வாஞ்சையோடு ஆராய்ந்த படியினாலே நற்குணசாலிகளாய் மாறினார்கள் என்று தெளிவாய் பார்க்க முடிகிறது. ஆகவே வேத வசனமானது மனிதனுடைய அனுதின வாழ்க்கைக்கு ஏற்ற உபதேசங்களாய், போதனைகளாய், பாதைக்கு வெளிச்சமாய், நம்முடைய கண்களுக்குத் தீபமாய் இருக்கிறது. வேத வசனமானது, இந்த உலகத்திலே நாம் எவ்விதமாய் வாழ வேண்டும், எவ்விதமாய் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கவேண்டும் என்பதைத் தெளிவுப் படுத்துகிற, திட்டப்படுத்துகிற, விளக்குகிற, உரைக்கிறதாய் இருக்கிறது.

இன்று வேத வசனங்களை ஆராயும்போது மனமகிழ்ச்சி உண்டாகிறது. மனமகிழ்ச்சி தரக்கூடிய இந்த வேதத்தை எவ்விதமாய் நேசிக்கிறோம்? அந்த அளவில் அவர் அற்புதங்களைச் செய்து ஆசீர்வதிக்கிறார்.

4.சாந்தகுணமுள்ளவர்களுக்கு மனமகிழ்ச்சி

"சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்." சங்கீதம் 37:11

சாந்தகுணமுள்ளவர்களுடைய வாழ்க்கையிலே மனமகிழ்ச்சியை அருளுகிற தேவனாயிருக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களாய் இருக்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய மேன்மைகளை, நன்மைகளை சமாதானத்தினால் பெற்றுக் கொள்கிறார்கள்.

 பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு சாந்தகுணம் அவசியம். ஆவியின் கனிகளிலே நற்பண்பாகிய இந்த சாந்தகுணம் நமக்குள்ளாய் இருக்க வேண்டும். சாந்தம், இச்சையடக்கம் இருக்குமானால் ஆவியின் கனிகளினாலே நிறைந்த வாழ்க்கையை நாம் பெற்றுக்  கொள்கிறோம். இந்த ஆவியின் கனிகளின் தன்மைகள் நாம் வாழ்க்கை வாழ்வதற்கு மாத்திரமல்ல, பூமியிலே ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஏற்றதாய் இருக்கிற படியினால், இந்த மனமகிழ்ச்சி நமக்கு உண்டாகிறது. குடும்பத்தில் உள்ள சமாதானம், பிள்ளைகளில் உள்ள சமாதானம், வேலை ஸ்தலத்தில் உள்ள சமாதானம் நமக்குள் மிகுதியான மகிழ்ச்சியை உண்டாக்குகிறதாய்  இருக்கிறது.

ஒருமுறை ஒரு சகோதரர் தன்னுடைய தாயின் வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்தார். வாடகைக்கு இருந்த சகோதரரோ, நான் இத்தனை ஆண்டுகள் இருந்து விட்டேன், இவ்வளவு இலட்சம் ரூபாய் கொடுத்து விட்டேன். இந்த வீடு எனக்குச் சொந்தம் என்று சொல்லி கோர்ட்டில் ஒரு வழக்கையும் தொடர்ந்து விட்டார். அந்தச் சகோதரரோ, ஊழியங்களைச் செய்கிற சகோதரர். என்ன செய்வதென்று தெரியாத நிலமை. மிகுந்த சாந்தகுணமுள்ளவர்களாய் அந்த வீட்டை எப்படியாவது பெற்று விடலாம் என்று ஒரு ஜெப ஜீவியத்தோடு காத்திருந்தார். அந்த வீட்டில் குடியிருந்த கிறிஸ்துவை அறியாத மனிதர், தன் ஒரே மகளுடைய சுகவீனத்தின் நிமித்தமாக வேதனை அடைந்தார். தன் மகள் வியாதிபட்டு, வேதனை நிறைந்திருந்த அந்த வேளையிலே, யாரைத் தேடுவது, யாரை நாடுவது என்று உள்ளத்தில் கலங்கின வேளையிலே, அவருடைய நண்பர் ஒரு இடத்துக்கு போங்கள், அங்குள்ள போதகர் ஜெபிக்கும்போது, உங்கள் மகளுக்கு அற்புத சுகம் கிடைக்கும் என்று சொன்ன வார்த்தையை, ஆலோசனையை ஏற்று சென்றார். அற்புதமான காரியம் நடைபெற்றது. மகளுக்கு விரோதமாய் போராடின வேதனைக்குரிய நோயானது நீங்கினபடியினாலே, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியினாலே, உள்ளத்தில் உணர்த்தப்பட்டு, கடிந்து கொள்ளப்பட்டு, ஐயோ, நான் தவறான காரியத்தை செய்து விட்டேன், இது உங்களுடைய வீடு, நான் இதைச் சொந்தமாக்கிக் கொள்ள ஆசைப்பட்டு, தவறான வழக்கைத் தொடர்ந்து விட்டேன், வழக்கை அவர் வாபஸ் பண்ணினது மாத்திரமல்ல, இந்த வீட்டை நீங்கள் விற்பதாய் இருந்தால், எனக்குச் சகாயம் பண்ணி விற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்தச் சகோதரரும் அந்த வீட்டை விற்றார். சமாதானம் உண்டானது. மிகுந்த மனமகிழ்ச்சியோடு தன்னுடைய சாட்சியையும் பகிர்ந்து கொண்டார்.

