இந்த மாத செய்தி

                                                "...நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்...”

                                                                                                                                                   ஆகாய் 2:23

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நான் வாலிபனாய் வேலையில்லாத நிலையில் இருந்தபோது 'ரெயில்வே சர்வீஸ் கமிஷன்' தேர்வு எழுதினேன். அதின் 'ஸ்டேசன் மாஸ்டர்' பதவிக்கு எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நீ தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாய், நேர்முகத் தேர்வுக்கு வரவும் என்று சொல்லப்பட்டிருந்தது. எனக்கு மிகுதியான சந்தோஷம். அதிலும் நான் தெரிந்தெடுக்கப்பட்டேன். நிறைவான சந்தோஷத்துடன் நண்பர்களுக்கு ஸ்வீட், காரம், காபி வாங்கிக் கொடுத்தேன். மருத்துவ பரிசோதனை முடிந்து, திருச்சி Zonal Training School ல் உடனே சேரவும் உத்தரவு வந்தது. முதல் பகுதி மருத்துவ பரிசோதனை முடிந்தது. கண் சம்பந்தமான தேர்வில் எனக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே மிகுதியான துக்கத்துடன் என் வீடு வந்தேன். என் தகப்பனார் என்னைத் தேற்றினார்கள். இந்தச் சமயத்தில் 'High Ways'துறையில் எனக்கு ஒரு Assistant பணி கிடைத்தது. அதில் உடனே சேர்ந்து விட்டேன். சில நாட்களிலேயே இவைகள் நடை பெற்றதால் பழைய காரியத்தை நினைக்கவில்லை. இந்த வேலையோ என் மனதை திருப்தியடையச் செய்யவில்லை. ஆனால் 6 மாத முடிவில் எந்த ஆசிரியர் படிப்பு வேண்டாம் என்று வெறுத்தேனோ அந்தப் படிப்பைப் படிக்க நேரிட்டது. ஓராண்டு படிப்பு முடிந்த அடுத்த நாளிலேயே திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக நியமனம் கிடைத்தது. 'ஸ்டேசன் மாஸ்டராக' முயற்சித்த நான் கடைசியில் பி.டி. மாஸ்டராக தெரிந்துக் கொள்ளப்பட்டேன்.

1. நம்மை எவ்வாறு தெரிந்துகொள்கிறார்?

1. மனிதனை மாற்றித் தெரிந்து கொள்கிறார்

"...நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.”அப்போஸ்தலர் 9:15

நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பலவிதங்களில் நம் ஞானத்தால், நம் படிப்பால், நம் முயற்சியினால் நாம் நினைத்தப் படிப்பைப், பதவியைத் தேடுகிறோம். ஆனால் நம் கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து, எதற்கு

நம்மைத் தகுதிப்படுத்தியிருக்கிறாரோ அதற்கு நம்மைத் தெரிந்து கொள்ளுகிறார். இயேசு கிறிஸ்து சீஷர்களைப் பார்த்து, ‘நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்' என்று யோவான் 15:16ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

கர்த்தர் தமது திட்டத்தை நிறைவேற்ற தகுதியற்ற நம்மைத் தெரிந்து கொண்டு தகுதிப்படுத்துகிறார், மாற்றுகிறார். அவருடைய தெரிந்து கொள்ளும் விதம் நமது ஞானத்திற்கும், புத்திக்கும் எட்டாதது மாயிருக்கிறது. அவருடைய பிள்ளைகளைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு செல்ல கடிதங்களை வாங்கி செயல்பட்ட சவுலைப் பார்க்கும் போது, நாம் கர்த்தருடைய தெரிந்து கொள்ளுதலை அறிய முடிகிறது. 'சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்' என்று அவனைப் பார்த்துக் கேட்டார். 'ஆண்டவரே, நீர் யார்' என்று திகைத்து நடுங்கினான். 'ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்' என்று தன்னையே கர்த்தருக்கு அர்ப்பணித்தான் என்பதை அப்.9ல் பார்க்கிறோம். அனனியா என்ற தேவ மனிதனைக் கர்த்தர் அவன் பார்வையடையவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவும் அனுப்பினார். 'நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்'என்று அவனைத் தேற்றி நடத்தினதை அப்.9:15ல் பார்க்கிறோம். இப்படியாக தம் மக்களுக்குத் தீங்கு செய்த மக்களையும் தெரிந்துகொண்டார். இன்றும் அவ்வாறு தெரிந்து கொள்ளுகிறார்.

