கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 34:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நான் சிறுவனாயிருந்தபோது மாம்பழம் தெருவிலே விற்றுவருவார்கள். அதைக் கூடையிலே விற்று வரும்போது, ஒரு மாம்பழத்தை அறுத்து, அதில் ஒரு சிறிய துண்டைக் கொடுத்து, இதைச் சாப்பிடுங்கள். இது எவ்விதமாய் ருசியாயிருக்கிறது என்று பாருங்கள் என்று சொல்லுவார்கள். இது ருசியாயிருக்கிறது அல்லது புலிப்பாயிருக்கிறது என்று சொல்லி, மாம்பழத்தை வாங்குகிறவர்கள் தீர்மானம் செய்வார்கள்.

அதைப் போலத்தான் இன்றைக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர், அவர் ஏன் நல்லவர், என்னென்ன காரியங்கள் நமக்குச் செய்து ஆசீர்வாதிப்பார் என்று நாம் ருசிக்க வேண்டும். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே பேசுகின்ற வார்த்தைக்கும் செயல்களுக்கும் சம்பந்தமில்லை. எனவே ஏமாற்றம் அடைகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர்? அவர் நல்லவர் என்று சொல்லுவதற்கு தேவனுடைய வல்லமையான பிரசன்னம் அவருக்குள் இருந்தபடியினாலும், அவர் நமக்கு உதவி செய்கிறவராயும், உன்னதமான பாதுகாப்பைத் தந்து அரவணைக்கிறவராயும் இருக்கிறார்.

ஒருமுறை ஒரு சகோதரரும் அவரது மனைவியும் என்னைச் சந்திக்க தேடி வந்தார்கள். அவர்களின் உள்ளம் உடைந்திருந்தது. சம்பவத்தைச் சொல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்களால் ஒன்றும் சொல்ல முடியாதிருந்தது. கடைசியில் தங்களின் பிரச்சனையைத் தெரிவித்தார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய இழப்பை கூறினார்கள். இதுவரை என் வாழ்வில் சேகரித்து, சேமித்த என் எல்லா நகைகளையும் நான் இழந்து விட்டேன் என்றார்கள். நூற்றுக்கும் அதிகமான சாவரின் என சொல்லிவிட்டு அழுதார்கள். அவர்கள் எதினால் இந்த இழப்பு ஏற்பட்டதையும் கூறினார்கள். என் நண்பர் ஒருவர் அதிகமாக கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். அவருக்கு வேலை இல்லை. அத்துடன் ஒரு வீட்டின் கார்செட்டின் பகுதியில் தங்கியிருந்தார். அவர் என்னுடன் சிறு பிராயத்தில் இருந்தே பழகினவன். அவனது நிலையைக் கண்டு, என் வீட்டிலே அவனைக் குடும்பமாக மிகுந்த சந்தோஷத்துடன் சேர்த்துக் கொண்டேன். என் வீட்டிலே தங்கினான். என் வீட்டிலே எல்லாக் காரியங்களிலும் எனக்கு உதவியாக இருந்தான். அத்துடன் என் வீட்டில் எது எது எங்கே இருக்கிறது என்று நன்கு தெரிந்து கொண்டான்.

ஒரு சனிக்கிழமை அருகில் இருந்த உல்லாசமாகச் சுற்றிப் பார்க்கும் இடம் செல்லத் திட்டமிட்டோம். அவனும் அவன் குடும்பத்தாரும் வருவதாக கூறி இருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் வரவில்லை என்று சொல்லிவிட்டான். நானும் என் வீட்டாரும் அன்று திட்டமிட்டபடியே சென்று மாலை வீடு திரும்பினோம். என் நண்பரோ எனக்கு வேலை கிடைத்து விட்டது என ஒரு கடிதத்தில் எழுதிவிட்டு, அந்த ஊருக்குப் போகிறேன் என்று அதில் தெரிவித்திருந்தான். சரி அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது நல்லது என்று சந்தோஷப்பட்டோம். அடுத்தநாள் ஆராதனைக்குச் செல்ல ஒரு நகையை எடுக்க பெட்டியைத் திறந்தோம். அதில் ஒரு நகையும் இல்லை. அது கீழே விழுந்து கிடக்குமோ என்று அந்த இடம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது என் உள்ளத்தில் அவன் நல்லவன் போல் நடந்து என்னை ஏமாற்றிவிட்டான் என்ற எண்ணம் வந்தது என்று கூறினார். ஆம் இன்று அநேகர் இவர் நல்லவர், இவன் நல்லவன்  என்று நம்பி ஏமாற்றம் அடைகிறார்கள். இந்த உலகிலே கர்த்தரே நல்லவர். அவரின் அன்பு பெரியது, உண்மையானது.

