“...நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்...”

                                                                                                        சங்கீதம் 32:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்வழியை நமக்குக்  காண்பித்து, அதில் நடக்கிற ஒவ்வொரு  மக்களுக்கும், மிகுதியான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறவராய்  ஜீவிக்கிறார். ஒருமுறை பாஷை தெரியாத பகுதிக்கு ஊழியம் செய்ய சென்றோம். அச்சமயத்தில் எந்த வழியாக அந்தப் பகுதிக்கு செல்ல முடியும் என்று தடுமாறிய போது, ஒரு வழிகாட்டும் பலகை சாலை ஓரத்தில் இருந்தது. அதின் எழுத்துக்கள் ஆங்கில மொழியில் இருந்த படியால்,செல்ல வேண்டிய சரியான சாலையிலே சென்று ஊழியத்தைச்  செய்ய முடிந்தது.

இன்று நம் வாழ்வில் எப்படி வாழ்ந்தால், என்ன செய்தால் மெய்யான சந்தோஷத்தை, சமாதானத்தை, ஆதாயத்தை அடைய முடியும் என்று திகைத்து தடுமாறுகிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஒரு மாதிரியை வைத்துப் போயிருக்கிறார். நானே வழி , சத்தியம், ஜீவன் என்றவர், ஒரு நலமான வழியில் நம் செல்ல வேண்டும் என்று விரும்பி அதை நமக்காக ஏற்படுத்தியும் இருக்கிறார். அவர் காட்டிய  வழியில் செல்ல வேண்டுமானால், அவரின் அடிச்சுவடுகளைப்  பின்பற்ற வேண்டும். 'மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.' என்று நீதி.16:25ல் பார்க்கிறோம். 'வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்' என்ற சங். 139:24ன் படி நாம் வாழ தீர்மானித்தால் மெய்யான சுகவாழ்வு மலர்ந்து விடும்.

நித்தமும் உன்னை நடத்துவேன் என்ற அன்பின் தேவன் நம்மை நலமான பாதையில், இடறாத  பாதையில் நம்மை நன்கு பத்திரமாய் நடத்துவார். இதற்குரிய வழியை நமக்குக்  காட்டி,  அதிலே செல்ல உதவி செய்வார். இதை அறியாது புரியாது பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்து திரிகிறோம். அன்பின் சகோதரனே, சகோதரியே, இன்று முதல் அவர் காட்டும் வழியில் நடக்க நாம் தீர்மானிக்கும்போது, நமக்கு எதிராக தோன்றும் எல்லா அலைகளையும் மேற்கொண்டு விடுகிறோம். நாம் எவ்வண்ணமாக தீர்மானத்தை நிறைவேற்று கிறோமோ அந்த அளவில் நம் ஆவியில் நாம்  பெலனடைந்து விடுவோம். எளிதாக எந்த சூழ்நிலையிலும் கலங்காது கர்த்தர் காண்பிக்கும் வழியில் செல்ல முடியும். இந்த தீர்மானத்தை நாம்  சரியாக செய்து பின்பற்றாமல் இருந்தால் பலவித குழப்பங்களும், சோர்வுகளும் சோதனைகளும் தோன்றி விடும்.

I. அவர் காட்டும் பாதையில் நாம் செல்ல வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

1. பிரித்தெடுக்கப்பட வேண்டும்

"கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ." ஆதியாகமம் 12:1

நாம்  அவர் பாதையில் செல்ல வேண்டுமானால் முதலாவது நாம்  பிரித்தெடுக்கப்பட நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். இன்று பலவிதமான சடங்காச்சாரங்கள் நாம்  வாழும் தேசத்தில் நிறைவாய்  இருக்கிறது. இவ்வித சடங்காச்சாரங்களை விட்டுவிட வேண்டும். இந்தச் சடங்காச்சாரங்களை ஏன் அனுசரிக்கிறோம் என்று  அறியாது தொடர்ந்து செய்து வருகிறோம்.

