"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் …"

                                                                                                                                                                                    மத்தேயு 7:7                                        

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

              கர்த்தராகிய இயேசு  கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

                        இன்று மனிதனுடைய  வாழ்க்கையிலே பலவிதமான தேவைகள் ஏற்படும் நேரத்தில் தனக்கு நண்பரான, தெரிந்தவர்களிடத்தில் கேட்கின்ற காரியத்தைப் பார்க்கிறோம். இதைப் போல உதவியை நாடித்தேடி சகோதர, சகோதரிகளிடத்தில், இனத்தாரிடத்தில் உதவி பெற்றுக் கொள்ளுவோம் என்ற நம்பிக்கையோடு கேட்கிற காரியத்தை அனுதினமும் பார்க்க முடிகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கேட்கிறவன் அதைப் பெற்றுக்கொள்கிறான் என மத்.7:8ல் பார்க்கிறோம். பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா? சிலருடைய வாழ்க்கையிலே பணம் தேவைப்படுகிறது. இன்னும் சிலருடைய வாழ்க்கையிலே பொருட்கள் தேவைப்படுகிறது. தங்கள் வீட்டிற்கு இனஜன பந்துக்கள் வர இருக்கிறபடியால், அவர்கள் உட்காருவதற்கு நாற்காலி இல்லாதபடியால் அண்டை அயலகத்தாரிடத்தில் இவ்விதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தும் காரியத்தை நாம் அனுதினமும்  பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவோ இந்த உலகத்தார் மூலம் கொடுக்க முடியாத அரிய பெரிய காரியங்களை நமக்குத் தர வல்லவராயிருக்கிறார். இவ்விதமாய் அவர் அருளும் காரியங்களினால் நாம் ஆசீர்வதிக்கப் படுகிறோம், குறைகள் நீங்குகிறது, மாற்றங்களும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. சுகமும் பெலனும் பெருகுகிறது. மேலான ஞானத்தினால் நிறைந்து பூரணப்படுகிற மக்களாயிருக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் காரியங்கள் நம் வாழ்வை சமாதானமுள்ளதாய், சந்தோஷமுள்ளதாய், சிறப்புடையதாய் மாற்றும்.

I கர்த்தர் கொடுக்கும் காரியத்தினால் ஏற்படும் நன்மைகள்

 

  1. நிந்தை நீங்கி கண்ணீர் துடைக்கப்படும் (பிள்ளையில்லாத)

 

  "இந்த பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்."                            1 சாமுவேல் 1:27

ஆலயத்திற்குச் செல்கிற குடும்பத்தைச் சார்ந்தவள் அன்னாள். கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தபடியால் அவள் சக்களத்தி அவளை மிகவும் துக்கப்படுத்துவாள். அதினிமித்தமாய் அந்த மகளுடைய வாழ்க்கை கண்ணீராய் இருந்தது. அத்துடன் சாப்பிடாமல் இருப்பாள். கணவனின் ஆறுதல் வார்த்தையைப்  பெற்றிருந்தாலும் கலங்கிய உள்ளத்தோடு வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரியே, உன் வாழ்க்கையில் கர்ப்பத்தின் கனி இல்லாதபடியால் நிந்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?  பலர் சொல்லும் நிந்தையான வார்த்தையால் நொறுங்கிப்போன உள்ளத்தோடு எப்பொழுது என் வாழ்க்கையிலே இந்த குறை தீரும், என் கண்ணீர் துடைக்கப்படும், என் காயம் ஆற்றப்படும் என்று சிந்த்தித்துக் கொண்டிருக்கிறாயா?   அன்னாளை நேசித்து குழந்தைப் பாக்கியத்தைக் கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். அவர் நேற்றும்  இன்றும் என்றும் மாறாதவர். இன்று உங்களிலும் அற்புதங்களை செய்து ஆசீர்வதிப்பார். அன்னாள் இந்த குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு ஆலயத்திற்குள் பிரவேசித்து தன் இருதயத்தை ஊற்றி பொறுத்ததனையோடு ஜெபித்தாள். ஜெபத்தைக்  கேட்கிற தேவன் ஜெபத்தைக் கேட்டு, குழந்தைப் பாக்கியத்தைத் தந்தார்.