2.உபத்திரவத்தின் குகையில் தெரிந்து கொள்ளுகிறார்.

இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்." ஏசாயா 48:10

இன்னும் சிலரைத் தெரிந்து கொள்ளும்போது அவர்கள் மிகுதியான பாடுகளிலும் உபத்திரவங்களிலும் இருந்ததைப் பார்க்கிறோம். 'இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்' என்று ஏசாயா 48:10ல் பார்க்கிறோம். இன்று உன்னை நேசித்து தமக்காக உன்னைத் தெரிந்து கொண்ட தேவசமுகத்தில் உன்னை ஆராய்ந்து பார் நாம் நம்முடைய வாழ்வில் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கும் போது, ஐயோ, எத்தனை பாடுகளைக் கடந்து வந்துள்ளேன் என்று உணர முடியும். என் வாழ்வில் அவரின் கிருபை என்னைத் தாங்கி நடத்தினதை நான் உணருகிறேன் என்று அறிந்து, கண்ணீருடன் கர்த்தரைத் துதிப்போம்.

 

யோசேப்பு ஒரு குறிப்பிட்ட காலம் உபத்திரவத்தின் வழியாய் கடந்து வந்தான். சொந்த சகோதரர்கள் அவனைக் குழியில் தள்ளினபோது. கெஞ்சி வேண்டின வார்த்தைகளையும், அவனுடைய மன வியாகுலத்தைக் கண்டும் அவனுக்குச் செவிகொடாமற் போனார்கள் என்பதையும் ஆதி. 42:21ல் வாசிக்கிறோம். இந்த யோசேப்பைப் போல் உன் வாழ்வில் உன் பிள்ளைகளை, சகோதரர்களை, சகோதரிகளை, இனத்தாரை, ஏன் உன் கணவரை, உன் மனைவியைக் கெஞ்சி மனவியாகுலத்துடன் வேதனை அடைந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டு ஆசீர்வதிக்க விரும்புகிறார். கலங்காதே. யோசேப்பின் உபத்திரவங்களை மாற்றி மகிமைப்பட்ட கர்த்தர், உன்னிலும் மகிமைப்படுவார்.

யோசேப்பு உண்மையாயிருந்தும் அவன்மேல் பொய்யான குற்றச்சாட்டு வந்தது. பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள விரும்பி பாவத்திற்கு உட்படாத யோசேப்பின் மீது பல தீமையான பொய்யான குற்றச்சாட்டுகள் வந்தது. செய்யாத குற்றத்திற்காக தண்டனை அடைந்தான். சிறைச்சாலையில் இவனில் செயல்பட்ட பரிசுத்த ஆவியின் கிருபையினால் நன்மையைப் பெற்றவனும் கூட, அவன் ஆசீர்வதிக்கப் பட்டபோது யோசேப்பை மறந்தான். இன்று உன் வாழ்வு இப்படியிருக்கிறதா ? கர்த்தர் அறிவார். உன்னை அதிசயம் காணச் செய்வார். உன் வனாந்திர வாழ்வில் வழியை உருவாக்குவார். எதிர்பேசும் மக்களின் வாய் அடைக்கப்படும். மேன்மையும் மகிழ்ச்சியும் உன் எல்லையில் உண்டாகும்.

3. 'வாழ்க்கையின் முடிவு' என்ற வேதனை நிறைந்த நிலையில் நம்மைத் தெரிந்து கொள்ளுகிறார்.

"நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்." ஏசாயா 41:9

பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உன்னை அழைத்து, தெரிந்துகொண்டேன் என்று சொல்வதைப் பார்க்கிறோம். பூமியின் கடையாந்தரம் என்றால் இனி வாழமுடியாது வழி இல்லை என்ற வேதனையான நிலமை. இனித் தற்கொலைதான் என்ற போராட்டம் மிகுந்த வாழ்க்கையின் மனங்கசந்த நிலை. ஐயோ, நான் இனி எதற்காக வாழ வேண்டும், யாருக்காக வாழ வேண்டும் என்ற பாடுகள் நிறைந்த நிலையுடன் வாழ்கிற மக்களை ஏராளமாய்ப் பார்க்கிறோம். பூமியின் அந்தக் கட்டக் கடைசி என்று சொல்லப்பட்ட நிலையிலிருந்து எடுத்து, அழைத்து, தெரிந்து கொண்டு 'நான் உன்னை வெறுத்துவிடவில்லை நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்' என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

 

சில தேவ ஊழியர்களுடைய சாட்சியைப் பார்க்கும்போது சிறந்த காரியங்களை அவர்கள் வாழ்வில் கர்த்தர் செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. சில விசுவாசிகளின் வாழ்விலும் இந்தவிதமான சாட்சிகளினால் அந்த பூமியின் கடையாந்தரங்களிலிருந்து துாக்கி யெடுத்து, இன்று நேர்த்தியாய் அவர்களை நடத்துகிறதைப் பார்க்கிறோம்.

ஒருமுறை தேயிலைத் தோட்டம் நிறைந்த பகுதியில் நற்செய்திக கூட்டத்தை ஆலயம் ஒன்றில் நடத்தினோம். பாடலைப் பாடி ஜெபத்திற்குச் சென்றபோது, கர்த்தர் ஒரு வாலிபனைப் பற்றிய வார்த்தைகளைச் சொல்ல என்னை நடத்தினார். தற்கொலை செய்ய வேண்டும் என்று முயற்சிக்கி சகோதரனே, கர்த்தர் உன்னை நேசிக்கிறார், உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார். உன் வீணான காரியத்தை நீ விடும்போது, உன்னைட் பெரிய காரியங்களைச் செய்ய தெரிந்துகொள்ளுவார் என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டது. இந்த மனிதன் தன் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கசப்பினால் தற்கொலை செய்ய தீர்மானித்து, அந்தத் தேயிலைத் தோட்டத்தின் பகுதியில் விஷமருந்துடன் தற்கொலை செய்ய ஆயத்தமாயிருந்தான். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவன், இது எனக்குத்தானோ என்ற கேள்வியுடன் இருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் அதையும் வெளிப்படுத்தி உனக்குத்தான் இந்த வார்த்தைகள் என்றபோது, அவன் தற்கொலை செய்வதை விட்டுவிட்டு நேரடியாக கூட்டம் நடைபெற்ற ஆலயத்திற்கே வந்தான். கூட்டம் முடிவில் தன்னைக் கர்த்தருக்கென்றும், ஊழியத்திற்கென்றும் அர்ப்பணித்தான் தற்கொலை செய்து மரித்துப்போக வேண்டிய மனிதன் தேவ ஊழியனாக மாறினான்.

வாழ்க்கையின் முடிவு நிலை என்று வியாதியினால் தோல்வியினால், பல பிரச்சனைகளினால் நம்முடைய வேதனைகளி னிமித்தம் தற்கொலை செய்துவிடலாம் என்று எண்ணும் தேவட பிள்ளையே, கர்த்தர் உன்னை நேசிக்கிறார். உன்னுடைய இந்த நிலையிலிருந்து கர்த்தர் உன்னை எடுத்து, அழைத்து, தெரிந்துகொண்டு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார். இன்று இந்த அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவை நீ நேசிக்க, அவர் வார்த்தைக்குச் செவிகொடுக்க இடங்கொடு. அதிசயம் காண்பாய்.

4. அற்பமாய் எண்ணப்பட்டவைகளைத் தெரிந்துகொள்ளுகிறார்.

"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவை களையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவை களையும், தேவன் தெரிந்துகொண்டார்." 1 கொரிந்தியர் 1:28

அன்பு தேவப்பிள்ளையே! கர்த்தராகிய தேவன் யாரைத் தெரிந்துகொள்ளுகிறார் என்று பார்க்கும்போது இழிவானவர்கள் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை, இல்லாதவர்களைத் தெரிந்து கொண்டு தமது திட்டத்திற்குப் பயன்படுத்துகிறார். இன்று எனக்கு அழகில்லை, நல்ல நிறமில்லை, நல்ல உருவமில்லை, படிப்பில்லை அந்தஸ்தில்லை என்று கலங்க வேண்டாம்.