I. இயேசு கிறிஸ்து நல்லவர் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் என்ன?

1. இக்கட்டு நாளில் அரணான கோட்டை, பாதுகாவலாய் இருக்கிறார்.

"கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்." நாகூம் 1:7

அவர் இக்கட்டு நாளிலே அரணான கோட்டையாக இருக்கிறார். வாழ்க்கையிலே பலவிதமான கஷ்டமான, நெருக்கமான நேரங்கள், ஐயோ, நான் என்ன செய்வது, எனக்கு ஒரு வழி தெரியவில்லையே என்று சொல்லி தவிக்கிற நேரங்களிலே, பாடுகள் நிறைந்திருக்கின்ற நேரங்களிலே, வாழ்க்கையிலே அவர் நமக்கு அரணான கோட்டை. உன்னதமான பாதுகாவலை அளிக்கும் ஒரு கோட்டையாக இருக்கிறார்.

அந்த நாட்களிலே கோட்டை என்று சொன்னாலே, மனிதனுடைய பகைவர்கள் கோட்டையில் நுழைவது கடினமான காரியம். அது போலத்தான் நம்முடைய தேவனுடைய பாதுகாவல் ஒரு உன்னதமான பாதுகாவல். அதைத் துளைக்க முடியாது, ஊடுருவிச் செல்ல முடியாது. தேவனுடைய வல்லமையான செயல் அவர் கொடுக்கும் பாதுகாவலாகும். அவர் நல்லவர் என்று அழைக்கப் படுவதற்கு காரணம் என்ன? நம்முடைய நெருக்கமான நேரங்களிலே, பிரச்சனை போராட்ட நேரங்களிலே அவர் உன்னதமான பாதுகாவலாயிருக்கிறார். அநேக நேரங்களிலே நாம் இதை அறிந்து கொள்வதில்லை. ஆகவே, அவருடைய வல்லமையான செயலினாலே அவர் நமக்குப் பாதுகாப்பைத் தருகிறார்.

யாத்திராகமம் 5:19ல் இவ்விதமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. 'நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்களிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.' விடுதலை வரும் என்று எதிர்பார்த்த நேரத்திலே அதற்கு மாறாக நெருக்கங்கள், பார்வோனுடைய உள்ளத்திலே கடினமான எண்ணங்கள் தோன்றி, அடிமைத்தனத்திலிருக்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு இனி உதவி செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு செய்கிறதைப் பார்க்கிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் வேலை ஸ்தலத்திலே, உங்கள் குடும்பத்திலே, உங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலே பலவிதமான இக்கட்டுகள் வரலாம். இவைகளின் மத்தியிலே கர்த்தர் நல்லவராக இருக்கிறார். அரணான கோட்டையாக இருந்து, கேடானது நடைபெறாதபடி, வேதனையான முடிவெடுத்துவிடாதபடி, உங்களைக் காத்துக்கொள்ளுகிற வல்லமை நிறைந்த தேவனாயிருக்கிறார். ஆகவே இன்றைக்கு நமது வாழ்க்கையிலே இக்கட்டு நேரத்திலே அவர் உதவி செய்கிறவராய், பாதுகாக்கிறவராய், இக்கட்டிலிருந்து மீட்கிறவராய் நம் வாழ்க்கையிலே இருக்கிறபடியினால் அவரை நல்லவர் என்று நாம் சொல்லுகிறோம்.

நாம் விழுந்து  போகும் நேரத்தில், ஒருவர் நம்மைக் கைதூக்கி எடுப்பார் என்று சொன்னால், என்னுடைய விழுந்துபோன நேரத்திலே எனக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அவர் நல்லவர் என்று சொல்லுவோம். அதைப் போல தேவன் நமக்கு நல்லவராக இருக்கிறார்.

