''என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
                                                            என்னைத் தொடரும்...''

                                                                                                       சங்கீதம் 23:6

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

           கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

இன்று பல காரியங்கள் நம்முடைய வாழ்க்கையிலே தொடர்ந்து கொண்டே வருகிறது. அதை நாம் யோசிக்கும்போது எனக்கு ஏன் இந்தப் பாடுகள், துக்கங்கள் என்று எண்ணுகிறோம். ஆபிரகாமின் ஜெபத்தைக் கேட்டு லோத்தை சோதோம் கொமோராவில் இருந்து விடுவிக்கும்படி தேவன் அவன் மேல் கிருபை வைத்து நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். ஆனால், லோத்தோ அந்த மலைக்கு போக முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப் போவேன் என்று கலங்கினான். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே தீங்கு தொடருகிறபடியினால் கலங்குகிறார்கள். கசந்த உள்ளத்தோடு உடைந்து போன உள்ளத்தோடு, வேதனையோடு சோர்ந்து போய் தங்கள் நாட்களை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். தீங்கினால் வருகிற துக்கங்களை நீக்குகிற  தேவன், தீங்குக்காக மனஸ்தாப்படுகிற தேவன் இந்த ஆண்டிலே தீங்கு உங்களைத் தொடராதபடி கண்ணின் மணிப்போல காத்து உங்களை சுகமாயிருக்கப்பண்ணுவார்.

            இன்னும் சிலருடைய வாழ்க்கையிலே சத்துரு தொடருவதினாலே மனமுடைந்து போகிறார்கள். எகிப்திலே விடுதலையாக்கப்பட்ட மக்கள் விடுதலையின் சந்தோஷத்தினால் (மோசேயின் வார்த்தையின்படி) அவர்கள் சமாதானத்தோடு கானான் தேசத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். கர்த்தர் இவர்கள் யுத்தத்தை கண்டால் எகிப்துக்கு திரும்புவார்கள் என்று பெலிஸ்தியரின் தேச வழியாய் சுற்றிப்போகப் பண்ணினார். அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரர் திகைத்துத் திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று விடுதலையான இஸ்ரவேல் ஜனங்களை பின்தொடர்ந்தான். அருமையான தேவப்பிள்ளையே, உன் பழைய வாழ்க்கையின் பிரச்சனை தீர்ந்தது என்று எண்ணின உனக்கு தொடர்கிற சத்துருவின் செயலினால் கலங்காதே. உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும், உன்னோடு உங்களோடு இருக்கிறவர் பெரியவர். அவரே நமக்காக யுத்தம் பண்ணுகிறவர். அவர் உனக்காக யுத்தம் பண்ணி சத்துருவின் செய்கைகளை அழிப்பார். சுதந்திரத்தோடு மிகுந்த சந்தோஷத்தோடு கர்த்தரின் அக்கினி ஸ்தம்பத்தினாலும், மேக ஸ்தம்பத்தினாலும், பாதுகாவலோடு உன்னை நடத்துவார். 'சத்துரு இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்' என்ற வாக்கின்படி சத்துரு இனி  தொடராதபடி நல்ல வாழ்வை இந்த ஆண்டிலே உங்களுக்குத் தருவார்.

         சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின் தொடரும். இதை நாம்  நன்கு அறிவோம். தொடருகிற பாவ பழக்கம் பாடுகளையும் , வேதனைகளையும், சொல்ல முடியாத துக்கத்தையும், கசப்பையும் பெருகச் செய்து விடும். பாவ நாசகராகிய இயேசு கிறிஸ்து உன் வாழ்வில் உள்ள எல்லா பாவங்களையும் மன்னித்து, புது வாழ்வைத் தந்து உன்னை புது சிருஷ்டியாக மாற்றி பாவ இருள் உன்னைத் தொடராது இந்த ஆண்டிலே உன்னைக் காத்து  நடத்துவார். மனுக்குலத்தின் எல்லா பாவங்களையும் சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்து, உன் பாவங்களை கற்றி, அதை மன்னித்து நினையாதிருக்கச் செய்வார். இதுவரை உன் வாழ்க்கையிலே, தொடர்ந்த பாவங்களை இனி வெறுத்து புது வாழ்வு வாழத்தக்கதாக உனக்கு உதவி செய்வார். இன்று உன் வாழ்க்கையிலே குடிப்பழக்கம், தவறான காட்சிகளைக் காண்பது, உலகப்பிரகாரமான பாடல்களைக் கேட்பது, மற்றவர்களைக் குற்றப்படுத்துகிற அன்பற்ற செயலும், பொய், திருட்டு, அநீதியான காரியங்களைச் செய்வது என்று இது வரை தொடர்ந்து கொண்டிருந்த துர்க்கிரியைகளை இந்த ஆண்டிலே கர்த்தர் தொடராதபடி உன்னைச் சுத்திகரித்து தமக்குச் சொந்தமான கருவியாக மாற்றி உன்னை ஆசீர்வதிப்பார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று அறிந்து துக்கத்தோடு இருந்த உன் வாழ்க்கையில் மாற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும், பாவத்தின் ஆசைகள் உன் உள்ளத்தில் இனி தோன்றாதிருக்கக் கர்த்தர் உதவி செய்து உன்னை நடத்துவார்.

         இதுவரை உன் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருந்த கடன் தொல்லையை நீக்கி, உன்னை சுதந்திரவாளியாக மாற்றி சந்தோஷத்தாலும், சம்பூரண ஆசீர்வாதத்தாலும் இந்த ஆண்டு உன்னை மாற்றுவார். உள்ளத்தில் இது எப்படி நடைபெறும் என கேள்வியோடு இருக்கலாம். எப்படி இருக்கும் என்று கலங்குவாயானால் இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல் அழைக்கிற தேவன் உன் வாழ்க்கையில் செழிப்பை பெருகச் செய்வார். ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு 5000 பேரைப் போஷித்து 12  கூடைகளில் மீதி எடுக்கச் செய்த கர்த்தர், புதிய ஆண்டில் வரும் 12 மாதங்களிலும் நீ திருப்தியடைவதோடு மீதியிருக்கத்  தக்கதாக உனக்குள் உள்ளதைப் பெருகச் செய்வார். என் கணவர் தீர்க்கதரிசியாக இருந்தார். ஆனால் கடன் தொல்லை இருந்தது. அவர் இறந்தபின் என்னிடம் கடனுக்காக  பிள்ளைகளைக் கேட்கிறார்கள் என்று  கலங்கின அந்த மகளுடைய வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று கேட்டு, பாத்திரங்களை எண்ணெய்யால் நிரப்பச் செய்து, அந்த எண்ணையை விற்று கடனை அடைக்கச் செய்த கர்த்தர் உன்/உங்கள் வாழ்க்கையில் உள்ளதை  நிறைவாய்ப் பெருகச் செய்து, கடன் தொல்லை தொடராது காப்பார். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பதினால் 'நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை...' உபா. 15:6என்ற வாக்கு உன் வாழ்க்கையில் நிறைவாய்ப் பெருகும்.

            என் வாழ்க்கையிலே சாபத்தினால் தோல்வியும் துக்கமும் இதுவரை தொடர்ந்து கொண்டே இருந்தது. சாபத்தினால் உண்டான வியாதிகள் என் வீட்டாரை விட்டு விலகாதிருந்தது. இவ்விதமாக நம்மைத் தொடர்ந்த சாபத்தினால் உண்டான சகல வேதனைகளும் பாடுகளும் நம்மைத் தொடராதபடி இனி நன்மையும் கிருபையும் தொடரும்படி கர்த்தாதி கர்த்தர் கிருபை செய்வார். நம்மை நேசித்து சாபங்களை நீக்கி இந்தப் புதிய ஆண்டிலே மகிழ்ச்சியோடு பிரவேசிக்க கர்த்தர் உதவிச் செய்வார்.

  1. கர்த்தர் அருளும் நன்மைகள்.

      நன்மைகள் தொடரும் என்று சொன்னவர் இன்றைக்கும் ஜீவிக்கிறார். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி ஜோதிகளின் பிதாவிடத்திலிருந்து வருகிறது. இவ்வாண்டில் பிரவேசித்திருக்கிற நமக்கு அநேக விதமான நன்மைகளைக் கர்த்தர் தரவும் அதைப் பெருகவும் செய்வார்.

