''---என்மேல் இரக்கமாயிரும். ''

                                                                                                                                           சங்கீதம்  26:11

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

         கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். 

     நம்முடைய கஷ்டமான நேரங்களிலே என்ன செய்வதென்றே தெரியாத போராட்டமான நேரங்களிலே நமக்குள்ளாக தோன்றுகிற ஒரு காரியம், 'எனக்கு இரங்கும் கர்த்தாவே. 'வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கும் போது துயரமும் துக்கமும் அடைந்து எனக்கு இரங்கும் என்று கேட்கிற உள்ளம் உணர்வு உருவாகிறது. தாவீது  தன் வாழ்க்கையிலே பாவத்திற்கு உட்பட்டபின்பு, கர்த்தர் அவன் செய்த பாவத்தை தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலம் வெளிப்படுத்தினர். அவனுடைய பாவத்தினால் உண்டான சாபத்தினால் தன் பிள்ளைகளுக்கு வேதனையான காரியங்களைச் சேர்த்து வைத்தான். அத்துடன் பத்சேபாளுக்குப் பிறந்த பிள்ளை செத்துப் போயிற்று. நான் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்து விட்டேனே என்று உணர்வடைந்த போது, தேவனை நோக்கி, ''உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்'' என்று சங்கீதம் 51:1ல் கேட்டான். இன்று நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகளிலே சிக்கிக் கொள்ளும்போது,   எனக்கு இரங்கும், என்னை மன்னியும் என்று கேட்கிற வழக்கம், பழக்கம் உண்டு.

        நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என எபே. 2:4ல் பார்க்கிறோம். அதோடு இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் மிகுந்த இரக்கமுள்ளவர் என்று யாக். 5:11ல் பார்க்கிறோம். 'தேவன் நம்மை நேசித்து, தம் சாயலால் சிருஷ்டிக்கப்பட்டு விழுந்து போன மக்கள் மீது அன்பு வைத்து, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இரட்சிக்கிறவராக மீட்பராக இந்த உலகத்திலே அனுப்பினார். தேவனுடைய தன்மையுடைய இயேசு கிறிஸ்து மிகுந்த  இரக்கமுடையவராய் இருந்த தேவன் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு அநேகருக்கு இரக்கம்  பாராட்டினார். தேவனுடைய தற்சொரூபமாகிய இயேசு கிறிஸ்து தேவனின் அன்பின் பண்புடையவராய் இருக்கிறார். கேடுபாடு அடைந்திருக்கிற நம் வாழ்க்கையில் இரக்கம் செய்து நித்திய ஆக்கினையினின்று நம்மை மீட்டுக்கொள்கிறவராய் இருக்கிறார். புலம்பல் 3:22ன் படி இந்த அன்பின் தேவக்குமாராராகிய இயேசு கிறிஸ்து முடிவில்லா இரக்கத்தை உடையவர்.

      அவர் இரங்கின போது, பாவம் செய்த மக்கள் மீட்கப்பட்டார்கள், மன்னிப்பையும் பெற்றார்கள். அத்துடன் அவர்  இரங்கும்போதெல்லாம் அற்புதமான காரியங்கள் நடைபெற்றது. அந்த இரக்கத்தைப் பெற்றவர்கள் கண்ணில் பார்வை அடைந்தார்கள். பாவம், மோகம், இச்சை இவைகளின் மீது வெற்றி கொண்டார்கள்.

  1. இரக்கத்தைப் பெறுவதினால் அடையும் ஆசீர்வாதங்கள்

 

  1. இரக்கத்தினால் விடுதலை அடைகிறார்கள்

    '...ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.'' மத்தேயு 15:22.

       கானானிய ஸ்திரீயின் மகள் பிசாசினால் வேதனைப்படுகிறதினால், எனக்கு இரங்கும் என்று பின்தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். எனக்கு இரங்கும் என்று கேட்ட கானானிய ஸ்திரீயின் விசுவாசத்தைக் கண்ட இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் பெரிது என்றார். அந்நேரமே அவள் மகள் விடுதலையானாள் என பார்க்கிறோம். இந்த வார்த்தைகளை வாசித்துக் கொண்டிருக்கிற தேவப்பிள்ளையே, இன்றைக்கு கர்த்தர் நமக்கு இரங்கும் போது நம் விசுவாசத்தினாலே விடுதலை அடைகிறோம்

         இன்று மனிதனுக்கு பயத்திலிருந்து விடுதலை தேவையாய் இருக்கிறது. பயமானது ஒரு வேதனையான காரியம். மனிதனுடைய பயம் அவனுக்குள் தோல்வியைக் கொண்டு வருகிறது. துக்கத்தை கொண்டு வரச் செய்கிறது. பயத்தினால் தூங்கமுடியாதபடி கலங்கிக் கொண்டிருக்கிறவர்கள் அநேகர்.

