கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன்.
இந்த உலகத்திலே மனிதன் பலவிதமான பழக்கவழக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் அடிமையாய் வாழ்ந்து வேதனையோடு கலங்கி, கண்ணீரோடு வாழ்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். இவ்விதமாய் இருக்கிற மக்களுக்குள்ளாய் ஒரு அதிசயமான காரியத்தை தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அருளியிருக்கிறார். அடிமையாய் இருக்கிற நம்மை அவருடைய புத்திரராய் மாற்ற விரும்புகிறார். அவருடைய பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். அவருடைய சுதந்திரவாளியாய் நம்மை மாற்றி மகிழ்ச்சியையும், நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள அவர் உதவி செய்கிறவராய் இருக்கிறார். அடிமைத் தனத்திலிருந்து நம்மை விடுவிக்கிறவர் இன்றைக்கும் ஜீவிக்கிறார். 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் ' என்று யோவான் 8:36ல் பார்க்கிறோம்.
விடுதலையின் வாழ்க்கையானது இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வருகிறது. அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து, நமக்கு ஒரு மீட்பின் வாழ்க்கையைத் தருகிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே இவ்விதமான அடிமைத்தனத்தின் நுகத்தை முறித்து விடுதலையை உண்டாக்கின படியினால் நாம் சுதந்திரவாளிகளாய் இருக்கிறோம். அதோடு மாத்திரமல்ல அவருடைய புத்திரராயும் மாறுகிற பாக்கியத்தை அடைகிறோம். பலவிதமான அடிமைத்தனங்கள் இந்த உலகத்தில் உண்டு. எவை அடிமைத்தனம் என்று நாம் அறிந்து கொண்டால் நலமாயிருக்கும்.
ஜீவகாலமெல்லாம் மரணபயத்திற்கு அடிமையாய் வாழ்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். மனிதனுடைய வாழ்க்கையிலே பயமானது மிகவும் வேதனையான காரியம். 1யோவான் 4:18ல் பயமானது வேதனையுள்ளது என்று பார்க்கிறோம். இந்த வேதனை நிறைந்த வாழ்க்கை ஏன் வருகிறது? சரீரத்திலே ஏற்படுகிற பெலவீனங்கள், எதிர்காலத்திலே என்ன ஆகுமோ என்று உள்ளத்தில் எண்ணுகிற எண்ணத்தினாலே, கவலை களினாலே வருகிறது. அநேக நேரங்களிலே மரண பயத்தினாலே பாடுகள், கவலைகள் பலவிதமான ஆவியின் போராட்டங்கள்- இவைகளுக்கு அடிமையாகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். இவ்விதமான மக்களை மனநோய் மக்கள் என்று சமுதாயத்திலே அழைக்கிறார்கள். அவர்களுடைய காரியங்களை ஆராயும்போது வேதனையாய் இருக்கிறது. இந்த மனநோயின் நிமித்தமாய் அவர்கள் வாழ்க்கையில் ஒன்றும் செய்யவே முடியாதபடி போய் விடுகிறார்கள்.இந்த மரண பயமானது ஒரு மனிதனுக்குள் வரும் போது, அவனுடைய எண்ணங்கள், சிந்தைகள் எல்லாமே மாறிவிடுகிறது.
ஒரு முறை ஒரு ஜெயில் அதிகாரியை நான் சந்தித்தேன். அந்த ஜெயில் அதிகாரியின் முக்கியமான வேலை தூக்கிலிடுகிற மக்களை அழைத்து, அவர்களுக்கு முகத்திலே ஒரு கருப்புத்துணியைப் போட்டு கடைசி நேரத்திலே ஒரு வாக்குறுதியைக் கேட்டு, சுவிட்சை அழுதினவுடனே அந்த மனிதன் அந்த தூக்குக்கயிற்றிலே தொங்கிவிடுவான். அவன் நிற்கிற பலகையானது கீழ் நோக்கிச் சென்றுவிடும். ஆகவே அவன் தூக்குப்போட்டவனாய் மாறி மரித்துவிடுவான். அந்த எலக்ட்ரிக்கல் சுவிட்சை ஆபரேட் செய்யும் பணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உயர்வடைந்த ஒரு மனிதர். இவ்விதமாய் தூக்கிலிடப்படுபவர்கள் கடைசி நேரத்திலே அவர் மிகவும் பயங்கரமாக செயல்படுவார்கள், அந்த மரணபயத்தினாலே அவர்கள் எதையாவது செய்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்று முயற்சிப்பதினாலே அங்குள்ள காவலாளிகள் அதிக கவனமாய் அவர்களை நடத்துவதுண்டு .