தகப்பனாரின் வீட்டின் பழக்கங்கள், வழக்கங்கள் இருக்கிறது. மாமனின் மாலை, நாத்தனார் மோதிரம் என்று சொல்லப்படும் சடங்காச்சாரங்கள் இருக்கிறது. விதவையானவள் முன்னே வரக்கூடாது என்று சொல்கிற கும்பல்களும் உண்டு. ஆபிரகாமை அழைத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்ற அன்பின் தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு இவைகளை விட்டுப் புறப்பட்டு வரவேண்டும் என்று கூறினார். நம் வாழ்விலும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல வழி காட்டும் அன்பின் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வும், செய்கையும் ஆகும். இவ்வாறு செய்யும் போது  உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்  என்ற வாக்கின் ஆசீர்வாத நிறைவைப் பெறுவோம்.

2. கர்த்தருடைய வார்த்தை நம் வழியைக் காட்டும்

"உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை..." உபாகமம் 15:6

பொருளாதார வழியைக் காட்டும் கர்த்தரின் ஆலோசனை வார்த்தையாகும் இது. இந்த வார்த்தையை நாம்  கைக்கொள்ளும் போது, பொருளாதார செழிப்பைக் காணச் செய்வார்.  இந்த ஜீவ  வார்த்தைகள் நமக்கு ஆலோசனையின் வார்த்தைகளாய்  இருக்கிறது. கர்த்தர் நமக்குக்  காட்டும் வழியை அறிந்து ஆசீர்வதிக்கப்பட இந்த வார்த்தைக்குக்  கீழ்ப்படிய வேண்டும். என் கடன் தொல்லை நீங்கின காரியத்தை அடிக்கடி யோசிப்பதுண்டு. வேலை பார்த்த நாட்களில் யாரும் காணிக்கை கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன். இரட்சிக்கப்படுமுன் ஏதாவது  காரணம்  கூறி சக  ஆசிரியர்கள் 10 பேரிடம் கடன் வாங்கிருந்தேன். சிலரிடம் வாங்கின கடன் ஆசிரியர்களின் Co-operative society-ல்  இருந்தது. சம்பளத்தன்று தலைமை குமஸ்தா  இன்று சம்பளம், நீங்கள் இவ்வளவு பணம்  கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்தப்  பணத்தை ஏதாவது விதத்தில் கொடுத்து விடுவேன். இத்துடன் 3 P.F. கடன் இருந்தது. என் மனைவியின் நகைகளை வங்கியில் கடன் வாங்கக் கொடுத்து விட்டேன். நானும் என் மனைவியும் ஆசிரியராய்  பணிபுரிந்தும் கடன் தொல்லையில் சிக்கி விட்டோம். என் மனைவிக்கு எந்தப்  பணக்கடன் காரியங்களும் தெரியாது. அவளின் சம்பளத்தை வாங்கி, ஆசிரியர்களின் instalment-ல் கொடுத்துவிட்டு, கொஞ்ச பணத்தில் வீட்டு செலவுக்குச்  செலவழித்து வந்தேன். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை ஒரே கடையில் தான்  வாங்கினேன். ஒவ்வொரு மாதமும்  கொஞ்சம் ரூபாய் பாக்கி வைத்து விடுவேன். பற்றாக்குறைக்கு மாதா  மாதம் மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருந்தேன். என்று நான்  இரட்சிக்கப்பட்டு இந்த உபாகமம்  15:6ஐ  தியானித்தேனோ அன்று என் உள்ளத்தில் கடன் வாங்காத வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தினால்  பெற்று விடமுடியும் என்று உணர்வு அடைந்தேன்.

  நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வார்த்தை எனக்கு வழிகாட்டினது. கடன் வாங்காத வாழ்க்கைக்காக முதலாவது இனி கடன் வாங்காதிருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் .இதைக் கடைபிடிக்க கையில் இருந்த பணத்தைக் கொண்டு தான்  வீட்டுக்கு வேண்டிய சமையல் பொருட்களை வாங்க வேண்டும் என்று தீர்மானித்து,பொருட்களை வாங்கினேன். பணம் போதவில்லை, அரிசியைக் குறைத்து, கையில் இருந்த பணத்திற்கு மாத்திரம் பொருள் வாங்கி வந்தேன். அந்த மதம் 20ம் தேதி ஆனபோது என் மனைவி நாளைக்கு மாத்திரம் தான் சமையலுக்கு அரிசி இருக்கிறது என்றாள். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்ப தினால் நீயோ கடன் வாங்காதிருப்பாய்  என்று இருக்கிறதே என்று உள்ளத்தில் எண்ணி, அந்த இரவில் ஜெபிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது ஒரு அமர்ந்த சத்தம் காதில் தொனித்தது. எழுந்து அரிசி இருக்கும் பாத்திரத்தை ஆசீர்வதித்து ஜெபி என்று. உடனே உற்சாகமாய் செய்தேன். உள்ளத்தில் தேவனைத் துதித்து விட்டு படுக்க சென்று விட்டேன். காலையில் என் மனைவியைப் பார்த்து எவ்வளவு அரிசி தேவையோ அவ்வளவையும் எடுத்து பயன்படுத்து என்று கூறினேன். அதன்படி அவளும் செய்தாள். சாரிபாத்  விதவை வீட்டில், மா பாத்திரத்திலிருந்த மாவும், எண்ணெயும் குறையாதது போல் ஒரு அற்புதத்தை நாங்கள்  கண்டோம். அவர் சொன்னபடி கீழ்ப்படியும்போது, மெய்யாகவே நம்மை அவர் ஆசீர்வதித்து போஷிப்பார் என்று கர்த்தரின் மீதும், அவரின் வார்த்தையின் மீதும், விசுவாசம் பெருகினது. அடுத்த மாதம்  எனது ஒரு P.F. கடன் முடிந்தபடியால் என் மாத  சம்பளத்தன்று பணம் கொடுக்கும் நிலை மாறியது. மேலும் ஆசிரியர்களின் Co-operative சங்கத்திலிருந்து விலகினேன். என் கடன் தொகை எல்லாம் பிடித்து சில ஆயிரம் கிடைத்தது. அதைக் கொண்டு அதிகமான வட்டியுள்ள கடனை முடித்தேன். இவ்விதமாக இந்த தேவ வசனம் கடன் இல்லாத வாழ்க்கை வாழ  என்னை நடத்தியது. மூன்று ஆண்டுகளில் நான் கர்த்தரிடம் சொன்னபடி என் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். கர்த்தரின் முழுநேர ஊழியனாக மாறினேன்.

அன்பு சகோதரனே, சகோதரியே, கடனில்லாத வாழ்க்கை வாழ  இந்த தேவ வசனம் எனக்கு வழிகாட்டி நடத்தியது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடன் தொல்லையில் சிக்கி தவிப்பீர்கள் என்றால், இன்று இந்த வார்த்தைக்கு இடம் கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஆசீர்வதித்த போது ஐயாயிரம் பேருக்கு போதுமானதாக மாறிய அற்புதத்தை அனுபவிப்பீர்கள். அத்துடன் 12 கூடையில் மீதியைச் சேர்த்தது போல் 12 மாதமும் நீங்கள் மீத்து வைக்கத்தக்கதாக உங்கள் வாழ்க்கை செழிப்பும் சிறப்புமடையும்.

3. சொப்பனத்தின் மூலம் வழிகாட்டுவார்

"நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வங்கி நின்றது என்றான்." ஆதியாகமம் 37:7

