"அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்."

                                                                                                                                       யோவான் 1:16

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

டிசம்பர் மாதம் என்றாலே அநேகரின் உள்ளத்தில் மிகுந்த சந்தோஷம் பெருகிவிடும். உலகத்தில் உள்ள அத்தனை கிறிஸ்தவ மக்களும் கிறிஸ்து பிறந்தார் என்று பாடல்களும், பலவித ஆலய, வீடு அலங்காரத்தை நாம் இன்று நிறைவாக காண முடிகிறது. ஒரு நாளில் இவ்வுலகில் கிறிஸ்து பிறந்தார், நமக்காக பாடுபட்டு சிலுவையில் மரித்தார் என்பதை சரித்திர பிரகாரமாக நாம் அறிவோம். வரலாற்றில் ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்றும், கிறிஸ்துவுக்கு பின் என்றும் அழைக்கப்படுவதினால், அவரின் பிறப்பு நிச்சயமாகிறது.

இவ்வாறு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்ததின் நோக்கம் நாம் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற பிதாவின் அன்பினாலே தோன்றின காரியம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பினாலே பல விதமான நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதில் ஒன்று தான் அவருடைய பரிபூரணத்தினால், நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றதாகும். இயேசு கிறிஸ்துவினால் உண்டான பரிபூரணம் மிகுதியாகும். அதினால் நாம் மகிழ்ச்சியும் நன்மையும் அடைகிறோம்.

1.இயேசு கிறிஸ்து ஏன் இவ்வுலகிற்கு வந்தார்?

1. பரிபூரண ஜீவன் கொடுக்க வந்தார்?

"...நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்  படவும் வந்தேன்." யோவான் 10:10

இவ்வுலகில் மனிதனுடைய ஜீவனானது பல விதங்களில் எளிதாக முடிந்து போகிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. பிசாசானவன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் செயல்படுகிறான். அவனுக்கு இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கிறது  என்று பல விதங்களில் அழிவைக் கொண்டுவர  செயல்பட்டு வருகிறான். இந்தக் காலகட்டத்தில் பிதா நம் மீது வைத்த அன்பினால் இயேசு கிறிஸ்துவை நாம் எல்லாருக்காகவும், ஜீவபலியாக இவ்வுலகில் அனுப்பினார். இயேசு கிறிஸ்துவினுடைய அன்பின் தியானத்தினால் நாம் ஜீவன் பெற்று வாழ வழி  பிறந்துள்ளது. அழுகையும், பற்கடிப்பும், வேதனையும் நிறைந்த நரக ஆக்கினைக்கு நம்மை விலக்கிக் காத்து, இவ்வுலகில் நீடித்த நாட்களாய்  நம்மை திருப்தியாக்குகிறார். மனிதரின் வாழ்வைக்குறித்து அப்போஸ்தலர் 17:26 ல் பார்க்கும்போது, ஒரு மனிதன் பூமியிலே எந்த தேசத்திலே, எந்த ஊரிலே பிறப்பான், அவனின் ஆயிசு நாட்கள் எவ்வளவு என்று முன் குறித்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பினால் ஜீவனை அடையவும், அது பரிபூரணப்படவும் இவ்வுலகில் வந்தார்.

2. பரிபூரண  சமாதானத்தைத் தர வந்தார்

"இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்." எரேமியா 33:6

 இயேசு கிறிஸ்து நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று மத்தேயு 8:17 ல் பார்க்கிறோம். சிலுவையில் பட்ட பாடுகளினால் நமது வாழ்வில் சுகத்தை உண்டாக்கும் ஆக்கினையை அடைந்தார். பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும், சுற்றித் திரிந்தார் என்று அப்போஸ்தலர்10:38ல் பார்க்க முடிகிறது. மேலும் 'அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் ' என்று 1பேதுரு 2:24 ன் படி நாம் குணமடைகிறோம். வார்த்தையாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து, தமது மாறாத வல்லமையான 'தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்கு தப்புவிக்கிறார்.' என்ற சங்கீதம் 107:20 ன் படி வார்த்தையினால் நம்மை குணமாக்கி நித்திய நரக ஆக்கினைக்கு தப்புவித்து மெய்யான சமாதானத்தை நமக்குள் பரிபூரணமாக உண்டாக்குகிறார். உலகம் தருகிறபடி அல்ல உண்மையான சமாதானத்தை, யாரும் எடுத்துவிடமுடியாத, கெடுத்துவிடமுடியாத  சமாதானத்தை நமக்கு உண்டு பண்ணி வைத்துள்ளார்.   சமாதான பிரபுவின், ஒவ்வொரு செய்கையினாலும், வல்லமையின் காரியங்களினாலும், நாம் முழுமையான சமாதானத்தைப் பூரணமாக அடைகிறோம்.

