"...நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள்..." மாற்கு 10:36

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன் தன் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று பல விதங்களில் முயற்சிக்கிறான். அதற்காக பலவிதமான வேண்டுதல்களை செய்கிறவர்களும் உண்டு. என் பிள்ளை ஒரு டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும், நல்ல இன்ஜினியர் ஆக வேண்டும், வெளி நாட்டிற்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்று பற்பல காரியங்கள் பிள்ளைகளில் நடைபெற விரும்புகிறோம். அதற்காக சிறு பிராயத்தில் இருந்தே பயிற்சியும், பழக்கத்தையும் உண்டாக்குகிறோம். சிலருடைய விருப்பம் அழகான நல்ல பெரிய வீடு கட்ட வேண்டும். அதின் வாடகையினால் எல்லாவற்றையும் சந்திக்கலாம் என்ற வாஞ்சைகளினால் செயல்படுவதைப் பார்க்கிறோம். சிலர் தங்களின் வியாபாரம், தொழில் விருத்தியடைய வேண்டும் என்றும், அல்லும் பகலும் உழைக்கிறார்கள்.

நாம் வேண்டிக்கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைச் செய்கிற தேவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்தால், நாம் அதிசயமானவை களைக் காணவும், பெறவும் கர்த்தர் நமக்கு உதவிச்செய்வார். அத்துடன் நமது சிறிய பெரிய விருப்பங்களையும் நிறைவேற்றி நம்மை மகிழ்வித்து நடத்துவார்.

I. கர்த்தர் யார் யாருடைய விருப்பத்தை நிறைவேற்றுவார்?

1. விசுவாசம் மிகுதியானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்

“இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார்.  அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்." மத்தேயு 15:28

கானானிய ஸ்திரீ இயேசு கிறிஸ்துவிடம் வந்து தன் மகளின் பரிதாபகரமான நிலையை தெரிவித்தாள். அவள் நினைத்தபடி இயேசு கிறிஸ்து உடன் பதில் சொல்லவில்லை. எனக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை என்று அவள் இயேசுவை பின் தொடர்வதை விட்டு விடவில்லை. இன்று என் பிரச்சனைத் தீர இயேசுவிடம் வேண்டினேன். எனக்கு ஒன்றும் கிடைக்க வில்லை என்று கர்த்தரைத் தேடுவதற்கும், ஆலயம் செல்வதற்கும் முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். வேதத்தைத் தொடாது உலக மக்களாக மாறி விடுகிறார்கள்.

இந்த சகோதரியின் செயலைக் கொண்ட சீஷர்கள் அவளுக்காக இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து மன்றாடினார்கள். அதற்கு இயேசு கிறிஸ்து 'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனேயன்றி, மற்றபடியல்லவென்றார்.' இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த கானானிய ஸ்தீரி விலகிப் போகவில்லை, விட்டுச் செல்லவில்லை. அவளுடைய விசுவாசம் அதில் தான் தெரிகிறது. அத்துடன் அவள் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, ஆண்டவரே, எனக்கு உதவிச்செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.

எனக்காக பலர் வேண்டினார்கள், இன்னும் எனக்குப் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று விலகிச் செல்லாது, இந்தக் கானானிய ஸ்திரீயைப் போல எனக்கு உதவிச் செய்யும் என்று பணிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது இதைச் செய்தாளோ, அப்பொழுதே ஒரு பதிலை இந்த ஸ்திரீ பெற்றாள். அது சாதாரணமாக அல்ல, சற்று உள்ளத்தைப் பாதிப்பதாய் அமைந்தது. 'பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல' என்ற பதில் அவள் உள்ளத்தில் ஒரு உணர்வை, வேண்டுதல் செய்ய வார்த்தைகளைக் கொடுத்தது. உடனே ஆண்டவரே என்று இயேசு கிறிஸ்தவை அழைத்ததுடன், நீர் சொன்னது மெய்தான் என்று ஏற்றுக் கொண்டாள். அத்துடன் 'நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே' என்று தன்னைத் தாழ்த்தினாள். இயேசு கிறிஸ்து அந்த மகளின் பெரிதான விசுவாசத்தைக் கண்டார். இயேசு கிறிஸ்து அந்த மகளின் பெரிதான விசுவாசத்தைக் கண்டார். மனதுருகும் இயேசு உடனே அவளைப் பாராட்டி, 'நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது' என்றார். அவளுடைய மகள் அந்நேரமே வேதனை நீங்கி ஆரோக்கியமானாள்.