2. வழியைத் தெரிவிக்கிறவர்

"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." சங்கீதம் 25:8

இன்றைக்கு வழியறியாதிருக்கிறோம். சில காரியங்களை எப்படிச் செய்வது? இவ்விதமாய்ச் செய்யலாமா? அல்லது அவ்விதமாய்ச் செய்யலாமா? என்கிற எண்ணங்கள் உண்டு. ஆனால் நம்முடைய வாழ்க்கையிலே, எதை எப்படிச் செய்ய வேண்டும், எப்படிச் செய்தால் நன்மையானது என்று சொல்லி எல்லாவற்றையும் அறிந்த தேவன் அதிசயமாய் நம்மை நடத்துகிறவராய் இருக்கிறார். அவர் நம்முடைய வாழ்க்கையில் எந்த வழியில் செல்ல வேண்டுமென்று பாதையைக் காட்டுகிறார். சங்கீதம் 32:8ல் 'நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்' என்று இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கையிலே, வழியைத் தெரிவிப்பது மாத்திரமல்ல, அந்த வழியிலே நீ எவ்விதமாய் நடக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார். அந்த வழியைக் காட்டினதோடு, போதித்து நடத்துகிறவராயிருக்கிறார்.

ஏசாயா 42:16 சொல்கிறது, 'குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத்  தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.' ஆகவே பாதைகளைத் தெரிவிக்கிறவர், அந்தப் பாதைகளிலே நடத்தப்படுவதற்கு உதவிசெய்கிறவராய் இருக்கிறார். நாம் என்றைக்கு இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராக ஏற்றுக் கொள்ளுகிறோமோ, அன்றைக்கே அவர் நம்மை சங்கீதம் 23இல் உள்ளது போல நீதியின் பாதையிலே நடத்துகிற தேவனாய் இருக்கிறார். ஆகவேதான் அவர் நல்லவர்.

3. நல்லவரும் நன்மை செய்கிறவருமாயிருக்கிறார்.

"தேவரீர் நல்லவரும் நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்." சங்கீதம் 119:68

அவர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார். அவருடைய நன்மைகளைக் குறித்து பல இடங்களிலே வேதத்தில் பார்க்க முடிகிறது. சங்கீதம் 31:19,20இல் அவருடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று பார்க்க முடிகிறது. அந்த நன்மை என்ன? இந்த உலகத்திலே பலவிதமான பொறாமை கொண்ட மக்கள் செய்கிற சூனியங்களுக்கு நம்மை மறைத்து, கூடாரத்திலே ஒளித்து வைக்கிறவராயிருக்கிறார். ஆகவே தான் அவருடைய காரியங்களைக் குறித்து நாம் பார்க்கும்போது, அவர் பெரிதான நன்மைகளைச் செய்கிறார். அந்த நன்மைகளினாலே நாம் நிறைந்து, நல் வாழ்வினை வாழ்கிறோம். ஒருமுறை ஒரு குடும்பத்தாருக்கு விரோதமாக இன்னொரு குடும்பத்தார் சூனியங்களைச் செய்தார்கள். சூனியங்களைச் செய்ததோடு மாத்திரமல்ல, உங்களுடைய வீட்டிலே இவ்விதமான காரியங்கள் நடைபெறும் என்று சொல்லி எழுதிவைத்தார்கள். இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ள குடும்பம். அதில் ஒரு மகன் விபத்தினால் பாடுகளை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் குடும்பத்தாருக்கு மிகுந்த வருத்தம். ஐயோ, என்ன ஆகுமோ, பிள்ளைகள் மரித்துப் போவார்களோ என்ற கவலையால் நிறைந்தார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நல்லவர். ஏனென்றால், அவர் அந்த மக்களுக்கு விரோதமாய் செய்யப்பட்ட சூனியங்களை அழித்தார். பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கு வெளிப்பட்டவர் ஜீவிக்கிறார். 1 யோவான் 3:8 சொல்கிறது, 'பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.' தேவனுடைய குமாரன் இந்த உலகத்தில் பிறந்ததின் நோக்கமே பிசாசின் கிரியைகளை அழிப்பது ஒரு காரணமாயிருக்கிறது.

