"கர்த்தரையல்லாமல் தேவன் யார்?

                          நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?"

                                                                   சங்கீதம் 18:31

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

இன்று ஒரு சிறந்த பண்புடைய மனிதரை அறிமுகம் செய்யும்போது அவர் எப்படிப்பட்ட ஞானம், விவேகம் உடையவர் என்று அறிவிக்கிறோம். சில விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெரும் விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்யும்போது, அவர்கள் எவ்விதம் போட்டிகளில் வெற்றிப்பெற்றார்கள் என்ற வெற்றியின் சாட்சியை அறிவிப்பார்கள். இதைப் போல தாவீது தனது வாழ்க்கையில் கர்த்தர் செய்த நன்மைகளை அறிந்தபடியால், கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பார்த்தபடியால், "கர்த்தரையல்லாமல் தேவன் யார்" என்று தெளிவாய் தன்  அனுபவ சாட்சியின் மூலமாய் அறிவித்திருக்கிறார். கர்த்தரே தேவனென்று தாவீது அறிவிப்பதற்கு காரணங்கள் என்னவென்பதை தியானிப்போம்.

  1. நம்மை கர்த்தர் பெலப்படுத்துகிறவர்

"என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே". சங்கீதம் 18:32

தாவீது தன் சத்துருக்களுக்கு முன்பாக கலங்கி தவித்துக் கொண்டிருந்த வேளையில் அவனது ஆவி, ஆத்துமா, சரீரத்தில் கர்த்தர் தமது பெலனைக் கொடுத்து அவனைத் தைரியப்படுத்தினார். இன்று அநேகர் தங்கள் பெலவீனத்தினிமித்தமாய் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவதை நாம் அறிவோம்.

இன்று அருமையான சகோதரனே/சகோதரியே, உன் பெலவீனமடைந்த சரீரத்தினால் நீ சோர்ந்து உள்ளம் உடைந்து, ஏன் இந்த வாழ்க்கை என்று கசந்து கண்ணீர் சிந்துகிறாயா?  ' நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்குச் சகாயம் பண்ணுவேன்…' என்று சொன்ன கர்த்தர் உன் பெலவீனமடைந்த சரீரத்தைப் பெலப்படுத்தக்கூடிய வல்லமை உடையவர். என் வீட்டு வேலையைச் செய்யமுடிய வில்லையே என்று சோர்ந்த சகோதரியே, உன் பெலவீனத்தில் கர்த்தரின் பெலன் பூரணமாக விளங்கும். என்னால் ஒன்றும் செய்ய இயலாது இருக்கிறேனே என்று கலங்கும் சகோதரனே, 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.' பிலிப்பியர் 4:13 ன் படி நீ சொல்லப்போகிறாய்.

பெலன் என்றதும் நமது சரீர பெலனைக் குறித்து நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து முயற்சிப்போம். பெலன் என்பது நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இம்மூன்றிலும் உள்ள வலிமையைக் குறிக்கிறது. கர்த்தருடைய வேதம் திட்டமாக தெரிவிக்கிறது. 'கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.' ஏசாயா 40:31 ன் படி கர்த்தருடைய சமுகத்திலே காத்திருக்கும்போது, உன் சரீரத்தில் புதுபெலன் அடைகிறாய். இந்த சரீரம் புதுபெலன் அடைய பல விட்டமின் மாத்திரைகள், பல டானிக்குகள் சாப்பிடுகிறோம். சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிடுகிறோம். இவை எல்லாவற்றையும் விட தேவ சமுகத்தில் காத்திருப்போம் என்று சொன்னால், நீ பெலனடைவாய். அநேக நேரத்தில் தேவ சமுகத்தில் காத்திருப்பதற்கு இடம் கொடுப்பது கிடையாது.  என்னைப் பெலத்தால் இடைக்கட்டுகிற தேவன் என்ற வாக்கு உங்களில் நிறைவேற வேண்டுமானால் நீ தேவ சமுகத்திலே காத்திருக்கவேண்டும்.

