"நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்..."

ஏசாயா 54:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன். புத்தாண்டின் வாழ்த்துதலை தெரிவிக்கிறேன்.

இன்று மனிதருடைய வாழ்க்கையிலே எல்லாவற்றிலும் பெருகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வியாபாரம், செல்வம், தொழில், எல்லைகள் பெருக வேண்டும், நிறைந்திருக்க வேண்டும், ஆசீர்வாதத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறான். வேதத்தில் 1 நாளாகமம் 4:10ல் யாபேஸ் என்று சொல்லப்பட்டவன், "...தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்." அவன் வேண்டிக் கொண்டதை கர்த்தர் அருளிச் செய்து அவன் எல்லைகளைப் பெருகச் செய்தார். இவ்வாறு பெருகச் செய்கிற தேவன், நேற்றும் இன்றும் என்றும் மாறாத்தவராயிருக்கிறார்.

வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய் என்று சொன்ன தேவன், உன்னையும் அவ்வாறே ஆசீர்வதிக்கின்ற தேவனாய் இருக்கிறார்.

எவைகளில் நாம் பெருக வேண்டும்?

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையிலே பெருக்கவேண்டிய காரியங்கள் நிறைவாய் உண்டு. ஆவிக்குரிய வாழ்வில் பெருக வேண்டும், சரீரப் பிரகாரமான காரியங்களில் பெருக வேண்டும், ஆன்மீக வாழ்வில் தாலந்துகளுடன் பெருக வேண்டும் என்ற விருப்பமும் ஏக்கமும் தாகமும் நமக்கு உண்டு. இந்த காரியங்களை நமக்குள் பெருகச் செய்கிற அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியைக் கொண்டு நம் ஏக்கங்களை நிறைவேற்றுகிறவராய் இருக்கிறார். இதில் நாம் பெருகும்போது, மெய்யான சமாதானத்தையும், சம்பூரண சந்தோஷத்தையும் கிறிஸ்துவுக்குள் சுதந்தரித்துக் கொள்கிறோம். நாம் பெருக வேண்டிய காரியங்கள் சிலவற்றைக் காண்போம்.

1. விசுவாசம் பெருக வேண்டும்.

"சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்தரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும்..." 2தெசலோனிக்கேயர் 1:3

விசுவாசமானது கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையிலே மிகவும் அதிகமாயும், அவசியமாயும் இருக்கின்றது. நாம் விசுவாசிக்கின்ற அந்த ஆசீர்வாதமான செயல் தேவனை பிரியப்படுத்தக்கூடியது. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசமானது நமக்குள் பெருகும்போது, தேவன் அருளிய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரிக்க உதவுகிறது.

ஆபிரகாமைப் போல நாம் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்ற வாக்குறுதியை அவன் அவிசுவாசியாய் சந்தேகப்படாமல் விசுவாசித்தான், அற்புதமான ஆசீர்வாதத்தை அடைந்தான். நாம் எந்த அளவுக்கு கர்த்தரையும் அவரின் ஜீவ வார்த்தைகளையும் உறுதியான உள்ளத்தோடு விசுவாசிக்கின்றோமோ, அந்த அளவிற்கு கர்த்தரின் வல்லமையான செயல்கள் நமக்குள், நம்முடைய வாழ்வில் நிறைவேறுவதைக் காணமுடியும். நம் விசுவாசம் பெருகும்போது, நம் விருப்பத்தின்படியே காரியங்களைக் கர்த்தர் கட்டளையிடுவார். நாம் விசுவாசத்தால் தேவ மகிமையைக் காணமுடியும்.

அ) விசுவாசம் விடுதலையை உண்டாக்கும்

"இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்." மத்தேயு 15:28

விடுதலையானது மனிதனுக்கு அவசியமாயிருக்கிறது. விடுதலை இல்லாததால் மனிதன் சமாதானம், சநதோஷம் இல்லாதபடி கவலை நிறைந்தவனாய் வாழ்கிறான். இந்த விடுதலையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இலவசமாக நமக்குத் தருகிறார். இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே நம் வாழ்வில் விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று யோவான் 8:16ல் பார்க்கிறோம். கானானிய ஸ்திரீயின் பெரிதான விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து அவள் மகள் விடுதலையைப் பெற்றுக் கொண்டது போல, விசுவாசம் பெருகும்போது நம் வாழ்வில் விடுதலையைப் பெற்றுக் கொள்கிறோம்.

