"...கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து,
தமது  ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்..."

                                                                                                                                                        ஏசாயா 25:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நம்முடைய தேவன் பலவிதமான செயலாற்றும் தன்மைகளை உடையவராய் இருக்கிறார். இரட்சிக்கிறார், நம்மைத் தப்புவிக்கிறார், விடுவிக்கிறார், வேதனைகளை மாற்றுகிறார், சுகமளிக்கிறார், பயத்தை நீக்குகிறார் என்று அவருடைய தன்மைகளைச் சொல்லும் பொழுது, அவருடைய செயலாற்றும் காரியங்களை அளவில்லாமல் கூறிக்கொண்டே போகலாம்.

இவைகளில் ஒரு காரியமானது நம்முடைய உள்ளத்தைத் தேற்றுவதோடு நம்முடைய கண்ணீரைத் துடைப்பதாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலே பலவிதமான துக்கங்கள், பலவிதமான இழப்புகள், நாம் நினைத்த காரியங்களில் ஏற்பட்ட தோல்வியின் நிமித்தமாய் நம்முடைய உள்ளம் மிகவும் வேதனை அடைந்து, ஐயோ நான் என்ன செய்வேன்? என் வேதனைகளுக்கு முடிவில்லையா என்று சொல்லி, தொடர்ந்து காணப்படுகிற துக்கமானது நம்முடைய கண்களிலே கண்ணீரைப் பெருகச் செய்கிறதாய் இருக்கிறது.

இவ்வாறு பெருகிவருகிற கண்ணீரைத் துடைத்து, நம்முடைய வாழ்க்கையில் கண்ணீரற்ற ஒரு மகிழ்ச்சியின் வாழ்க்கையைத் தருவதற்கு இயேசு கிறிஸ்து இந்த நாளிலே நம்மை வழிநடத்த வல்லவராக இருக்கிறார். அவருடைய செயல்களில் நம்முடைய கண்ணீரைத் துடைப்பது ஒரு காரியமாய் இருக்கிறது.

யோவான் 20:15ல் இப்படியாக ஒரு சகோதரி மிகுந்த கண்ணீரோடு இருப்பதைக் காண்கிறோம். "இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்..." இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வி ஏன் அழுகிறாய்? என்பதாகும். அருமையான சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையின் பிரச்சனையின் நிமித்தமாய் உன்னுடைய உடைந்து போன உள்ளத்தில், நீ வேதனையை வைத்துக் கொண்டு, மிகுந்த துக்கத்தோடு கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறாயா? உன் கண்ணீரைக் காண்கிற தேவன், 'ஏன் அழுகிறாய்' என்று கேட்கிறார்.

எதற்காக மகளே நீ அழுகிறாய்? உன் கண்ணீருக்குக் காரணமென்ன? அவைகளை நான் மாற்ற வல்லவர் என்று சொல்லி,   உனக்குள் நலமானவற்றை நடப்பிக்க வேண்டும் என்று சொல்லி, உன்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்காக அவர் உன்னோடு இடைபடுகிற தேவனாயிருக்கிறார். உன் கண்ணீருக்குக் காரணமென்ன? உன்னுடைய காயங்களுக்குக் காரணமென்ன? உன்னுடயை வேதனைகளுக்குக் காரணமென்ன? உன்னுடைய வாழ்க்கையில் ஒருவேளை எனக்கு யாருமே ஆதரவாக இல்லை என்று சொல்லி, உன் உள்ளத்தில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறாயா? உன்னுடைய உடைந்து போன உள்ளத்தை அறிந்த ஆண்டவர் உனக்குள் ஒரு புதிதான உள்ளத்தைத் தரவேண்டும் என்று விரும்புகிற ஆண்டவர், உன்னுடைய பாவங்களைக் கல்வாரி சிலுவையிலே சுமந்து தீர்த்த ஆண்டவர், உன்னுடைய கண்ணீரைத் துடைத்து, உனக்குள் சந்தோஷமான வாழ்க்கையை, மெய்யான நித்தியமான பூரிப்பான நிலைகளைத் தருவதற்காக 'ஏன் அழுகிறாய்?' என்று உன்னைக் கேட்கிறார். ஒவ்வொரு நாளும் நான் படுக்கையில் அழுது கொண்டிருக்கிறேன், என்னுடைய வேதனைகளைப் புரியாத மக்கள் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிந்தைகளின் நிமித்தமாய், பாடுகளின் நிமித்தமாய், வெளியே சொல்ல முடியாத பாவத்தின் நிமித்தமாய் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிற  சகோதரனே, சகோதரியே, இன்று தேவன் உன்னுடைய கண்ணீரைத் துடைக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயமாக விழுங்கின தேவன், உன் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று உன் அருகிலே கடந்து வந்திருக்கிறார். இந்தக் கண்ணீரைத் துடைக்கக் கூடிய தேவனுடைய சமுகத்திலே, உன்னுடைய காரியங்களை முற்றிலுமாய் ஒப்புவித்து, முற்றிலுமாய் அவருடைய வருகைக்காக உன்னுடைய உள்ளத்தைத் திறந்து கொடு. இன்றைக்கு அவர் உன்னுடைய கண்ணீரைத் துடைத்து, உன் காயங்களைக் கட்டி, உன் வாழ்வினை வளமுள்ளதாய் மாற்றுகிறதை நீ காண்பாய்.