சிலருடைய வாழ்க்கையும் அப்படித்தான், மரணபயத்தினால் நிறைந்த வாழ்க்கை.பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிவர தாமதமாகிவிட்டால்,அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய கணவனோ மனைவியோ வீடு திரும்ப சற்று நேரமாகிவிட்டால் ஒரு பயம்.இவ்விதமாய் பயம் நிறைந்த சமுதாயத்திலே,இந்த மரண பயத்திற்கு அடிமையை மாறி விடுகிறார்கள்.சிலரிடம் உங்களுடைய வியாதியின் கோரத்தன்மை அதிகரித்துவிட்டது என்று சொன்னவுடனே அவர்களுக்குள்ளாய் மரண பயம் வருகிறது.சில வியாதிகள் வந்தவுடனே,ஐயோ,இந்த கொடூரமான நோய் என் ஜீவனை பறித்துவிடுமே என்ற மரண பயம் நிறைப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இந்த வார்த்தைகளை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, உன்னுடைய வாழ்க்கை எவ்விதமான நிலையில் இருக்கிறது? பயமானது பலவிதமான வியாதிகளை,வேதனைகளைத் தருவதோடு நம்முடைய வாழ்க்கையிலே எதைக் குறித்துப் பயப்படுகிறோமோ, அந்த காரியம் நடந்து விடுகிறது. அதினிமித்தமாய் மிகுதியான துக்கத்தை அனுபவிக்கிற மக்கள் நிறைவாய் இருக்கிறார்கள்.
மரணபயத்தினாலே அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், அதிலிருந்து தப்பிக்கொள்வதற்கு பலர் பலவிதமான தவறான வழிகளை நாடுகிறார்கள், தேடுகிறார்கள்.அந்த வழிகளே சில சமயத்தில் மரணத்தை விளைவித்து விடுகிறது.பயமானது தவறான வழிகளை நமக்குப் போதித்து,பின்பற்ற வைக்கிறது.இன்னுமாய் இந்த மரண பயமானது சிலருடைய வாழ்க்கையிலே தற்கொலைக்கு நேராக நடத்துகிறது.இனி நான் எப்படி வாழ்வது ? இனி நான் எவ்விதமாய் வாழ முடியும்? என்று தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த அருமையான நாட்களிலே கடன் வாங்குவது எளிதான நிலையில் இருக்கிறபடியினால், வாழ்க்கையிலே அநேகக் கடன்களை வாங்குகிற மக்கள் பெருகிவிட்டார்கள். எந்த சிறிய தேவையாயிருந்தாலும்,இந்தக் காரியத்தை கடன் வாங்கி சமாளித்து விடலாம் என்று சொல்லி, படிப்பிலிருந்து, மருத்துவ செலவிலிருந்து திருமண காரியங்களிலும், வீடு கட்டுகிற காரியங்களிலும் கடன் வாங்குவது ஒரு வழக்கமாய்,பழக்கமாய் மாறிவிட்டது.உபாகமம் 15:6 ல் 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய்,நீயோ கடன் வாங்குவதில்லை....' என்று வேதம் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது.அநேக நேரத்தில் இதை நாம் அறியாதிருக்கிறோம்.நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய் என்று நீ விசுவாசிக்கும்போது, உண்மையாய் அந்த வாக்குறுதியை நீ பற்றிக்கொள்ளும்போது, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிற அன்பின் ஆண்டவராகிய தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நம் தேவைகளைச் சந்திக்கிறவராய் இருக்கிறார்.அநேக நேரங்களிலே நாம் எப்படி செய்வது, கடன் யாரிடம் வாங்குவது என்ற எண்ணத்தை உடையவர்களாய்த் தான் இருக்கிறோம். எதில் துரிதமாய்க் கிடைக்கும், எதில் குறைவான நேரத்தில் கிடைக்கும் என்ற எண்ணத்திலே செயல்படுகிற மக்களாய் இருக்கிறோம்.