ஒருமுறை ஒரு தகப்பனார் என் மகளின் திருமணம் எப்பொழுது நடைபெறும், எனக்கும் வயதாகிவிட்டதே என்று கலங்கி கூட்டத்திற்கு வந்திருந்தார். தன் மகள் கருப்பாயிருப்பதால் நான் எதிர்பார்க்கும் நல்ல மாப்பிள்ளை கிடைப்பாரா என்ற கவலை. கர்த்தர் அவர் உள்ளத்தை அறிந்திருந்தபடியால் அந்த மகளுக்கு நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமான விதத்தில் காரியங்களைச் செய்வேன் என்று சொன்னார். அந்தப்படியே நல்ல மருத்துவரை அந்த மகளின் வாழ்வில் அமைத்துக் கொடுத்தார். இழிவானவைகளை, இல்லாதவைகளை, அற்பமானவை களைக் கர்த்தர் தெரிந்து கொண்டு தமது திட்டத்தை நிறைவேற்றுகிறார்.

சாமுவேல் தீர்க்கதரியைக் கர்த்தர் ஈசாயின் ஊருக்கு அனுப்பினார்.. அங்கு ஒருவனை ராஜாவாக தெரிந்துகொண்டேன் என்றார். கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் சென்றான். ஈசாயிடம் அவனையும், அவன் பிள்ளைகளையும் பலிவிருந்துக்கு அழைப்பைக் கொடுத்தான். அவர்கள் வந்தபோது யாரை தமது ஜனங்களுக்கு மேலாக ராஜாவாக தெரிந்து கொண்டிருக்கிறார் என்று உள்ளத்தில் கர்த்தருடன் பேசினபோது சரீரவளர்ச்சியைக் குறித்தும், முகத்தைக் குறித்தும் கர்த்தர் பேசினார். 7 பேரைத் தீர்க்கதரிசியாகிய சாமுவேல் முன்நடந்துபோகச் சொன்னான்.. உன்னிடம் இவ்வளவு பிள்ளைகள் தானா என்று ஈசாயிடம் கேட்டபோது இன்னும் ஒருவன் இருக்கிறான், அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்று ஈசாய் பதில் கூறினதைப் பார்க்கிறோம். வீட்டில் நடைபெறும் விருந்துக்கு அழைக்கப்படவில்லை. அற்பமாய் எண்ணப்பட்ட அவனைத்தான் கர்த்தர் தெரிந்துகொண்டார். 'இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்' என்று 1 இராஜாக்கள் 11:37ல் பார்க்கிறோம்.. அற்பமான நம்மைத் தெரிந்து கொண்டு தமது திட்டத்தை நிறைவேற்றுவார்.

5. பக்தியுள்ளவனைத் தெரிந்து கொள்ளுகிறார்

"பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்..." சங்கீதம் 4:3

இந்த உலக வாழ்க்கையிலே நாம் பக்தி நிறைந்தவர்களாய் வாழ்வதற்கு கர்த்தர் நம்மைத் தெரிந்து கொள்கிறார். பக்தி என்றவுடன் வெளியரங்கமானது அல்ல. உள்ளான வாழ்க்கையிலே உருவாகும் நற்செயலாகும். இன்று அநேகர் பக்தி நிறைந்தவர்களைப் போல நடித்து வருகிறார்கள். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையிலே நாம் பரிசுத்தமும், அன்பின் செயலும் உடையவர்களாய் இருக்க வேண்டும். 'திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற  உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது' என்று யாக்கோபு 1:27ல் சரியானபக்தியின் வாழ்க்கை என்ன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று அநேகருடைய வாழ்க்கையில் அன்பின் செயலைப் போல தோன்றி, பாவ வாழ்க்கைக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் கர்த்தருடைய நாமம் துாஷிக்கப் படுகிறது. அன்பின் செயல் என்று சொல்லும்போது, திக்கற்றவர்களை, அனாதைப் போல் வாழ்கிறவர்களை, மிகுந்த கண்ணீரோடு வாழ்கிற மக்களை, விதவைகளை விசாரிக்கிறது மாயிருக்கிறது. அத்துடன் பரிசுத்தம் என்று சொல்லும்போது, நமது ஒவ்வொரு செய்கையிலும், சிந்தையிலும் கர்த்தர் விரும்புகிற துாய்மை நிறைந்த வாழ்க்கை உள்ளவர்களாக இருப்பதாகும். இவ்விதமான பக்தி நிறைந்தவர்களைக் கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தந்து, அவர்களின் உற்சாகத்துக்கு ஏற்ற ஊழியத்தைத் தருகிறார்.