ஆ) விசுவாசம் நம்மை இரட்சிக்கிறது

"அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்." மாற்கு 5:34

பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும்பாடுள்ள ஒரு சகோதரி, தன் செல்வத்தையெல்லாம் வைத்தியத்திற்குச் செலவழித்து, சற்றும் சுகமடையாத நேரத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்பட்டாள். உடனே ஒரு தீர்மானம் செய்தாள். நான் அவருக்குப் பின்சென்று, அவர் வஸ்திரத்தைத் தொட்ட மகளைப் பார்த்து வேதனை நீங்கி சுகமாயிரு என்றார். விசுவாசத்தினால் பெரிய இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டாள்.

நம்முடைய விசுவாசம் பெருகும்போது, வேதனை நீங்கிய சுகவாழ்வையும், இரட்சிப்பையும் பெற்றுக் கொள்கிறோம்.

2. கிருபையில் பெருக வேண்டும்

"தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள் நிமித்தம் உண்டாயிருக்கிறது." 2 கொரிந்தியர் 4:15

 கிருபையானது நமக்கு அருளப்படும்போது மாத்திரமே நாம் காக்கப்படுகிறோம். கர்த்தர் தமது அளவற்ற கிருபையினால் நம்மைத் தாங்கி நடத்துகிறார். கிருபை என்றாலே தேவன் நமக்குப் பாராட்டுகிறன்ற தயவு அல்லது இரக்கம் ஆகும். தகுதியற்ற நம்முடைய வாழ்க்கையிலே பல நேரங்களில் இந்தக் கிருபையை நாம் உணர முடிகிறது. நாம் துதிக்கும்போது தேவகிருபை நம்மில் அதிகமதிகமாய் பெருகுகின்றது.

) கிருபையினாலே நிர்மூலமாகாத்திருக்கிறோம்

"நாம் நிர்மூலமாகாத்திருக்கிறது கர்த்தருடைய கிருபையே..." புலம்பல் 3:22

தமது மிகுந்த கிருபையின்படி இரங்கும் கர்த்தர், நமது வாழ்விலே ஒவ்வொரு நாளும் கிருபையைப் புதிதாக்கி நம்மைத் தாங்கி நடத்துகிறவராய் இருக்கிறார். கர்த்தரின் கிருபை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் நமக்கு அருளப்படுவதால் நாம் சேதமடையாது, வேதனையடையாது, சகல சஞ்சலங்களுக்கும் பாடுகளுக்கும் தப்பித்துக் கொள்ளுகிறோம்.

கர்த்தருடைய சமுகத்தில் நாம் ஒன்றுமில்லை என்று நம்மைத் தாழ்த்தும்போது, அவர் கிருபை தருகின்றவராய் இருக்கிறார். (யாக். 4:6). இந்தக் கிருபையைப் பெறுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். கிருபையின் தேவன் தமது மாறாத கிருபையைத் தந்து நீங்கள் எந்தக்காரியத்திலேயும் பயப்படாதபடி கலங்காதபடி கண்மனி போல காத்துக்கொள்வார். ஒருவேளை அது உங்கள் தொழில் பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் பணப்பிரச்சனையாக இருக்கலாம். பிள்ளைகளின் கசந்த காரியமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கர்த்தர் தமது அளவற்ற கிருபையினாலே அக்காரியங்களைக் களிப்பாக மாறச்செய்வார். அந்தக் கிருபையில் பெருக நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும் என்ற சங். 32:10ன்படி கர்த்தரை நம்பி வாழும்போது, கர்த்தரின் கிருபையால் நாம் நிர்மூலமாகாது காக்கப்படுவோம்.

ஆ) கிருபையினாலே தாங்கப்படுகிறோம்

'என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.' சங்கீதம் 94:18

நமது நெருக்கங்களில், பாடுகளின் நேரத்தில் கர்த்தரின் கிருபை நம்மைத் தாங்குகிறது. இந்தக் கிருபை நம் வாழ்க்கையின் பாதையில் நாம் சேதமடையாது நம்மைத் தாங்கிச் செல்லுகிறது. ஒருமுறை இரவு நேர பயணத்தில் எங்களுடைய கார் சாலையின் ஓரப்பகுதியில் அதிகமாய்ச் சென்றது. ஏன் இப்படி ஓட்டுகிறாய் என்று அந்தக் காரை ஓட்டிய சகோதரனைக் கேட்டேன். சரியான பதில் தரவில்லை. சுமார் 200 கி.மீ பயணம் முடிந்தது. அதை ஓட்டிய சகோதரன், நான் அவ்வாறு காரை ஓட்டியதற்கு காரணம் உண்டு. காரில் உள்ள பிரேக் வேலை செய்யவில்லை என்றார். ஆம், கர்த்தரின் கிருபை நம்மை அனுதினமும் நாம் செய்கின்ற காரியங்களில் நேர்த்தியாய்த் தாங்கி நம்மைக் காக்கின்றது.