          சில தினங்களுக்கு முன்பாக ஒரு குடும்பத்தார் ஒரு வாலிப மகனை அழைத்து வந்தார்கள். இவன் இரவு பகலாக தூங்க முடியாதிருக்கிறான். பெலவீனம் பெருகுகிறது. அவனில் அசதியும் அதிகரிக்கிறது. அதனால் அதிகாலையில் கொஞ்சநேரம் மாத்திரம் தூங்குகிறான் என்று சொன்னார்கள். அந்த வாலிபனோ தன் அருகில் ஏதோ ஒரு உருவம் வந்து கொண்டே இருக்கிறது என்ற பயத்தினால் விளக்கை அனைக்காதவனாக தூங்க முடியாதவனாக இருந்தான். பிசாசின் தந்திரமான யுதமாகிய பயத்தினால் இன்று அநேகர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிலருடைய வாழ்க்கையிலே இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மைத் தாக்கக்கூடிய பிசாசின் மற்றொரு ஆயுதம்தான் இச்சை. தேவசாயலாய் சிருஷ்டிக்கப்பட்ட ஆதி மனிதன் தேவனுடைய அன்பை, ஆசீர்வாதத்தை, உறவை, தேவ மகிமையை இழப்பதற்கு இந்த இச்சை காரணமாக இருந்தது. ஏவாளின் உள்ளத்தில் புசிக்க வேண்டாம் என்ற பழத்தின் தன்மையை பொய்யாக விவரித்துக் கூறியது அதினால் ஏவாளின் உள்ளத்தில் பார்ப்பதற்க்கு இன்பமும் பழத்தை புசியாத அவளின் உள்ளத்தில் ஏற்றது என்ற உணர்வையும், இச்சிக்கப்படத்தக்க விருட்சம் என்று தேவனுக்கு விரோதமாகச் செயல்பட, வார்த்தையை மீறி நடக்க அவளை நடத்தியது. அவள் பழத்தைப் பறித்து புசித்தாள், தன் கணவருக்கும் கொடுத்தாள். அதனால் தேவ  ஆசீர்வாதத்தையும், தேவ மகிமையையும், தேவ சாயலையும் இழந்து போன நிலை உருவானது. '' அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். '' என யாக்.1:14,15ல் பார்க்கிறோம்.

        இன்று மனிதன் உலக வழிபாடுகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டிய நிர்பந்த நிலை இருக்கிறது. தேவன் அருவருக்கிற காரியங்களை அலங்காரம் என்று நினைத்து வீட்டை அலங்கோலப்படுத்தி அவதி அடைகிறார்கள். எசேக்.8:9ல் தேவன் அருவருக்கிற சித்திரம் தீட்டப்பட்ட ஊரும் பிராணிகள்,  மிருகங்கள் இவைகளைப்  பார்க்கிறோம். இந்த சித்திரம் தீட்டப்பட்டிருந்தவைகளுக்கு முன்பாக இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரின் 70 பேர் தூப கலசத்தைப் பிடித்துக் கொண்டு அவைகளுக்கு முன்பாக நின்றார்கள். அதினால் மிகுந்த புகை எழும்பிற்று. அந்தகாரத்திலே தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிற கொடிய அருவருப்புகளைக் கண்டாயா என்றார். இதைப் போல செத்தவர்களுக்க்காக தங்கள் சரீரங்களை கிழித்து எழுத்துக்களை சரீரத்தில் எழுதிக் கொள்ளுகிறவர்கள் (tattoo)           தேவனுக்கு அருவருப்பாய் இருக்கிறார்கள்.

              கர்த்தர் நமக்கு இரங்கும் போது இவ்வாறான தவறான வழி பாடுகளில் இருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை அடைகிறோம்.