2. சந்தோஷம் நிறைவாகும்

 "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினால் ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்." யோவான் 16:24

இன்று அநித்தியமான பாவ சந்தோஷத்தைத் தேடித் திரிகிறவர்கள் அதிகம். நிறைவான நித்தியமான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள வழி அறியாது, வகை தெரியாது, அலைந்து திரிகிறார்கள். இயேசு கிறிஸ்துவிடம் நம்மைத் தாழ்த்தி அவர் சமுகத்திலே அவருடைய நாமத்தினாலே வேண்டுதல் செய்யும்போது, கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் என்ற வார்த்தையின்படியே உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்க அவர் உதவி செய்கிறார். சிலருடைய வாழக்கையில் அவருடைய நாமத்தினால் கேட்கும்போது, சஞ்சலங்கள் நீங்கிய சந்தோஷம், துக்கங்கள் நீங்கிய சமாதானம், காயங்கள் ஆறிய ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளமுடிகிறது. தேவ சமுகத்திலே பேரின்பமும் பேரானந்தமும் உண்டு என்று நாம் அறிவோம். இந்த மெய்யான சந்தோஷத்தை கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது பெற்றுக்கொள்கிற பாக்கியசாலிகளாய் இருக்கிறோம். எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள் என்று சொன்ன தேவன், ஒரு குடும்பத்தாரை சந்தோஷத்தால் நிறைத்து சந்தோஷத்தைப் பெருகச் செய்தபடியால், அவ்வாறு  சந்தோஷம் அருளும் வல்லமையுள்ள தேவனுக்கு சாட்சியாக இருக்க தம்முடைய வேலையை ராஜினாமா செய்து சந்தோஷத்தை அறிவித்து ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

3.ஞானத்தின் குறைவை நீக்குகிறார்.

"உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க்  கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்கு கொடுக்கப்படும்." யாக்கோபு 1:5

இன்று ஞானம் இல்லாதபடியால் வேலையிலும் வாழ்விலும் மேன்மையும் உயர்வும் அடையாதபடி தடையும் தாமதமும் ஏற்பட்டு கலங்கச் செய்கிறது. ஒருவன் ஞானக் குறைவாயிருக்கும்போது, யாவருக்கும் சம்பூரணமாய்த்தருகிற அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கேட்கும்போது, நிறைவாய்த் தந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். ஞானமானது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிகவும் அவசியமாய் இருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படும்போது, அதுவே ஞானத்தின் ஆரம்பமாக இருக்கிறது. இவ்வுலக வாழ்க்கையிலே கசப்பான வைராக்கியம் உடையவர்களும், பெருமை பாராட்டுகிறவர்களும், பொய்சொல்லுகிறவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள். இவர்களுக்குள்ளாக லௌகீக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்த ஞானமே இருக்கிறது. இந்த தவறான வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும், சகல துர்ச்செய்கைகளும் உண்டு. ஆனால் தேவன் அருளுகிற ஞானமானது சுத்தமுள்ளதாயும், சமாதானமும் சாந்தமும், இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயும் இருக்கிறது. இதைப்போல, ஆவிக்குரிய ஞானமும் உண்டு. இவ்வுலகத்துக்கடுத்த ஞானமும் உண்டு. தானியேலோடு அடிமையாக வந்த மூன்று வாலிபர்களுக்கும் சகலவித எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியேலை சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ள வனாக்கினார். உலக காரியங்களைக் கற்றறிவதிலும், ஆவிக்குரிய தேவ தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்கதாக இந்த நாலு வாலிபர்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடி இச்சையடக்கம் உள்ளவர்களாய் இருந்து ராஜ போஜனத்தை வெறுத்தபடியால், இந்த ஆசீர்வாதமான ஞானத்தை ஏராளமாய் அருளினார்.

