"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;

                                       உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல...”

                                                                                                                             ஏசாயா 55:8

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை கேரளா எஸ்டேட்டில் இருந்த C.S.I. ஆலயத்தில் மூன்று தின சுவிசேஷ கூட்டங்கள் ஆயத்தமாய் இருந்தது. அவ்வாறு ஒழுங்கு செய்த நாட்களில் என் ஆலய பாடல் குழுவில் ஒரு சகோதரனும், அவரது நண்பரும், எங்களையும் கூட்டத்திற்குக் கூட்டிக் கொண்டு போங்கள் என்று சொன்னார்கள். சரி என்று கேரள போதகரோடு தொடர்பு கொண்டு, இந்த நாட்களில் புதிய பாடல் கற்றுத்தரப்படும் என்று போதகரிடத்தில் கூறினேன். அவர்களும் சந்தோஷமாய் புதிய பாடல்கள் கற்றுத்தரும் நேரத்தையும் ஒதுக்கிவிட்டார்கள்.கூட்டத்திற்குப் புறப்படுவதற்கு முந்தின தினம் என் ஆலயத்தின் பாடல் குழுவிலுள்ள அந்தச் சகோதரர் நான் வரமுடியாது, எனக்கு வேறொரு கூட்டம் இருக்கிறது என்று கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாத நிலைமை. ஆலயம் வருகிற மக்களுக்குப் பாடல்களைக் கற்றுத் தரலாம் என்ற எண்ணமும், சிந்தையும் முற்றுப்புள்ளியாயிற்று. அதிகாலையில் அந்த ஊருக்குப் புறப்பட்டுப் போக ஜெபித்து படுத்து விட்டேன். அப்பொழுது யாரோ ஒருவர் என் தலைமாட்டின் அருகில் கிட்டார் வாசித்து பாடல்களைப் பாடுகிற சத்தம் கேட்டேன். அப்பொழுது எழுந்து இந்தப் பாடல்களை எழுது என்று சத்தம் கேட்டது. உடனே நான் எழுந்து எழுத ஆரம்பித்தேன். கர்த்தரின் கிருபையால் தமிழ் மொழியில் திறமையில்லாத நான் 6 புதிய பாடல்கள் இயற்ற கர்த்தர் உதவி செய்தார். இந்தப் பாடல்களைக் கொண்டு பாடல் நேரத்தில் புதிய பாடல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. இவ்விதமாய் பெற்ற புதிய ஆறு பாடல்கள் ஊழியத்தின் பாதையில் மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் நினைத்தப்படி அல்ல, அவர் சித்தப்படியே சகல காரியங்களும் நலமாக ஜெயமாக நடைபெறும். அநேக நேரங்களிலே சூழ்நிலைகளைப் பார்த்து சோர்ந்து போகிறோம். விசுவாசம் குன்றி கலங்குகிறோம். இன்னும் சிலர் பயம் மிகுதியினால் மந்திர தந்திரசாலிகளைத் தேடுகிற மக்களாய் மாறிவிடுவார்கள். அவருடைய வழி மாறாதது. மேன்மையானது, மகிமையானது. அது என் வாழ்க்கையிலே தொடர்ந்து கர்த்தருடைய சமுகத்திலே புதிய பாடல்களைக் கற்றறிந்து பாட உதவியது. இதைப்போல உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் செய்கிற மகத்தான காரியத்தால் மகிழ்ந்து களிகூருவீர்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                          சகோ.C. எபனேசர் பால்.