ஒரு ஊழியக்காரரை நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையுடைய ஒரு சகோதரர். 'நான் இரட்சிக்கப்பட்டது சற்று வயதான காலம். முன் கழித்த ஆண்டுகளுக்குத் தக்கதாக என் ஊழியம் நடத்தப்படவேண்டும்' என்று இரவும், பகலும் ஒவ்வொரு நாளும் ஊழியங்களைச் செய்கிறவர். ஊழியத்திற்கு போகும்போது, அநேக நாட்கள் உபவாசித்து ஜெபிப்பார். ஆனால் அவருடைய சரீரம் எப்பொழுதும் பெல முள்ளதாய்க் காணப்பட்டது. காரணம் தேவ சமுகத்தில் காத்திருந்த காரியம். அவர் ஜெப வேளையில் 'கர்த்தாவே, இதோ உம்முடைய அடியான், நான் என்ன செய்வது என்ற கட்டளைக்காக காத்திருக்கிறேன், என்  தவறுகளை மன்னியும், உமது வேலைக்காரனை இன்று வழிநடத்தும்.' என்று ஜெபிப்பாராம். கர்த்தர் அழைத்ததான பணிக்கு அவரைப் பெலப்படுத்தி, ஞானத்தினாலும், சுகத்தினாலும், நிறைந்து ஆயத்தப்படுத்துகிறார் என்று அறிவேன்.

இன்று சோர்ந்து போன சரீரத்தோடு காணப்படுகிற சகோதரனே, சத்துவம் தருகிற கர்த்தர் உன்னைப் பெலப்படுத்தி அனுதினமும் காத்துக்கொள்வார். சரீரத்தில் பெலன் மாத்திரமல்ல, இன்றைக்கு நம்முடைய ஆவியிலும் பெலன் தேவை. ஆவியில் பெலன் இல்லை என்று சொன்னால், நாம் எந்தக் காரியத்தையும் செய்யவே இயலாது. மனவலிமை என்ற ஆவியின் பெலன் உங்களுக்குள் இருக்கும்போது மாத்திரமே, பாவ சோதனைகளை மேற்கொள்ளக் கூடிய வலிமையும் உள்ளவராக நாம் மாற முடியும். பக்தனாகிய யோபு ஆவியில் பெலனடைந்து காணப்பட்டபடியால் இழப்பு, சேதம், நிந்தைகள் வந்தபோதும், என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அந்நியக்கண்களினால் அல்ல, என்னுடைய கண்களினாலே அவரைக் காண்பேன் என்று தன் உபத்திரவத்தின் மத்தியில், பாடுகளின் மத்தியில் கூற முடிந்தது. இந்த மனவலிமை, ஆவியின் பெலன் அவனுக்குள் இருந்தபடியால், அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று நம்பிக்கையின் உறுதி அவனில் காணப்பட்டது. 

நாம் நினைத்த வண்ணமாக காரியங்கள் நடைபெறாமல், தாமதம், சேதங்கள் இவைகள் தோன்றும்போது, ஆவியில் பெலன் இல்லாதபடியால், கர்த்தரை இகழ்ந்தும், குறைத்தும் பேசி முறுமுறுக்கிற மக்களாய் மாறிவிடுகிறோம். அன்பின் சகோதரனே/சகோதரியே, கர்த்தர் நமக்கு நன்மையானதைச் செய்வார். உனக்கு எது தேவையோ அதைத் தருவார். எப்போது தேவையோ, ஏற்ற வேளையில் கட்டளையிடுவார். ஆவியில் பெலன் கொண்டிருப்பாயென்று சொன்னால், இந்த வார்த்தைகளின் படி கர்த்தரை அறிந்தும், புரிந்தும் செயல்படுவாய்.

இந்த ஆவியின் பெலத்தை நமக்குள் பரிசுத்தஆவியானவர் தருகிறார். 'பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும்,பூமியோ பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயயிருப்பீர்கள் என்றார்.' அப்போஸ்தலர் 1:8 ன் படி பரிசுத்த ஆவியானவர் சோர்வடைந்த நமது ஆவிக்கு தேவனுடைய அன்பின் வார்த்தைகளை, வல்லமையான செயல்களை, வாக்குத்தத்தங்களை நினைப்பூட்டி நம்மைத் தேற்றி, பெலப்படுத்துகிறவராயிருகிறார். பாவ சோதனைகள் நம்மை நெருக்குகையில் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை உணர்த்தி, பாவத்திற்கு விலகிச் செல்ல மனவலிமையைத் தந்து சோதனைகளை ஜெயிக்கக்கூடிய ஆவியின் பெலத்தைத் தருகிறார். சிலர் அநேக காரியங்களைச் செய்வதற்கு தீர்மானம் செய்வார்கள். அவைகளைத் தங்கள் வாழ்க்கையிலே கடைபிடிக்கவும், அனுசரிக்கவும், நிறைவேற்றவும் முழுமனதாய் காணப்படுவார்கள். ஆனால் சோர்வுகள், சோதனைகள் வரும்போது, ஆவியில் பெலனில்லாதபடியினால், இந்த ஒரு முறைதானே என்று சோர்ந்து விடுகிறார்கள். ஆவியில் பெலன் இருக்கும்போது மாத்திரமே, முன்பு நாம் விட்டு விலகின பாவங்களைச் செய்யாது, அதைச் செய்கிறவர்களைத் தவறு என்று கண்டித்து உணர்த்துவோம். 'நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பெலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.' மீகா 3:8 ன் படி மீறுதல்களை, பாவங்களை ஆவியில் பெலன் இருந்தபடியினால் அறிவிக்க முடிந்தது என்று தீர்க்கதரிசியான மீகா உரைக்கிறார்.