       யோசேப்பு தன்னைப் பரிசுத்தமாய் காத்துக்கொண்டான். தன்  சகோதரரால் வெறுக்கப்பட்டு, அடிமையாக விற்கப்பட்ட இந்த யோசேப்பு பாவத்திற்கு உடன்படாதபடி காத்துக் கொண்டான். சொப்பனங்களின் அர்த்தத்தை அறியத்தக்க, அதனை தெளிவாய்ச் சொல்லத்தக்க ஞானம் தேவனால் அருளப்பட்டபடியால், அவனை ஏற்றக்காலத்தில் உயர்த்தினார். சிறைச்சாலையில் அடைப்பட்டு இனி வாழ்க்கை ஒன்றுமில்லை என்று கலங்கியிருந்த அவனுக்கு, கர்த்தர் அருளிய ஞானத்தால் சொப்பனத்தின் அர்த்தம் கூறப்பட்டு நன்மை அடைந்த பானபாத்திரக்காரரின் சாட்சி, ராஜாவின் சொப்பனத்தின்  அர்த்தங்களை அறிவிக்க கர்த்தரே வழி திறந்தார். சொப்பனத்தின் அர்த்தத்தை அறிந்த ராஜா அவனையே விவேகம் உள்ள மகனாய், ராஜாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் மிகைப்படுத்தி, அதிகாரத்தையும் மேன்மையும் அருளினார்.

       இன்று நம்முடைய வாழ்க்கையிலே இந்த ஞானமானது உலகப் பிரகாரமாயும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நம்மை மேன்மை அடையச்  செய்கிறது.

4. அற்புத சுகம் உண்டாகும்

"...உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்." ஏசாயா 38:5

கண்ணீரோடு வேண்டுதல் செய்த எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையில் மரணத்துக்கேதுவான வேதனையான நோயை குணமாக்கி, ஆசீர்வதித்தார். மரணம் நேரிடும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட எசேக்கியா ராஜா உண்மையும் மன உத்தமுமாய் நடந்ததை நினைவு கூரும்படி கண்ணீரோடு கேட்டான். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன தேவன், அவன் கண்ணீரைக் கண்டார். அவன் விண்ணப்பத்தைக் கேட்டார். அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மையும், நம்முடைய ஒவ்வொரு செயலையும் காண்கிற தேவன். மேலும் நாம் சிந்துகிற கண்ணீரைக் காண்கிற தேவன். என் கண்ணீருக்கு பதில் இல்லையோ, என்னைக் காண்கிறவர் என் கண்ணீரைக்  காணவில்லையோ என்று ஒரு வேளை நீங்கள் கலங்கிக் கொண்டிருக்கலாம். அவர் உங்கள் கண்ணீரைக் காண்கிற தேவன் மாத்திரமல்ல, கண்ணீரைத் துடைக்கிற தேவனுமாயிருக்கிறார்.

இதை வாசிக்கிற சகோதர, சகோதரியே, எல்லார் முகங்களிலுமிருந்து அவர் கண்ணீரைத் துடைக்கிற தேவன். இன்று பலவிதமான ஏமாற்றத்தினால், தோல்விகளினால், இழப்புகளினால், அன்பற்ற செய்கைகளினால், நஷ்டங்களினால் இனி நான் என்ன செய்வேன்? என் வாழ்க்கையில் வேதனைப் பெருகி என்னைத் துக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறதே என்று கலங்கிக்கொண்டிருக்கிறாயா? நம்மை நேசிக்கிற அன்பின் ஆண்டராகிய இயேசு கிறிஸ்து நம் கண்ணீரைத் துடைத்து நம் காயங்களை ஆற்றி, நோய்களைக் குணமாக்கி ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். பலவிதமான நோய்களும், வியாதிகளும், பெலவீனங்களும் மனித சமுதாயத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களிலே  கோவிட் என்ற நோயின் கொடூரத்தால் பல ஆயிரக்கணக்கான மக்களை, நமக்கு அருமையானவர்களை, கணவனை, மனைவியை, பிள்ளைகளை, பெற்றோர்களை இழந்த குடும்பங்கள் ஆயிரமாயிரம் உண்டு. ஒன்றை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நம் பெலவீனங்களை ஏற்றவர், நோய்களைச் சுமந்தவர் இன்றைக்கு ஜீவிக்கிறார். அவர் ஒருவரே நோயின் கொடூரத் தன்மையை நிர்மூலமாக்கி, ஜீவனோடு மகிழ்ச்சியோடு நம்மை வாழ வைக்கிறவர். அவருடைய தழும்புகளினால் நாம் குணமாகிறோம்.