இன்று நாமும், கானானிய ஸ்திரீயைப் போல இயேசு கிறிஸ்துவிடம் வந்து, பணிந்து, ஆண்டவரே, எனக்கு உதவிச்செய்யும் என்று உண்மையாய் கேட்கும்போது, கர்த்தர் நமக்கு உதவிச்செய்வார். அவர் நம்முடைய விசுவாசத்தைப் பார்த்து நமக்கு அதிசயங்களைச் செய்கிற தேவன். நாம் கேட்பதற்குப் பதிலாக நமக்காக யாராவது ஜெபிக்கட்டும் என்ற சிந்தையுடன், ஜெபக்குறிப்பை அனுப்புகிற மக்கள் இன்று ஏராளம். முதலாவது விசுவாசத்துடன் நாம் ஜெபிக்க வேண்டும். அந்த விசுவாசம் கர்த்தர் மீது பெரிதாய் இருந்தால் நம் விருப்பத்தின்படி அற்புதம் செய்வார்.

2. தமக்குப் பயந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்

"அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்." சங்கீதம் 145:19

கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் 'தீமையை வெறுப்பதே' என்று நீதி. 8:13ல் பார்க்கிறோம். தீமையான காரியங்களைத் துணிகரமாய் செய்யும் கூட்டம் இன்று அதிகமாக செயல்படுகிறார்கள். மற்றவர்கள் உள்ளத்தைத் துன்புறுத்தும் வார்த்தைகள் மிகுதியாக பெருகியிருக்கிறது. இதினால் பொய், பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலையும் பெருகிவிட்டது.  இதைப் படித்தவர்களும், படியாதவர்களும் துணிகரமாக செய்து தீங்கை விளைவிக்கிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால், எந்தத் தீங்கான செயலுக்கும் இடம் கொடாது வாழ்வதே ஆகும்.

கர்த்தருக்குப் பயப்படுவது என்றால், நிதானமாய் நடப்பதாகும் (நீதி. 14:2). நிதானம் என்றால் திடமனதுடன் நடைபெற வேண்டிய காலத்தில், காரியங்கள் நடைபெறட்டும் என்ற தன்மையுடன் கர்த்தருக்குள் வாழ்வதாகும். எதையுமே ஆராய்ந்து அறிந்து பொறுமையுடன் செயல்படுவதாம்.

இன்னும் கர்த்தருக்குப் பயப்படுவது என்றால், முற்றும் கர்த்தரின் சொற்படி கீழ்ப்படிவதாகும். கர்த்தர் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கைப் பலியிடச் சொன்னபோது, ஆபிரகாம் அதைச் செய்ய கர்த்தர் சொன்ன இடத்திற்குச் சென்றான். அவனைப் பலியிட காரியங்களைச் செய்து, ஈசாக்கை பலிபீடத்தில் கிடத்தினான். வெட்டும்படிக்கு தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் ஆபிரகாமை கூப்பிட்டு, பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே என்று கூறினார். நீ அவனை உன் புத்திரன் என்றும், ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால், நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆம், கர்த்தரின் வார்த்தையின்படி முற்றிலும் கீழ்ப்படிவது கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் ஆகும். இவ்வாறு வாழ்கிற மக்களின் விருப்பத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருள்புரிவார்.

3. கர்த்தரிடம் மனமகிழ்ச்சியாய் இருக்கும்போது, நம் விருப்பத்தை நிறைவேற்றுவார்

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்." சங்கீதம் 37:4

மனமகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும். மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம். நம் வாழ்வில் மனமகிழ்ச்சியாயிருக்க நாம் வேதத்தை நேசிக்கிற மக்களாக இருக்க வேண்டும். சங். 119:174ல் உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி என்று பார்க்கிறோம். ஆவியும் ஜீவனும் நிறைந்த வார்த்தைகள் நம் உள்ளம் மகிழத்தக்கதான காரியத்தை அருளுகிறது.