யோசேப்புக்கு கர்த்தர் அவனது எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று திட்டமாக இந்த சொப்பனத்தின்  மூலம் காண்பித்தார். இதைப்  போல அடுத்த சொப்பனம் கண்டான். கர்த்தர் சொப்பனத்தை உறுதிப்படுத்தினார் என்பதை நாம் காணமுடிகிறது. அன்பின் தேவப்பிள்ளையே, சொப்பனம் நம் வாழ்வில் அருளப்படும் என்றால் அது ஆசீர்வாதமானது. தேவன் நம்மோடு பேசுகிற ஒருவிதம் சொப்பனமாகும். தீர்க்கதரிசனங்களின் ஒருபகுதி தான்  இந்த சொப்பனங்கள் ஆகும். 'அப்பொழுது அவர், என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.' எண். 12:6ல் பார்க்கிறோம். இன்று பலவிதமான சொப்பனங்களை வேதம் தெளிவாக அறிவித்திருக்கிறது.  'அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு'   என யோபு 33:16ல் பார்க்கிறோம். யோவேல் 2:28ல் 'மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்' என்று கர்த்தர் தெளிவாக கூறியுள்ளார். சில சொப்பனங்கள் நித்திரை தெளிந்தவுடன்  ஒழிந்து போகிறது என்று சங்.73:20ல் பார்க்கிறோம். சில சொப்பனங்கள் பிர.5:7ல் உள்ளது போல மாயையான சொப்பனங்கள். சில சொப்பனங்கள் தொல்லையின் திரட்சியினால் வருகிறது என்று பிர.5:3ல் அறியமுடிகிறது. இவ்விதமாக பல சொப்பனங்கள் மனுஷனுக்கு வருகிறது. சில சொப்பனங்கள் மனிதனைக் கலங்கப் பண்ணுகிறது. தேவனுடைய சொப்பனங்கள் நம் வாழ்வுக்கு மிக அவசியமானதாய் இருக்கிறது.

சொப்பனங்கள் மூலம் நாம் பாவம் செய்யாதபடி கர்த்தர் நம்மை எச்சரித்து காக்கிறார். ஆதி. 20:3ல் 'தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய் ; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.' அவன் பாவம் செய்யாதபடி சொப்பனத்தின்  மூலம் எச்சரித்து தடுத்தார். தேவன் லாபானுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீ யாக்கோபோடே நன்மையே அன்றி தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். அங்கு வீண் வார்த்தைகளுக்கு விலக்கிக் காத்தார். வான  சாஸ்திரிகள் பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஸ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டு, தங்கள் காணிக்கைகளை வைத்தபின்பு சொப்பனத்தினால் எச்சரிக்கப்பட்டு ஏரோதிடத்திற்குத் திரும்பி போகாமல் வேறு வழியாக தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். இவ்விதமாக தேவன் தம்முடைய சொப்பனங்களினால் பாவம் செய்யாதிருக்க எச்சரிக்கிறார், வழிநடத்துகிறார். யாக்கோபுக்குத்  தேவன் காட்டின சொப்பனத்தினால் அவன் நலமான ஆடுகளைத் தன் சம்பளமாக பெற்று ஆசீர்வதிக்கப்பட்டான்.

4. தெரிந்து கொண்டவர்களுக்கு வழி  காட்டுவார்

"...கர்த்தர் நீ போ அவன் புற ஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்." அப்போஸ்தலர் 9:15

"அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டு மென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்." அப்போஸ்தலர் 9:16

இன்று கர்த்தர் தமக்கென்று அநேகரை அழைத்துக் கொண்டே யிருக்கிறார். அன்று 12 சீஷர்களைத் தெரிந்து கொண்டவர் இன்றும் தமக்காக தெரிந்து கொண்டே இருக்கிறார். 1 கொரிந்தியர் 1:27ல்  'ஞானிகளை வெட்கப் படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 'பைத்தியமானவர்களைத் தெரிந்து கொண்ட தேவன் அவர்களைத் தமது விசேஷித்த ஞானத்தால் நிறைத்து, சகல காரியங்களையும்  சீராய்  செய்ய மேன்மையுள்ளவர்களாய் மாற்றி விடுகிறார். நன்கு படியாதவர்களைத் தமக்கு என்று கர்த்தர் தெரிந்து கொண்டு மிகுதியாக வல்லமையாக பயன்படுத்துகிறார். 'உள்ளவைகளை அவமாக்கும்பட , உலகத்தின் இழிவானவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் , இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார்' என்று 1கொரிந்தியர் 1:28 ல் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பேதுருவைத் தெரிந்து கொண்டார். 'பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களளென்றும் அறிந்தபடியினால் ஆச்சர்யப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.' இதனை அப்போஸ்தலர் 4:13 ல் பார்க்கிறோம். இந்தப் பேதுருவைத் தமது சீஷராக தெரிந்துகொண்டு அவனையே தமக்குப்பின்  ஊழியம் செய்யும்படி நியமித்தார். அன்பு சகோதரனே, சகோதரியே, உன்னை கர்த்தர் நேசித்து தமக்காக தன் பணிசெய்ய உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார்.  அடிமையாகக் கொண்டு வரப்பட்ட தானியேலைத் தம் கருவியாக மாற்றினார். இச்சையடக்கத்துடன் தன்னை தீட்டுப்படுத்தாதபடி காத்துகொண்ட அவனுக்குள்  விசேஷித்த ஞானத்தை அருளிச் செய்து தம் பணி சிறக்க பயன்படுத்தினார். 'பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டாரென்று அறியுங்கள் ' என்று சங்கீதம் 4:3ல் பார்க்க முடிகிறது. பக்தி என்றால் அன்பின் செயலும், பரிசுத்தமும் நிறைந்த நல்வாழ்க்கை வாழ்வதாகும். இதனை யாக் 1:27ல் காண்கிறோம்.