ஆகவே இன்றைக்கு சூனியங்களினால் செய்யப்படுகிற காரியங்களை அழித்து, பெரிய நன்மை செய்கிறார். இன்னுமாய் அவர் செய்கிற நன்மை என்னவென்று சொன்னால், மனிதனுடைய தேவைகளையெல்லாம் சந்திக்கிறார். தேவைகள் என்று சொன்னவுடனே, ஆவிக்குள்ளான தேவைகள், இம்மைக்குரிய ஆசீர்வாதங்கள். இந்த உலகத்திலே நாம் வாழும்போது, ஆவிக்குள்ளான ஆசீர்வாதம் தேவை. ஒவ்வொரு நாளும் அது தேவையாயிருக்கிறது. எரேமியா 31:12,13இல் இதைக்குறித்து நாம் பார்க்க முடிகிறது. 'அவர்கள் வந்து சீயோனின் உச்சியிலே கெம்பரீத்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போல்  இருக்கும் ; அவர்கள் இனித்  தோய்ந்துபோவதில்லை. அப்போது கன்னிகைகளும், வாலிபரும், முதியோரும் கூட ஆனந்தக்களிப்பாய் மகிழ்வார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோசமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுவேன்.'

இந்த நன்மைகளுக்காய் ஓடிவருவார்கள். என்னென்ன  நன்மைகள்? கோதுமை, எண்ணெய் , திராட்சரசம், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள். முதல் மூன்றும் ஆவிக்குள்ளான வாழ்க்கை. கோதுமை என்பது தேவனுடைய வார்த்தைகள், வாக்குத்தத்தங்கள். எண்ணெய்  என்பது பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகம். திராட்சரசம் என்பது ஆவிக்குரிய வரங்களினால் உண்டாகும் மேன்மைகள், ஆசீர்வாதங்கள். கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள், எல்லாம் இவ்வுலகத்தின் செல்வதைக் குறிக்கிறது. ஆகவே, நம்முடைய தேவன் நல்லவர் என்பதற்குக் காரணம், நம்முடைய வாழ்க்கையிலே எவைகளெல்லாம் தேவையோ, எவைகளெல்லாம் அவசியமோ, அதைப்  பூரணமாய்த் தந்து, சிறப்பாய் வாழச் செய்கிறவர். ஆகவேதான் அவர் நல்லவர்.

4. மன்னிக்கிறவர்

"ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்." சங்கீதம் 86:5

இங்கு தெளிவாய் நாம் ஒரு காரியத்தைப் பார்க்கிறோம். உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் மிகுந்த கிருபை அளிக்கிற தேவன் மன்னிக்கிறவருமாய் இருக்கிறார். மனிதனுடைய குற்றங்களை மன்னிக்கிறவர், மீறுதல்களை மன்னிக்கிறவர், அக்கிரமங்களை மன்னிக்கிறவர், பாவங்களை மன்னிக்கிறவர். உலகத்தார் ஒரு வேளை, சொந்த கணவன், மனைவி கூட, பிள்ளைகள்கூட, மன்னியாதிருக்கலாம். ஆனால் அவரோ மன்னிக்கிறவர். அவர் மன்னிக்கும் வல்லமையான செயலினாலே, வாழ்க்கையிலே நாம் என்றும் பரிசுத்தமாக்கப்படுகிறோம், அவரோடு உள்ள உறவை உருவாக்கிக்கொள்வதற்கு ஏதுகரமாயிருக்கிறது. ஆகவே இன்றைக்கு இயேசு கிறிஸ்து நல்லவர். ஏனென்று சொன்னால் அவர் மன்னித்து, மாற்றத்தை உருவாக்கி, ஆசீர்வதிக்கிறவர். இந்த இயேசு கிறிஸ்து யாருக்கு நல்லவர் என்ற ஒரு பெரிதான கேள்வி எழும்புகிறது. அதைக் குறித்துப் பார்ப்போம்.

II. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யாருக்கு நல்லவர்?

1. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு அவர் நல்லவர்

"தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்." புலம்பல் 3:25

தமக்குக் காத்திருக்கிற மக்களுக்கு அவர் நல்லவர் என்று பார்க்கிறோம். இன்று இயேசு கிறிஸ்து எனக்கு நல்லவர் என்று சொல்வதற்கு அவரது காலம், நேரம், செயல்கள் நமக்குக் கிடைப்பதற்கு  பொருமையோடு இருக்க வேண்டும். முப்பத்தெட்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்தவன் வேதனையோடுதான் இருந்தான். இயேசு கிறிஸ்து அவனைக் கண்டபோது தான் அவனுக்குள்ளாய் ஒரு அற்புதம் நடைபெறுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் பாடுகளோடு இருந்த மகளைப் பார்க்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவிடம் வந்தபடியினால் அவள் பாடுகள் மாறினதைப் பார்க்கிறோம். பதினெட்டு ஆண்டுகள் கூனியாய் இருந்தவள், நான் ஏன் கூனியாய் இருக்க வேண்டும், எதினிமித்தமாய் நான் ஆலயத்துக்கு வர வேண்டும் என்று அவள் சொல்லவில்லை. அவளுடைய வாழ்க்கையிலே இயேசு கிறிஸ்து அற்புதம் செய்கிறவர் என்று சொல்லி ஆலயத்திலே ஆராதிக்கிறவளாயிருந்தாள்.

அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய வல்லமையான செயல் நமக்குள் நடைபெறுவதற்குக் காத்திருக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுபெலனடைந்து கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்று ஏசாயா 41ல் பார்க்கிறோம். புலம்பல் 3:25 சொல்கிறது, தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கு கர்த்தர் நல்லவர். உண்மையாய் அவரைத் தேடுகிற மக்களைக் குறித்து நாம் நன்கு அறிவோம். அவர்களுடைய வாழ்க்கையிலே பல காரியங்களை நன்மையாய்ச் செய்கிறார்.

ஆனால் அவருக்கு நாம் காத்திருப்பதோடு உண்மையான உள்ளத்தோடு தேடுகிற மக்களாய் மாற வேண்டும். நாம் இன்று எவ்விதமாய் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? உலகத்தின் செல்வத்தைத் தேடுவதற்கு அநேக நேரம் விழித்திருக்கிறோம். அநேக முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இரவும் பகலும் பாடுபடுகிறோம். ஆனால் உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்களை, அவர் நல்லவர் என்று அறிந்து, அவருக்குள் மேன்மையை பெற்றுக்கொள்வதற்கு அவரைத் தேடுகிறவர்களாய் இருக்கிறோமா? சிலர் ஏதோ ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் கர்த்தரைத் தேடுகிறார்கள், அதோடு விட்டு விடுகிறார்கள். ஒரு விலையேறப்பெற்ற பொருள் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வோம்? அதைத் தேடி, அதைக் கண்டுபிடிக்கும்வரை அதைத் தேடிக்கொண்டே யிருப்போம். அது கிடைத்தபின் தான் சந்தோஷத்தோடு கடந்துசெல்வோம்.

ஒரு அருமையான வாலிபனை அறிவேன். அவன் ஒருநாள் மாலையிலே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் அணிந்திருந்த தங்க நகையானது காணாமல் போனது. வீட்டிற்கு வந்து குளிக்கும்போதுதான் அந்த நகை தன் கழுத்தில் இல்லை என்று அவன் உணர்ந்தான். உடனே தான் விளையாடின இடத்திற்குச் சென்றான். அந்த நேரம் இருட்டிவிட்டது. ஆனால் அவன் அந்த கால்பந்து மைதானத்தை ஒவ்வொரு அடியாக, ஒவ்வொரு அங்குலமாக விளக்கை வைத்துத் தேடினான். கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார். அவன் கண்டுபிடிக்கத்தக்கதான ஒரு நேரம் வந்தது. அவன் கண்டுபிடித்தவுடனே மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

இதைப் போலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் விடா முயற்சியாக, பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவரைத் தேடுகிற மக்களாய் மாற வேண்டும். அப்பொழுது அவர் நல்லவர் என்று அறியமுடியும்.

