"...துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்."

                                                                                                                             நாகூம் 1:15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

இவ்வுலக வாழ்வில் பலதரப்பட்ட மக்களை நாம் சந்திக்கிறோம். சிலர் உதவி செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்கள். சிலர் பொறாமை கொண்டவர்கள். சிலர் நம் அந்தஸ்தைக் காட்டிலும் பெரியவனாகிறானே என்று பொறாமை கொண்டவர்களாய் இருக்கிறார்கள். என் வீட்டு பிள்ளைகளை விட நன்கு படிக்கிறார்களே என்ற தீய எண்ணம் உடையவர்களைப் பார்க்கிறோம். இவன் என்னை மதிப்பதில்லை. இந்த ஜாதியார், இந்த ஊர் மக்கள் என்னை கனப்படுத்துவதில்லை, என்று இவர்கள் அழிவார்கள் என்ற எண்ணமுடையவர்களை 'துஷ்டன் ' என்றால் மிகையாகாது.

எஸ்தர் புத்தகத்தில் 'ஆமான்' என்பவனை ராஜா மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்தி வைத்தான். அரமனை  வாசலிலிருந்த ராஜாவின் ஊழியக்காரர் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள். இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். ஆனால் 'மொர்தெகாய்' என்பவன் அவனை வணங்கவுமில்லை. நமஸ்கரிக்கவு மில்லை. ராஜாவின் ஊழியக்காரர்கள் ஏன் ராஜாவின் கட்டளையை மீறுகிறாய் என்று கேட்டபோது, நான் யூதன் என்று அவர்களுக்கு அறிவித்திருந்தான். ராஜாவின் ஊழியக்காரர்கள் மொர்தெகாயின் வார்த்தைகள் நிலை நிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள். ஆமான் மொர்தெகாயை மாத்திரமல்ல யூதரையெல்லாம் சங்கரிக்க வகை தேடினான். அதை நிறைவேற்ற ராஜாவின் உத்தரவையும் பெற்று குறித்த நாளில் அழிக்க திட்டமிட்டான். எஸ்தருக்கு ராஜாவின் கண்களில் தயவு கிடைத்தபோது, ராஜாவுக்கும், ஆமானுக்கும் விருந்து செய்தாள். ஆமான் அப்பந்தியில் இருக்கும்போது எங்களைக்  கொன்று நிர்மூலமாக்கப்படவேண்டும் என்று விற்கப்பட்டுவிட்டோம் என்றாள். ராஜா எஸ்தரைப் பார்த்து இப்படிச் செய்ய துணிகரங் கொண்டவன் யார்? அவன் எங்கே என்றான். அப்பொழுது எஸ்தர் அந்த துஷ்ட மனிதன் இந்த ஆமான் என்று சொன்னபோது, ராஜா பந்தியை விட்டெழுந்து அரமனை தோட்டத்திற்கு போனான். அவன் திரும்ப உள்ளே வந்த போது தான் கண்ட காரியங்களினால் ஆமானை தூக்கிலிட்டான்.

துஷ்டன் என்பவன் அழிக்கும், கொல்லும் எண்ணமும் திட்டமும் உடையவன். இயேசு கிறிஸ்து யோவான் 10:10ல் திருடன் திருடவும் கொல்லவும், அழிக்கவும் வருகிறான் என்று சொன்னபடி துஷ்டன் என்பவன் பிசாசானவனாகும்.

துஷ்டன் ஏன் வருகிறான்?

  1. பிரிவினையை உண்டாக்குவதற்கு

"...அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்." ஆதியாகமம் 3:23

 தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் தேவன் வைத்தார். பிசாசானவன் இதைக் கெடுக்க வேண்டும், இந்த உறவு மாறி பிரிய வேண்டும் என்று செயல்பட்டான். தந்திரமான உருவத்தில் வந்து, தேவனுடைய வார்த்தைக்கு மாறாக செயல்படச் செய்தான், புசிக்க வேண்டாம் என்ற கனியை பொய்யைச் சொல்லி சாப்பிட வைத்து, தேவனுக்கும் மனுஷனுக்கும் பிரிவினையை ஏற்படுத்தினான். அதினால் மனிதன் தேவ சாயலை இழந்து பாடுகளுக்கு உட்பட்டான்.  'நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; 'நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் ' என்ற சாபத்திற்கு ஆளானான்.