சவுலைத் தெரிந்து கொண்டு கர்த்தரின் நாமத்தினிமித்தம் மிகவும் பாடுபடவேண்டும் என்று காட்டுவேன் என்று அனனியா சீஷனிடம் அறிவித்ததை நாம் அப் 9:16ல் பார்க்க முடிகிறது. தமக்காக தெரிந்து கொள்கிறவர்களுக்கு வழியைக் காட்டுகிறார்.

நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக்  காட்டுவேன் என்ற கர்த்தரின் செயலை ஆராயும்போது, இன்னும் நாம் கர்த்தருடன் நெருங்கி வாழ்வதற்கு அது ஆசீர்வாதமாக அமையும். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்ற  மனிதர்களைக் குறித்து பார்ப்போம்.

  1. தன் மகனை பலியிடவேண்டிய ஆபிரகாமுக்கு ஆட்டுக்கடாவைக் காண்பித்தார்

"ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய் , கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப்  பதிலாகத் தகனபலியிட்டான்." ஆதியாகமம் 22:13

கர்த்தராகிய தேவனின் அழைப்பின்படி, தன் தேசம், தகப்பனின் வீடு எல்லாவற்றையும் விட்டு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வுக்குத் தன்னை முற்றிலும் அற்பணித்த ஆபிரகாமுக்கு, தான் சொன்னபடி ஆண்  குழந்தையைக் கொடுத்தார். தனது 100- வது  வயதில் பெற்ற  அந்தக் குமாரனைத் தகனபலியிட வேண்டும் என்று தேவன் கூறினார். கர்த்தராகிய தேவன் சொன்னபடி அந்த இடத்திற்கு சென்று, ஒரு பலிபீடத்தை உண்டாக்கி கட்டைகளை அடுக்கி, அந்த பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின் மேல் அவனைக் கிடத்தினான். பலியிட கத்தியை எடுத்த ஆபிரகாமை கூப்பிட்டு  பிள்ளையின் மேல் உன் கையைப் போடாதே என்று தடுத்து அதற்கு பதிலாக ஆபிரகாம் தான் கண்ட ஆட்டுக் கடாவை பலியிட நடத்தினார். ஆபிராகாமைச் சோதித்த தேவன் அவனது கீழ்ப்படிதலையும், கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அறிந்தார். மேலான ஆசீர்வாதத்தை அருளினார். ஆபிரகாம் கர்த்தர் சொன்னபடி செய்ய தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்த செயலினால் தேவன் அவனை என் சிநேகிதனாகிய ஆபிரகாம் என்றார். விசுவாசிகளுக்கு தகப்பனாகவும் மாறினான். நம்முடைய வாழ்விலும் அழைப்புக்கு பாத்திரராக அற்பணிக்கும் போது நாம் சோதிக்கப்படுகிறோம். யோபு 23:10 ல் 'அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்' என்றதுபோல நாமும் மேன்மையடைந்து அவர் நடத்தும் காரியத்தை கண்டு ஆசீர்வதிக்கப்படுவோம்.