மனிதன் தன் துக்கத்தின் மிகுதியினால் கண்ணீர் சிந்துகிறான் என்பதை நாம் அறிவோம். கண்ணீருக்குப் பலவிதமான காரணங்கள் உண்டு. அதில் ஒருசில காரியங்களைப் பார்ப்போம்.

1) பிள்ளைகளால் ஏற்படும் கண்ணீர்

"துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,

பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலேபோய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்."   ஆதியாகமம் 21:15,16

இங்கு ஆகார் என்னும் பெண், தன்னுடைய கணவனின் அன்பை இழந்து தான் வைத்திருந்த ஜீவனுக்கு ஏதுவான தண்ணீரையும் இழந்து, வனாந்தரத்தின் வழியாக நடந்துவந்து, இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லக்கூடிய நிலையிலே, தன் பிள்ளை சாகப்போகிறது என்னும் ஒரு வேதனைக்குரிய சூழ்நிலையிலே அவள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். தாங்கமுடியாத துக்கத்தின் நிமித்தமாய், தன் பிள்ளையின் நிமித்தமாய் மிகவும் உடைந்து போன உள்ளத்தோடு அவள் கதறி அழ ஆரம்பித்தாள்.

இன்றைக்கு உன்னுடைய பிள்ளையின் நிமித்தமாய் நீ கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாயா? உன் பிள்ளைகளின் வாழ்க்கையின் தாகம் தீர்க்கப் படாதபடியினால், உன் பிள்ளையின் வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டத்தின் நிமித்தமாய் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிற தகப்பனே, தாயே, உன் கண்ணீரை ஆண்டவர் இன்று துடைக்க விரும்புகிறார். என் பிள்ளையின் வாழ்க்கை சரியாய் அமையவில்லையே, என் பிள்ளைக்கு ஏற்ற மணமகன் கிடைக்கவில்லை, மணமகள் கிடைக்க வில்லையே என்று ஏக்கத்தோடு, பிள்ளையைக் குறித்து கவலையோடு, கலங்கிய உள்ளத்தோடு இருக்கிற தேவப்பிள்ளையே, உன் கண்ணீரை அவர் துடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இந்த ஆகார் என்பவள் தன் பிள்ளையின் வேதனையைத் தாங்க முடியாதவளாய், தன் பிள்ளையின் முடிவு வரப்போகிறதே, இனி தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று மனமுடைந்து கதற ஆரம்பித்தாள். அவ்வாறு கதறி அழுது கொண்டிருந்தபொழுது, தேவன், நம்மைக் காண்கிற தேவன், நம்முடையாய் காரியங்களை அறிந்த தேவன், சிறுமைப்பட்ட மக்களை விடுவிக்க வல்லவராகிய உன்னதமான தேவன், அந்த மகளின் கண்ணீரைக் கண்ட மாத்திரத்தில், 'ஆகாரே, என்ன நேர்ந்தது, ஏன் வேதனைப்படுகிறாய்?' என்று கரிசனையோடு அவளை நோக்கிக் கேட்டார். அந்த மகளின் கண்கள் திறக்கப்பட்ட போது, அந்த வனாந்தரத்திலே ஒரு நீர்த்தடாகத்தைக் காணவும், தன் பிள்ளையின் தாகம் தீர்க்கப்படவும், அங்கே ஒரு அதிசயமான காரியம் நடைபெறுவதைக் காண்கிறோம்.