1) பாதுகாக்கும் நன்மை

       ''உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது. மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.சங்கீதம் 31:19,20.

                இவ்வுலக வாழ்க்கையிலே பொறாமையும் போட்டியும் நிறைந்திருப்பதை நாம் நன்கு அறிவோம். சொந்தக் குடும்பங்களிலே, என் பிள்ளை நன்றாயப் படிக்கிறது என்று அதற்கு எதிராக சூனியங்களைச் செய்கிற மக்கள் இன்று இருக்கிறார்கள். இந்த சூனியத்தினால் படிக்கிற பிள்ளைகளுடைய வாழ்க்கையில் குறைவும் போராட்டமும் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு குடும்பத்தாரை நான் நன்கு அறிவேன். அக்குடும்பத்தில் அவர்களின் மகன் தன்  வகுப்பிலே எப்பொழுதும் முதன்மையாக இருப்பான். ஆனால் அரசாங்கத் தேர்வுகளில் எல்லாவற்றிலும் குறைந்த மதிப்பெண் பெற்று வெற்றி அடைந்தான். அவன் இடத்திலே 2-வது இடத்தில் வந்த சகோதரி செய்த சூனியத்தினால் இந்த நிலமை ஏற்பட்டது. நம்பவே  முடியாத நினைத்துப் பார்க்க முடியாத பொறாமையின் செயலைப் பார்க்கிறோம். கர்த்தரை நம்பின குடும்பமாகவும், நம்பின மகனாகவும் இருந்தபடியால், அவனது வாழ்வில் மருத்துவ படிப்பு படிக்கவும், கர்த்தருடைய நன்மையினால் பாதுகாக்கப்பட்டு மருத்துவ படிப்பை முடிக்க முடிந்தது.

இவ்விதமாக செழித்திருந்த வியாபாரத்தில் போட்டி நிறைந்து தொழில் வியாபாரம் நசுங்கிப் போவதைப் பார்க்கிறோம். பிசாசின் கிரியைகளையும் அவனது தந்திரமான செயல்களையும் அழித்து அற்புதமான நல்வாழ்வை தரக்கூடிய இயேசுகிறிஸ்து மாறாதவராய் இருக்கிறார். அவரை நம்புகிறவர்கள் செழிப்பார்கள். எந்த சாபத்தின் சூனியங்களும் உன் பிள்ளைகளையும் எல்லைகளையும் பாதிக்கக்கூடிய வார்த்தைகளும் ஒன்றும் செயல்படமுடியாதபடி, கர்த்தரே உனக்கு கேடகமாக மாறுவார். சங்கீதம் 12:5.உள்ளதுபோல நம்பின உன் ஜெபத்தைக் கேட்டு உன்மேல் சீறுகிறவர்களுக்கு உன்னைக் காத்து  சுகமாயிருக்கப் பண்ணுவார்.  ''தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து…'' சங்கீதம் 27:5ன் படி காப்பற்றுகிற தேவன் உன்னை அதிசயமாய்ப் பாதுகாத்து நடத்துவார்.

 2. குறைகளைத் தீர்க்கும் நன்மை

  ''சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.'' சங்கீதம் 34:10.

 நம்முடைய தேவன் யாவருக்கும் சகலவித நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் சம்பூரணமாய்த் தருகிற தேவன். உண்மையாக நாம் அவரைத் தேடும்போது, அவரின் வல்ல செயலினாலே தம்முடைய நன்மைகளினால் திருப்தியாக்குவார். இன்று பல காரியங்களில் குறைவுபட்டு கவலையோடு இருக்கிறோம். எப்பொழுது நாம் முழு உள்ளத்தோடு, முழு ஆத்துமாவோடு கர்த்தரைத் தேட ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து அவர் அதிசயங்களைச் செய்து குறைவுகளை நீக்கி நிறைவைத் தருவார். அநேக நேரங்களில் மனிதர்களின் ஒத்தாசையை , வங்கிகளின் உதவியைத் தேடுகிற மக்களாய் இருக்கிறோம். உன் உள்ளத்தை அறிந்த தேவன், உன் வாழ்க்கையின் பிரச்சனையைத் தெரிந்த தேவன் உன் இருதயத்தைப் பார்க்கிறார். மெய்யாகவே கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருந்து அவரை முழு மனதோடு தேடும்போது உன் தேவைகளைச் சந்திப்பார். முதலாவது நீ கர்த்தரைத் தேடுவதற்கு இடங் கொடுப்பாயானால் எல்லாம் கூட கொடுக்கப்படும்.