சர்ப்பத்தின் சாயலில் வந்த பிசாசின் சத்தத்திற்கு செவி கொடுத்த மனிதன், தேவ சாயலை இழந்தான். சாவாமையுடைய தேவனின் மகிமையை இழந்து சாவுக்குட்பட்டான். இருளும் வேதனையுமுடைய வாழ்வை வாழ வேண்டிய பாடுகள் பெருகிற்று.

இன்று பல குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றனர். இளம் வயதிலேயே திருமணமான மக்கள் Divorse வழக்குகளை நடத்துகிறார்கள். முதிர் வயதுள்ளோரும் இவ்விதமான பிரிவினைக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினை மிக ஆச்சர்யமாக இருந்தது. எப்படி பிசாசானவன் பிரிவினையைக்  கொண்டு வருகிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கணவர் மனைவி இருவரும் அக்குடும்பத்தில் ஆசிரியராக இருந்தார்கள். கணவன் காலையில் சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளையும், சில தினங்களில் மட்டனும்  வாங்கித் தருவாராம். கணவர் காலையில் வேலைக்கு செல்பவர் மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவது இவரின் வழக்கம். மதிய சாப்பாடு சாப்பிட உட்கார்ந்தால், தான் சமைக்க வாங்கி வந்த மட்டன் இல்லையே என்று சற்று வருத்தத்துடனும், கோபத்துடனும் உள்ளதை சாப்பிட்டு விட்டு மதிய நேர  வேலைக்குச் சென்று விடுவாராம். மாலை நேரத்தில் வரும் அந்த சகோதரி தனக்கு மட்டன் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டு சென்று விட்டாரே என்ற கோபம் அவளுக்கு ஏற்படுமாம். அந்த சகோதரியில் இருந்த தீய ஆவியானது எப்படி பிரிவினையை உண்டாக்கினது என்று சொன்னபோது ஆச்சரியமடைந்தேன்.

பலவிதமான தந்திரமான காரியத்தினால் திருமணத்தில் இணைக்கப் பட்டவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். கீழ்ப்படியாமையினால், ஒருவரை யொருவர் நம்பாதபடியினால், இச்சையடக்கம் இல்லாதபடியினால், பலவிதங்களில் சின்ன சின்ன காரியங்களினால் குடும்பங்கள் பிரிந்து போகிறது. சில குடும்பங்களில் பிள்ளைகள் பெற்றோரை கனப்படுத்தாது பேசாமல், உதவிச் செய்யாமல் இன்று பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். துஷ்டனாகிய பிசாசானவன் பிரிவினையின் தந்திர செயலினால்,  'இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையையும் எத்தனை இன்பமுமானது' என்ற சங்கீதம்.133:1 ன் மேன்மையை இழந்து போகிறார்கள்.

2. இவ்வுலகத்தின் காரியங்களுக்கு அடிமைப்படுத்த வருகிறான்

"...இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்."

கலாத்தியர்  4:3

இவ்வுலக வழிபாடுகள் மிகுதியாக இன்று உலக மக்களை மேற்கொண்டு இருக்கிறது. நான் விளையாட்டு ஆசிரியராக இருந்தபோது, கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஜெபம் செய்து விட்டு, விளையாட மைதானத்தில் இரங்க அனுப்பிடுவேன். மற்ற குழுவினர் மைதானத்தில் இரங்கும்போது தங்கள் வலது கையை வைத்து பூமியைத் தொட்டு தங்கள் கண்களில் ஒத்திக் கொள்வார்கள். மிதிக்க வேண்டிய மண்ணை நேசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். வேதத்துக்கு மாறான வழிபாடுகளை, தங்கள் வாழ்க்கையிலும், தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் செய்கிறார்கள். பிரசங்கி 9:6 ல் 'மரித்துப் போனவர்களின் சினேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்து போயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை' என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தையை அறியாது எனக்குப் பிரியமானவர்கள், என்னை நேசித்தவர்கள் என்று அவர்களின் படங்களை நம் மணிபர்ஸ், போனில்  இன்னும் வீட்டு சுவர்களில் அலங்காரமாக பிரியமானவர்கள் என்று வைப்பதால் பிசாசானவன் அவர்களில் வந்த அத்தனை வேதனைகளையும்  நம் வாழ்வில் கொண்டு வந்து விடுவான். அதினால் வேதனையும் பாடும் உண்டாகி விடும்.