இன்றைக்கு கண் மறைக்கப்பட்டு, நம்முடைய வாழ்க்கையிலே விடுதலை இல்லை, வழி இல்லை என்று துக்கத்தின் மிகுதியினால் வேதனை அடைந்து கொண்டிருக்கிற தேவப்பிள்ளையே, உன்னுடைய கண்கள் இன்று திறக்கப்படுமானால், கல்வாரியில் உனக்காக அடிக்கப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருவிலாவிலிருந்து வருகிற செந்நீரை நீ காணமுடியும். உன் தாகம் தீர்க்கப்பட்டு, உன் பிள்ளையின் தாகம் தீர்க்கப்பட்டு, உன்னுடைய அழுகை களிப்பாய் மாறும்.

ஒருமுறை ஒரு அருமையான தகப்பனார், தன்னுடைய மகளின் நிமித்தமாய் மிகவும் துயரத்தோடு, பைத்தியத்தைப் போல இருக்கிற தன் பிள்ளையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்று சொல்லி, கலங்கி ஒரு சிறு பிள்ளையைப் போல கதறி அழுது கொண்டு, என்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர் ஒரு பெரிய சர்க்கரை ஆலையிலே ஒரு அக்கெளண்ட்ஸ் ஆபிஸராய் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவளுடைய வாழ்க்கையிலே திடீரென்று புத்தி பேதலித்தது போல, என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என்று அறியாத மகளாய் அவளுடைய நிலைகள் மாற்றப்பட்டபடியினால், அவர் மிகுதியாய் கண்ணீர் சிந்த ஆரம்பித்தார். அந்த நாளிலே அவர் செய்த தவறான காரியங்களைப் பாரம்பரியத்தின் தவறான காரியங்களைக் கர்த்தர் அவர்களுக்கு அறிவித்தார். குருட்டாட்டமான நம்பிக்கையோடு செய்யப்பட்ட பழக்கவழக்கங்களைக் கர்த்தர் வெளிப்படுத்தி, நீங்கள் உருவச் சிலைகளுக்கு இப்படியாய் மாலைகளை அணிவித்து, இவர்கள் தான் எனக்கு நன்மை செய்தார்கள் என்று செய்த காரியத்தினிமித்தமாய் இந்த வேதனைக்குரிய காரியம் நிகழ்ந்தது என்று உணர்த்தினார்.

அவர்களின் கண்கள் தெளிவடைந்தது, அவருக்காய் அநேக வல்லமையான தேவ ஊழியர்கள்  சேர்ந்து ஜெபித்தார்கள். அவருடைய கண்கள் தெளிவடைந்த மாத்திரத்தில், அவர் சத்தியத்தைப் புரிந்து கொண்டார். சத்தியமான மார்க்கத்தில் நடப்பதற்கு தன் வழிகளைச் சரிப்படுத்தினார். கண்ணீர் துடைக்கப்பட்டது. மகளுடைய வாழ்க்கை வளமுள்ளதாய் மாற்றப்பட்டது.

இன்றைக்கு ஒருவேளை உன்னுடைய பிள்ளையின் வாழ்க்கையின் வேதனைக்கு உன்னுடைய குருடாக்கப்பட்ட தன்மை காரணமாயிருக்கலாம். என்னுடைய தகப்பனார், என்னுடைய தாயார், என்னுடைய தாத்தா, பாட்டி இப்படியாய் வழிபட்டார்கள் என்று சொல்லி, மெய்யான வழியை விட்டு, பாரம்பரிய பழக்கத்தினால் உங்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருக்கும் என்றால், இந்த வேளையிலே கண்கள் தெளிவடைவதற்கு கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் வேண்டுதல் செய்யுங்கள்.