   2. இரக்கத்தினால் மறுபடியும் ஜெநிப்பிக்கிறார்

''...அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.'' 1பேதுரு 1:4

      மறுபடியும் பிறக்க வேண்டும், ஜெநிப்பிக்கப்பட வேண்டும் என்ற வாஞ்சை நமக்குள் வர வேண்டும். தேவனுடைய அளவற்ற கிருபையின் இரக்கத்தினாலே அவர் வார்த்தைக்கு செவி கொடுத்து, ஐயோ, நான் ஒரு பாவி, எனக்கு இரங்கும் என்று கேட்கி மக்களாய் நாம் மாறும் போது, தேவன் நமக்கு இரக்கம் செய்கிறார். யோவான் 3:5ல் ''...ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்' என்று பார்க்கிறோம். இன்னும் ''இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்பந்தரித்தாள் '' என சங்கீதம் 51:5ல் பார்கிறோம். ஒருவனுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்குள்ளாய் மாறும்போது, பழையவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாக்கப்படுகிறது. மறுஜென்ம முழுக்கு என்று சொல்லப்படுகிற  பெரிதான நன்மையை கர்த்தரின் சமூகத்தில் பெற வேண்டும். அவர் இரங்கும்  போது நம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயமான  நல் வாழ்வைப் பெறுவதோடு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கடைவதற்கு நம்மை சுதந்தரவாளியாக மாற்றுகிறது. இந்த நல் மனசாட்சியின் உடன்படிக்கையை நாம் தவறாது பெற்று வாழ நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

 3.இரக்கத்தினால் விருத்தியடைகிறோம்

'' கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார் ''உபாகமம் 13:18

      விருத்தியடைவது என்று சொல்லும்போது, நம்முடைய வாழ்க்கையிலே, குடும்பங்களிலே, நமது எல்லைகள் எல்லாவற்றிலும் மிகுதியாக நிறைவாக பெருகுகிற காரியமாகும். குடும்பத்தில் பிள்ளைகள் பெருகும்போது, பிள்ளைகளினால் குடும்பங்கள் பெருகும்போது குடும்பம் விருத்தியடைகிறது என்று சொல்வார்கள் .

               இதைப் போல 2சாமுவேல் 5:10ல் விருத்தியடைந்தான் என்று தாவீதின் ராஜ்யபாரத்தைக் குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம் . அருமையான் சகோதரியே, சந்ததி விருத்தியடைய வேண்டும். இன்னும் நம் வாழ்க்கையிலே ஞானத்தில் விருத்தியடைய வேண்டும். நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான் என்று நீதிமொழிகள் 9:9ல் அறிவிக்கிறது. தேவனுடைய வழிநடத்துதலின்படி ஈசாக்கு எகிப்துக்குச் செல்லாமல் தேவன் சொன்ன இடத்திலே தங்கி தாபரிக்க ஆரம்பித்தான். அந்த தேசத்திலே அவன் விவசாயம் செய்தான், விதை விதைத்தான். கர்த்தரோ அதனை நூறு மடங்காக ஆசீர்வதித்தார். அதினிமித்தம் அவன் சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆதி.26:13ல் அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என பார்க்கிறோம்.

            இன்று நம் தேவன் நம்முடைய எல்லா நிலைகளிலும் விருத்திடையச் செய்து நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். கர்த்தரால் அருளப்படும் ஞானம், அறிவினால் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும் என நீதி 9:10,11,ல் பார்க்கிறோம். இன்னும் மற்றவர்களின் பக்தி விருத்தியடையத்தக்கதாக ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை இருக்க வேண்டும். தேவன் நமக்கு இரங்கும் போது, சகலவிதங்களிலும் நாம்  விருத்தியடைந்து ஆசீர்வதிக்கப்பட முடிகிறது. இன்று நம்முடைய வாழ்க்கையிலே அவருடைய வல்ல செயலால் நாம் சகல நிலைகளிலும் விருத்தியடைந்து ஆசீர்வதிக்கப்பட கிறிஸ்துவுக்குள் வாழ்வதற்க்கு நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

4.கர்த்தர் இரங்கும்போது சோர்ந்து போவதில்லை

'' இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை. '' 2கொரிந்தியர் 4:1.