'என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்...' என்ற சங். 23:6ன் படி நம் வாழ்வில் என்றும் கர்த்தரை மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு அவரையே பின்செல்ல இன்று முதல் தீர்மானித்து செயல்படுவோம்.

3. சந்ததியைப் பெருகச் செய்கிற தேவன்

"நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து , உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்..." ஆதியாகமம் 22:17

குழந்தையே இல்லாத ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். ஆபிரகாமுக்கு 75 வயதானபோது, கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, உன்னைப் பெருகப்பண்ணுவேன் என்று அருளிய வாக்குத்தத்தம் அவனது 100-வது வயதில் நிறைவேறியது.

அ) பொருத்தனையின் ஜெபம்

"...உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்... பொருத்தனைப்பண்ணினாள்." 1 சாமுவேல் 1:11

அன்னாள், குழந்தையில்லாக் குறைவினால் நிந்தைக்கும் அவனமானத்துக்கும் ஆளானாள். அவள் கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்து பொருத்தனையோடு ஜெபித்தாள். கர்த்தர் அவள் பொருத்தனையின் ஜெபத்தைக் கேட்டு அவள் நிந்தையை நீக்கி அவளுக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்ததுமல்லமால் இன்னும் ஐந்து குழந்தைகளையும் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, இந்த அன்னாளைப் போல உங்கள் வாழ்விலும் குழந்தை இல்லாக் குறைவினால் மற்றவர்களுக்கு மத்தியிலே அற்பமாக எண்ணப்பட்டு, சோர்ந்து உள்ளம் உடைந்து காணப்படலாம். பரியாசத்திற்கும் நிந்தைக்கும் ஆளாகலாம். இந்த அன்னாளைப் போல பொருத்தனையோடு நீங்கள் ஜெபிக்கும்போது, கர்த்தர் உங்கள் நிந்தையை நீக்கி உங்களை மகிழ்ச்சியினால் இடைகட்டி ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.

ஆ) கர்த்தரால் நினைக்கப்பட வேண்டும்

"தேவன் ராகேலை நினைத்தருளினார்..." ஆதியாகமம் 30:22

பலுகிப் பெருக வேண்டும் என்ற கர்த்தரின் ஆசீர்வாதம் நமக்குள் நிறைவேற கர்த்தரால் நாம் நினைக்கப்பட வேண்டும்.  'கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்' என்று சங். 115:12ல் பார்க்கிறோம். குழந்தையில்லாத சிறுமையின் பாதையில் சென்ற ராகேலை தேவன் நினைத்தருளினதால் அவள் இரட்டிப்பான நன்மையைப் பெற்றுக்கொண்டாள்.

அருமை சகோதரனே, சகோதரியே, கர்த்தர் நம்மை நினைக்கும் போது, நமது ஜெபங்களைக் கேட்கிறவராய் இருக்கிறார். ஒருமுறை இரவுவேளையில் அருகில் உள்ள ஊருக்குச் செல்ல கர்த்தர் வழி நடத்தினார். அங்கு எனக்கு அறிமுகமான ஒரு சகோதரர் வீட்டிற்குச் சென்றேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை ஏற்று உபசரித்தனர். கர்த்தர் எதற்காக இந்த ஊருக்கு என்னை அனுப்பினார் என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டே ஊரில் என்ன விசேஷம் என்று கேட்டேன். உடனே அந்த சகோதரன், எங்களுக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தார் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததினால், மருத்துவரிடம் சென்றபோது, அந்த சகோதரியின் கர்பப்பையில் கட்டி உள்ளது என்றும், கர்ப்பப்பையை எடுத்துவிடவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதால், அவர்கள்மிகுந்த துக்கத்துடன் இருப்பதாக கூறினார். உடனே கர்த்தருடைய ஆவியானவர் இதற்காகத் தான் அந்த ஊருக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்ததாக உணர்த்தினார். இரவு 12.30 மணிக்கு அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, கணவனும் மனைவியும் துக்கத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் விளக்குகள் எரிந்து  கொண்டிருந்தது. ஏன் வாழ வேண்டும் என்ற முடிவுடன் காணப்பட்டிருந்த அவர்களுக்கு கர்த்தரின் ஆலோசனையை ஆறுதலாகக் கூறிவிட்டு, கர்த்தர் உங்களை நினைத்துதான் என்னை இங்கு அனுப்பினார். நிச்சயம் ஒரு குழந்தையை அடுத்த ஆண்டிற்குள் தருவார் என்று கூறிவந்தேன். கர்த்தர் அந்தக் குடும்பத்தாரை நினைத்தபடியால், ஜெபத்தைக் கேட்டு ஒரு குழந்தையைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, எனக்கு உள்ள குறைவினால், என் கணவனின் குறைவினால் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கலங்காதே. ஜெபத்தைக் கேட்கிற தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். கர்த்தர் நினைக்கத்தக்க நற்பண்புகளுடன் வாழ உன்னை அர்ப்பணி. கர்த்தர் நம்மை நினைக்கும் போது, நமது ஜெபத்தைக் கேட்பார், தடைகளை நீக்குவார். குறைவுகளை நிறைவாக்கி நமது கண்ணீரை களிப்பாக மாறப்பண்ணுவார்.