3.பரிபூரண ஆசீர்வாதத்தைத் தர வந்தார்

"உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்..." நீதிமொழிகள் 28:20

இன்று நம் வாழ்வில் இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தை ஆராய்ந்து அறிகிறார். 'உண்மையாய்த் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்' என்ற சங்கீதம் 145:18 ன் படி உண்மையாய் கூப்பிடுகிறவர்களின் கூப்பிடுதலைக் கேட்டு உதவிச்செய்ய, அவர்களில்  அற்புதங்களைச் செய்ய விரும்புகிறார். பிசாசானவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். அவனுடைய தந்திரமான வார்த்தை களில் பொய் நிறைந்திருக்கும். ஆதிமனிதனாகிய ஆதாம் ஏவாளைப் பார்த்து இந்தப் பழத்தைச் சாப்பிடும் நாளில் நீங்கள் சாகவே சாவதில்லை என்று, கூறினதை ஆதியாகமம் 3:4 ல் பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தையை மீறி பாவம் செய்வதற்காக, இந்த வஞ்சிக்கிற வார்த்தைகளைக் கூறி ஏவாள் உள்ளத்தில் அந்தப் பழத்தைப் பறித்து புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை, ஆசையை உருவாக்கினத்தைப் பார்க்க முடிகிறது. உண்மையை விரும்புகிற தேவனுடைய செயலின்படி யார் யார் உண்மையாய் வாழ்கிறார்களோ, அவர்களைக் குமாரனும் நேசித்தார். அவர்களை ஆசீர்வதித்தார். உண்மையுள்ள, விவேகமுள்ள ஊழியக்காரன் யார் என்று சொல்லுவதை மத்தேயு 24:45 ல் பார்க்க முடிகிறது. 'உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். என்று மத்தேயு 5:37ல் சொன்ன இயேசு கிறிஸ்து உண்மையாய்த் தேடுகிற, ஜெபிக்கிற, பரிசுத்தமாயிருக்கிற வர்களைப் பரிபூரண ஆசீர்வாதத்தினால் நிரப்புகிறார்.

4.பரிபூரண சந்தோஷம் உண்டாகும்

"அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத் தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்." 2கொரிந்தியர் 8:2

இயேசு கிறிஸ்துவின் சமுகத்திலே மெய்யான பூரணமான ஆனந்தமும் பேரின்பமும் உண்டு. எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள் என்ற வார்த்தையின்படி இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்குள் மெய்யான சந்தோஷம் பெருகுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் மெய்யான சதோஷத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம். வான சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைந்தார்கள் என்று மத்தேயு 2:10ல் பார்க்கிறோம். இன்றைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைதோறும் வீடுகளில் நட்சத்திரத்தைக் கட்டுகிறார்கள். ஏனென்றால் கிறிஸ்து எங்கள் வீட்டில் பிறந்திருக்கிறார் என்பதை சொல்லும்படியாக கொண்டாடும்படியாக, சந்தோஷத்தை வெளிப்படுத்தும் செயலைப் பார்க்கிறோம். மேலும் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாகும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து, மேய்ப்பர்களுக்குத் தெரிவித்தார்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பினாலே சந்தோஷம் .

அவருடைய வார்த்தையினாலே சந்தோஷம். மத்தேயு 13:20ல் அவருடைய வசனத்தை ஏற்றுக்கொள்ளும்போது சந்தோஷம் பெருகுவதைப் பார்க்கிறோம். உத்தமமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் என்று மத்தேயு 25:21ல் பார்க்கிறோம். உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பயத்தோடும், மகா  சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய் அவர்களுடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள் என்று மத்தேயு 28:8ல் பார்க்கிறோம். உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுகிற இரட்சிப்பினால் உண்டாகும் சந்தோஷமும், ஆவியின் கனியினால் உண்டாகும் சந்தோஷமும் நமக்குள் பரிபூரணமாய் பெருகும்போது நாம் மெய்யாகவே ஆசீர்வதிக்கப் படுகிறோம். பரிசுத்த ஆவியின் சந்தோஷம் 1தெச. 1:6ன் படி நமக்குள் எப்பொழுதும் இருக்கும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம். நாம் என்றும் பரிபூரண சந்தோஷமுடையவர்களாய் இருப்போம்.