ஒருமுறை நெருக்கமான ஒரு நேரம் எங்களுக்கு வந்தது.பல ஆண்டுகளாக இந்த ஊழியத்தை விசுவாசத்தின் அடிப்படையில் கர்த்தருடைய தயவினாலும் கிருபையினாலும் நடத்தி வந்த பாதையிலே ஒரு நெருக்கடி. ஆனாலும் என்ன செய்வது என்ற ஒரு கலக்கம்.இந்த நாளிலே நமக்கு இவ்வளவு தேவையாயிருக்கிறது என்று என்னுடைய குடும்பத்தாரிடமும் சொல்லியிருந்தேன். ஒரு அதிகமான தொகை தான் என்றிருந்தாலும்,எப்படி கர்த்தர் இதை தரப்போகிறார் என்று அறியாத நிலையிலே என்ன செய்வது என்ற ஒரு கவலையும் கேள்வியும் இருந்தது. ஆனால் கர்த்தரையே சார்ந்திருந்தோம். அவரே எங்களை ஆசீர்வதிக்கிறவர். ஆகவே இதைக் குறித்து நான் சோர்வடையாதபடி இருந்தேன். கர்த்தர் ஒரு அதிசயமான காரியத்தைச் செய்தார். நான் அவருடைய ஊழியத்திற்கு ஒரு பகுதிக்கு சென்று விட்டேன். அப்பொழுதே என் வீட்டிலிருந்து ஒரு செய்தி கிடைத்தது.ஒரு குடும்பத்தார்க்கு அவருடைய மகள் திருமணத்திற்கு தேவையான தொகையைக் கொடுத்து, அந்தத் திருமணம் நடைபெறட்டும் என்று சொல்லி அவரை நாங்கள் அதிகமாய் வலியுறுத்தினோம். மகளும் நன்கு படித்த ஒரு இன்ஜினியர், கணவர் ஒரு இன்ஜினியர்.திருமணமெல்லாம் நலமாய் நடந்தது. தகப்பனாருக்கு மிகுதியான சந்தோஷம். ஆனால் என்ன நடைபெற்றது? திருமணம் முடிந்து சில மாதக் காலத்திலேயே அவளுடைய தகப்பனார் மரித்துப்போனார். ஆகவே அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியாத நிலை வந்ததால், அந்தப் பணத்தைக் குறித்து எண்ண வேண்டாம் என்று சொல்லி நானும் அதை விட்டுவிட்டேன். ஆனால் என்ன நடைப்பெற்றது? சில ஆண்டுகளாய் தடையாயிருந்த அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள், அவருடைய எல்லாக் காரியங்களும், திடிரென்று எப்பொழுது எனக்கு தேவையாயிருந்ததோ அந்த நேரத்தில் அவர்களுடைய பணம் அவர்களுக்கு வந்து கிடைத்தது. கணவர் தன்னுடைய டைரியில் பணம் வாங்கி திருமணக் காரியங்களைச் செய்ததை எழுதி வைத்திருந்தார். ஆகவே இந்தப் பணத்தைத் திரும்ப தரவேண்டும் என்று விரும்புகிறேன், தயவு செய்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று என் மூத்த மனுக்குத் தகவல் கொடுத்தி ருந்தார்கள். அப்பொழுது தான் யோசித்துப் பார்த்தேன். அவசரப்பட்டு ஒருவேளை கடன் வாங்கியிருப்பேன் என்றால் நஷ்டமடைந்ததோடு மாத்திரமல்ல, தேவனுடைய ஆசீர்வாதமான 'நான் உன்னை ஆசீர்வதிப்பேன்' என்ற வாக்குறுதியை நிராகரிக்கிற மனிதனாக மாறியிருப்பேன்.