          நம்முடைய வாழ்க்கையிலே நாம் விரும்பாத, நமக்கு விசேஷமான நம்மை பாதிக்கககூடிய பலவிதமான பிரச்சனைகள்,  போராட்டங்கள், பலவித சோர்வுகள் நம்மில் பெருகி விடுகிறது. ஏசாயா 19:3. ஆவியிலே சோர்வடைகிற காரியத்தைப் பார்க்கிறோம். உன். 5:6ல் ஆத்துமா சோர்வடைகிறதைப் பார்க்கிறோம். ஆதி.42:28ல் இருதயம் சோர்வடைவதைப் பார்க்கிறோம். ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது என நீதி.24:10ல் பார்க்கிறோம். நாம் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும். சோர்ந்து போகாமல் நன்மை செய்ய வேண்டும். தேவனுடைய இரக்கம் நமக்கு கிடைக்கும் போது, சோர்ந்து போகாமல் நற்காரியங்களை, நலமாய் கிறிஸ்துவுக்குள் செய்ய முடிகிறது .

5). கர்த்தர் இரங்கும்போது சாட்சியாகிறோம்.

   ''இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி என்று சொன்னார். 

 அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். '' மாற்கு 5:19,20

இன்று இரக்கம் செய்கிற தேவன் இரக்கம் செய்ய உண்மையுள்ள வராய் இருக்கிறார். லேகியோன் பிசாசினால் பிடிக்கப்பட்டவன் சமுதாயத்திற்குள் வாழ்வதற்கு தகுதியற்றவனாய் இயேசுவினிடத்தில் வந்தான். அவன் வஸ்திரம்  தரியாதவனாக வீட்டிலே தங்காமல் கல்லறைகளிலே தங்குகிறவனாய் இருந்தான். கல்லறை என்றால் மரித்தோரின் சடலங்கள் அடக்கம் பண்ணப்படுகிற இடம். கல்லறைத் தோட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தைத் தேடினபோது, தூதர்கள் அவனை நோக்கி, உயிரோடிருக்கிறவரை மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன என்று சொன்ன காரியத்தை லூக்கா 24:5ல் பார்க்கிறோம்.  என் தகப்பன், என் தாய், என் கணவன், என் மனைவி, என் பிள்ளை என்று கல்லறைக்கு சத்தியத்தை அறியாது செல்லுகிற மக்கள் ஏராளம். பிசாசு பிடித்தவன் கல்லறையிலே தங்கின செயல், நம் வாழ்க்கையில் சத்தியத்தைப்  போதிக்கிறது. மண்ணுக்கு மண், சாம்பலுக்கு சாம்பல், புழுதிக்குப் புழுதி என்று சொல்லி புதைத்தபின்பு கல்லறைக்குச் சென்று பூக்களையும் மாலைகளையும் ஊதுபத்தி, மெழுகுவர்த்திகளை கொழுத்துகிற பழக்கமுடையவர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பிரசங்கி 9:5,6ல், ''மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்து போயிற்று; சூரியனுக்குக் கிழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி  என்றைக்கும் பங்கில்லை எனப் பார்க்கிறோம். இதை அறியாது புரியாது கல்லறைக்குச் சென்று தவறாய் நாம் செய்யும் போது  வஞ்சிக்கிற ஆவிகள் மரித்தோர் உருவத்தில் வந்து நம் சுகம், நம் சமாதானம், சந்தோஷத்தைக் கெடுத்துப் போடுகிறது.

      ஒரு நாட்டிலே ஒரு வாலிபன் மிகுந்த பயத்தினால் பாதிக்கப்பட்டு ஜெபிக்க வந்தான்.  அவனுடைய மோட்டார் சைக்கிளை அவனது நெருங்கிய நண்பன் ஆசைப்பட்டு ஒரு சுற்று சுற்றி வருகிறேன் என்று வாங்கி, அதன் வேகத்தை நிதானிக்க முடியாதவனாய் அதிகமாய் அதனை வேகப்படுத்திய படியால், அவனால் ஒன்றும் செய்ய முடியாதபடி மரத்திலே மோதி அந்த இடத்திலே இறந்து போனான். தனக்கு பிரியமான நண்பன் இறந்து போன துக்கம் அவனைப் பாதித்தது. ஒவ்வொரு நாளும் அவன் கல்லறைக்குச் சென்று அதன் அருகில் இருந்த நண்பனுக்ககாக துக்கப்பட்டுக் கொண்டே இருந்தான். ஒரு நாளில் ஒரு அருவருப்பான பயத்தை உண்டுபண்ணுகிற ஆவி அவனை சுற்றி வந்த போது, அந்த சத்தத்தையும் அந்த உருவத்தையும் கண்டபடியால் பயந்தான்