ஒருமுறை ஒரு குடும்பத்தாரின் மகனுக்கு ஒரு கொடூர நோய் ஏற்பட்டது. மருத்துவர்களால் அது என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. நம்முடைய தேவன் சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனாய் இருக்கிறார். தொலைபேசியினால் என்னோடு தொடர்பு கொண்டு எல்லா மருத்துவ சோதனையும் செய்தாகிவிட்டது. ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்றார். கர்த்தர் அந்த மகனுக்கு ஏறெடுத்த  ஜெபத்தைக் கேட்டு அதிசயமான காரியத்தை நடப்பித்தார். நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புத சுகத்தைத் தருகிற தேவன். சில நேரங்களிலே நாம் ஜெபித்தும் சுகம் கிடையாதபடி வேதனை அடையும் போது மிகுந்த துக்கமும் துயரமும் அடைகிறோம். ஏன் எனக்கு நேரிட்டது, நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று துக்கமும் துயரமும் அடைகிறோம். இன்று அவருடைய வல்லமையான செயலினால் நாம் பிழைக்கத்தக்கதாக அவருடைய சுகமளிக்கும் வல்லமை வெளிப்படுவதைப் பார்க்கிறோம். எசேக்கியா ராஜாவின் வேண்டுதலைக் கேட்ட அன்பின் தேவன் மாறாதவராய், மகத்துவம் உடையவராய் இன்றும் ஜீவிக்கிறார். அவர் சகல நோய்களையும் நீக்கி நம்மை குணமாக்க வல்லவராயிருக் கிறார். நோயினால் வாடும் சகோதரனே, சகோதரியே, இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, கேளுங்கள். அற்புத சுகத்தை உங்களுக்குக் கொடுத்து அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

5) கர்த்தரே தெய்வம் என்று அறிய முடியும்

"கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும். தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். " 1 இராஜாக்கள் 18:37

மூன்றாம் வருஷத்தில் கர்த்தர் எலியாவை நோக்கி ஆகாபுக்கு உன்னைக் காண்பி, தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்று சொன்னார். ஒபதியாவின் மூலம் ஆகாப் எலியாவைச் சந்திக்க வந்தான்.  ஆகாப் எலியாவைக் கண்டபோது, இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்று குற்றம் சாட்டினான். அதற்கு எலியா இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன்  நான் அல்ல, கர்த்தரின் கர்த்தரின் கட்டளையை விட்டு பாகாலைப்  பின்பற்றினதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேல் வீட்டாரை கலங்கப் பண்ணுகிறீர்கள் என்று பதிலாக கூறினான். அத்துடன் எலியா கர்மேல் பர்வதத்தில் இஸ்ரவேல னைத்தையும் பாகால் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கூட்டிக் கொண்டு வர ஆட்களை அனுப்பும் என்றான். அப்படியே கர்மேல் பர்வதத்தின் மேல் அந்தத் தீர்க்கதரிசிகள் கூடிவரும்படி செய்தார். எலியா ஜனங்களைப் பார்த்து எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள். கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான். இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும். ஒரு காளையை பாகால் தீர்க்கதரிசிகள் தெரிந்து கொண்டு சந்து சந்தாக நெருப்புப்படாமல் விறகுகளின் மேல் வைக்கக்கடவர்கள். நான் மற்றக் காளையை அப்படியே செய்து நெருப்புப் படாமல் விறகுகளின் மேல் வைப்பேன். நீங்கள் உங்கள் தேவர்களுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள். நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுவேன். அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான். அதற்கு ஜனங்கள் இது நல்ல வார்த்தை என்றார்கள். எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி நீங்கள் முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு ஆயத்தம் பண்ணி நெருப்புப்படாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள் என்றான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை வாங்கி பாகாலின் தீர்க்கதரிசிகள் காலை தொடங்கி மத்தியானம் மட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லி கூப்பிட்டார்கள். ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாருமில்லை. எலியா சகல ஜனங்களையும் நோக்கி என் கிட்ட வாருங்கள் என்று அழைத்து தகர்க்கப்பட்ட பலிபீடத்தைச் செப்பனிட்டு அதற்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொன்னான். கர்த்தருடைய வார்த்தையின்படி யாக்கோபின் கோத்திரத்தின் நாமங்களை நினைவுகூரும்படி 12 கற்களை எடுத்து, அந்த கற்களாலே ஒரு பலி பீடத்தைக் கட்டினான். பலி பீடத்தைச் சுற்றி தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க விதமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி விறகுகளை அடுக்கி ஒரு காளையை சந்து சந்தாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். நாலுகுடம் தண்ணீர் கொண்டு வந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான். அப்படியே இரண்டாந்தரமும், மூன்றாந்தரமும் தண்ணீரை பலிபீடத்தின் மேல் ஊற்றினார்கள். பலிபீடத்தைச் சுற்றிலும் தண்ணீர் ஓடினது. அந்திப்பலி செலுத்தும் நேரத்தில் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும் நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும் இந்த காரியங்களை எல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இந்த ஜனங்கள் அறியும் படிக்கு என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி அந்த சர்வாங்க தகன பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலில் இருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. அப்பொழுது ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபொழுது, கர்த்தரே தெய்வம் என்று முகங்குப்புற விழுந்து ஏற்றுக்கொண்டார்கள். பின்பு, எலியா ஆகாபை நோக்கி நீர் போம், போஜனம் பண்ணும். பெரு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். எலியாவின் ஜெபத்தைக் கேட்ட தேவன் பாகாலின் தீர்க்கதரிசிகளை நிர்மூலமாக்கி ஜனங்களைக் கர்த்தர் பக்கமாய் திருப்பினான்.       