2. சுத்த இருதயமுள்ளவர்களுக்கு நல்லவர்

"சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார்." சங்கீதம் 73:1

இருதயத்திலே சுத்தம் தேவை. இயேசு கிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்திலே, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று சொன்னார். நம்முடைய இருதயம் இன்றைக்கு எவ்விதமாய் இருக்கிறது? நம்முடைய இருதயமானது தேவனுடைய சமுகத்திலே நலமானதாய் இருக்கிறதா? வேதம் சொல்கிறது, எரேமியா 17:9ல் 'எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?' இதயமானது திருக்குள்ளது, கேடுள்ளது. பலவிதமான தந்திரமான, தீமையான காரியங்களைச் செய்வதற்கு அது முனைகிறது. இந்த இருதயத்திலிருந்து தான் தீமையான காரியங்கள் வருகிறது. இயேசு கிறிஸ்து, தம் சீஷர்களைக் குற்றப்படுத்திய மனிதர்களுக்குச் சொன்ன பதில் அதுதான். நாம் உண்கிற ஆகாரமானது ஆசன குழாய் வழியாய் வெளியேறிவிடும். அது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. ஆனால் இருதயத்திலுள்ள தவறான காரியங்கள், தீதான காரியங்கள் தான் அவனைத் தீட்டுப்படுத்தும். அவனை அசுத்தப்படுத்தும். அவனை பாவம் செய்வதற்கு வழிநடத்தும். ஆகவே இருதயமானது சுத்தமாக்கப்பட வேண்டும். சுத்த இருதயத்தோடு தேவனுடைய பிள்ளைகளாக வாழ  வேண்டும். ஆகவே சுத்த இருதயத்தோடு வாழுகிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கர்த்தர் நல்லவராக இருக்கிறார்.

3. இஸ்ரவேலாய் உருவாக்கப்படவேண்டும்

"...இஸ்ரவேருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார்." சங்கீதம் 73:1

இஸ்ரவேலர் என்று சொன்னாலே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். தமக்கென்று தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள். ஒருவேளை இன்றைக்கு இஸ்ரேல் நாட்டு மக்களைக் குறிக்கிறதோ என்று எண்ணலாம். இல்லை. யார் இஸ்ரவேல் என்று சொன்னால் மனமாற்றம் அடைந்த மனிதன்.

ஏசாயா 43:1ல் இவ்விதமாய்ப் பார்க்கிறோம். 'இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக் கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.' யாக்கோபாக சிருஷ்டிக்கப்பட்டவன்,  இஸ்ரவேலாக உருவாக்கப்படுகிற நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். யாக்கோபு என்று சொன்னாலே ஒரு எத்தன். சொந்த தகப்பனை ஏமாற்றினவன். தன்னுடைய வாழ்க்கையிலே சகோதர பாசமற்ற ஒரு மனிதன். அவன் தன்னயம் நிறைந்தவன், வாழ்க்கையிலே தவறான கொள்கை உடையவன், தவறான பண்புகள் உடையவன். இந்த வார்த்தைகளைப் படிக்கிற சகோதரனே, சகோதரியே, நீ எவ்விதமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? கர்த்தர் நேசிக்கிற மகனாய், மகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தர் விரும்பத்தக்கதான ஒரு பாத்திரமாக இருக்கிறாயா? உலகத்தாரைப் போல பல மந்திர தந்திரங்களைச் செய்து, உலகத்தின் செல்வங்களை ஆசீர்வாதங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாயா?

அநேகரை ஏமாற்றுகிற மனிதர்களை இன்று பார்க்கின்றோம். இந்த யாக்கோபை தேவன் இஸ்ரவேலாக உருவாக்கினார். சிருஷ்டிக்கப்பட்ட யாக்கோபு தன் வாழ்க்கையிலே தேவனோடு போராடுகிறவாய் மாறினான். தேவ தூதனோடு போராடி, என்னை ஆசீர்வதித்தாலொழிய போக விடமாட்டேன் என்றான். தேவன் அவன் பெயரையே மாற்றினார். இனி உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல் என்று சொன்னார். ஆகவே இன்றைக்கு நாமும் கூட தேவனுடைய சமுகத்திலே போராடி ஜெபிக்கிற மக்களாய், தேவனைத் துதிக்கிற மக்களாய், அவர் சமுகத்தில் மன்றாடி ஜெபிக்கிற மக்களாய், இந்த உலகத்தின் போராட்டமான ஆவிகளுக்கு எதிர்த்து நிற்கிற மக்களாய் மாற வேண்டும்.  அவ்விதமாய் மாறும்போது தேவன் நல்லவராய் இருந்து, நலமான காரியங்களைச் செய்து, நம்மை அனுதினமும் ஆசீர்வதிப்பார். இந்த மாதமானது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட உன்னதமான மாதமாக மாறட்டும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.