அநேக நேரங்களிலே நாம் துரிதமாய் செய்ய வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகிறோம்.உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் நம்மை இவ்விதமாய் மோசம் போக்கவேண்டும் என்று சொல்லி பணக்காரருக்கு கிரெடிட் கார்டு என்றும், நடுத்தர மக்களுக்கு இன்ஸ்டால்மெண்ட் என்றும், ஏழைகளுக்கு அதிகமான வட்டியும் வாங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறான். அண்மையிலே ஒரு அருமையான சகோதரி, தன் கடன் தொல்லையினிமித்தமாய் உதவி நாடி வந்தார்கள்.அவர்களுடைய கடன் தொல்லை நீங்குவதற்கு ஒரு வங்கி அதிகாரியை அணுகி அவருடைய உதவியோடு வங்கியிலே கடன் வாங்கினார்கள்.தனி மனிதனிடத்தில் வாங்கின கடனை அடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அதைச் செய்தார்கள். அந்த தனி மனிதனிடத்திலே நாலரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு இலட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்கள்.மொத்தமாக நீங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை இருந்தபடியினாலே, ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வட்டியை தன்னுடைய கொஞ்ச வருவாயிலிருந்து செலுத்தியும், அதை பூரணமாய்க் கொடுக்க முடியவில்லை.அந்தச் சகோதரி எவ்வளவு வட்டி கொடுத்திருக்கிறேன் என்று கணக்குப் பார்த்த பொழுது, நாலரை லட்சம் ருபாய் கொடுத்திருந்ததைக் கணக்குப் பார்த்தார்கள்.ஒரு லட்சம் ருபாய் வாங்கி அவர்களை அறியாதபடி நாலரை ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வட்டி கொடுத்தாலும் அதன் தொகை பெரிய தொகையாக இருந்தது. அநேகர் இதை உணராதிருக் கிறார்கள். ஆனால் கர்த்தரோ நமக்கு ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறார். 'நீயோ கடன் வாங்குவதில்லை'. இதை நாம் கைக்கொள்ளும்போது தான் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.ஆகவே கடன் வாங்கும் போது, கடன் கொடுத்தவன் நம்மை ஆளுகைச் செய்கிறவனாய் அடிமையாக்குகிறான்.
உலகத்தின் வழிபாடுகளுக்கு அறியாதபடி நாம் அடிமைகளாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.அநேக இடங்களிலே படிப்பறிவில்லாது உலகறிவில்லாது வாழ்ந்துக் கொண்டிருக்கிற சில மலைவாழ் மக்களைப் பார்த்திருக்கிறேன்.அவர்கள் மின்னல் மின்னினால் போதும்,உடனே தரையிலே படுத்து வானத்தைப் பார்த்து அதற்கு வணக்கம் செலுத்துவார்கள்.இடி சத்தம் கேட்டால் போதும் , அவர்கள் தாழ விழுந்து அப்படியே கிடப்பார்கள்.தங்கள் மேல் எங்கே விழுந்து விடுமோ என்ற பயம்.இப்படிப்பட்ட வழிபாடுகளுக்கு அடிமையாயிருக்கிறார்கள்.அநேக விதமான வழிபாடுகளை ஏன் செய்கிறோம்,எதற்காக செய்கிறோம் என்று அறியாதபடி இருக்கிறோம்.ஆபிரகாமை அழைத்த தேவன் உன்னுடைய தகப்பன் வீட்டு விக்கிரகக் காரியங்கள்,உன் ஊரினுடைய பழக்க வழக்கங்கள் இவைகளெல்லாவற்றையும் விட்டு வெளியே வா என்றுச் சொல்லி அழைத்தார்.சில காரியங்களை செய்யும் போது அவைகளை சுத்தி , சுத்தி வருகிற வழக்கம்.திருமணமான உடனே தாய், தகப்பன் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்கிற வழிமுறைகளையுடைய குடும்பங்கள் உண்டு. தவறான காரியங்களை அறியாது செய்துக் கொண்டிருக்கிற மக்களாய் இருக்கிறோம்.
ஒருவர் ஒருமுறை ஜெபிக்க வந்தபொழுது அவருடைய செயலிலே ஓரு தவறு இருப்பதை உணர முடிந்தது.காலையிலே எழுந்தவுடனே தன்னுடைய மணிபர்சிலே வைத்திருக்கும் இயேசு சுவாமி படத்தைப் பார்த்து,ஜெபிக்கிற பழக்கம் இருந்து வந்தது. அதனால் அவருடைய சரீரத்திலும் வேதனை. குடும்பத்திலும் கஷ்டம்.பல பாடுகள் நிறைந்திருந்த நேரத்திலே நான் கேட்ட போது, அவர் சொன்னார்- ஆமாம், நான் பல ஆண்டுகளாய் இதைப் பின்பற்றி வருகிறேன். ஆனால் அன்றைக்கு அந்த படத்தை அகற்றிவிட சொன்னபோது, அதை அகற்றினபடியினால், அவர்களுடைய வேதனைக்குரிய பெலவீனங்களும், பாடுகளும் மாறியது. இன்றைக்கும் அநேகருடைய வாழ்க்கையிலே பாரம்பரியப் பழக்கங்கள் காணப்படுகிறது.