யோசித்துப் பாருங்கள். அருமையான சகோதரனே, சகோதரியே, சாந்த குணமானது தேவனுடைய சமுகத்திலே மனமகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடிய அன்பின் பண்பாக இருக்கிறது.

5.  ஊழியங்களைச் செய்யும்போது மனமகிழ்ச்சி

"இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்..." ஏசாயா 65:14

கர்த்தருடைய ஊழியத்தை ஒருவர் செய்யும்போது, பிதா அவரைக் கனம்பண்ணுகிறவராய் இருக்கிறார். அதுமாத்திரமல்ல, அந்த ஊழியத்தி னிமித்தமாய் மனதிலே பூரணமான மகிழ்ச்சி பெருகுகிறது. நீங்கள் பவுலுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது, பெலவீனமும் சோர்வும்   உடையவராய் இருந்தாலும், பல தேசங்களுக்கு, பல நாடுகளுக்கு, பலவிதமான கடினமான சூழ்நிலையிலே, கடினமான பயணங்களிலே அவர் இருந்து, மகிழ்ச்சியோடு தன்னுடைய ஓட்டத்தை ஓட முடிந்தது. அருமையான சகோதரனே, கர்த்தருக்காக வாழ ஒப்புக்கொடுத்த உன்னை மனமகிழ்ச்சியினால் முடிசூட்டுகிற தேவனாய் இருக்கிறார். கர்த்தருடைய ஊழியமானது, இந்த உலகத்தில் உள்ள எல்லா ஊழியம், பணிகளைக் காட்டிலும், வேலைகளைக் காட்டிலும் பெரிதான காரியம். அது நலமானது, நன்மையானது. ஆகவே, இந்த ஊழியத்தைச் செய்கிற மனிதனுடைய உள்ளங்களிலும், வாழ்க்கையின் எல்லைகளிலும் அவர் மிகுதியான மனதின் மகிழ்ச்சியை நிறைவாக்கி, அவர்களுடைய எல்லைகளிலே சமாதானத்தைப் பெருகச்செய்து, சந்தோஷத்தால் நிறைந்து, பாதுகாவலோடும், கர்த்தருடைய நன்மையினால் நிறைந்த நல் வாழ்க்கையோடும் மகிழ்ச்சியோடு ஊழியங்களைச் செய்யும்படி நடத்துகிறார். கர்த்தருக்காக உழைக்கும்போது, ஊழியங்களைச் செய்யும்போது, மனமகிழ்ச்சியானது உண்டாகிறது. 

மனமகிழ்ச்சியினால்  உண்டாகும் ஆசீர்வாதம் என்ன?

1.மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்

"மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்..."நீதிமொழிகள் 17:22

ஒளஷதம் என்றாலே நல்ல மருந்து. நல்ல சுகத்தைத் தரக்கூடிய தேவ கிருபை. நம்முடைய ஆவியிலோ, சரீரத்திலோ காணப்படுகிற பெலவீனம், நமக்குள்ளாய் காணப்படுகிற வேதனை நீங்கி சுக வாழ்வைப் பெறுவதற்குரிய நன்மையான மருத்துவ சிகிச்சைக்குரியது. பலருடைய வாழ்க்கையிலே வருத்தத்தினாலே, துக்கம் மிகுதியினாலே வியாதியடைகிறார்கள். தன்னுடைய மனதிலே உள்ள நோயினாலே எதையுமே செய்ய முடியாதபடி தடுமாறுகிற, தவிக்கிற மக்கள் அநேகர் உண்டு. அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு என்று சொன்ன வார்த்தையின்படி மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கு உங்களை ஒப்புக்கொடுப்பீர்களானால், இந்த மனமகிழ்ச்சியைப் பெற்று, ஆசீர்வாதமான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். 