ஒருமுறை சகோதரி ஒருவர் breast கேன்சரில் பாதிப்படைந்தார்கள். அவர்களுக்காக ஜெபிக்க சென்ற போது, ஏன் எனக்கு இந்த வியாதி வந்தது என்று கேட்டார்கள். இதைப்  போல வியாதியினால் மரித்துப்போன ஒருவரை அடிக்கடி நினைக்கிறீர்கள். அதன் காரணமாக பிசாசானவன் இந்த வியாதியை உங்களில் கொண்டு வந்து விட்டான் என்றேன். அது என் அம்மாதான். அவர்கள் இந்த breast கேன்சரில் தான் இறந்தார்கள். அவர்களின் புகைப்படத்தை என் படுக்கைக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்றார்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவை நினையுங்கள். முன்போல் புகைப்படத்தை வைத்து நினைவு செய்தால் அவர்களில் உண்டான போராட்டம் உங்களில் உண்டாகிவிடும்.

ஒரு ஆவிக்குரிய சபையைச் சார்ந்த ஒரு சகோதரிக்கு கர்ப்பப்பையில் கேன்சர் நோய் வந்துவிட்டது. இவர்களை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். அவர்களின் இனத்தாரை அந்த அறையில் இருந்து போகச் சொல்லிவிட்டு, அவர்களின் மரித்துப் போன கணவரை நினையாதிருங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் இந்த வியாதியில் மரித்துப் போய்விடுவீர்கள் என்றேன். நான் அவரை நினைக்கும்போது அவர் என்னுடன் வந்து படுத்துக்கொள்வார் என்றார்கள். நான் அவர்களிடம் இது ஒரு தந்திரமான பிசாசின் செயல். அதற்காக மன்னிப்பு கேளுங்கள். கர்த்தர் அற்புதம் செய்வார் என்றேன். அன்று மாலையில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நியமிக்கப்பட்டிருந்தது, உண்மையாய் மன்னிப்பு கேட்ட அந்தச் சகோதரி அன்றே அற்புத சுகம் பெற்றார்கள். சிகிச்சை தேவை இல்லை என்று  வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். இன்றே என் அப்பா அம்மா, எனக்கு பிரியமானவர்கள் என்று நினைத்து வேதனை அடையாது இவ்வுலக வழிபாடுகளுக்கு நம்மை காத்துக் கொள்வோமாக.

தேவன் வெறுக்கிற அதிக அருவருப்பான ஒரு காரியத்தை எசேக்கியேல் 8:16ல் பார்க்கிறோம். "...இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலி பீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து  புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்திசைக்கும் நேராக திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்." எசேக்கியேல் 8:16 

சூரியனை வணங்கும் ஒரு செயலைக் கர்த்தர் மிகுந்த அருவருப்பானது  என்று கூறியுள்ளார். பல நேரங்களில் காரியங்களை நன்கு அறியாதபடி இவ்விதமான வழிப்பாடுகளுக்கு நாம் அடிமை யாகிறோம். இன்று அநேகர் அர்த்தம் அறியாது இந்த சூரியனை நமஸ்கரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். யோகா என்ற தலைப்பின் கீழ் சூரியனை நமஸ்கரிக்கும் காரியத்தை செய்கிறவர்கள் ஏராளம். 'யோகா' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று அறியாது அடிமையாகிறார்கள்.