கடன் தொல்லையினால் மிகுதியாய்ப் பாதிக்கப்பட்ட நான் இனி  கடன் வாங்க கூடாது என்ற தீர்மானத்தோடு வாழ ஆரம்பித்தேன். அந்த ஆண்டிலே கிறிஸ்துமஸ் வந்த போது பிள்ளைகளுக்கு என்ன செய்வது, எங்களுக்கு என்ன செய்வது என்று எண்ணினேன். இருக்கிற கொஞ்ச சம்பளத்தைக் கொண்டு கடனின் Instalment யும் வட்டியையும் செலுத்தி விட்டு மீதியுள்ள பணத்தில் பிள்ளைகளுக்கு நல்ல உடை எடுத்து கொடுத்து விடலாம் என்று தீர்மானித்தேன். கிறிஸ்துமஸ், புதுவருடம் முடிந்த பிறகு ஆலயத்திற்கும் வேலை செய்கிற ஸ்தலத்திற்கும் தான் வாங்கிய புதிய உடைகளைக் குறித்து மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிற வழக்கம் இன்றும் இருப்பதை நாம் அறிவோம். என் மனைவி தன் வேலை ஸ்தலத்தில் எனக்கு ஒரு சேலையும் எடுக்கவில்லை என்று சொல்வது கவலையாக இருக்குமே என்று எண்ணினேன். குறைந்த விலையில் ஒரு புதிய உடை என்றால் அது நமக்குள் மகிழ்ச்சியும் மேன்மையும் தரும். ஆகவே அன்று கர்த்தருடைய சமுகத்தைத் தேடி ஜெபிக்க ஆரம்பித்தேன். உடைக்காக அல்ல ஊழியத்தின் எல்லை புதிய ஆண்டில் விரிவடைய வேண்டும் என்று ஜெபித்தபொழுது, என் வீட்டில் ஒரே ஒரு chest of drawers இருந்தது. அதுவும் என் தகப்பனாருடையது. அந்த chest of drawersன் கீழ்ப்பகுதியைக் காண்பித்தார். அந்த chest of drawers-ல் பழைய துணிகளும் பிள்ளைகள் பயன்படுத்த முடியாத துணிகளுமே இருந்தது. மாம்சீக எண்ணத்தில் ஏதாவது எலி நிறைந்திருக்குமோ என்று எண்ணினேன். துணிகளை ஒழுங்குபடுத்தி வந்தபோது, ஒரு புதிய இரண்டு ரூபாய் நோட்டுக்கட்டு இருந்தது. எனக்குள் மிகுந்த ஆச்சரியம். எப்பொழுது வைத்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பணத்தை எடுத்து பிள்ளைகளுக்கும், என் மனைவிக்கும், எனக்கும் கிறிஸ்துமஸ் நாளுக்கு துணிகளை எடுத்து உடுத்த கர்த்தர் உதவி செய்தார். பணத்தில் நல்ல உடைகளை உடுத்தி பண்டிகை ஆராதனையில் பங்கு பெற உதவி செய்தார். நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமான வல்லமையான காரியங்களைச் செய்கிற தேவன் இன்றைக்கும் நம் மத்தியில் இருக்கிறார். அவருடைய சமுகத்திலே நாம் வரும்போது நமது குறைகளையெல்லாம் தீர்ப்பார்.