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று சொன்னவர், நாம் துாய்மையாய் இருப்பதற்குத் தமது இரத்தத்தை நமக்காக சிலுவையில் சிந்தினார். இன்று யார் யார் தங்கைைளப் பரிசுத்த இரத்தத்தாலே சுத்திகரிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கிறார்களோ, அவர்களைச் சிலுவையின் அன்பினால் நிறைத்து, தமக்காகத் தெரிந்து கொண்டு பயன்படுத்துகிறார். இந்த அன்பு நமக்குள் நிறைய நிறைய நம்மை வெறுத்து, இயேசுவைப் பற்றிக்கொண்டு அவருக்காகப் பாடுபடவும், வேதனைகளைச் சகித்து, சகல சூழ்நிலைகளிலும் சமாதானத்தோடு வாழவும், ஊழியம் செய்யவும் உதவி செய்கிறார்.

பவுல் தன்னுடைய வாழ்க்கையிலே கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது என்று 2 கொரி. 4:14ல் சொல்வதைப் பார்க்கிறோம். அவனது பக்தி நிறைந்த வாழ்க்கை, பெலவீனங்களையும், மற்ற சூழ்நிலைகளையும் பாராது, பெரிதான ஊழியத்தைச் செய்து முடித்த சாட்சியை நாம் அறிவோம். இன்று நாமும் பக்தியில் நிறைந்து வாழ அர்ப்பணிப்போமாக.

எதற்காகத் தெரிந்து கொள்ளுகிறார்?

1. கனிகொடுப்பதற்காக

"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக் கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும் படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்."யோவான் 15:16

நம் வாழ்வில் நாம் எப்படிப்பட்ட கனியுள்ள வாழ்வு வாழ்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 'நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்' என்று மத்.7:19ல் தெளிவாகக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். வேதத்தில் குறிப்பிட்டுள்ள நல்ல கனிகள் நமக்குள் இருக்கவேண்டும் என்று கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்டு இருக்கிறார்.

எபி.13:15ல் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியைக் குறித்து வாசிக்கிறோம். உலக மனிதரின் உதவியை அடையும்போது மிகுதியான மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறோம். அனுதினமும் நம்மைக் கண்மணிபோல் காத்துவரும் கர்த்தாதி கர்த்தருக்கு எவ்விதமான நன்றியைத் தெரிவிக்கிறோம். எந்த மனிதன் தேவனை அறிந்தபின் துதியாமல் மகிமைப்படுத்தாமல் இருக்கிறானோ அவனுடைய வாழ்வு இருளடையும் என்று ரோமர் 1:21ல் பார்க்கிறோம். நாம் தேவனை ஸ்தோத்தரிக்கும்போது, அவரை மகிமைப்படுத்துகிறோம். 'எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்' என்று 1 தெச.5:18ல் பார்க்கிறோம். ஸ்தோத்திரபலி யிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான் என்பதால் உதடுகளின் கனிகளினால் தேவனுக்கு மகிமையைச் செலுத்துவோம்.

இன்னும் கலாத்தியர் 5:22,23ல் ஆவியின் கனிகளைப் பார்க்கிறோம். இந்த ஆவியின் கனிகள் இருந்தால் நம் வாழ்வு மலர்ந்து என்றும் மகிழ்ச்சியுடன் மேன்மையாக நாம் வாழ முடியும். இந்தக் கனிகள் பெருகும்போது நாம் கர்த்தரின் பண்புகளை உலகத்தாருக்கு பிரதிபலிக்கிற கருவியாக மாறிவிடுவோம்.