     கல்லறைத்  தோட்டமானது பாடுகளை மனிதனுக்கு கொண்டு வருகிற தீய ஆவிகள் தங்கி தாபரிக்கிற இடமாய் இருக்கிறது. இவ்விதமாய் இருந்த மனிதன் இயேசு கிறிஸ்துவை சந்தித்த போது, இரக்கம் நிறைந்த இயேசு கிறிஸ்து அவனுக்கு இரங்கினார். அவனை விடுதலை ஆக்கினார். அவன் என்றும் கர்த்தரோடிருக்க வேண்டும் என்று விரும்பினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ, கர்த்தர் அவனுக்கு இரங்கி செய்தவைகளைச் சாட்சியாக சொல்ல அவனை அனுப்பினார். அவனுடைய சாட்சியைக் கேட்ட தெக்கப்போலி நாட்டினர் ஆச்சரியமடைந்தார்கள் .

     ஆகவே கர்த்தர் இரங்கும் போது,  நாம்  அவருக்குச் சாட்சியாக மாறிவிடுகிறோம்.

கர்த்தர் இரக்கம் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

  1. விசுவாசிக்க வேண்டும்

''நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றன்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, ''லூக்கா 1:54.

         ஆபிரகாம் என்றாலே விசுவாசிகளின் தகப்பனாவார். நம்முடைய தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைபோல அழைத்து அதிசயம் செய்கிறவர். ஆசீர்வாதம் எனக்கு இல்லை, வேலை இல்லை, வீடு இல்லை என்று கலங்குகிற மக்களுக்கு இல்லாதவைகளை இருக்கிறவைபோல அழைத்து ஆசீர்வதிக்கிறார். விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாமுக்கு  தேவன் இரக்கம் செய்தார். 100 வயதிலும் அவன் பிள்ளைபெற, 90 வயதான மனைவியான சாராளை பெலப்படுத்தினார். இந்த விசுவாசிகளின் தகப்பனின்  நிமித்தமாய் விசுவாசிக்கிறவர்கள் தேவ சமூகத்திலே இரக்கம் பெறுகிறார்கள. அவர் இரங்கும் போது, நம் ஞானத்திற்கும் அறிவிற்கும் அப்பாற்பட்ட விதத்திலே நமக்குள்ளே மேன்மையான வல்லமையான மகிழ்ச்சியான காரியங்களை இரங்கி செய்கிறார். நீ விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய் என்றுரைத்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி நம் வாழ்க்கையிலும் அற்புதங்களைச்  செய்து இல்லாதவைகளை நமக்கு அருளிச் செய்வார்  .

           அநேக ஆண்டுகள் குழந்தை இல்லாத ஒரு சகோதரியை நான்  சந்தித்தேன். அவர்களுடைய வீட்டிலே ஒரு தேவ ஊழியர் தங்க வருகிறார் என்ற செய்தியை அறிவிக்க சென்றிருந்தேன். அவர்களோ என்னையும் அறியாதவர்கள், நான்  சொன்ன ஊழியரையும் அறியாதவர்கள். கர்த்தர் விசுவாசத்ததை வளரச் செய்கிறவர் அந்த மகளில் முதன்முறையாக குழந்தை உருவாகி கர்ப்பத்திலேயே அது அழிந்து போயிற்று. இரண்டாவது முறையும் கர்ப்பத்தில் தோன்றின பிள்ளை அபார்சன் ஆகி விட்டது எங்களையும், அவர்கள் வீட்டில் தங்கப்போகிற தேவமனிதரையும் அறியாதவர்கள். அவர்கள் கர்த்தரை நம்பும்படியாக கர்த்தர் காரியத்தை வெளிப்படுத்தினர். உங்களில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலும் அடுத்த முறை நான் உங்களை சந்திக்கும் நாளில்  உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வந்தேன். கர்த்தர் சொன்னபடியே விசுவாசியான அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையை கொடுத்தார். இன்று நம் விசுவாசம் நம்மில் பெருகி இருக்குமானால் கர்த்தர் நமக்கு இரங்குவார்.

2) கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு இரக்கம் செய்கிறார்.

 '' தகப்பன் தன பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.'' சங்கீதம் 103 :13

இன்று கர்த்தருக்குப் பயப்படுகிற பயமில்லாதபடியால் அநேகர் வாழ்க்கையில் பாடுகளும் பிரச்சனைகளும் பெருகி வருகிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயமற்று வாழ்கிற மக்களில், அவர்கள் வாழ்க்கையில், பிசாசு பலவித பிரச்சனையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறான். ஒருவன் உண்மையாய்  கர்த்தருக்குப் பயப்படுவானென்றால் கர்த்தர் அவனை ஆசீர்வதிப்பார், அரவணைப்பார், கண்மணையைப் போல காப்பார். பயமில்லாதபடியால் துணிகரமாய் பேசுகிறார்கள். பொல்லாப்பானத்தைச் செய்து யாருக்கும் அது தெரியாது என்கிறார்கள். கேட்கிற காது, காண்கிற கண் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்  என்று  அறியாதபடி தவறானவைகளைக் கேட்பதிலும், தவறானவைகளைக் காண்பதிலும் ஆர்வம் அடைந்து அதிலிருந்து விடுபடமுடியாதபடி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டு, அவர் சத்தத்தின்படி  செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட காதை, தவறான காரியங்களைக் கேட்க இடம் கொடுத்து வாழ்கிற மக்கள் உண்டு. அவருடைய வல்லமையான செயலினாலும் வார்த்தையினாலும்  உண்டாக்கப்பட்ட பூமியின் மேலான காரியங்களைக் காண இடம் கொடாதபடி தவறான காரியங்களைக் காண்பதினால் அவர்கள் வாழ்க்கையில் தடுமாற்றங்களும், போராட்டங்களும் நிறைந்திருக்கிறது. தீதான காரியங்களில் ஆர்வமடைந்து பலமணிநேரம் லேப்டாப்பிலும், போனிலும் மனிதன் ஆவி, ஆத்துமா சரீரத்தைக் கெடுக்கக்கூடிய காரியங்களைப்  பார்த்து நித்திய ஆக்கினைக்குள்ளாக சென்று வேதனை அடைய பிசாசின் தூண்டுதலுக்கு இடம் கொடுக்கிறான். உள்ளத்தில் உணர்வடையுங்கள். நாம் பேசுகிற கேட்கிற பார்க்கிற எல்லாக் காரியங்களையும் அவர் காண்கிற தேவன் என்றும், நாம் பார்க்கிற காரியம் என்ன என்று அவர் அறிவாரென்றும் நாம் உணர்ந்தால், நம் வாழ்க்கையிலே தீமையான காரியங்களை வெறுத்து விடுவோம். தீமையான காரியங்களை வெறுப்பது தான் கர்த்தருக்குப் பயப்படும் பயம் ஆகும். இன்றைக்கு நாம் புதிய தீர்மானத்தோடு கர்த்தருக்குப் பயந்து வாழ்கிற மக்களாய்  மாறுவோம். அவருடைய அளவில்லாத இரக்கத்தை நாம்  இன்று முதல் பெற்று வாழ்வோமாக.

3) கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும்

  ''என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.  யாத்திராகமம் 20:6

         நான் கர்த்தரிடத்தில் அன்புகூருகிறேன் என்று சொல்கிற பாடுகிற மக்களாய் மட்டும் இராதபடி உண்மையாய்  அவரிடத்தில் அன்புகூர வேண்டும். அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்து தம் ஜீவனை நமக்காக பலியாக ஒப்புக்கொடுத்ததை உணர்ந்தால், அவர் மீது  உள்ள அன்பு நிறைந்து விடும். சர்வ அதிகாரமுடையவராய் உலகத்திற்கு வந்த இயேசு கிறிஸ்து ஏன் முகத்தில் துப்பப்பட்டார், ஏன் முள்முடி சூட்டப்பட்டார், எதினால் கோலால் அடித்தார்கள், எதினால்  பரிகாசம் அடைந்தார் என்று உணர்ந்தால், இயேசு கிறிஸ்து எனக்காக பாடுபட்டாரே என்று அறிந்து, புரிந்து அவரின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆலோசனைக்கும், கற்பனைக்கும் கீழ்ப்படிகிற மக்களாய் மாறிவிடுவோம் அந்த கல்வாரி அன்பை சிந்தியாதபடி, உணராதபடியால் அவரை நேசிப்பதற்குப் பதிலாக இந்த உலகத்தை நேசிக்கிறவர்களாக இருக்கிறோம். அவர் சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும் என்ற மேன்மையான, அவரின் வல்லமையான செயலின் ஆசீர்வாதத்தையும் இழந்து கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவே, எனக்காக ஜீவனை ஈந்தவரே, உம்மில் அன்புகூறுகிறேன், உம்முடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்பேன், உம் கற்பனைகளைக் கைக்கொண்டு நடப்பேன் என்று தீர்மானித்து செயல்படும் போது அவரின் அளவில்லாத இரக்கத்தை நாம் பெற்று மகிழ்வோம்.

4) பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும் .

 ''தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.'' நீதி.28:13

       நம் வாழ்க்கையிலே செய்த ஒவ்வொரு பாவங்களையும் அவர் சமூகத்திலே நாம்  அறிக்கை செய்வதோடு விட்டுவிடுவோமானால், அவரின் இரக்கத்தைப் பெறுகிற பாக்கியசாலிகளாய் மாறுகிறோம் .         

        எனது வாழ்க்கையில் என் நோயிலிருந்து, என் பெலவீனத்திலிருந்து நான் சுகம் பெற்று மீண்டும் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்ற வேண்டியிருந்ததால், சுகம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரத்தோடே சகலவற்றிலும் சோர்ந்து போகாமல் செய்ய வேண்டும் என்று ஜெபிக்க ஆரம்பித்தேன். அவர் கொடுத்த அற்புத சுகத்திற்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக நன்றி சொல்லி ஜெபித்த போது, என் வாழ்வில் என் சிறு பிராயத்திலிருந்து நான் செய்த பாவங்கள் ஒரு பேப்பர் சுருளில் எழுதப்பட்டு என் மனத்திரையில் காட்டப்பட்டது. ஐயோ, நான் இவ்வளவு  பாவங்களைச் செய்திருக்கிறேனே, இயேசுகிறிஸ்துவே, என்னை மன்னியும் என்று நான்  சொன்ன போது, ஒரு சொட்டு இரத்தம் சுருளில் எழுதப்பட்டிருந்த பாவங்களை நீங்கச் செய்தது. உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகவும், அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் என்ற வாக்கின்படி என் வாழ்க்கையின் பாவங்களை நீக்கி, தூய வாழ்வை, பரிசுத்த வாழ்வை எனக்கு அருளினார். அந்நாளில் நான் என் வாழ்க்கையில் என்றுமே எதிலும் அடையாதிருந்த அளவில்லாத மகிழ்ச்சியைப் பெற்று, பலமணி நேரம் நன்றி சொல்ல என்னை நடத்தினார். அன்றே பரிசுத்த ஆவியின் ஆபிஷேகத்தைத் தந்து ஆவியின் வரங்களையும் அருளினார்.

       அருமையான தேவப்பிள்ளையே, இன்று உண்மையாக இதுவரை அவரால் பெற்ற கிருபைக்காக நன்றி சொல்லி, அவர் சமூகத்தில் நம்மைத் தாழ்த்துவோம். அவர் நம்மை நேசிக்கிறவர். நமக்காக தன் ஜீவனைக் கொடுத்தவர். அவர் சிந்திய இரத்தத்தால் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்படுவோம். அவ்வாறு சுத்தமானவர்களை பரிசுத்த ஆவியினால் நிறைத்து ஆவியின் வரங்களினால் அலங்கரித்து தமது அளவில்லாத  இரக்கத்தினால் ஆசீர்வதிக்கிறார். இன்றைக்கு நம்மைத் தாழ்த்துவோமா ?

                  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக                          

கிறிஸ்துவின் பணியில்

சகோ.C.எபனேசர் பால்