நான் மரண நித்திரை அடையாதபடி என் கண்களைத் தெளிவடையச் செய்யும் என்று சொன்ன தாவீதைப் போல, நீங்களும் உங்கள் கண்கள் தெளிவடைவதற்கு, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும்பொழுது, அவர் உங்கள் கண்களைத் தெளிவடையச் செய்வார். அப்பொழுது நீங்கள் தெய்வத்தின் மகத்துவங்களை உணர்ந்து, கண்ணீர் துடைக்கப்பட்ட வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எலிசாவின் வேலையாளுடைய கண் திறக்கப்பட்டபோது, எலிசாவைச் சுற்றியிருந்த அக்கினிமயமான யுத்த ரதங்களையும், வீரர்களையும், பாதுகாவலையும் அவன் காணமுடிந்தது. நம்முடைய கண்கள் திறக்கப்படும்பொழுது மாத்திரமே, தேவனுடைய செயலாற்றும் வல்ல பெரிய காரியங்களைக் காணமுடியும். அவர் மூலமாய் செய்யப்படுகிற மகத்துவம் பொருந்திய நன்மையான ஈவுகளைப் பெறுவதற்கு மனதில் ஒரு தெளிவை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே, நம்முடைய கண்ணீருக்குக் காரணம் பிள்ளையினுடைய காரியமாய் இருக்கலாம். அவைகள் மாற்றப்படுவதற்கு நம்முடைய கண்கள் திறக்கப்பட வேண்டும். அந்த ஆகாருடைய கண்களைத் திறந்த தேவன் உங்களுடைய மனக்கண்களைத் திறக்கும்படி உங்கள் உள்ளத்தில் தீர்மானத்தோடு நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் கண்களைத் திறப்பார். உங்கள் கண்ணீர் துடைக்கப்படுவதைக் காண்பீர்கள்.

2) குறைவினால் கண்ணீர்

"அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள்." 1 சாமுவேல் 1:7

இரண்டாவதாக, நம்முடைய கண்ணீருக்குக் காரணம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற குறைகளாகும். மனிதர்களின் வாழ்க்கையிலே குறைவுகள் ஏற்படுவது சகஜமான ஒரு காரியம். திருமணமாகி ஏற்றக் காலத்தில் குழந்தை இல்லை என்றால், மனம் உடைந்து கண்ணீர் சிந்துகிறோம். தன் வாழ்க்கையின் குறைவினிமித்தம் கண்ணீர் சிந்தின அன்னாளைக் குறித்துப் பார்க்கிறோம். தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலே தனக்கென்று ஒரு பிள்ளை இல்லாதபடியால் ஏற்பட்ட குறைவினிமித்தமாய், கண்ணீர் சிந்துகிற ஒரு காரியத்தைப் பார்க்கிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, இன்றைக்கு உன்னுடைய குடும்ப வாழ்க்கையினிமித்தமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாயா? உன்னுடைய ஜெயமில்லாத காரியத்தினிமித்தமாய், இவைகள் எனக்கு இல்லையே, இவைகளை நான் எப்படிப் பெறுவேன் என்று சொல்லி, தடையாக்கப்பட்ட காரியங்களினிமித்தமாய் நீ கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாயா? தடைகளை நீக்குகிற தேவன் நம் மத்தியிலே ஜீவிக்கிறார். தடைகளை நிர்மூலமாக்குகிற தேவன் நம் மத்தியில் இருக்கிறார். அல்லேலூயா. இயேசுவின் சமுகத்தில் உன் உள்ளத்தை முற்றிலுமாய் ஊற்றி விடு. இந்த அன்னாள் தன் குடும்பத்தின் நிமித்தமாய் வியாகுலமடைந்த ஒரு சகோதரி. ஆனால் தேவனுடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி பொருத்தனையோடு ஜெபித்தாள். இதினிமித்தமாய் அந்த மகளின் குறைவுகளைத் தேவன் மாற்றி ஐந்தத்தனையான ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். அந்த ஆண்டவர் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அல்லேலூயா.   

கர்த்தாதி கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் கஷ்டங்களை மாற்ற வல்லவராயிருக்கிறார். அவருடைய சமுகத்தை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவருடைய குறைவுகளையும் அவர் முழுமையாக மாற்ற வல்லவராயிருக்கிறார். உன் குறைவுகளினிமித்தமாய் நீ கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஐசுவரியமுள்ள தேவன்; அவர் சர்வ அதிகாரமுடைய தேவன். இன்றைக்கு அவர் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கிறார். இல்லாதவைகளிலிருந்து இருக்கிறதைப் போல அழைக்கிற ஆண்டவர் உனக்குள் மேலானவைகளை நடப்பித்து அதிசயங்களைச் செய்கிற தேவனாயிருக்கிறார்.