கனியில்லா நிலையில் அநேக பாடுகள் உண்டாகும். 'இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனியுண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று' என்று மத்.21:19ல் பார்க்கிறோம். கனியில்லையென்றால் சாபம் தோன்றிவிடும். அருமையான தேவப்பிள்ளையே! நற்கனி நிறைந்த நல்ல வாழ்வு வாழ நம்மை முற்றிலும் அதற்குத் தகுதிப்படுத்துவோம்.

இன்னும் நல்ல கனிக்கு மாறாக கசந்த கனி தருவோமானால் கர்த்தரின் ஆசீர்வாதங்களை இழந்து விடுவோம். 'நல்ல திராட்சப் பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன ?' என்று ஏசாயா 5:4ல் கேள்வியாக கேட்ட தேவன், அதற்கு என்ன செய்வேன் என்று கூறினதையும் பார்க்கிறோம். வேலி பிடுங்கப்படும், அது மிதிக்கப்படும், முள் தோன்றும் என்று ஏசாயா 5:5,6ல் பார்க்கிறோம். தேவன் விரும்பாத கனி இருப்பதினால் உன்னத தேவனின் பாதுகாவலை இழக்கிறோம். நான் அவைகளைச் சுற்றி அக்கினி மதிலாய் இருப்பேன் என்ற மேன்மையான பாதுகாவலை இழந்து விடுகிறோம். நமக்கு நல்ல பண்புகள் இல்லாதபடியால் கர்த்தரின் ஆசீர்வாதத்தை இழப்பதுடன் வேதனையான வாழ்வு உருவாகிவிடுகிறது. சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்க அதிகாரம் பெற்ற நாம் மற்றவர்களால் மிதிக்கப்படுகிற அவல நிலை உருவாகிறது. 'பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்' என்ற சங்.91:13ம் வசனத்தின் அதிகாரத்தை இழந்து கலங்குகிறோம்.

அத்துடன் முள்போன்று தோன்றுகிற போராட்டமான வாழ்வு உருவாகி விடுகிறது. பவுல் தன் நிருபத்தில் இப்படியாக குறிப்பிட்டு இருக்கிறார். 'நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய துாதனாயிருக்கிறது' என்று 2கொரி.12:7ல் தன்னிலுள்ள பெலவீனத்தைக் கூறுகிறதைப் பார்க்கிறோம். ஆகவே இன்று கனி நிறைந்த வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

இந்தக் கனி ஏதோ தோன்றுவதுமட்டும் இல்லை. சிலகாலம் மாத்திரமல்ல, என்றும் நம்மில் இருக்கவே கர்த்தர் நம்மைத் தெரிந்து கொண்டு இருக்கிறார்.

2.நம்மைப் புதிய கருவியாக மாற்ற.

"இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்திரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.” ஏசாயா 41:15

கர்த்தர் தெரிந்து கொண்டதின் நோக்கம் உன்னை கர்த்தரின் நாமத்தினால் பணிசெய்ய புதிதாக்குகிறதாய் இருக்கிறது. ஒரு யந்திரத்தில் பல பற்சக்கரங்களைப் பார்க்கிறோம். இந்தப் பற்சக்கரங்கள் சரியாக செயல்பட வேண்டுமானால் அது கூர்மையுள்ளதாயும் புதிதாயும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமையான பயனைத் தரும். பற்கள் சரியில்லாத, பற்கள் மழுங்கிப்போன யந்திரங்கள் பூரணமாய் செயல்படாது. ஒரு யந்திரம் புதிதாய் இருக்கும்போது அது சிறந்த முறையில் செயல்படும். நம் ஆவி, ஆத்துமா, சரீரமானது புது பெலன் அடையும்போது அதின் செயல்பாடுகள் மாறிவிடும். மலைபோல பிரச்சனைகள் வந்தாலும் அதை மேற்கொள்ள வலிமையடைந்துவிடும். அதைப்போல போராட்டங்கள் எந்த நிலையில் வந்தாலும் அதை எளிதாய் ஒன்றும் இல்லாததாக மாற்றி விடுவோம்.

