வாலிபர்களுக்காக நடைபெறும் ஊழியங்களுக்காக  ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். ஜெபத்தைக் கேட்கிற தேவனே, இன்று எங்கள் தேசத்தில், எங்கள் பகுதியில் நடைபெறும் சகல ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம். விசேஷமாக வாலிபர் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன். வாலிபர்கள் பலவிதமான பாவப் பழக்கத்துக்கு அடிமையாகி, அவைகளைவிட்டு விடுதலையடைய முடியாது தவிக்கின்றனர். கர்த்தாவே, இன்று என் ஜெபத்தைக் கேட்டு அவர்கள் விட முடியாத அத்தனை தீய தவறான பழக்கங்களிலிருந்து விடுபட உதவி செய்யும். வாலிப பருவத்தில் சிருஷ்டிகரை நினை என்ற வார்த்தையை அறிந்து, உணர்ந்து வாலிபப் பருவத்திலேயே கிறிஸ்துவின் அன்பையும் பிதாவின் வல்லமையையும் பெற்றுக் கொண்டவர்களாய் மாற உதவி செய்யும். கர்த்தாவே, வாலிபப் பருவத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், தோல்விகள், துக்கங்கள் முழுமையாக மாறிட இன்றே உதவி செய்யும். தங்கள் நேரத்தை வீணாக செலவழித்து விடாதபடி அதிகமாக உம் பாதத்தில் தங்களைத் தாழ்த்த உதவிச் செய்யும். வீணாக போனில் விளையாடாதபடி தங்களை அவைகளுக்கு விலக்கிக் காத்துக் கொள்ளச் செய்யும். தவறான கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு விலகியிருக்க நீர் உதவி செய்யும். வாலிபப் பருவம் வாழ்வில் முக்கியமான காலம் என்று அறிந்து வேதத்தின் மகத்துவங்களைக் கற்றுக்கொள்ளச் செய்யும். வாலிபப் பருவத்திலேயே ஆலயத்தில் நாட்டப்பட்ட விருட்சங்களாக இருக்க உதவி செய்யும். வழி விலகி சீர் கெட்டுப் போய் விடாதபடி, ஜெபிக்கிற வாலிபர்களை எழுப்பும். கர்த்தாவே, தங்களின் தாலந்துகளைக் கர்த்தருடைய நாமம் உயர்த்தப்பட, பறை சாற்றப்பட பயன்படுத்த உதவி செய்யும். வாலிபர்கள் மத்தியில் நடைபெறும் அனைத்து ஊழியங்களையும் ஆசீர்வதியும். வாலிபர்களில் உள்ள சந்தேகங்கள், வீணான நம்பிக்கை மாற, ஏற்ற தேவ வசனங்களை பிரசங்கிக்க உதவி செய்யும். இன்னும் தங்களின் சரீர இச்சைகளை விட்டு விலகி தானியேலைப் போல, யோசேப்பைப்போல ஏற்ற தகுதியான புத்தியை, அறிவை கர்த்தரிடம் பெற்றுக்கொள்ளச் செய்யும். இன்று செயல்படுகிற வாலிப இயக்கங்கள் உற்சாகமடைந்து அநேக வாலிபர்களைக் கிறிஸ்துவுக்காக வாழ எழுப்பும். இன்று வீடுகளில் கசப்புடன் வாழும் மக்களை மாற்றும். ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.