ஒருமுறை ஒரு அருமையான கல்லூரி விரிவுரையாளர் தன் மனைவிக்குக் குழந்தை இல்லாத காரியத்தினிமித்தமாய் மிகவும் கலங்கி ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஐயா, என்னுடைய மனைவிக்கு மருத்துவ ரீதியாக குழுந்தைப் பிறப்பதற்கு வழியே இல்லை. திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இனி அவள் குழந்தை பிறப்பதற்கு தகுதியற்றவள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்குப் பிள்ளை வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்று எழுதியிருந்தார். அவருக்கு ஆலோசனையாக எழுதின ஒரு காரியம் இதுதான். இந்த அன்னாளுடைய காரியத்தை அவருக்கு அறிவித்து, நீங்கள் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்பொழுது, அவர் உங்களுடைய குறைவுகளை மாற்றுகிற தேவனாயிருக்கிறார். அவருடைய சமுகத்தை மாத்திரம் நோக்கிப் பாருங்கள் என்று அவர்களுக்கு ஆலோசனையாய் எழுதியிருந்தேன். அந்த அருமையான சகோதரரும் அவருடைய மனைவியும் அந்த நாட்களிலே கண்ணீரோடு தேவ சமுகத்தை நோக்கினார்கள். நம்முடைய கண்ணீரையெல்லாம் துருத்தியிலே வைத்திருக்கிற தேவன், அதிசயங்களைச் செய்தார். அவர்களின் குறைகளை நீக்குவதற்கு மனதிரங்கினார். ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தின் மருத்துவர்களை நாடிச் சென்ற வேளையிலே தோல்வி. இந்த உலகத்தின் மருத்துவரால் செய்ய முடியாத காரியத்தைச் செய்ய அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார். உன் கண்ணீர் எதினிமித்தமாய் இருக்கிறது? உன் வாழ்க்கையின் நிமித்தமாய் நீ கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாயா? எனக்கு இது இல்லையே, எனக்கு வேலை இல்லையே, எனக்குப் பிள்ளை இல்லையே, எனக்கு வீடு இல்லையே, எனக்கு இவைகள் இல்லையே என்று அழுது கொண்டிருக்கிறாயா? அவர் சமுகத்தை நோக்கிப் பார்க்கும்போது அவர் கண்ணீர் துடைக்கும் தேவனாயிருக்கிறார்.

3. வியாதியினால் கண்ணீர்

"ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானத்தைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்;
உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்." ஏசாயா 38:3-5

மூன்றாவதாக நம்முடைய கண்ணீருக்குக் காரணம் நம்முடைய சரீரத்திலிருக்கிற வியாதி. எசேக்கியா தன்னுடைய வியாதியில் தேவன் சொன்ன ஒரு வார்த்தையினிமித்தமாய், மரணம் ஏற்படப்போகிறதே என்று மனமுடைந்து மிகவும் கதறி அழுகிறதைப் பார்க்கிறோம். உன் கண்ணீரைக் கண்டேன், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று சொன்ன தேவன் இன்றும் நம் மத்தியில் ஜீவிக்கிறார். அவர் காற்றையும் கடலையும் கொந்தளிப்பையும் அடக்க வல்லராயிருக்கிறார். அவர் பாவங்களை மன்னிக்கக்கூடிய அதிகாரத்தை உடையவராக இருக்கிறார். பிசாசின் கிரியைகளை அழிக்கக்கூடிய வல்லமை உடையவராயிருக்கிறார். சாபங்களை முறிக்க வேண்டுமென்று சாபமான சிலுவையிலே சாபமானார். தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்காக அவர் பூமியிலே நன்மை செய்கிற தேவனாய் சுற்றித் திரிந்தார். அந்த அன்பரிடம் நீ வருவாயானால், உன்னுடைய சரீரத்திலே காணப்படுகிற வேதனைக்குரிய நோய் இந்த நாளிலே நீக்கப்பட்டு, நீ தெய்வீக சுகத்தைப் பெற்று, உன்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திலே, பூரணமான மகிழ்ச்சியோடு வாழும்படியாக உன் கண்ணீரைக் களிப்பாய் மாற்றுவார்.