ஒருமுறை ஒரு காபிக்கொட்டை அறைக்கின்ற கம்பெனிக்கு சென்றிருந்தேன். அந்தக் குடும்பத்தாருடைய சரீரத்திலே நோய் இருந்தது. நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து வணங்கி விட்டு, உங்கள் கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள், அந்தப் படத்தையெல்லாம் கழற்றி விடுங்கள் என்றுச் சொன்னேன். அதற்கு அவர்கள் இது என் தாத்தா காலத்தில் இருந்த இயேசு சாமி படம் என்றுச் சொன்னார்கள்.தேவன் ஆவியாய் இருக்கிறார். ஆதலால் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைச் சொன்னபோது அவர்கள் அதை அரைமனதோடு செய்தார்கள். முழுமனதோடு செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. அதினிமித்தமாய் உண்டான பெலவீனங்கள் அவருடைய சரீரத்தை விட்டு விலகுவதற்கு இடங்கொடுக்கவில்லை .
இன்று அநேகருடைய வாழ்க்கையில் அப்படிதான். தங்களுடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வது கிடையாது. ஆலய வழிபாடுகளிலே சில காரியங்கள் முன்னதாக, பின்னதாக ஆராதனை நடத்துகிறவர்கள் மாற்றி விட்டால்,ஏன் இதைச் செய்தீர்கள் என்றுச் சொல்லி கேட்கிற முதியோர்கள் இன்று நிறைந்திருக்கிறார்கள். அருமையான சகோதரனே, சகோதரியே, வழிபாடுகளுக்கு அடிமையாய் இராதபடி நம்மைக் காத்துக்கொள்வோம்.
அநேகருடைய வாழ்க்கையிலே பாவங்களைத் துணிகரமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.பாவத்தை விட முடியவில்லை. சிலருடைய வாழ்க்கையிலே நான் இதைப் பார்த்து விட்டு, விட்டுவிடுவேன், என்றைக்காவது நான் இதை நிறுத்திவிடுவேன் என்று சொல்வார்கள், ஆனால் அவர்களால் முடியாதபடி, பாவம் அவர்களை ஆளுகை செய்கிறபடியால், விடுதலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஒரு அருமையான வாலிபனை அறிவேன். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன். இந்தியாவிற்கு கால் பந்தாட்டத்திலே உலக அளவில் தெரிந்தெடுக்கப்பட்ட, நன்கு விளையாடக் கூடிய ஒரு வீரராய் இருந்தார். ஆனால் ஒருநாள் தன் நண்பனோடு குடிக்கச் சென்றார். இது ஒரு வெற்றியைக் கொண்டாடுகிற காரியமாக தோன்றவே, தொடர்ந்து குடிக்கு அடிமையாய் மாறினபடியினாலே,முன்போல் அவரால் ஓடமுடியவில்லை. அவருடைய எல்லா முயற்சிகளும்,தாலந்துகளும் ஒன்றுக்கும் உதவாததாய் மாறியது.வாழ்க்கையிலே அடைய வேண்டிய அந்த மேன்மையை, சத்துருவாகிய பிசாசானவன் தந்திரமாய் பாவப்பழக்கத்தை உருவாக்கி தாலந்துகளை உரிந்துக் கொண்டான். இன்றைக்கு சத்துருவாகிய பிசாசானவன் ஆசைகளைத் தூண்டுகிறவனாயிருக்கிறான். பாவ வலைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் போது, நம்முடைய வாழ்க்கை உழையான சேற்றிலே அமிழ்கிறது போல, உதவியற்ற நிலையிலே ஒருவரும் உதவிச் செய்ய முடியாத சூழலிலே வாழ்க்கை பரிதாபமாய் மாறிவிடுகிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே பாவத்திற்கு அடிமையாகாதபடி கவனமாய் வாழ வேண்டும்.