  1. அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையானவர்களை வனாந்திர வழியாக நடத்தினார்.

"பார்வோன் ஜனங்களை போகவிட்டபின்; ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால்  மனமடிந்து , எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல் "யாத்திராகமம் 13:17

"சிவந்த சமுத்திரத்தின் வனாந்திரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்." யாத்திராகமம் 13:18

நம்மை நேசிக்கும் தேவன், நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுவேன் என்று சொன்னவர், விடுதலையான இஸ்ரவேல் மக்களை வனாந்திர வழியாகச் செல்ல வழிகாட்டி நடத்தினார். வனாந்திரம்  என்றாலே அதிக கடினமான வாழ்க்கையின் பாதையில் நடத்தினார். வனாந்திரம் என்றாலே அதிக கடினமான வாழ்க்கையின் பாதையில்  நடத்தினார். ஏன் என்றால் பின்மாற்றம் அடைந்து விடுவோம் என்ற காரணத்தையும் சொல்லியிருக்கிறார். இன்று அநேகர் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று வாழ ஆரம்பித்தபின் ஏதாவது காரியத்தில் தடை ஏற்பட்டால் பின்மாற்றம் அடைவதை பார்க்க முடிகிறது. தம் வல்லமையால் மீட்ட தம்முடைய ஜனங்கள் பின்மாற்றம் அடையாதிருப்பதற்காக, அவர்களுக்கு ஒரு சுற்றுப் பாதையைக் கர்த்தர் காண்பித்தார். இந்த வனாந்திரத்தை ஏதேன் தோட்டத்தை போல மாற்ற வல்லவர். வனாந்திரத்தில் வழியை உண்டு பண்ணுபவர். நமது சகலவிதமான நன்மைக்காக இந்த வனாந்திர வழியில் நடத்துகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உவமானமாக காணாமற்போன ஆட்டைக் குறித்து கூறியுள்ளார். அதில் 100 ஆடுகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணுற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலே காணாமற் போன ஆட்டை  கண்டுபிடிக்கும் வரை தேடித் திரியானோ? என்று லூக்கா 15:4ல் பார்க்கிறோம்.ஏன் மேய்ப்பன் தன்னிடம் இருந்த ஆட்டை வனாந்திரத்தில் விட்டுச் சென்றான் என்று ஆராயும்போது, அவைகள் சிதறிச் சென்று விடாதபடி இருக்க என்று நாம்  உணரமுடிகிறது. வனாந்திரத்தில் பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்தில் போய்  உட்கார்ந்து சத்தமிட்டு அழுத ஆகாரின் கண்களைத் திறந்து வனாந்திரத்திலே நீர்த்துரவைக் காண்பித்த தேவன் இன்றும் ஜீவிக்கிறார். சகலவற்றையும் சிறப்பாக செய்ய வல்லவர் நம் வழியைச் செவ்வைப்படுத்தி, வழிநடத்தி கைவிடாதிருப்பார் .

2.வரும் காலத்தில் வர உள்ள பஞ்சத்தைக் சொப்பனத்தில் தெரிவித்து வழிகாட்டி நடத்தினார்

"பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்கு காண்பித்திருக்கிறார்." ஆதியாகமம் 41:28