இவ்வாறு உண்டாகும் அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெருகிறோம். இந்தக் கிருபையானது இயேசு கிறிஸ்துவினால் நமக்குள் உண்டாகி பெருகுகிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன் சவுலிடம் இருந்து தள்ளிவிட்ட என் கிருபையை விலக்கினது போல அவனைவிட்டு விலக்கமாட்டேன் என்று தாவீதுக்கு வாக்கருளினதைப் பார்க்கிறோம்.தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக்  கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றின தேவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கிருபை அருளினார். ஆதியிலே தேவனாயிருந்த வார்த்தை, மாம்சமாகி கிருபையானாலும், சத்தியத்தினாலும், நிறைந்த வராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்ற யோவான் 1:14 ன் படி கிருபை நம் யாவருக்கும் வெளிப்பட்டது.

II. கிருபையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1.கிருபையினால் நிர்மூலமாகாதிருக்கிறோம்

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." புலம்பல் 3:22

கிருபையானது தகுதியற்ற நமக்குத் தேவன் பாராட்டுகிற இரக்கமாய் இருக்கிறது. அந்தக் கிருபையிலே நாம் அழிந்து போகாதபடி இருக்கிறோம். பிசாசின் செயலிலே ஒன்று நம்மை அழிக்க வேண்டும் என்பதாகும். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் அன்பின் தன்மையுடையவராய் இருந்து எல்லா சூழ்நிலைகளிலும், போராட்டத்திலும், பெலவீனத்திலும் நாம் காக்கப்பட அனுக்கிரகம் செய்கிறார். அநேகருடைய வாழ்க்கையிலே நடைபெற்ற விபத்துகளிலே கர்த்தருடைய கிருபையினால் காக்கப் பட்டார்கள். அநேக பயணங்களிலே கிருபையினாலே சேதமடையா திருக்கிறோம். அநேக கொடூரமான வியாதிகள் ஏற்பட்டபோதும் நம்முடைய ஜீவன் இம்மட்டும் காக்கப்பட்டிருக்கிறது. அநேகருடைய வாழ்க்கையில் உண்டான கொரோனா  கோவிட் -19 வியாதிக்குத் தப்பி பிழைத்திருக் கிறார்கள். இது நம்முடைய நீதியினாலோ, பக்தியினாலோ ஏற்பட்டதல்ல. அவருடைய கிருபையினால் தான் இவ்வியாதியினால் பாதிக்கப்பட்ட அநேகர் பிழைத்து சாவை வென்றிருக்கிறார்கள். பரிசுத்தவான்களின் மரணம் அவருக்குப் பிரியம் என்றபடியினால், அநேக பரிசுத்தவான்கள் இவ்வியாதியால் மரித்துப்போனார்கள்.

2.கிருபையினால் தாங்குறார்

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." சங்கீதம் 94:18

இன்றைக்கு அநேக நேரங்களில் நாம் சறுக்கி வாழ்க்கையிலே விழுந்து போகிற மக்களாய் இருக்கிறோம். யானைக்கும் கால் சறுக்கும் என்று சொன்ன பழமொழியின்படி நமது பரிசுத்த வாழ்க்கையிலிருந்து, வழுக்கி விழுந்து விடுகிறோம். தாவீது என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று அவனைக் குறித்து கர்த்தர் சொன்ன வார்த்தைகளைப் பார்க்கிறோம். எனக்கு சித்தமானவைகளைச் செய்வான் என்ற வார்த்தைகளையும், பார்க்கிறோம். ஆனால் அவனோ தன் அரண்மனையிலே இருந்து விட்டான். அத்துடன் அரண்மனையின் உப்பரிகையிலே உலாவினான். அவனது கண்கள் குளித்துக் கொண்டிருந்த ஸ்திரியைப் பார்த்ததினால் அவனில் இருந்த கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சையாக மாறி அதிகாரத்தினால் அவளை அழைத்து தன் இச்சைகளை நிறைவேற்றினான். அத்துடன் அவளுடைய கணவரை அழைத்து அவனது வீட்டிற்கு அனுப்ப முயற்சித்தும் தோல்வியடைந்தபோது யுத்த களத்தில் அவனைத் தந்திரமாய்க் கொன்றான். ஆனாலும் அவன் செய்த பாவத்தை நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாய் உணர்த்தப்பட்டபோது, அவன் பாவத்தை அறிக்கை செய்து தேவனிடம் மன்னிப்பைப் பெற்றான்.