ஒருமுறை ஒரு சகோதரி பல்லை எடுப்பதற்காக ஒரு மருத்துவரை அனுகினார். மருத்துவர் அவர்களைச் சோதித்துவிட்டு, அம்மா, உங்களுடைய இரத்த அழுத்தமானது அதிகமாயிருக்கிறது. ஆகவே பல்லை எடுக்கமுடியாது என்று சொல்லி, அவர்களை வேறொரு மருத்துவரிடத்தில் அனுப்பிவிட்டார். அந்த மருத்துவரோ, நலமாய், நன்மையான காரியங்களை, சற்று மகிழ்ச்சியடையும் படியாய் பேசுகிற சுபாவம் உடையவர். அந்தச் சகோதரி அவர்களைச் சந்தித்தபோது, மகிழ்ச்சியுண்டாக்கக்கூடிய காரியங்களைப் பேசின பின்பு, அவருடைய இரத்தத்தைச் சோதித்தார். அது குறைவாய் மாறிவிட்டது. ஆகவே பல் மருத்துவரிடத்திற்கு திருப்ப அனுப்பி, பல்லை எடுப்பதற்கான காரியங்களைச் செய்தார்கள். இரத்த அழுத்தமானது வேறு எந்த மருத்துவத்தினாலோ, எந்தவிதமான இன்ஜக் ஷனினாலோ குறைவுபட வில்லை. மனதில் உண்டாகிய மகிழ்ச்சியினாலே இரத்தத்தின் அழுத்தம் குறைந்து சிகிச்சைப் பெற்று சுகமாய்த் திரும்பினார்கள். ஆகவே மன மகிழ்ச்சியானது ஒரு மருந்தைப்போல, சரீரத்திற்கு, ஆவிக்குரிய சுகத்தைத் தரக்கூடிய ஆற்றல் உடையது. இது மிகவும் முக்கியமானது. மன மகிழ்ச்சியாயிருக்கும்போது, சரீரத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும் பூரணமான மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகிவிடும்.   

2.இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்." சங்கீதம் 37:4

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, இருதயத்தின் காரியங்களை ஆராய்ந்து அறிகிற தேவன். இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுகிற தேவன். யாரெல்லாம் அவரிலே விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்களில் அற்புதமான காரியங்களைச் செய்து மனமகிழ்ச்சி அருளுகிற ஆண்டவராயிருக்கிறார். மத்தேயு 15:28ல் கானானிய ஸ்திரீ தன் மகளின் கொடிய வேதனை நீங்குவதற்காக இயேசு கிறிஸ்துவிடம் வருகிறாள். ஆனால் இயேசு கிறிஸ்து அவளுக்குள் இருந்த விசுவாசத்தைக் கண்டு, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்று சொல்லி, அந்த மகளுக்கு அற்புதமான சுகத்தைக் கொடுத்தார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான தேவப்பிள்ளையே, கொடூர நோயாக இருக்கலாம், பெலவீனங்கள் இருக்கலாம். இந்த பூமியிலே நான் ஜீவிக்க முடியுமா? அறுவைச் சிகிச்சைக்குள்ளாக நான் செல்ல வேண்டுமே என்று பயத்தினாலும், துக்கத்தினாலும் நிறைந்திருக்கலாம். ஆனால் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க உங்களை ஒப்புக்கொடுப்பீர்களானால், உங்களுடைய விசுவாசமே மன மகிழ்ச்சியினால் உண்டான நன்மையைப் பெற்றுக்கொள்கிற பாக்கிய சாலிகளாய் மாற்றிவிடும்.

ஆகவே மனமகிழ்ச்சியானது நல்லஒளஷதமான, சுகப்படுத்துகிற ஆற்றல் உடையதாக, வேதனைகளை நீக்கக்கூடியதாக, நம்முடைய மனதின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாயிருக்கிறது.          

  3. போஷிப்பார்

"அப்பொழுது கர்த்தரில் மன மகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று"ஏசாயா 58:14

இந்த மன மகிழ்ச்சியானது முகமலர்ச்சியைத் தந்து, மேன்மையான நிலையிலே நம்மை ஸ்திரப்படுத்திகிறது. கர்த்தருடைய மன மகிழ்ச்சி வரும் போது, யாக்கோபு எப்படி ஆசீர்வதிக்கப்பட்டு, ஒரு இஸ்ரவேலாய் மாறி, தேவனுடைய நாமம் மகிமைப்படுவதற்கு ஆசீர்வாதமாய் இருந்ததைப் போல, நாமும் கர்த்தருடைய கரத்தில் ஒரு கருவியாய் மாறிவிடுவோம். இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று கர்த்தருடைய சமுகத்திலே நாம் மன மகிழ்ச்சியினால் நிரம்பும்போது, தேவனுடைய ஆசீர்வாதத்தை நிறைவாய் பெற்றுக் கொண்டு, என்றென்றைக்கும் அவரால் போஷிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.

ஆகவே கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருப்போம், ஆசீர்வாதங்களை என்றும் பெற்றுக்கொண்டு முக மலர்ச்சியோடு, வேதனைகள் நீங்கினவர்களாய் ஜீவிப்போம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.