 

II  நாம் எவ்விதமாய் கர்த்தரிடம் கேட்க வேண்டும்.

1) விசுவாசத்தோடு கேட்க வேண்டும்

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்…" யாக்கோபு 1:6

       நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, நாம் அவரை நோக்கிக் கேட்கும்போது, நம்முடைய விசுவாசம் எந்த அளவில் இருக்கிறது என்று பார்க்கிறார். நிறைந்த விசுவாசம் இருக்கும்போது, நாம் கேட்டுக்கொண்டதை பெற்றுக் கொண்ட மக்களாய் இருக்கிறோம். கானானிய ஸ்திரீ இயேசு கிறிஸ்துவிடம் வந்து தன மகளை வேதனைப் படுத்துகிற பிசாசின் பிடியில் இருந்து விடுதலை ஆக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அந்த மகளின் காரியங்களை அறிந்தவர்கள். மகளை விடுதலையாக்கி தாயை அனுப்பிவிடும் எண்று பரிந்துரை செய்தார்கள். அப்பொழுதும் இயேசு கிறிஸ்து பதில் சொல்லாது தன் காரியங்களைச் செய்தபோது, கானானிய ஸ்திரீ இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் மீண்டும் தாழ்த்தி இறங்கும் என்று வேண்டிக்கொண்டாள். உடனே இயேசு கிறிஸ்து பிள்ளைகளின் அப்பத்தை நாய்க் குட்டிகளுக்கு எப்படிப்  போடுவது என்றார். அந்த ஸ்திரீயோ மேஜையின் மேலிருந்து விழும் துணிக்கைகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள். கிறிஸ்து அந்த மகளில் இருந்த பெரிய விசுவாசத்தைக் கண்டு உன் விருப்பத்தின்படி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். நீங்கள் கேட்டுக்கொள்கிற ஜெபத்தில் உங்கள் விசுவாசம் எந்த அளவில் இருக்கிறதோ அந்த அளவிற்கு பதில் தருகிறார், அற்புதம் செய்கிறார். விசுவாசக்குறைவினாலே நம் தேவனுடைய மகத்துவமான செயலை பெற்றுக் கொள்ளாதிருக்கிறோம். நிறைந்த விசுவாசம் நாம் கேட்கிற காரியங்களைப் பூரணமாய் பெற்றுத்தருகிறதாய் இருக்கிறது.  

2)இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டு கேட்க வேண்டும்.

"இதுவரைக்கும் நீங்கள் என் நாமித்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்." யோவான் 16:24 

 

பிதாவை நோக்கி வேண்டுதல் செய்ய வேண்டும், கேட்க வேண்டும் என்று போதித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என் நாமத்தினால் கேட்க வேண்டும் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து என்று சொல்ல நாம் பழகிக்கொள்ள வேண்டும். பிசாசானவன் கிறிஸ்து என்கிற நாமத்தை ராஜா, ஆண்டவரே என்று ஜனங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான். "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம். அவர்கள் செத்தவர்கள்…" ஏசாயா 26:13,14ல் பார்க்கிறோம். ஆகவே, இன்று நாம் தேவ சமுகத்திலே ஜெபிக்க முற்படும்போது என் நாமத்தினாலே என்று சொல்லுகிற வார்த்தையின்படி, கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கும்போது நிறைவான சந்தோஷத்தை அருளும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறோம்.