இன்னும் 'செத்தவனுக்காக உங்கள் சரீரத்தை கீறிக்கொள்ளமலும், அடையாளமான எழுத்துக்களை (tatto) உங்கள்மேல் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்" என்ற லேவி.19:28ம் வாக்கியத்தை அறியாது ஒரு விதமான tattoவை சரீரத்தில் குத்திக் கொள்கிறார்கள் .ஒரு முறை வாலிப சகோதரிக்கு வெளிநாட்டில் கூட்டம் முடிந்து ஜெபித்தேன் .அந்த சகோதரிக்கு அடிக்கடி தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம்  வருகிறதே என்று கேட்டேன். ஆம் அந்த எண்ணம் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது என்றார்கள். அத்துடன் ஏன் இவ்வாறு வருகிறது என்று கேட்டார்கள். உங்கள் சரீரத்தில் dragon உருவத்தில் பச்சைக்  குத்திக் கொண்டு இருப்பதால் என்றேன். இல்லை நான் ஒரு "பூ" வடிவத்தில்தான் பச்சைக் குத்தி இருக்கிறேன் என்றார்கள். அவளுடைய இனத்தார் அங்கிருந்தபடியால் அவள் நெஞ்சில் என்ன படம் என்று பார்க்கச் சொன்னேன், அவர்கள் பார்த்துவிட்டு dragon படம் என்றார்கள். நம்மை அழிப்பதற்குத் தந்திரமாய் வழி  நடத்தும் இக்காரியங்களுக்கு நாம் அடிமையாகாதிருக்க வேண்டும்.

 

3. தடை செய்ய வருகிறான்

'...நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம் பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடை பண்ணினான்.' 1தெச. 2:18.

இன்று நாம் செய்கிற அநேக காரியங்களில் எளிதாக தடைகள் தோன்றி, காரியங்கள் நின்று விடுகிறது.சில சமயங்களில் தாமதமாகிறது. சில காரியங்களில் என்றுமே செய்ய முடியாது கைவிட வேண்டியதிருக்கிறது. அநேகரின் வாழ்வில் திருமணம், வீடு கட்டுதல்,பிள்ளைபெறுதல், வேலை மாற்றம் உயர்வு இதைப்போன்ற காரியங்களில் சாத்தான் தந்திரமாய் தடைகளைக்கொண்டு வருவதால் நம்மை சோர்வடையச் செய்கிறான்.

பல முறை வெளிநாடு சென்று பணி செய்ய வேண்டும் என்ற சகோதரரின் வாழ்வின் பிசாசானவன் வெளிநாட்டு பயணத்தை தடை செய்தான். ஆனால் அவர் கர்த்தரின் சமூகத்தில் ஜெபிக்க வந்தபோதுதடைகள் நீக்கும் நம் தேவன், தடைகளை அகற்றினார் .அவர் வாஞ்சித்த  வண்ணம் வெளிநாடு சென்று குடும்பமாக வாழ ஆரம்பித்தார். சென்ற ஆண்டிலேயே அவர் வீட்டில் ஒரு ஜெபக்கூட்டத்தை ஒழுங்கு செய்து தனது வாழ்வில் கர்த்தர், தடைகளை நீக்கின தன் சாட்சியைச் சொல்லி வந்த எல்லாரும் அதைக் கேட்டு தேவனை மகிமைப்படுத்தச் செய்தார் .

 

4.களைகளை விதைக்க வருகிறான்.

     ''மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.'' மத்தேயு 15:23

இன்று வேத வார்த்தைகளை பல விதங்களில் பலர் வியாக்கியானம் செய்து பேசுகிறார்கள். அத்துடன் பல விதமான உபதேசங்களை உபதேசிக்கிறார்கள். இவைகளுக்கு  காரணம் சாத்தானின் களைகள். ஒரு ஊழியர் ஒரு முறை நீ இரட்சிக்கப்பட்டு விட்டால் போதும் என்றும் நீ இரட்சிக்கப்பட்டுவிட்டாய் என்று கூறிக்  கொண்டு இருக்கிறார். மனிதரின் வாழ்வில் ஆவிக்குரிய  நித்திரை பண்ணும்போது சாத்தான் பல விதங்களில் களை விதைக்கிறான்.