ஏன் அழுகிறாய்? என்று கேட்ட ஆண்டவர், உன் குறைவுகளை மாற்ற விரும்புகிற ஆண்டவர், உன் வேதனைகளை நீக்கி, உன் தாகத்தைத் தீர்க்கிற ஆண்டவர் உன் கண்ணீரைத் துடைக்க விருப்பமுள்ளவராய் இருக்கிறார். இந்த எசேக்கியா இராஜா தன்னுடைய வாழ்க்கையிலே கர்த்தருக்காக செய்த காரியங்களைச் சொல்லுகிறான். கர்த்தருக்கென்று செய்த செயல்களை அறிவித்து, அவன் அறிக்கை செய்து, எனக்கு இரங்கும் என்று சொல்லி தேவ சமுகத்திலே மன்றாடுகிற காரியத்தை நாம் பார்க்கிறோம். அவனுடைய வாழ்க்கையிலே அநேக காரியங்களைக் கர்த்தருக்கென்று செய்தான். மோசே மூலமாய் செய்யப்பட்ட வெண்கல சர்ப்பத்தின் உருவச்  சிலையை அவன் உடைத்து, விக்கிரக ஆராதனை செய்வதை ஒழித்து அவன் தைரியமாய் செயல் புரிந்தான்.

மோசே மூலமாய் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்திற்கு மனிதர்கள் அறியாமையினால், மூட நம்பிக்கையினிமித்தமாய் தூபமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த எசேக்கியா, அவைகளை நொறுக்கி அவைகளை அந்த இடத்திலிருந்து அகற்றினான். இப்படியெல்லாம் தான் உண்மையாய் இருந்தேன் என்று சொல்லி, தன் சாட்சியை அறிவித்து ஜெபித்தபோது, தேவன் மனதிரங்கி அவனுடைய வாழ்க்கையை நீடித்துக் கொடுத்தார். அவனுடைய நோயைக் குணமாக்கினார்.

இன்றைக்கு அருமையான தேவபிள்ளையே, உன்னுடைய வியாதி நீங்க வேண்டும் என்று சொன்னால், இன்று முதல் தேவனின் தொண்டு செய்வதற்கு உன்னை ஒப்புக்கொடு. கர்த்தருக்காய் வாழ்வதற்கு, கர்த்தருக்காய் உழைப்பதற்கு, கர்த்தருக்காய் ஜீவிப்பதற்கு, உன்னை ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் உன்னுடைய ஊழியத்தின் காரியங்களை நினைவு கூரும்பொழுது, அவர் உன் வியாதிகளைக் குணமாக்குகிற தேவனாய் இருக்கிறார்.

என்னுடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்திலே நான் தேவனுடைய ஊழியக்காரர்களுக்காய் அதிகமாய் ஜெபிப்பதுண்டு. ஒரு நாளிலே தேவனுடைய ஊழியர் ஒருவரின் உருவத்தைக் காண்பித்து, இந்த மனிதனுடைய வியாதி நீங்குவதற்காக நீ ஜெபி என்று தேவன் என்னை ஆவியில் உணர்த்தினார். நான் அந்தப் பகுதியிலே ஊழியத்திற்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த மனிதனை நேரடியாக சந்திக்கக் கூடிய சிலாக்கியத்தையும் பெற்றேன். முதல் முறையாய் முன்பின் அறியாத அந்த மனிதனைப் பார்த்து, சகோதரரே இப்படிப்பட்ட வியாதி உங்களுக்கு இருக்கிறது; இந்த வியாதியை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குணமாக்க விரும்புகிறார் என்று சொன்னபொழுது, அந்த மனிதர் மிகவும் மனம் உடைந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தார்.

என் கைகளைப் பிடித்துக்  கொண்டு தயவுசெய்து என் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். அந்த நாளிலே அவருடைய இல்லத்திற்குச் சென்று  ஜெபித்த பொழுது, அவர் கர்த்தருக்காகச் செய்தவைகளை நினைத்து, அவருடைய கண்ணீரைத் துடைக்கும் படியாக, ஒரு அற்புத சுகத்தைக் கொடுத்து, அந்த மனிதனில் காணப்பட்ட நெஞ்சின் கொடூர வேதனையைக் கர்த்தர் குணமாக்கினார். தேவன் அவரை நேசித்த படியினால் கர்த்தருக்கென்று அவர் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்தார், அவருடைய வியாதியைக் குணமாக்கினார். அருமையான சகோதரனே, ஊழியர்களின் சுகநலத்தை விரும்புகிற தேவன், இன்றைக்கு ஊழியத்திற்கென்று உன்னை ஒப்புக்கொடுப்பாயானால், உன் குறைவுகளை மாற்றி, உன் வியாதியினிமித்தமாய் உண்டாகிய கண்ணீரைத் துடைத்து, உன் காயங்களைக் குணமாக்கி உன்னை ஆசீர்வதிக்கிற தேவனாய் இருக்கிறார்.