இன்று அநேக நேரங்களில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் செய்கிற பாவங்களையும், மீறுதல்களையும் சொல்வதற்கு ஊழியர்களுக்கு மனவலிமை இல்லாதபடியால், மனம் திருந்தாதபடி அநேக ஆத்துமாக்கள் அழிகின்றன.

ஒருமுறை ஒரு குடும்பத்தார் ஜெபிக்கவந்தபோது, அந்தச் சகோதரி தன் பிள்ளைகளையும், கணவரையும் கொன்றுவிட்டு, தானும் மாய்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள் என்ற இந்தக் காரியத்தைக் கர்த்தர் வெளிப்படுத்தினார். அந்தச் சகோதரியின் முகத்தைப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட கொடூர செய்கையை இவர்கள் செய்யமாட்டார்கள் என்று தோன்றியது. தேவன் அருளிய ஆவியின் பெலத்தால் அந்த மகளைப் பார்த்து, அக்குடும்பத்தார் மத்தியில் அவளுடைய திட்டத்தை அறிவித்தேன். அந்த மகள் ஆம் என்று குடும்பத்தாரின் அதிர்ச்சியின் மத்தியில் மனம் கசந்து அழுதாள். கர்த்தரை நோக்கி மன்றாடினாள். இந்த ஆவியின் பெலத்தை பரிசுத்த ஆவியானவர், நமக்குக் கொடுக்கிறார்.

நம்முடைய ஆத்துமாவிலும், ஆவியில் பெலன் தேவை. நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படும்போது, 'நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்' சங்கீதம் 138: 3 ன் படி நாம் ஆத்துமாவிலே பெலனடைந்து தைரியமாய் வாழ உதவி செய்வார். இந்த ஆத்துமாவில் பெலன் வரும்போது மாத்திரமே நாம் தைரியமாய் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்களாய் மாறுவோம். இது நமக்கு ஜெபத்தின் மூலமாய் கிடைக்கிறது. ஆகவேதான் 'உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.' சங்கீதம் 84:5 ல் தாவீது கூறியிருக்கிறார். 

இவ்விதமாய் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பெலனடைந்து வாழும்போது மாத்திரமே அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து பலத்தின் மேல் பலனடைந்து, சீயோனுக்கு வந்து காணப்படமுடியும்.

ஆகவே இந்த ஆவி, ஆத்துமா, சரீர பெலத்தை நமக்கு மெய்யாய்த் தருகிறவர் கர்த்தரே என்று அறிந்து, உணர்ந்து கர்த்தரே தேவன் என்று தாவீது சாட்சியிடுகிறார். 

2. நம்மை செவ்வைப்படுத்துகிறவர் கர்த்தர்

“...என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே." சங்கீதம் 18:32

நமக்கு முன்பாக ஜீவவழி, மரணவழி என்று இரண்டு வழிகள் உள்ளன. '...இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' எரேமியா 21:8 ல் பார்க்கிறோம். நாம் எந்த வழியில் நடப்பது என்று தெரிந்து கொள்வதற்கு தேவன் நமக்கு சுதந்தரத்தைக் கொடுத்திருக்கிறார். கேட்டுக்குப் போகும் வலி விசாலமானது. ஆனால் ஜீவ வழியோ இடுக்கமும், நெருக்கமுமானது. நானே வழி, சத்தியம் ஜீவன் என்று சொன்ன இயேசுவின் வழி மெய்யான ஒரே ஜீவவழியாக நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இவ்வழியாக செல்வதற்குப் பல பிரச்சனைகள் எழும்பும். ஆனால் நாம் கர்த்தரை முன் வைத்து காரியங்களைச் செய்யும்போது, நம் வழிகளில் உள்ள தடைகளை நீக்கி நம் வழிகளைச் செவ்வைப்படுத்துகிறார்.