சொப்பனத்தினால் நமக்கு நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தெரிவிக்கும் தேவன் மகிமை நிறைந்தவர். தம்முடைய ஜனங்களை நேசித்து நடக்க இருக்கிற காரியங்களைச் சொப்பனத்தினால் பார்வோனுக்கு தெரிவித்தார். ஏழுவருஷம் செழிப்பும் பரிபூரணமான விளைச்சலும், அதன்பின் பஞ்சம் உண்டாகும் ஏழு வருஷமும் என்பதை முன் அறிவித்து, அதற்காக செய்ய வேண்டிய காரியத்தின் மூலம் கர்த்தர் அன்று பார்வோனுக்கு தெரிவித்து வழி காட்டினார். சொப்பனத்தை விவரித்துச் சொன்ன யோசேப்பையே பார்வோன் அதற்கு என்று அதிகாரியாக இருந்து செயல்பட வைத்தான். கர்த்தரின் அனாதி தீர்மானத்தின்படி அடிமையாக தன்  சகோதரரால் விற்கப்பட்ட யோசேப்பு, பொய்யான குற்றச்சாட்டினால் சிறைச்சாலைக்கு தள்ளப்பட்டு வேதனை யடைந்த இந்த யோசேப்பை , ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்க உயர்த்தினார். இன்று கர்த்தருக்குப் தூய்மையாக வாழும் சகோதரனே சகோதரியே, உன்னை நேசிக்கும் கர்த்தர் உன்ன்னைக் கைவிடமாட்டார். உன் உடன் பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருக்கிறாயா? கர்த்தருக்கு பிரியமாய் மாத்திரம் நடக்க இடம் கொடு. ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்துவேன் என்ற கர்த்தாதி கர்த்தர் உனக்குச் சொன்னபடியே உன்னை ஆசீர்வதிப்பார். சிறைச்சாலையில் இருந்த யோசேப்பு இப்பொழுது அரண்மனையில் இருக்க உயர்த்தின தேவன் உன்னையும் உயர்த்துவார். இந்த யோசேப்பின் வாழ்க்கையை முன் அவனுக்கு தெரிவித்தபடியே வழிநடத்தினார். அவனது அரிக்கட்டு நிமிர்ந்து நிற்கவும், சகோதரர் அரிக்கட்டுகள் வணங்கி இருந்தது என்ற காரியம் நிறைவேறியது. முன்னதாகவே அறிவித்து வழிநடத்திய தேவன் அவனை நடத்தினார். ஆசீர்வதித்தார். மேன்மைப்படுத்தினார்.

4)நெருக்கத்தில் இருந்த மோசேக்கு மரத்தைக் காண்பித்து வழிநடத்தினார்.

"அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து; என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்." யாத்திராகம் 15:24

"மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று…" யாத்திராகமம் 15:25

மோசே இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்ததனத்தில் இருந்து விடுதலை அடைவதற்காக அழைக்கப்பட்டவன். அற்புதங்களினாலும், அடையாளங் களினாலும், அடிமைத்தனத்தினின்று விடுதலை பெற்று தந்த மனிதன், வனாந்திர வழியாக ஜனங்களை வழிநடத்தினான். மூன்று நாள் தண்ணீர் இல்லாதவர்களுக்கு  மாராவிற்கு வந்தபோது தண்ணீர் கிடைத்தது. மிகுந்த கசப்பாயிருந்தது.ஜனங்கள் மோசேயிடம் எண்ணத்தை குடிப்போம் என்று கூறி முறுமுறுக்க தொடங்கினார்கள். நெருக்கத்தில் இருந்த மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காண்பித்து வழிநடத்தினார். அந்த மரத்தைத் தண்ணீரில் போட்டவுடனே மாராவின் தண்ணீர் மதுரமாக மாறியது.

இன்று வாழ்க்கை பலவிதமான போராட்டத்துடன் இருக்கிறது. கசந்து போன வாழ்க்கை என்று கண்ணீருடனும் , கவலையுடனும் இருக்கிறாயா? நீ நடக்க வேண்டிய வழியைக் காட்டுவேன் என்றவர் இன்று உனக்கும் எனக்கும் காண்பிக்கும் ஒன்று தமது சிலுவை மரமாகும். இந்தச் சிலுவையின் அன்பை, வல்லமையை நாம் அறிந்து வாழ இடம் கொடுத்தால் சகல கசப்பும், சஞ்சலமும், நீங்கிய நல்வாழ்வு மலர்ந்து விடும். இந்த அன்பின் செயலை வெளிப்படுத்தும் அந்த சிலுவையின் மேன்மையை அறிந்து உணர்ந்து வாழ்வோமாக. சகலமும் சீராகும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில் ,

சகோ.C.எபனேசர் பால் .