        எரேமியா 31:12  ''அவர்கள் வந்து சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்… '' என சொல்கிறது. இவ்விதமாய் நாம் அவரிடத்தில் வரும்போது, கோதுமை என்கிற வேத வசனமாகிய வாக்குத்தத்தை நமக்குத் தந்து நம்மைத் தேற்றுவார். அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. இந்த கோதுமையாகிய வார்த்தை உன் வாழ்க்கையிலே உண்மையாய்  தேற்றுகிறதாயும், ஆறுதல்படுத்துகிறதாயும், ஆலோசனையாயும், எச்சரிப்பாயும் இருக்கிறது. அத்துடன் நம்மை பரிசுத்தமாக்கும், நம் நோய்களை நீக்கும் ஜீவ  வார்த்தைகள். இந்த வார்த்தைகளினால் அழிவுக்கு நம்மைத் தப்பிவிப்பார். அவர் அருளும் கோதுமையாகிய வார்த்தையினால் மிகுதியான நன்மைகளும் ஆசீர்வாதங்களும் உண்டாகும். திராட்சரசம் ஆவியின் ஆசீர்வாதங்களை அருளும் காரியமாகும். உடைந்த உள்ளத்தின் காயங்களை ஆற்றுகிறதாயும், ஆவிக்குரிய கிருபைகளினாலும் நம்மை நிரப்புகிறதாயுமிருக்கிறது. இதனால் கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய கிருபை வரங்களினால் நிரப்பப்படுகிறோம். எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. அவரிடத்தில் வரும்போது அவர் தம்முடைய ஆவியினாலே நம்மை நிரப்புகிற தேவன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு அவர் நடத்துகிற வழியின்படி வாழ்வதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நம் சத்துருக்களுக்கு முன்பாக தலையை அபிஷேகம் பண்ணுகிறதை நாம் காணவும் நம் வாழ்வில் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

       ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பது இவ்வுலகத்தின் செல்வத்தைக் குறிக்கிறது. அவரிடத்தில் நாம் வரும்போது இவ்விதமாய் நம்முடைய குறைகளைத் தீர்க்கக்கூடிய சகல நல் ஆசீர்வாதங்களைத் தந்து நம்முடைய வாழ்க்கையை நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போல இருக்கும்படி செய்து, தொய்ந்து போகாத வாழ்வைத் தருவார். அத்துடன் நம் துக்கத்தை எல்லாம் சந்தோசமாய் மாற்றி தேற்றி சஞ்சலம் நீங்கச் செய்து  சந்தோஷப்படுத்துவர்.

3) திருப்தியாக்கும் நன்மைகள்

  ''நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.'' சங்கீதம் 103:5

        உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன் என்று சொன்ன தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவருடைய வல்ல செயலினாலே நாம் திருப்தியடைவோம். ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்த போது அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்து மீதியை கூடைகளில் நிறைத்தார்கள். அந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன் வாயை நன்மையினால் திருப்தியாக்கி உனக்குள் சுக வாழ்வைப் பெருகச் செய்கிற தேவன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த பொழுது அப்.10:38ன் படி நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார் என பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து நம்மில் திருப்தியாக்குகிற செயலில் ஒன்று பூரண சுகமாயிருக்கிறது. சங்கீதம் 103:5ல் சொன்னது போல உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது என்ற வாக்கு நிறைவேறுவதைப் பார்க்கமுடியும்.