சிலருடைய வாழ்க்கை பலவிதமான சிற்றின்பங்களுக்கும் இச்சைகளுக்கும் அடிமையாய் வாழ்வதினாலே கவலை, சஞ்சலம் நிறைந்து விடுகிறது. ஒரு மனிதன் பாவத்திற்க்கோ,பிசாசிற்கோ,பலவிதமான பயத்திற்கோ, போராட்டத்திற்கோ எதற்கு அவன் அடிமையாகிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அடிமையாய் அல்ல சுதந்திரவாளியாய் மாற வேண்டும் என்று தேவன் நம்மை சிருஷ்டித்தார்.
நோவா அதுவரை இல்லாத திராட்சரசத்தைக் குடித்த பொழுது அதினிமித்தமாய் மதிமயங்கினவனாய்,வஸ்திரங்கள் விலகினவனாய் விழுந்து கிடந்தான்.அதைப் பார்த்த காம் அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான். அவனுடைய திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்த போது தன் இளையக் குமரன் தனக்கு செய்ததை அறிந்து,காம் சபிக்கப்பட்டவன் என்றுச் சொல்லி அவனை சபிப்பதைப் பார்க்கிறோம்.அதினிமித்தமாய் அடிமைகளுக்கு அடிமையாய் இருப்பான் என்று சொல்வதைப் பார்க்கிரோம்.இந்த சாபத்தினாலே அடிமையாகிற நிலைமை.
நாம் எதற்கு அடிமையாயிருக்கிறோம் ? நம்மை ஒப்புக்கொடுப்பதினாலே அடிமைகளாயிருக்கிறோம்.நான் எதற்கு அடிமைகளை ஒப்புக் கொடுக்கிறோம் என்பதை நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும். நாம் எதற்காக, எதைச் செய்வதற்கு, எதை அனுபவிக்க வேண்டும் என்று நம்முடைய சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறோமோ, அந்த ஒப்புக்கொடுத்தலின் நிமித்தமாக அடிமைத்தனத்திற்குள்ளாய் மாறுகிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையிலே அடிமைத்தனத்திற்கு செல்லாதபடி கவனமாக இருக்க வேண்டும். மரியாள் தேவனுக்கு அடிமை என்று தன்னை ஒப்புக்கொடுத்த போது தேவன் தம்முடைய வாக்குறுதியை அந்த மகளுக்குள் நிறைவேற்றுகிறதைப் பார்க்கிறோம். அங்கு, ஒப்புக்கொடுத்தலின் காரியத்தை பார்க்கிறோம்.பாவத்திற்கோ,மரணத்திற்கோ,நீதிக்கோ எதற்கு ஒப்புக்கொடுக்கிறோமோ அதற்க்கு நாம்அடிமைகளாய் மாறுகிறோம்.மேலும் 2 பேதுரு 2:19ல் ''எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்க்கு அவன் அடிமைப்பட்டிருக்கானே.'' என்று பார்க்கிறோம். இன்றைக்கு அநேகக் காரியங்கள் நம்முடைய வாழ்க்கையிலே போராட்டமாய் இருக்கிறது. ஆவியிலே உண்டாகிற போராட்டத்திலே தோற்றுவிடுவோம் என்றால், அதை செய்வதற்குரிய அடிமைத்தனத்திலே சிக்கி கொள்கிறோம். அதை விடமுடியாதபடி அடிமைத்தனத்தில் வாழ்கின்ற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். இந்த அடிமைத்தனத்தினாலே மனிதனுடைய வாழ்க்கை கசப்பு, சஞ்சலம் நிறைந்ததாய் மாறுகிறது.
இன்னுமாய் பகையினாலே சகோதரன் மூலமாய் விற்றுப் போடப்பட்ட யோசேப்பைப் பார்க்கிறோம். ஆதியாகமம் 37:28ல் விட்டுப்போடுகிறதினால் அடிமைத்தனத்தைப் பார்க்கிறோம்.