இன்று நீ எனக்குத் திருமணம் தடையாயிருக்கிறது; நிரந்தர வேலை கிடைக்க தடை உள்ளது; நான் வீட்டைக்கட்டுவதற்கு, முடிப்பதற்கு தடை உள்ளது; நான் வெளிநாடு செல்வதற்கு தடை உள்ளது; நான் பெற்றுக்கொள்ளவேண்டிய காரியங்களுக்குத் தடை உள்ளது என்று கலங்கும் சகோதரனே, உன் வாழ்வில் கர்த்தரை முன் வைத்து பார். கர்த்தருக்கே முதலிடம் கொடு. அவர் சொல்ல ஆகும் என்ற வாக்கின்படி இன்றே உன் தடைகள் நீங்கும். நீ சுகசெய்தியை அடைவதோடு மகிழ்ந்து களிகூரச் செய்வார். கர்த்தர் உன் தடைகளை நீக்கி, உன் வழியைச் செவ்வைப்படுத்துவார். சில வேளையிலே உன் காரியங்கள் கூடி வந்திருப்பது போல் இருந்தாலும், சில கோணலான காரியங்கள் தோன்றும். ஆனால் கோணலானவைகளைச் செவ்வையாக்குகிற தேவன் உனக்கு முன் சென்று கோணலைச் சரிசெய்வார்.

உன் வழக்கிலோ, உன் வேலையிலோ, உன் பிள்ளையின் காரியத்திலோ கோணலான காரியங்கள் உண்டா? கலங்கவேண்டாம். இன்று கர்த்தர் கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறார்.' நான் உனக்கு முன்னே போய்,கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.' ஏசாயா 45:2 ன் படி அவர் கோணலானவைகளைச் சரி செய்து வழியைச் செவ்வையாக்குவார். 'அக்கினி அவருக்கு முன் சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது' சங்கீதம் 97:3 ன் படி உன் வழியிலுள்ள சத்துருக்களை நிர்முலமாக்கி உன் வழியைச் செவ்வைப்படுத்துவார்.

ஒருமுறை ஒரு வங்கி அதிகாரி சில குற்றச் சாட்டுகளினால் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஒரு பெண் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த சகோதரி இயேசுவை அறியாதவள். அவருடைய உள்ளத்தில் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட அந்த வங்கி அதிகாரியை வேலையிலிருந்து முற்றிலும் அகற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு, அவ்வழக்கை நடத்தினார்கள். கர்த்தர் சத்துருக்களை அகற்றி, அழித்து, நம் வழியைச் செவ்வைப்படுத்துகிற தேவன். அச்சகோதரன் ஜெபிக்க வந்தார். கண்ணீரோடும் உடைந்த உள்ளத்தோடும் என் வாழ்வு அவ்வளவுதான் என்று கலங்கிய சகோதரன், கர்த்தரின் பாதத்தில் தன்னைத் தாழ்த்தி, எனக்கு யார் உதவி செய்வார்கள்? என்னை விடுவிப்பார்கள்? நான் குற்றமற்றவனாயிருக்கிறேனே, என்னைப் புரிந்துகொள்வதற்கு ஒருவரும் இல்லையே என்று புலம்பிக் கதறினார். ஜெபத்தைக் கேட்கிற கர்த்தர், அங்கலாய்க்கும் உள்ளத்தின் வேதனைகளை அறிந்த கர்த்தர், அந்த மகனுக்காக யுத்தம் செய்ய ஆரம்பித்தார். சத்துருவைப்போல செயல்பட்ட அந்தப் பெண் அதிகாரியின் வாழ்க்கையில் ஒரு பேரதிரடி போன்ற சம்பவம் நடந்தது. எந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த வங்கி அதிகாரியை நீக்க வேண்டும் என்று முயற்சித்தார்களோ  அதைப் போன்ற ஒரு குற்றச்சாட்டுக் காரியம் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்ட காரியம் திடீரென்று அவர்களுக்கு விரோதமான வழக்காக மாறியது.

அவர்கள் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு வழக்காடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்" என்று சொன்ன கர்த்தர் "உன் சத்துருக்கள் ஏழு வழியாய் ஓடி போவார்கள்" என்று சொன்ன வாக்கின்படி சத்துருவைப்போல செயல்பட்ட அந்த அதிகாரியை அகற்றினார். அவர்களது ஸ்தானத்தில் வேறு ஒரு உயர் அதிகாரி வந்தார். இதைப்போல குற்றச்சாட்டுகளை தனது முன்னால் பணியில் அனுபவித்த அவர் அந்த வழக்கை தள்ளிவிடும்படி பரிந்துரை பேசினார். அது நிறைவேற்றப்பட்டு, அந்த வங்கி அதிகாரி மீண்டும் பணியில் சேர்ந்தார்.