        ஆலயத்தின் நன்மையினால் நம்மைத் திருப்தியாக்குகிற தேவன். இன்று அநேகர் தேவனுடைய ஆலயத்தைக் குறித்து அசட்டையும் அஜாக்கிரதையாயும் இருக்கிறார்கள். சிலர் சபை கூடி வருதலை விட்டு விடுகிறார்கள். நாம் ஆலயத்திறகு போகும் போது ஆலயத்தின் நன்மையினால் தேவன் நம்மைத் திருப்தியாக்குவார். துதிகளின் மத்தியில் வாசமாயிருக்கிறவர், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்திலே கூடும் போது அவர்கள் மத்தியிலே இருப்பேன் என்று சொன்னவர், இருக்கிறவராக இருந்து நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆலயத்தில் நாம் கூடி அவர் பிரசன்னத்திலே நிறைவதோடு வாழ்க்கையில் உள்ள குறைகள் நீங்கி திருப்தியாக்கப்படுவோம். நம் துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றுவார். அன்னாள் தேவ சமுகத்திலே வந்து அவளின் குறை மாறுவதற்காக மன்றாடின மன்றாட்டைக் கேட்ட கர்த்தர் துக்கத்தை அன்னாளுக்கு அகற்றினார். அத்துடன் ஜெபத்தைக் கேட்டார். ஒரு ஆண்  மகனைக் கொடுத்தார். அதன்பின்னும் பிள்ளைகளை ஈந்தார். இதைப் போல ஆலயத்திற்கு வரும் போதெல்லாம் அவருடைய நன்மையானது, நம்மை நிரப்புகிறது. ஆசாரிய பணி  செய்த சகரியாவின் மன்றாட்டைக் கேட்டு அவன் குறைவை நீக்கி அதிசயம் செய்தார். ஆலயத்திற்கு வரும் பொழுது எல்லாம் அதிசயமான காரியங்களைச் செய்து நமக்குள் பூரண  ஆசீர்வாதத்தைத் தருகிறார்.

வேலையில்லாதிருந்த என் மனைவியின் பிறந்த நாளன்று நான்  இரட்சிக்கப்படாத அந்நாளில் அவளது கட்டாயத்தின் பேரில் காலையிலே ஆலயத்திற்கு ஜெபிக்கச் சென்றோம். அவளுடன் சென்ற போது ஒரு வயதான தாயார் ஆலயத்தில் ஜெபிக்க வந்திருந்தார்கள். மூவருமாய் சேர்ந்து ஜெபிப்போம் என்று சொன்னதால் அவர்களோடு ஜெபிக்க அமர்ந்தோம். வேலையில்லாத பிரச்சனையை கூறினோம். அவர்களும் தங்கள் பிரச்சனையை கூறினார்கள். இணைந்து ஜெபித்தோம். மாலையிலே எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள CSI மெத்தடிஸ்ட் பள்ளியில் இருந்து ஒருவர் வந்து உங்கள் சான்றிதழோடு பள்ளிக்கு வரச் சொன்னார்கள் என்றார். அன்றே சென்றோம் சான்றிதழைப் பார்த்து விட்டு மூன்று மாத வேலை கொடுத்தார்கள். ஆனால் அந்த வேலையே நிரந்தரமாக மாறியது.

      அன்பு சகோதரனே, சகோதரியே ஆலயத்தின் நன்மையினால் நிரப்புகிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் பக்கமாய் நாம் திரும்புவோமானால் இன்றே இரட்டிப்பான நன்மையினால் நம்மை நிரப்புவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தாபரமாய் ஏற்றுக் கொள்ளும் போது, நம் ஜெபங்களுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வார். நீடித்த நாட்களால் நம்மைத் திருப்தியாக்குவர். இந்த ஆண்டிற்குள் பிரவேசித்த நம்மை சகல நன்மைகளினாலும் திருப்தியாக்கி, மேன்மைகளும், ஆசீர்வாதங்களும் தொடரும்படி செய்வார்.

II.கிருபை

        நன்மை மாத்திரம் அல்ல, இயேசு கிறிஸ்துவை நம் மேய்ப்பராய் ஏற்றுக்கொள்ளும் போது இயேசு கிறிஸ்துவின் கிருபையும் தொடருகிற  பெரிதான ஆசீர்வாதத்தை அடைகிறோம். இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் பிறந்தபடியினால் எல்லாரும் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிற சிலாக்கியம் வந்தது. கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17)

1) நம்மை அழியாது காக்கும் கிருபை

  “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.'' புலம்பல் 3:22

கர்த்தரின் கிருபையினாலே நம் வாழ்க்கையிலே கேடான காரியங்கள் நடைபெறாதபடி அனுதினமும் காக்கப்படுகிறோம். அவருடைய கிருபைக்கு அளவும் முடிவும் கிடையாது. வீட்டிலிருந்து வெளி சென்று திரும்பும்வரை அவருடைய கிருபையினால் நாம் காக்கப்படுகிறோம். பலருடைய வாழ்க்கையிலே விபத்துக்கள் நடந்தாலும் கேடானது நடைபெறாதபடி கிருபையினாலே காக்கப்படுகிறார்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.  சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு பெரிய கிருபை செய்து என்னை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினீர் (1நாளா.1:8) என்றான். சவுலின் வாழ்க்கையிலே அவரது கிருபையை விலக்கினார். அவனும் அவன் பிள்ளைகளும் மரித்துப் போனார்கள்.