இன்னும் 'சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.' சாந்தகுணமானது ஆவியின் கனிகளில் ஒன்றாகும். சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள். அவர்களின் விருப்பத்தைக் கர்த்தர் நிறை வேற்றுவார்.

4. நீதிமானின் விருப்பத்தை கர்த்தர் நிறைவேற்றுவார்

"...நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்." நீதி. 10:24

நீதிமான் என்றால் கர்த்தருடைய நீதியைப் பெற்று அதன்படி வாழ்கிறவர்களாகும். அவர்களின் செய்கை எல்லாம் நீதி நிறைந்ததாகவே இருக்கும். நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற படியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். நாம் அவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிந்திய விலையேறப்பெற்ற இரத்தத்தாலே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். யார் யார் அந்த விலையேறப் பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்ட அனுபவத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்களோ, அவர்கள் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இப்படியாக நாம் நீதிமான்களாக்கப்படும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

II. கர்த்தர் விரும்புகிறது என்ன?

1. உண்மையை விரும்புகிறார்.

"இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்..." சங்கீதம் 51:6

இன்று உண்மையுள்ளவர்கள் குறைந்திருக்கிறார்கள். நம் தேவனோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறவர். இன்று நாம் எவைகளில் உண்மையாய் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு செயல்படும்பொழுது, கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

எவைகளில் உண்மை?

அ) கூப்பிடுவதில் உண்மை

"தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்." சங்கீதம் 145:18

இன்று அநேகர் கர்த்தர் என் கூப்பிடுதலுக்குப் பதில் தரவில்லை என்று கலங்கி கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நம் கூப்பிடுதலைக் கேட்டவுடனே அவர் நமக்காக வல்லமையான காரியங்களைச் செய்கிறார், பதில் தருகிறார். பர்திமேயு என்கிற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து, பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு கிறிஸ்து வருகிறாரென்று கேள்விப்பட்டு, இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று தடைகள் மத்தியில் முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்து வரச் சொன்னார். அவரிடத்தில் வந்த அவனைப் பார்த்து நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டு அவன் விருப்பத்தை நிறைவேற்றினார். அவன் பார்வையடைந்தவனாய் இயேசுவுக்குப் பின் சென்றான்.

ஜெபத்திற்கு தடை வருகிறதே என்று ஜெபத்தை விடாது ஜெபிக்கும் போது, கூப்பிடும்போது நமக்கு சமீபமாயிருப்பதுடன் நம்மை ஆசீர்வதிப்பார் தாவீது தேவ சமுகத்தை நோக்கிக் கூப்பிட்டபொழுது கர்த்தர் சமீபமாயிருந்து அவனைக் கண்மணி போல் காத்தார். எல்லாக் காரியங்களிலும் உதவிச் செய்தார். இன்று முதல் நாம் கூப்பிடுவதில் உண்மையாயிருப்போம்.

ஆ) பேசுவதில் உண்மை

"...அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்..." சகரியா 8:16

இன்று பேசுகிற காரியத்தில் நாம் உண்மையாய் இருக்க வேண்டும். பெயருக்காக, புகழுக்காக, பொய் பேசுகிற மக்கள் பெருகிவிட்டார்கள். தங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், உயர்வு கிடைக்க வேண்டும் என்று பலவிதமான பொய்களை நிறைவாகப் பேசித் திரிகிறவர்கள் சமுதாயத்தில் பெருகியிருக்கிறார்கள். படிக்கின்ற பிள்ளைகள் ஏன் மார்க் குறைவாய் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு பொய்யைச் சொல்லுகிறார்கள். 'பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்' என்று நீதி. 12:22ல் பார்க்கிறோம். தேவன் விரும்பாத இந்த பொய்யான காரியங்களை நிறைவாய் பேசுகிறோம். நம்முடைய காதை உண்டாக்கினவர் நாம் பேசின, பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார் என்பதை தெரிந்திருக்க வேண்டும். கர்த்தருடைய பிள்ளைகள், அவருக்குப் பயந்தவர்கள், ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள், கர்த்தர் கவனித்துக் கேட்பார் என்ற மல்கியா 3:16ன் வார்த்தையை நினைவில் வைத்து நாம் பேச வேண்டும். இன்றுமுதல் நாம் பொய்க்கு பிதாவான சாத்தானின் செயலை வெறுத்து, கர்த்தர் விரும்புகிற உண்மையை பேசுவோமாக.