3) சித்தத்தின் படி கேட்க வேண்டும்.

"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." 1யோவான் 5:14             

இன்று நம்முடைய விருப்பத்தின்படி அல்ல, தேவனுடைய சித்தத்தின்படி நாம் கேட்கும்போது, அவர் நமக்கு பதில் தருகிறார். நாம் வேண்டிக்கொண்டதை நமக்கு அருளிச் செய்கிறார். இன்று எதிலுமே அவர் சித்தம் இன்னதென்று அறிந்து நாம் செயல்பட வேண்டும். எபேசியர் 5:17ல்  "...நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்" என்று பார்க்கிறோம். இந்த சித்தத்தின்படி நாம் கர்த்தரைக் கேட்கும் போது அவர் ஆச்சரியமாக நம்முடைய ஜெபங்களுக்கு பதில் தருகிறார். இது நம்முடைய ஞானத்திற்கு அப்பாற்பட்டதாயும் இருக்கிறது.

      குஷ்டரோகிகளில் ஒருவன், இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்து உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு கிறிஸ்து அவனைத் தொட்டு சித்தமுண்டு சுத்தமாகு என்றவுடன் குஷ்டரோகம் நீங்கி சுத்தமானான். ஆகையால் நாம் எதைச் செய்தாலும் அவர் சித்தப்படி செய்யவும், கேட்கவும் நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுது நாம் கேட்கிற விண்ணப்பங்களுக்குப் பூரணமாக பதில் கடந்து வரும்.

 

 

4)கண்ணீரோடு ஜெபிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.

"ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானத்தைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்." ஏசாயா 38:3

நம்முடைய தேவன் காண்கிற தேவனாயிருக்கிறார். எசேக்கியா சிந்தின கண்ணீரைக் கண்டார். கண்ணீரைத் துருத்தியில் வைத்திருக்கும் தேவன், கண்ணீரைத் துடைக்கிற தேவனாயிருக்கிறார். நம்முடைய பிரச்சனைகள் நீங்க, பாடுகள் நீங்க எவ்வளவு நேரம் கண்ணீர் சிந்தி ஜெபிக்கிறோம்? அநேக நேரங்களிலே நம்முடைய உதடுகளினால் மாத்திரமே நம் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறோம். ஆனால் உணமையான ஜெபம் கண்ணீரைப் பெருகச் செய்யும். இந்த அன்பின் தேவனுடைய சமுகத்திலே நம் உடைந்து போன உள்ளத்தின் வேதனையானவைகளை கண்ணீரோடு சொல்லும்போது, எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பேன் என்கிற கர்த்தாதி கர்த்தர் நம் கண்ணீரின் ஜெபத்திற்குப் பதில் தருவார்.

5)அன்பு நிறைந்தவனாய் ஜெபிக்க வேண்டும்

"சாலமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்…" 1இராஜாக்கள் 3:3

அன்பு கூர்ந்த சாலொமோனின் உள்ளத்தை அறிந்த தேவன், சாலொமோனுக்கு தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று சொன்னார். சாலொமோன் ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும் என்று கேட்டான். கர்த்தருடைய பார்வைக்கு இந்த சாலொமோனின் ஜெபம் உகந்த விண்ணப்பமாய் இருந்தது. ஆதலால் ஞானமும், உணர்வும் உள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன். உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை, உனக்குப் பின் எழும்புவதுமில்லை. இதனை மாத்திரமல்ல, அவன் கேளாத சம்பத்தையும் தேவன் தந்தருளினார். கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் எந்த அளவிலே நேசிக்கிறோமோ அந்த அளவுக்கு நன்மையான சகல காரியங்களையும் தருகின்றார். இந்த கல்வாரியில் அன்பை நாம் உணர முடிகிறதா? நமக்காக தம்மையே பலியாகச் சிலுவையில் அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவை அன்பு கூறுவோம்,நேசிப்போம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

       கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                                         கிறிஸ்துவின் பணியில்,        

                                                                                                                                                                                                                                                          சகோ. C. எபனேசர் பால்.