இன்றைக்கு பண ஆசையினாலே அடிமைத்தனத்திற்கு ஆட்களை பிடித்துத்தருகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். எஜமானுக்கு அடிமையாக தங்கள் வாழ்நாள் முழுவதும் வேதனையோடு பணி செய்கிற மக்கள் ஏராளமாய் இந்த தேசத்தில் உண்டு. இதைக் குறித்து எங்கும் பார்க்க முடியும். பணத்திற்காக,வேலைக்காக அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்விதமாய் நம்முடைய வாழ்க்கையிலே அடிமைத்தனமானது வருகிறது. ஆனால் இனி நீ அடிமையாய் இராதபடி புத்திரனாய் இருக்கிறாய் என்று சொன்னார். நாம் தேவனுடைய புத்திரராய் மாற வேண்டும்.
சமாதனப் பிரபுவாகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் எதிர்பார்ப்பது நாம் சமாதானத்தை பெறுவதோடு மாத்திரம் அல்ல , நாம் வசிக்கிற,வாழ்கிற எல்லைகளிலே சமாதானம் செய்கிற மக்களாய் மாற வேண்டும். இன்றைக்கு அநேக நேரங்களிலே சமாதானத்தைக் கெடுக்கிற சத்துருவாகிய பிசாசானவன் அநேகக் குடும்பங்களை வேதனைப் படுத்துகிறான்.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், மருமகளுக்கும் மாமிக்கும் இப்படியாய் பிரிவினையை உண்டுபண்ணுகிற,சமாதானத்தைக் கெடுக்கிற கிரியைகளைப் பார்க்கிறோம்.
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் என்றுப் பார்க்கிறோம். சமாதானத்தை வைத்துப் போகிறேன் என்றுச் சொன்னவர் நம்முடைய வாழ்க்கையிலே சமாதானத்தை வேதத்தின் வழியாய் தருகிறார். சாந்தகுணம் உள்ளவர்கள் மிகுந்த சமாதானத்தோடு பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றுச் சொன்ன தேவன், இன்றைக்கும் ஜீவிக்கிறார். நம்முடைய செய்கை, சொல், சிந்தை இவைகளினால் சமாதானத்தைக் கொடுக்கிற மக்களாய் மாறும் போது ,நாம் பாக்கியவான்களாய் மாறுவதோடு தேவ புத்திரராய் மாறுகிறோம்.
இன்னுமாய் வாழ்க்கையிலே நாம் சமாதானத்தின் பிள்ளைகளாய் மாற வேண்டுமென்று சொன்னால் நாம் சிட்சைகளை சகிக்கிற மக்களாய் மாற வேண்டும். சிட்சைகளை சகிக்கிறவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பல பாடுகளை, பிரச்சனைகளை அனுபவிக்கும்போது, இவைகள் எல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே நல்ல பாடங்களைக் கற்றுத் தருவதற்கு வழியாய் இருப்பதோடு, நாம் உபத்திரப்பட்டதினாலே பிரமானங்களைக் கற்றுக் கொள்வதற்கும், நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் மாறுவதற்கு அது வழியாக இருக்கிறது. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.' என்று நீதிமொழிகள் 3:12ல் பார்க்கிறோம்.
நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருடைய ஆவியானவர் நமக்குள்ளாய் ஊற்றப்பட்டிருக்கிறார் . அந்த அன்பின் ஆவியானவர் நம்மை அனுதினம் நடத்துகிறவர். அந்த ஆவியினாலே நடத்தப்படும்போது நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.இன்றைக்கு நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறுவதற்கு அவருடைய ஆவியின் அபிஷேகத்தை எனக்குத் தாரும், என்னை அபிஷேகத்தினால் நிரப்பும், எனக்கு உம்முடைய துணை வேண்டும், இந்த உலக வாழ்க்கையிலே நான் வேதனைகள், பாடுகள் அடைந்துவிடாதபடி, என்னை நிரப்பும் கர்த்தாவே என்று கேட்போம். நாம் இயேசு கிறிஸ்துவை மீட்பராய் ஏற்றுக்கொள்ளும்போது , தாவீது சொன்னது போல சங்கீதம் 23ல் அவர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறார் என்று சொன்ன வார்த்தை நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார். நாம் அடிமைகளாய் இராதபடி தேவனுடைய புத்திரராய் இருக்கிற படியினால் கர்த்தரை துதிக்கிற மக்களாய் மாறுவோம். எல்லா நிலையிலும் மகிழ்ந்து அவருடைய பிரசன்னத்தினால் நிறைந்து களிகூருகிற மக்களாய் இருப்போம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் ,
சகோ.சி.எபனேசர் பால் .