எனது பள்ளிக் கூடத்தில் 108 ஆசிரியர்கள் பணியாற்றி கொண்டு இருந்தோம். பள்ளிக் கூடத்திற்கு எப்பொழுதுமே வெள்ளை ஜிப்பா போட்டு வரும் ஒரு ஆசிரியர் நாங்கள் இருக்கும் எங்கள் விளையாட்டு மைதானம் அருகே இருந்த மரத்தடியில் இருந்து வேதத்தை தியானிப்பார் அல்லது ஜெபிப்பார். ஒரு காலக் கட்டத்தில் வேலையை 'ராஜினாமா' செய்து விட்டு ஊழியம் செய்ய போகிறேன் என்று கூறினார். அவ்வாறே ராஜினாமா செய்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.  அதற்கு அடுத்ததாக நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபின் நானும் 'ராஜினாமா' செய்து முழு நேர ஊழியத்திற்கு வந்தேன். சில நாட்களில் எனக்கு முன் ராஜினாமா செய்த ஆசிரியர் சுகம் இல்லை என்று அறிந்த உடனே அவரின் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய  கை, கால்களில் வேதனை நிறைந்த முடக்கம். அவர் கையில் சிகரெட் இருந்தது. என்ன பிரதர் என்ன ஆயிற்று என்று அவருடன் பேச ஆரம்பித்தேன். எல்லாம் அவ்வுளவுதான் என்று மிகுந்த சலிப்பாகக் கூறினார். அவர்களின் மனைவியும் அருகில் அமர்ந்திருந்தார்கள். என்ன பிரதர் மங்கின ஒளியில் எல்லாரும் நிர்வாணமாய் நிற்பதை காண்கிறேன் என்று கேட்டேன். அவருடைய மனைவியோ நல்லா அந்த அவமானத்தைக் கேளுங்கள் ஐயா என்றார்கள். அன்று ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தி விட்டாரே என்றார். அத்துடன் யோபு 19:26,27 ல் இந்த தோல் முதலானவைகள் அழுகிப்போனபின் என்னுடைய கண்களினாலே அவரைக் காண்பேன் என்று கூறினார். நோவாவின் மகன் காம் தகப்பனின் நிர்வாணத்தை கண்டபடியால் சபிக்கப்பட்டானே. தகுதியான வஸ்திரங்களினால் தங்களை அலங்கரிக்க வேண்டும் என்ற வார்த்தைகளை நினைக்க வில்லையா? என்றேன். ஆனாலும் அவர் சில நாட்களிலேயே மரித்துப் போனார்.

களைகளை விதைக்கிற சத்துருவானவன் கோதுமையாகிய தேவனுடைய வசனங்களுக்கு நடுவே கலைகளை விதைப்பதனால் கோதுமை வளர முடியாது. கலைகளே அதிகமாக வளர்ந்து, நம் வாழ்வினை நாசப்படுத்தும். இன்னும் சிலர் 'தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டை பண்ணினவர்கள் அந்தகாரத்திலும்,  மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்,' என்று சங்கீதம் 107:10,11 ன் படி இருக்கிறார்கள். 'சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்' என்ற வாக்கின்படி நம் வாழ்வின் ஆவிக்குரிய, சரீரத்துக்குரிய போராட்டத்தில்  இந்த தேவ  வசனத்தை தியானிக்கும்போது நம் காரியங்கள் ஜெயமாகும். நாம் விழித்திருந்து களைகள் விதைக்கப்பட இடம் கொடாது காத்துக் கொள்வோமாக.

