கட்டுண்ட மக்களின் விடுதலைக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெபநேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். கட்டுண்ட மக்களின் கட்டுகளை அறுத்து அவர்களை சுதந்தரமாய். சந்தோஷமாய் உம்மை ஆராதிப்பதற்கு உம்முடைய ஆலோசனைகளைக் கேட்டு முழுமனதோடு செய்வதற்கு அழைத்தவரே. உம்முடைய சமுகத்தில் அடியான். என் வாழ்வில் உள்ள கட்டுகள் அறுபடவும். காயங்கள் குணமாக்கப்படவும். கண்ணீர் துடைக்கப்படவும் கெஞ்சி நிற்கிறேன். அநேக நேரங்களிலே என் கட்டுகள் நீங்க யாரிடம் போய் சொல்வது, யார் எனக்கு உதவி செய்வார்கள் என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே. என் பாவத்தினாலும் என் மீறுதலினாலும் உண்டான என் கட்டுகள் பெலத்துப்போகாதபடி எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே உமது தயவுள்ள கரம் என்னைத் தாங்கும்படி செய்யும். இந்தக் கட்டுகளினால் என் உள்ளத்தில் துக்கம் பெருகும்போது, ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றுகிறது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். 'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்' என்ற வாக்கின்படி என் பாவங்களையெல்லாம் உம் சமுகத்தில் உண்மையாய் அறிக்கை செய்கிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். என்னுடைய கண்கள் இனித் தவறானவைகளை நோக்காதபடி தேவ சமுகத்தை நோக்கிப் பார்க்கத்தக்கதாக பிரகாசமுள்ளதாய் மாற்றும். நான் வெட்கப்பட்டு போகாதபடி எனக்கு இரங்கும். கட்டுண்ட மக்களை குணமாக்கும் கர்த்தருடைய ஆவியானவரே, எனக்கு இன்று இரங்கி என் கட்டுகள் நீங்கி, மிகுந்த சமாதானத்தோடு இனி கலங்காதிருக்க எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே நான் உம்மையே நம்பி நாடி இருக்கிறேன். எனக்கு உதவி செய்யும். இனி தாமதியாதபடி என் பாவங்களையும், தவறுகளையும் மன்னித்தருளும், நீர் இதைச் செய்வீர் என்று நம்பி உம்மைத் | துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.