அருமையான சகோதரனே, சகோதரியே கர்த்தருடைய மிகுந்த கிருபையினால் நமக்கு இரக்கம் செய்கிறார்.’ அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இறங்குவேன்...''(ஏசாயா 54:8) என்று சொன்ன தேவன் இன்றும் ஜீவிக்கிறார்.  நித்தியகிருபையினாலே பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் விலக்கிக் காக்கிறார்.

2) நம்மை சூழ்ந்து கொள்ளும் கிருபை.

''...கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.''    சங்கீதம் 32:10.

      இன்று கர்த்தருடைய கிருபை நம்மை சூழ்ந்து கொள்வதினால் உன்னதமான பாதுகாவலைப் பெறுகிறோம்.

 3) பாவங்களை மன்னிக்கும் கிருபை

''ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையா மலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.'' எபிரெயர் 8:12

கிருபையினாலே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையிலே நாம் சிறு வயதிலிருந்து செய்த பாவங்களெல்லாம் அவர் சமுகத்திலிருக்கிறது. சங்.25:7ல் என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும் என்று பார்க்கிறோம். நம் பாவங்கள் எவ்வளவு கொடிதாயிருந்தாலும் அவருடைய அளவற்ற கிருபையினாலே நம் பாவங்களை மன்னித்து புது வாழ்வைத் தந்து, தமக்குப் பிரியமான கருவியாக மாற்றிக் கொள்ளகிறார். கிருபையின் மேன்மையை இழந்து போகாதபடி, அவருக்குப் பிரியமான பிள்ளைகளாய் நாம் வாழ வேண்டும். நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்து கல்வாரிச்  சிலுவையில் தொங்கின போது, உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்று கேட்ட கள்ளனின் பாவங்களை மன்னித்து, இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்  என்று கிருபை செய்தார். இந்த மன்னிக்கும் கிருபையினாலே நாம்  பாவங்களுக்குத் தண்டிக்கப்படாதபடி காக்கப்பட்டு வருகிறோம். பூமி கர்த்தருடைய கிருபையினால் நிறைந்திருக்கிறது. அவருடைய மாறாத கிருபையினாலே நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல் வாழ்வை அடைய அவர் உதவி செய்கிறார்.

 4) இரக்கம் அருளும் கிருபை

 ''அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.' புலம்பல் 3:32

கர்த்தருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். அவருடைய கிருபையானது அநேகருடைய வாழ்க்கையிலே அவரின் இரக்கத்தைப் பெறுவதற்கு காரணமாய் அமைந்தது. அவருடைய கிருபையினால் நம்மில் தோன்றுகிற சிறிய பெரிய நோய்களும் குணமடைந்ததைப் பார்க்கிறோம். ஒரே விதமான நோயினால் பாதிக்கப்படுகிறவர்கள் வேதனையோடு பாடுபடுகிறவர்களாயும் ஜீவனை இழந்தவர்களாயும் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் மாறாத கிருபையினாலே கொடூர நோயிலிருந்து தப்பிக்கொள்வதற்கு வழியாக அமைந்திருக்கிறது.

அன்பின் தேவப்பிள்ளையே, இதுவரை உன் வாழ்க்கையிலே தொடர்ந்து தீங்கும், தீமைகளும் காயங்களும் சத்துருவின் கிரியைகளும் நீங்கி, கர்த்தருடைய நன்மையினாலும் கிருபையினால் சுகமும் பெலனும் இரட்சிப்பும் அடைந்து ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

      கர்த்தர் தாமே இந்த ஆண்டு இவைகளைப் பூரணமாய்  ஈந்து ஆசீர்வதிப்பாராக.

  கிறிஸ்துவின் பணியில்,

  சகோ. C. எபனேசர் பால்