II. துஷ்டன் முழுவதும் சங்கரிக்கப்பட என்ன செய்யவேண்டும்?

1. துஷ்டன் வராதிருக்க, சங்கரிக்கப்பட தேவனைத் துதிக்க வேண்டும்

"இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்." சங்கீதம் 22:3

இஸ்ரவேல் என்றாலே முற்றிலும் மாற்றப்பட்டவன். ஏசாயா 43:1 ல் சொல்லப்பட்டதுபோல யாக்கோபாக சிருஷ்டிக்கப்பட்ட இஸ்ரவேலை தேவன் உருவாக்குகிறார். யாக்கோபு என்பவன் ஜென்ம சுபாவம் உடையவன். இவனில் தன்னயம்  இருந்தது. தான் செய்த சிகப்பான கூழிலே நான் சாப்பிட கொஞ்சம் தா என்ற ஏசாவிடம் அவனது சேஷ்ட புத்திர பாகத்தை வாங்கிக் கொண்டவன். கண் தெரியாத தகப்பனிடம் தான் ஏசா என்று பொய்யைக் கூறி அவனது ஆசீர்வாதங்களை அபகரித்தவன். ஆனால் அவன் தேவனை முகமுகமாய்க் கண்டேன் என்று கூறினவன். என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடமாட்டேன் என்று கர்த்தரிடம் போராடினவன். அன்று அவனை மாற்றினார்.  இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும் என்றார். இவ்விதமாய் கர்த்தர் பாவத்தில் பிறந்த நம்மை தம்முடைய பிள்ளையாக உருவாக்குகிறார். இஸ்ரவேல் என்பது தேவனால் உருவாக்கப்பட்டவன்  துதிப்பதெற்கென்று ஏற்படுத்தப்பட்டவன். இவ்விதமாக துதிக்க ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொருவருடைய துதியின் மத்தியிலும், அவர் பிரசன்னம் இரங்கிவர ஆசீர்வதித்துள்ளார். தாவீது எப்பொழுதும் துதித்துக்கொண்டே இருந்தவன். சங்கீதம் 34:1ல் 'அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்' என தனது துதியின் சாட்சியை கூறியுள்ளார்.' துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது' என்றுசங்கீதம் 147:1ல் பார்க்கிறோம். நாம் துதிக்க துதிக்க தேவ பிரசன்னம் பெருகுகிறபடியால் சத்துரு வெட்கப்பட்டு ஓடிப்போவான் .

ஒருமுறை தீங்கின் ஆவி இவள் எனக்கு வேண்டும் என்று அதிகமாக போராடியது. அந்த மகளின் தாயாரும் அழுதுகொண்டே ஜெபித்தார்கள். சில முறை பிசாசுகள் நீங்க 'இரத்தத்தால் ஜெயம்' என்ற பாடலை எல்லாரும் பாடியும் பிரயோஜனமற்றதாய் இருந்தது. அந்த ஆவியோ அந்த வாலிப மகளை அதிகமாக வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தது. துதியின் மத்தியில் வாசம் பண்ணுகிறவரே உம்மைத் துதிக்கிறோம் , துதிக்கிறோம் என்று சில நிமிடங்கள் சத்தமாய் துதிக்க ஆரம்பித்தோம். அது வரை பெருமையாக பேசிய அந்த ஆவி துதிக்காதே எரியுது, துதிக்காதே என்று கத்தி கதற ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே அந்த மகளை முறுக்கி முறுக்கி இனி வரமாட்டேன் என்று அலறி ஓடியது .

அன்பு சகோதரனே /சகோதரியே, கர்த்தருடைய பிள்ளையாகிய நாம் துதிக்கும் போது சத்துரு நம்மை விட்டு நம் எல்லையை விட்டு விலகி ஓடி விடுவான். துதிப்பது கர்த்தருக்குப் பிரியமான செயலாகும். இன்று முதல் துதியினால் நிறைந்து விடுவோம். சத்துரு சங்கரிக்கப்பட்டு விடுவான்.

2. தேவனுடைய வார்த்தை நிறைந்த இருதயம் வேண்டும்.

      '...நான் என் நியாயப் பிரமானத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி , நான் அவர்கள் தேவனாயிருப்பேன் , அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.' எரேமியா 31:33.