அருமை சகோதரனே, உன் பகைஞர் பெலசாலிகள், செல்வந்தர்கள், எல்லாம் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்று பயப்படாதே, அவர்களைக் காட்டிலும் உன்னோடிருக்கிறவர் பெரியவர், அவர் உனக்காக யுத்தம் செய்து கோலியாத்தைப் போல உன் சத்துருவை அகற்றி, உன் வழியைச் செவ்வைப்படுத்தி, உன்னை வெற்றியின் பாதையில் நடத்துவார். கலங்காதே. உன் வழிகளைச் செவ்வைப் படுத்துகிறவர் கர்த்தரே. 

3. நம்முடைய கால்களை மான்களின் கால்கள் போலாக்குகிறவர் கர்த்தர்

"அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்." சங்கீதம் 18:33

என்று தாவீது தன்னை பெலப்படுத்தி, தன் வழிகளை செவ்வைப்படுத்தின கர்த்தரை அறிக்கை செய்கிறான். நம்முடைய ஓட்டத்தில், சோர்ந்து போன நம்முடைய கால்களை நேர்த்தியாயும், சிறப்பாயும், சீராயும் நமக்கு நியமித்த பாதையிலே ஓடுவதற்கு ஏற்றதாய் மாற்றுகிறவர் நம்முடைய கர்த்தர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டபோது முதலாவது அற்புதத்தைக் கானா ஊரிலே ஒரு திருமணத்தில் செய்தார். சாதாரண தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார். அவருக்குள் மாற்றக்கூடிய வல்லமை இருந்தது.

ஏன்? அவர் கர்த்தர். நம் வேதனைகளை மாற்றக்கூடியவர். துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறவர். உன் உடைந்த உள்ளத்தை சிறப்பான வாழ்க்கைக்குள்ளாக கட்டுகிறவர். உன் கண்ணீரின் வாழ்வை மகிழ்ச்சியினால் நிறைத்து ஆசீர்வதிக்கிறவர். உன் வனாந்திர வாழ்வினை செழிப்பாக்குகிற தேவன், உன் தோல்வி அடைந்த வாழ்வை வெற்றியுள்ளதாக மாற்றுகிறவர். இவ்விதமாக மாற்றக்கூடிய வல்லமை கர்த்தராகிய இயேசுவிற்கே உண்டு என்பதை அறிந்தால் அவரே கர்த்தர் என்று அறிக்கை செய்யமுடியும்.

ஐயோ என் மகன், மகள் எனக்கு முள்ளாக இருக்கிறானே இருக்கிறாளே என்று கலங்குகிற தாயே, தகப்பனே, நீ கலங்காதே, ராஜாக்களின் இருதயங்களை நீர்க்கால்களைப் திருப்ப வல்லமையுடைய தேவன், உன் பிள்ளைகளின் பாவத்தை, பாவ பழக்கத்தை மாற்ற வல்லமையுடையவர் கர்த்தர் என்பதால் கலங்காதே.

பேதுரு கடலில் மீன் பிடிக்காதபடி தோல்வி அடைந்தவனாக காணப்பட்ட வேளையில், இயேசு அவன் படகில் ஏறினார். வழிநடத்தினார். வெற்றியைக் கண்டான். அவன் தோல்வி வெற்றியாக மாறினது. இதைப்போல் உன் கையின் பிரயாசத்தில் தோல்வியா, உன் தொழில் நஷ்டமா, சேதமா, போராட்டமா, இன்று கர்த்தரே தேவன் என்று ஏற்றுக்கொள். அறிக்கைசெய். அவரைப்பற்றி சார்ந்துகொள்ள உன்னை ஒப்புக்கொடு. உன் தோல்வி வெற்றியாக மாறும். சந்தோஷமும், சமாதானமும் கடந்து வரும்.

4. நம்மை உயர்த்துகிறவர் கர்த்தர்

"அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர் தலங்களில் என்னை நிறுத்துகிறார்." சங்கீதம் 18:33

இன்று பெலப்படுத்துகிற தேவன், வழிகளை செவ்வைப்படுத்துகிற தேவன், கஷ்டங்களை மாற்றுகிறவர் நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார்.