4. ஆயுசு நாட்களைப் பெருகச் செய்கிற தேவன்

"என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்." நீதிமொழிகள் 9:11

மனிதன் மரண பயத்தினால் மிகவும் கலங்கி துக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வியாதிகள் வேதனைகள் வரும்முன் பயப்படுகிறான். கலங்கிப் பாதிப்படைகிறான். ஆகவே தான் இயேசு கிறிஸ்து 'நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்' என்று யோவான் 10:10ல் கூறியுள்ளார். அக்கிரமத்தால், பாவத்தால் மரித்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் (எபே. 2:1) என்ற வார்த்தையின்படி கர்த்தர் நம்மை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

கர்த்தர் நமது ஆயுசு நாட்களைப் பெருகச் செய்கிறதினால் கர்த்தருடன் ஜீவிக்கவும், அவர் அன்பில் செயல்படவும் உதவுகிறது. 

அ) கண்ணீரின் ஜெபம்

"உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்" ஏசாயா 38:5

எசேக்கியா இராஜா வியாதிப்பட்டு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தர் சொன்ன வார்த்தையின் நிமித்தமாய் மரணம் ஏற்படப்போகிறதே என்று மிகவும் கதறி அழுகிறதைப் பார்க்கிறோம். அவன் கர்த்தரை நோக்கி கண்ணீரோடு ஜெபம் பண்ணினான். கர்த்தர் எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவன் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். கண்ணீரின் ஜெபமானது கர்த்தரிடத்திலிருந்து பதிலைக் கொண்டுவரும்.

ஏன் அழுகிறாய் என்று கேட்ட இயேசு கிறிஸ்து, உன் குறைவுகளை மாற்றி உன் வேதனைகளை நீக்கி உன் தாகத்தைத் தீர்த்து, உன் கண்ணீரைத் துடைக்க விருப்பமுள்ளவராய் இருக்கிறார்." '...இனி நீ அழுது கொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்' என்ற ஏசாயா 30:19ன் படி அவர் உன் கண்ணீரின் ஜெபத்திற்கு மறுஉத்தரவு அருளி, உன் வேதனைகளை மாற்றுவார்.

ஆ) உன்னதமானவரின் மறைவில் இருக்கும்போது

"...நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்" சங்கீதம் 91:16

உன்னதமானவரின் மறைவில் இருக்கும்போது, கர்த்தர் நம்மை நீடித்த நாட்களால் திருப்தியாக்குகிறார் என்று சங்கீதம் 91ல் பார்க்கிறோம். என் ஜீவன் இவ்வளவுதான், நான் மரித்துப் போவேன் என்று கலங்குகிற உன் வாழ்வில் இயேசு கிறிஸ்து அற்புதமாய் உன்னைக் குணமாக்கி புதுவாழ்வைத் தர விரும்புகிறார். அவர் சகல வியாதியின் மேலும் வெற்றி சிறந்தவர். இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய செட்டைகளின் நிழலிலே வரும்போது, நம்மை நீடித்த நாட்களால் திருப்தியாக்குகிற தேவனாயிருக்கிறார்.  

5. அன்பிலே பெறுக வேண்டும்

"...சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமதிகமாய் பெருகவும்" 1 தெசலோனிக்கேயர் 4:10

இன்று அன்பில்லாது வாழ்கிற வாழ்க்கையினால் குடும்பத்தில் சந்தோஷம், சமாதானம், ஐக்கியம் இல்லை. அன்பற்ற  செயல்களினால் மனம் உடைந்து, ஏன் இந்த வாழ்க்கை என்று தங்களையே மாய்த்துக் கொள்கிற மக்கள் ஏராளம். சிறிய காரியங்களும் பெரிய பிரிவினையை உண்டாக்குகிறது. இதையே ஊர்களிலும், தேசங்களிலும் காண முடிகிறது. நாம் கிறிஸ்துவின் அன்பில் பெருகும்போது, வீட்டிலும், ஊரிலும் உன் எல்லைகள் அனைத்திலும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வோம்.