இன்று கர்த்தர் தம்முடைய ஜீவ வசனங்களை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.  இந்த வார்த்தைகள் பல வித நன்மைகளை நமக்குத் தருபவைகள். கால்களுக்குத்  தீபமும் பாதைக்கு  வெளிச்சமுமாய் இருக்கிறது.  இந்த வார்த்தைகள் நம்மை குணமாக்கக் கூடியவைகள். இந்த வார்த்தைகள் நம்மை எச்சரிக்கக்கூடியவைகள். இந்த வார்த்தைகளினால் தேற்றப்படுகிறோம். இந்த வார்த்தைகளைத் தியானிக்கும் போது நம் உள்ளத்தில் அக்கினி பற்றி எரியும்.இவையெல்லாவற்றிக்கும் மேலாக சத்துருவாகிய பிசாசினை தாக்கும் ஆவியின் பட்டயமாகும். இயேசு கிறிஸ்து தன்னைத் தந்திரமாய் சோதித்த பிசாசின் ஒவ்வொரு காரியத்தையும் இந்த ஆவியின் பட்டயத்தால் வென்றார். இந்த வார்த்தைகளை நாம் நேசித்து இரவும், பகலும் தியானிக்கும் போது நம் வாழ்வு கனி நிறைந்ததாக மாறிவிடும். நம் காரியங்கள் என்றும் எல்லாம் ஜெயமாக மாறும். இந்த வார்த்தைகளைக் கொண்டு தேவன் பரிசுத்தமாக்குகிறார் .இந்த வார்த்தைகளால் ஆவிக்குள்ளான வாழ்க்கையில் வளருகிறவர்களாக இருக்கிறோம். ''ஆண்டவர் வசனம் தந்தார்; அதை பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.' என்று சங்கீதம் 68:11ல் உள்ளபடி கர்த்தரின் வசனம் கண்ணீரை துடைப்பதற்கும், காயங்களை ஆற்றுவதற்க்கும் ஏற்றதாயும் நம் வாழ்வில் நமக்குள் கிரியை செய்கிறது.

3.சத்துரு சங்கரிக்கப்பட அபிஷேகத்தால் நிறைய வேண்டும்

  ''கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.' 2கொரிந்தியர் 3:17

இன்று சத்துருவானவன் நம் வழி வராதிருக்கவும் , அவன் முற்றிலும் சங்கரிக்கப்படவேண்டுனானால் நாம் கர்த்தரின் ஆவியினால் நிரப்பப்பட வேண்டும்.கர்த்தரின் ஆவியானவர் நமக்குள் ஊற்றப்படும் போது நம் வாழ்க்கை முற்றிலும் மாற்றப்பட்டுவிடும். பழைய சுபாவம், பழக்க வழக்கங்கள் மாறிவிடும். நாம் ஒரு புதிய மனிதனாக மாறிவிடுவோம். பரிசுத்த ஆவியானவர், பாவத்தைக் குறித்து, உலகத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவார். மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தம் பண்ணுவார். பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே பரிசுத்தமடைகிறோம்.

இந்த பரிசுத்த ஆவியானவரால் நமக்குள்  அக்கினியின் ஸ்நானமும், பெருகுகிறது. அக்கினியின்  ஸ்நானமும் பிசாசின் கிரியைகளை அழிக்கக்கூடியது. இந்த அக்கினியை தேவன் பரலோகத்தில் உண்டாக்கினார் என்று எசே.28:17,18ல் பார்க்க முடிகிறது. இந்த அக்கினியை இயேசு கிறிஸ்து பூமியிலே போட வந்தார் என்றும் அது பற்றி எரிய வேண்டும் என்றும் கூறினதை லூக்கா 12:49ல் பார்கிறோம் இன்றைக்கு இந்த அக்கினியின் அபிஷேகம் எல்லா சத்துருவின் செய்கையையும் சாம்பலாக்கிவிடும் .

இயேசு கிறிஸ்து 'நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.' என்ற யோவான் 14:16ன் வார்த்தைப்படி, அன்று மேலறையில் ஒருமனதுடன் ஜெபித்த சீஷர்களில் ஒவ்வொருவர் மீதும் பரிசுத்த ஆவியானவர் இரங்கினார். 'அத்துடன் அக்கினி மயமான நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.' என்று அப்.2:3ல் பார்க்கிறோம் அக்கினியின் அபிஷேகம் பெற்ற பின் தான் அதிகமான அற்புதங்கள் நடைபெற ஆரம்பித்தது.  முடவன் எழுந்து நடந்தான். பலவிதமான முறையில் அக்கினியின் வல்லமை வெளிப்பட்ட ஜனங்களில் விடுதலையை உண்டாக்கிற்று. பேதுருவின் போதனையைக் கேட்டவர்களில் 3000 பேர் சந்தோஷமாய் ஏற்று சபையில் சேர்ந்தார்கள். இன்று கர்த்தரின் அபிஷேகத்தால்  நிறைந்தால் சத்துரு சங்கரிக்கப்படுவான்.

             கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

கிறிஸ்துவின் பணியில்

சகோ. C. எபனேசர் பால்.