வாலிபப்பிராயத்தில் இருந்து என்னோடு பழகின ஒருவரை நான் அறிவேன். உன்னத, உயர்ந்த, ஞானமுடையவர். அவனுக்கு தேவன் கொடுத்துள்ள ஞானத்தை எல்லாரும் காணக்கூடியதாக இருந்தது. நன்றாக பாடக்கூடிய தாலந்துடையவர். எல்லாவற்றையும் அமைதியோடு சகித்துக்கொள்ளக்கூடிய பண்புடையவர். கல்லூரி படிப்புகளிலும், பள்ளி படிப்புகளிலும் முதல் மாணவனாக வந்தவர். ஆனால் அவனது வாழ்க்கையில் அவனுக்குரிய உயர்வை அவன் அடையவில்லை. அதனால் பலவித சோர்வுகளை அடைந்தான். சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் இருப்பதைப்போல காணப்பட்டாலும், அவனது ஞானத்திற்கேற்ற அந்த உயர்வை அவன் பெறவில்லை. 

இன்று அருமையான சகோதரனே, நமக்கு எல்லாம் இருந்தாலும் உயர்ந்து விடுவோம் என்று எண்ணுகிற அநேகர் மாற்றமும் துயரமும் அடைந்து விடுகின்றனர்.  தாவீது ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்தான். தன் தகப்பன் ஆட்டை கரிசனையோடு, உண்மையோடு, மிகுந்த ஆர்வத்தோடு, உற்சாகத்தோடு மேய்த்து வந்தான். தன் தகப்பனாருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறையாது செய்தவனாக காணப்பட்டான். ஆனால் ஒரு நாளிலே தாவீதின் தகப்பனாகிய ஈசாயும், அவன் குமாரரும் சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலமாக பலி விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். இந்த பலி விருந்திற்கு உன்னுடைய எல்லா பிள்ளைகளையும் அழைத்து வா, என்று சாமுவேல் சொன்னதை தாவீதீன் தகப்பனாகிய ஈசாய் மறந்துவிட்டான். 

தன் தகப்பனால் மறக்கப்பட்ட தாவீது, மற்றவர்களுக்கு மத்தியிலே அற்பமாய் எண்ணப்பட்ட தாவீது, கர்த்தருக்குள் மேன்மையாக காணப்பட்டான். ஒரு பெரிய தேசத்துக்கு இராஜாவாக உயர்த்தப்பட்டான். ஆடுகளின் பின்னே உண்மையாக ஓடின அவனை கர்த்தர் உயர்த்தினார். மறக்கப்பட்ட மக்களுக்கு மத்தியிலே துச்சமாய் எண்ணினவர்களுக்கு மத்தியிலே அவன் உயர்த்தப்பட்டான்.

நம்முடைய தேவன் நம்மை உயர்த்துவார். எல்லாரும் கைவிட்டுவிட்டார்கள் என்று கலங்காதே. நான் உண்மையாக உழைத்த உழைப்பை என் அதிகாரிகள், என் வீட்டார், திருச்சபையினர் அங்கீகரிக்கவில்லை, என்று கலங்காதே. உன்னை எல்லா நிலையிலும் உயர்த்துகிற தேவன் வேண்டாம் என்று ஒதுக்கின கல்லை மூளைக்கல்லாக மாற்றின தேவன் இன்றைக்கு உன் ஆவிக்குரிய வாழ்க்கையில், சமுதாய, பொருளாதார வாழ்க்கையில் உயர்வை தரக்கூடியவர். மறவாதே. இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை தந்து உன்னை உயர்த்தவேண்டுமென்று விரும்பின கர்த்தர் இன்றைக்கு ஜீவிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வானத்துக்கும், பூமிக்கும் நடுவாக உயர்த்தப்பட்டார். நம்மை உயர்த்தவேண்டும் என்று சொல்லி சிலுவை மரத்திலே உனக்காக பலியாக உயர்த்தப்பட்டார். இன்று வரை உன் வாழ்க்கையில் மீட்பராய், மேய்ப்பராய், அவரே எல்லாம் என்று ஏற்றுக்கொள்வாயானால் உன்னை பெலப்படுத்தி, உன் வழிகளை செவ்வைப்படுத்தி உன் எல்லா காரியங்களையும் மாற்றி உயர்வும் சிறப்பும் அடையச்செய்வார். இவைகளைப் பெற்றுக்கொள்ள இன்று இயேசுவண்டை வருவாயா? அவரே தேவன் என்று ஏற்றுக்கொள்வாயா?

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

%