அ) அன்பு பயத்தை நீக்கும்

"பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்" 1 யோவான் 4:18

இவ்வுலக வாழ்வில் பயத்துடன் வாழும் மக்கள் ஏராளம். பயம் தோன்றுவதினால் பல குறைகளும், பல போராட்டங்களும் உண்டாகி விடுகிறது. ' காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்து போகையில் ' என்று மத் 14:30 ல் பார்க்கிறோம். பயமானது கர்த்தரின் வார்த்தையின் வல்லமையை அகற்றிவிட்டது. அத்துடன் பயமானது பிசாசு நம் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு வழியாக இருக்கிறது என்பதை யோபு 4:14, 15 மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. 'ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும்  அப்படியானார்' என்று எபிரேயர் 2:15 ன் படி இந்த பயத்திலிருந்து நம்மை விடுதலை பண்ணும்படிக்கே அவர் தம்மை பலியாக ஓப்புக்கொடுத்தார்.

கிறிஸ்துவின் அன்பு நமக்குள் பெருகும்போது, எவ்விதமான பயத்தை உடையவர்களாய் நாம் இருந்தாலும், அந்த பயமானது எந்த விதத்திலும் வேதனையான உள்ளத்தை, உணர்வை உண்டாக்காது. மெய்யான நம்பிக்கையின் நிச்சயத்தை நமக்குள் உருவாக்கி, எல்லாவிதமான பயத்தையும் அகற்றி, அற்புதத்தை பூரணமாகப் பெற்றுக்கொள்ள உதவிச்செய்யும். 'வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்க கண்டாள்' என்று யோவான் 20:1 ல் பார்க்கிறோம். இருட்டாக இருந்தும் தனியாக கல்லறைக்கு வரத்தக்க தைரியம் அவளுக்கு இருந்தது. அவளுக்குள் பூரண அன்பு இருந்தது என்று பார்க்கிறோம். பூரண அன்பு நமக்குள் இருக்கும்போது எவ்விதமான பயமும், போராட்டமும் நம்மை மேற்கொள்ள முடியாது.

ஆ) அன்பு ஊழியத்தைச் செய்ய வைக்கும்

"கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது." 2 கொரிந்தியார் 5:14

'யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.' யோவான் 21:15

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக, தமக்குப் பின்னாக பணியைத் தொடர்ந்து செய்வதற்கு, ஏற்ற காரியங்களைச் செய்ய சீஷர்களுக்குப் போதித்தார், நடத்தினார். மற்றவர்களின் அன்பைக் காட்டிலும் அதிக அன்பு பேதுருவிடம் உண்டோ என்று அறிவதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார். அவன் கூறிய பதிலினிமித்தம் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்ற முக்கியமான பொறுப்பை அவர் பேதுருவினிடத்தில் கொடுத்ததைப் பார்க்கிறோம்.

நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு இரத்தம் சிந்தின இயேசு கிறிஸ்துவை நாம் எந்த அளவிலே நேசிக்கிறோம்? அன்பு சகோதரனே, சகோதரியே, உங்கள் அன்புக்குத்தக்கதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரங்களையும், தாலந்துகளையும், வல்லமையையும் உங்களுக்குக் கொடுத்து, ஒரு வல்லமையான ஊழியத்தையும், அதிகாரத்தையும், கிருபையையும் கொடுக்க விரும்புகிறார். இந்த நாளிலே பேதுருவைப் பார்க்கக் கேட்ட கேள்வி உங்களுக்கும் எனக்கும் கேட்கப்படுகிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பிலே பெருகி ஊழியங்களைச் செய்ய நம்மை அர்ப்பணிப்போம். ஆசீர்வாதங்களையும் மேன்மைகளையும் அடைவோம்.

இந்நிதமான பெருக்கண்களைக் கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிற தேவன், இடத்தை அருளி வலதுபுறமும் இடதுபுறமும் பெருகச்செய்வார்.

1. நீ போகிற இடத்தில் பாதுகாக்கிறார்

"நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து..." ஆதியாகமம் 28:15

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்குப் பயந்து ஓடிப்போகையில், வழியிலே இராத்தங்கி நித்திரை செய்து கொண்டிருந்த போது, கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி இந்த வாக்குத்தத்ததை அருளிச்செய்தார். கர்த்தர் அவனுக்கு அருளின வாக்கின்படியே அவன் சென்ற இடத்திலெல்லாம் அவனைப் பாதுகாத்தார்.

வாழ்க்கையி%