3.நம்மை அனுப்ப, வியாதியை குணமாக்க, பிசாசுகளைத் துரத்த அதிகாரமுடையவர்களாய் இருக்கத் தெரிந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பன்னிரெண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.” மாற்கு 3:14,15

தம்முடன் இருப்பதற்கும் பிரசங்கம் பண்ணும்படியாகவும் அவர்களை அனுப்பவும் தெரிந்து கொண்டார் என்று பார்க்கிறோம். உன்னுடனே இருக்கிறேன் என்ற கர்த்தர் என்றும் நம்முடன் இருக்க விரும்புகிறார். சர்வ வல்லமையும் அதிகாரமுமுடைய அன்பின் தேவனாகிய இயேசு கிறிஸ்து நம்முடன் என்றும் எப்பொழுதும் இருக்க விரும்பி நம்மைத் தெரிந்திருக்கிறார். அவருடன் நாம் இருக்கும்போது சகலவிதத்திலும் நாம் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் அடைவோம். அவருடன் இருக்கும்போது மேன்மையும் நன்மையும் உண்டாகிவிடும்.

அத்துடன் நாம் கர்த்தரின் வார்த்தைகளை நம்மால் இயன்றவரை சொல்ல வேண்டிய கடமை நம்மேல் இருக்கிறது. 'சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு' என்று பவுல் தீமோத்தேயுவுக்குச் சொல்வதைப் பார்க்கிறோம். கர்த்தர் செய்த நன்மைகளை, அவருடைய அற்புதங்களைக் கூறுவதற்காக நாம் கர்த்தரால் தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம். கர்த்தரின் வார்த்தைகள் ஆவியும் ஜீவனும் நிறைந்தன. இதன்மூலம் இரட்சிக்கப்படுவார்கள். ஆறுதலடைவார்கள். ஆலோசனை பெறுவார்கள், வழி எது என்று அறிந்து கொள்வார்கள். சிலர் வாழ்வில் எச்சரிப்பும் பெறுவார்கள். வசனத்தை அனுப்பி குணமாக்குகிறவர் பூரண மகிழ்ச்சியை உண்டாக்குவார்.

அத்துடன் நம்மை அனுப்புவதற்காக தெரிந்து கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் அநேக பரிசுத்தவான்களை அனுப்பின நிகழ்ச்சியை அறிவோம். யோனாவைக் கர்த்தர் 'மகா நகரமாகிய நினிவேக்குப் போய் பிரசங்கி' என்றார். இதின் மாற்றம் ஆசீர்வாதம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினார்கள். அந்த நினிவே முழுவதும் கர்த்தரை ஏற்றுக் கொண்டது.

மோசேயைப் பார்த்து 'நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்' என்று யாத்.3:10ல் பார்க்கிறோம். அடிமைத்தன வாழ்விலிருந்து மீட்டுவர அனுப்புகிறார். இங்கிலாந்திலிருந்தும், இன்னும் பல தேசங்களிலிருந்தும் வந்த தேவ மனிதர்களினால் நம் நாட்டில் பல நன்மைகள் பெருகியது. கல்வி, மருந்துவ ஸ்தாபனங்கள் அமைந்தன. இன்றும் அப்படியே கர்த்தரின் நோக்கம் நம்மை அவர் சார்பாக அனுப்புவதாகும்.

இன்னும் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியஸ்தர்களைக் குணமாக்கவும் அதிகாரமுடையவர்களாயிருக்கும்படி நம்மை அனுப்பினார்.

1பேதுரு 2:9ன்படி கர்த்தரின் புண்ணியங்களைத் தெரிவிக்கும்படி உங்களைத் தெரிந்து கொண்டு இருக்கிறார். இந்தத் தெரிந்து கொள்ளுதலின் நோக்கத்தை, திட்டத்தை பூரணமாய் புரிந்து செயல்படுவோம். கர்த்தரின் நாமம் மகிமைப்படும், உயர்த்தப்படும்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                       கிறிஸ்து இயேசுவின் பணியில்,                                                                                                                                                        

                                                                                                                                                    சகோ.  C. எபனேசர் பால்.


E- STORE