4. அறியாமையினால் கண்ணீர்

"அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்." யோவான் 20:13 

நம்முடைய கண்ணீருக்குக் காரணம் நம்முடைய அறியாமை. இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்ட பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த வார்த்தைகளை அறியாதவளாய், அந்தச் சத்தியத்தைப் புரியாதவளாய் மரித்தோர் மத்தியிலே இயேசுவைத் தேடினபடியினால் காணமுடியாத வளாய் அழுது கொண்டிருந்தாள். இன்றைக்கு மரித்தோர் மத்தியிலே இயேசுவைத் தேடுகிற அநேக மக்கள் உண்டு. அருமையான சகோதரனே, சகோதரியே, நீ இயேசுவை எந்தவிதமாய் தேடிக் கொண்டிருக்கிறாய்? உன்னுடைய ஆத்துமா ஜீவனுள்ளதாய் மாறி, ஜீவனுள்ளோர் மத்தியில் நீ தேடிக் கொண்டிருக்கிறாயா? மரித்த நிலையில் இருந்து கொண்டு, நீ மரித்தோர் மத்தியில் இயேசுவைத் தேடிக் கொண்டிருப்பாயானால், உன் வாழ்க்கையில் கண்ணீர் தொடர்ந்து காணப்படும்.

இந்த மரியாளுக்குப் பயம் இல்லாதபடியினாலும், இயேசுவின் மேல் அதிக அன்பு இருந்தபடியினாலும், கல்லறைத்தோட்டத்திற்கு ஓடினாள். எல்லாரையும் விட முதலாவது அதிக இருட்டோடே கல்லறைக்கு இயேசுவைத் தேடி வந்தாள். அவளுக்குள்ளாய் இயேசுவைக் குறித்து ஒரு அன்பு இருந்தது. ஆகவே பயமானது புறம்பாக்கப்பட்டது. அவள் அதிகாலையிலே தேடினால் கண்டடைவீர்கள் என்ற வாக்கின்படி, கர்த்தரைத் தேடினாள். ஆனால் காண முடியவில்லை. காரணம் கர்த்தருடைய வார்த்தையை நினைவு கூரவில்லை. கர்த்தரின் பிரசன்னத்தை உயிர்த்தெழுந்த கர்த்தரின் பிரசன்னத்தைப் புரிந்து கொள்ள முடியாத காரணத்தால், கண்ணீர் சிந்தினாள்.

ஆனால் அவளுக்குள்ளாய் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு இருந்த படியினால், அவளைப் பேர் சொல்லி அழைத்து, தம்மை வெளிப்படுத்தினார். இன்றைக்கு உன் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று விருப்பமுடைய ஆண்டவராகிய இயேசு, உன் கண்ணீருக்குக் காரணமான காரியங்களை நினைவுபடுத்தி, அதன் காரணங்களை மாற்றி உன் கண்ணீரை முற்றிலுமாய் துடைக்க வல்லவராய் இருக்கிறார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குகிற தேவன்; எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கிற தேவன்; தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடி முற்றிலும் நீக்கி விடுவார். அருமையான தேவனுடைய பிள்ளையே, அவர் உன் முகத்திலிருக்கிற கண்ணீரைத் துடைப்பார்.

உன்னுடைய அறியாமையின் நிமித்தமாய் நீ கண்ணீர் சிந்திகிறாய் அல்லவா? அந்தக் கண்ணீரையும் அவர் துடைக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். அந்த அன்பின் ஆண்டவர் உன் கண்ணீரைத் துடைப்பதற்கு உன்னை அவருக்கு முற்றிலும் ஒப்புக்கொடு. உனக்கு மெய்யான சமாதானத்தையும், உன் எல்லைகளில் மகிழ்ச்சியையும் கொடுத்து உன்னை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக .       

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்