இ) தொழுது கொள்வதில் உண்மை

"உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்." யோவான் 4:23

இன்று கர்த்தரை உண்மையாய்த் தொழுதுகொள்ள வேண்டும் என்று தெளிவாய் இயேசு கிறிஸ்து நமக்கு கூறியுள்ளார். நாம் நம் ஆவியில் உண்மையாக அவரை தொழுது கொள்கிறோமா? ஆதி. 4:26ல் சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை, ஆபிரகாம் பெயெர்செபாவிலே தொழுதுகொண்டான் என்று ஆதி. 21:33ல் பார்க்கிறோம். நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்கு சமீபமாயிருக்கிறது போல, தேவனை இவ்வளவு பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? என்று உபாகமம் 4:7ல் பார்க்கிறோம்.

உண்மையாய் அவர் நாமத்தை தொழுது கொள்ளும்போது, நம் ஜெபத்தைக் கேட்பார், நாம் இரட்சிக்கப்படுவோம். இன்று முதல் நாம் உண்மையாய் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்வோமாக.

ஈ) அன்பு கூறுவதில் உண்மை

"...வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்." 1 யோவான் 3:18

கிறிஸ்துவின் அன்பு நம்மில் பெருக வேண்டும். நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே நம் உள்ளங்களில் தேவ அன்பு ஊற்றப்பட்டிருக்கிற படியால் நாம் வெட்கமடையோம். அன்பின் பண்புகளில் நாம் அனுதினமும் பெருகும்போது, நமக்கு வேண்டியது என்ன என்று அறிந்து நமக்கு ஞானமும், சகல நல் ஆசீர்வாதமும் அருளுவார்.

இயேசு கிறிஸ்து பிதாவின் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராய் இருந்து தமது அன்பை சிலுவைபரியந்தம் வெளிப்படுத்தினார். உண்மையான அன்பு நமக்குள் இருக்கும்போது, நாம் கர்த்தரின் ஊழியத்தை நிறைவேற்ற முடியும். அவரில் அன்பு கூருகிற உண்மையானவர்களை தற்காத்து இடும்பு செய்கிறவர்களுக்கு பதிலளிக்கிறார். ஒருவர் உண்மையாய் இருந்தால் அவர்களை உயர்த்துகிற தேவன், அவர்கள் மீது எந்தக் குற்றமும் சாட்டப்படாதபடி பாதுகாக்கிறார். இன்றுமுதல் உண்மையாய் அன்பு கூறுவோமாக. அளவில்லா ஆசீர்வாதமடைவோமாக.

 

2. கிருபை செய்ய விரும்புகிறார்

"...அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்." மீகா 7:18

கிருபையானது நமக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் பெருகியிருக்கிறது. பழைய பரிசுத்தவான்களுக்கு கிருபை அருளப்பட்டது. ஆனால் கிறிஸ்துவின் மூலம் பூரண கிருபை நமக்கு அருளப்பட்டும், வெளிப்பட்டும் இருக்கிறது. கிருபையினால் நாம் நிர்மூலமாகதிருக்கிறோம். இந்தக் கிருபை காலைதோறும் புதிதாய் இருக்கிறது. தகுதியற்ற நமக்கு தேவன் பாராட்டுகிற இந்த இரக்கத்தின் செயல் அனுதினமும் நம்மைத் தாங்குகிறது. 'என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.' என்ற சங். 94:18ன் படி நம்மை நமது பிரச்சனைகளில், தடுமாற்றத்தில் கிருபையினால் தாங்கி நடத்துகிறார். என் கிருபை உனக்குப் போதும், பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும் என்ற கர்த்தர் மாறாதவராயிருக்கிறார்.

