சிந்தி செயல்படு
"...அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்."
1 பேதுரு 2:24
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உயிர்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.
ஒரு முறை கூட்டத்திற்கு ஆயத்தமாகி புறப்படும் நேரத்தில் சுகவீனமாய் இருந்த தன் கணவரை அழைத்துக்கொண்டு, நான் தங்கியிருந்த வீட்டிற்கு சகோதரி ஓருவர் வந்தார்கள். அவர்களுக்கு ஜெபித்து அனுப்பிவிட்டு கூட்டத்திற்கு செல்லலாம் என்று முழங்கால்படியிட்டிருந்த சகோதரிக்காக ஜெபித்தேன். எருக்கம் பூவில் வருகிற ஆவியே வெளியேறு என்று கர்த்தர் வெளிப்படுத்தின காரியத்தைச் சொல்லி ஜெபித்தவுடன், அந்தச் சகோதரி மிகுந்த சத்தமிட்டார்கள். இயேசுவை ஆராதிக்காத குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் என் சொப்பனத்தில் எருக்கம் பூவை என்னிடம் கொடுத்து இதை வாங்கிக்கொள் என்று சத்தம் கேட்டது. இதற்கு அடையாளம் கணவர் மரித்துப்போவதாகும். இது வேண்டாம் என்று நானும் சொப்பனத்திலேயே கூறி அழுதுகொண்டிருந்தேன். அந்நாட்களில் சில சகோதரிகள் இயேசுவைப் பற்றிக் கூறினார்கள். காலையில் என் வீட்டு வாசலைப் பெருக்கி சுத்தம் பண்ணும்போது, ஒரு துண்டு நோட்டீஸ் என் கால்களில் காற்றினால் அடித்துவரப்பட்டது. அந்த நோட்டீசில் நோயுற்றவர்களுக்கும், பிசாசின் தொந்தரவில் உள்ளவர்களுக்கும் ஜெபிக்கப்படும் என்றவுடன், இந்த ஆள் எங்கு இருக்கிறார் என்று விசாரித்து நான் தங்கியிருந்த இடத்திற்கு ஜெபிக்க வந்தார்கள். இந்த சகோதரியின் கணவர் ஒரு sweet கடையை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் நடத்தி வந்தார்கள். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட கணவரின் கால் மிகவும் பாதிக்கப்பட்டு, எலும்புகள் அரிக்கப்பட்டுவிட்டது. சோதித்த மருத்துவர் உடனடியாக முழங்கால் வரை காலை வெட்டியெடுக்கவேண்டும், இல்லையானால் மரித்து விடுவார் என்றதால் மிகவும் கலங்கின நிலையில் சுகமடைய என்ன வழி என்று தேடினார்கள். ஜெபித்தபின் சில தினத்திலேயே கணவரின் காலின் புண்கள் ஆறி அரித்திருந்த எலும்பும் சரியாகிவிட்டது. அந்தச் சகோதரி முழுமனதோடு இயேசுவை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.
அன்பு சகோதரனே, சகோதரியே, நம்மை நேசிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘நம்முடைய நோய்களை சுமந்தார்’ என்ற வாக்கின்படி சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார். அவரை முழுமனதுடன் நம்பும்போது 'அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்' என்ற வாக்கு நிறைவேறும். நோய், பேயைக்கண்டு கலங்க வேண்டாம். என்றும் மாறாத இயேசு ஜீவிக்கிறார். நமக்கு அற்புதம் செய்வார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ. C. எபனேசர் பால்.