கர்த்தர் அருளும் கிருபையைப் பெற

அ) தாழ்மை வேண்டும்

"அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ள வர்களுக்கோ கிருபை அளிக்கிறார்..." யாக்கோபு 4:6

இந்த உலக வாழ்வில் நான் பெரியவன், உயர்ந்தவன் என்று தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்துகிறவர்களிடம் தாழ்மை கிடையாது. மாயமான தாழ்மையோடு வாழ்கிறவர்கள், ஆராதனை செய்கிறவர்கள் அநேகரை வஞ்சிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். மனத்தாழ்மையைத் தேட வேண்டும். தாழ்மையுள்ளவர்களை உயர்த்தும் தேவன் இன்று ஜீவிக்கிறார். மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் என்றவர் தமது கிருபையைப் பெருகச் செய்ய விரும்புகிறார். கிருபை நிறைந்த இயேசு கிறிஸ்து தாழ்மையின் ரூபமெடுத்தார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் என்ற அன்பின் தேவன் மாறாதவர். தாழ்மையினால் கிருபை பெறுகிறோம்.

ஆ) கர்த்தருடைய உடன்படிக்கையையும், சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு கிருபை அருளுகிறார்.

“கர்த்தருடைய உடன்படிக்கையையும், அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்கிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்” சங்கீதம் 25:10

நம் வாழ்வின் பாதையில் கிருபை நிறைய வேண்டுமானால் கர்த்தருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. அந்த சாட்சிகளை நம் வாழ்வில் கைக்கொண்டு காரியங்களைச் செய்யும்போது, நம் காரியங்கள் ஜெயமாகும். கர்த்தருடைய சாட்சிகள் உண்மையுள்ளவைகள். "அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்." சங்கீதம் 119:2ல் பார்க்கிறோம்.  "உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக் காரருமாயிருக்கிறது." சங்கீதம் 119:24ல் பார்க்கிறோம். சாட்சியின் வசனத்தினால் சாத்தானை ஜெயிக்கமுடியும். ஞானஸ்நானமானது நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது. இன்று இவைகளை கைக்கொள்ளும்போது நம் வாழ்வின் பாதையில் கிருபை உண்டாகும்.

3. இயேசு கிறிஸ்துவோடு கூட இருக்க விரும்புகிறார்

"பிதாவே உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்த படியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்." யோவான் 17:24

இயேசு கிறிஸ்து விரும்பிய மற்றொரு காரியம் அவருடனே இருக்கவேண்டும் என்பதாகும். இன்று அநேக பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தங்களோடு அல்லது தாங்கள் வசிக்கும் ஊரிலேயே மிக அருகில் இருக்க விரும்புவதை நாம் பார்க்க முடிகிறது. அவர்கள் மத்தியில் வாசம் பண்ணுவேன் என்ற அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நமது மத்தியில் இருப்பதுடன் நாம் அவருடன் இருக்க விரும்புகிறதை அறியமுகிறது.

யார் யார் இயேசுவுடன் இருப்பார்கள்

அ) தெரிந்து கொண்டவர்கள் உடன் இருப்பார்கள்

"அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்." மாற்கு 3:14,15

இயேசுகிறிஸ்து தம்முடன் எப்பொழுதும் இருக்கும்படியாகப் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டார். அவர்கள் அதிகாரமுடையவர் களாயிருந்து செயல்படவேண்டும் என்று விரும்பினார். பிரசங்கம் பண்ணவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அவர்கள் தம்முடன் இருக்கும்படி செய்தார். யார் யார் அவருக்குப் பின் தம்முடன் செல்லும்படி, அவரின் சீஷர்களாக மாறினார்களோ அவர்களில் 12 பேரைத் தெரிந்துகொண்டார். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை நான் உங்களைத் தெரிந்து கொண்டேன் என்றவர் ஜீவிக்கிறார். அவரே தெரிந்துகொண்டு அவருடன் இருக்கவும் செய்கிறார்.