நம்முடைய வாழ்க்கையிலும், இரக்கத்தைப் பெறுவதற்கு, தேவனுடைய கிருபையைப் பெறுவதற்கு நம் பாவங்களை மறையாது அறிக்கை செய்ய வேண்டும் என்று உணர்த்தப்படுகிறோம். பலவிதமான காரணங்களினால் நம்முடைய கால்கள் சறுக்கும்போது இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடுகிற மக்களாய் மாற வேண்டும். அவர் தமது மாறாத கிருபையினால் நாம் விழுந்து அழிந்து விடாதபடி தாங்குகிற தேவனாய் இருக்கிறார். விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். தாயின் வயிற்றில் உருவானது முதல் தாங்குகிற தேவன், முதிர்வயதிலும் தாங்குவேன் என்றவர் மாறாதவராய் இருக்கிறார். அவருடைய மெய்யான கிருபை நம்மைத் தாங்கி காப்பாற்றக்கூடியதாய் இருக்கிறது.

3) கிருபையினால் செட்டைகளின்கீழ் வந்தடையும் சிலாக்கியம் அடைகிறோம்

"தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்." சங்கீதம் 36:7

இன்று அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலமாய் வரும்போது, உன்னத தேவனுடைய பரிபூரணமான பாதுகாவலை அடைகிறோம். சங்கீதம்91:4ன் படி அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலமாய்  வரும்போது, பயமில்லாமல் வாழத்தக்கதான வாழ்க்கையை அடைகிறோம். எல்லா விதமான நோய்க்கும், பகலில், இரவில் உண்டாகும் போராட்டங் களுக்கும் விலக்கிக் காக்கப்படுகிறோம். பல நேரங்களில் பயம் நிறைந்தவர்களாய் எனக்கு இந்த வியாதி வந்துவிடும், இந்த போராட்டம் வந்து விடும் என்று உள்ளதை ஆளுகை செய்கிற துக்கமும் துயரமும் நம்மை வேதனைப்படுத்துகிறது. இன்று அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலமாய் வரும்போது கிருபையினாலே நிர்மூலமாகாதிருக்கிற நம்மை கிருபையிலே  தாங்குகிற தேவன், கேடான அழிவுக்கு ஒப்புக் கொடாதபடி, அந்தப் பெரிதான கிருபையினால் நம்மைக் காக்கிறவராய் இருக்கிறார்.

கிருபையினால் சங்கீதம் 17:9 ன் படி காப்பாற்றுகிறவராய் இருக்கிறார். பல நேரங்களிலே அறியாமையினால் இவர்கள் எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்து சூனியம் வைத்திருக்கிறார்கள். மந்திரங்களைச் செய்து என் பிள்ளையின் வாழ்க்கையை, என்னுடைய வாழ்க்கையைக் கெடுத்துப் போட்டார்கள் என்று சொல்கிற மக்கள் பெருகி இருக்கிறார்கள். இஸ்ரவேலுக்கு விரோதமாய் மந்திரமும், குறிசொல்லுதலும் இல்லை என்பதை மறந்து போய்  பயப்படுகிறார்கள். உனக்கு எதிராய் உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று சொன்ன தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். இதைக் காட்டிலும் அவருடைய மேலான கிருபை நம்மை எல்லா நிலையிலும் காக்கக் கூடியதாய் இருக்கிறது. அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலமாய் வந்த மக்களுக்கு அவர் தரும் வாக்குத்தத்தம் பொல்லாப்பு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது என்பதாகும். இவ்விதமாய் நம்மைத் தேற்றி, நம்மை மாற்றி சகல சூழ்நிலைகளிலும், சகல  காலங்களிலும் தாங்கி நடத்துகிறார்.

அவர் செட்டையின் கீழ் வரும்போது, மல்கியா 4:2 ன் படி ஆரோக்கியம் அடைந்து சுகவாழ்வைப் பெறுகிறோம். அத்துடன் கொழுத்த கன்றுகளைப் போல் வளருகிற  சிலாக்கியத்தையும் அடைகிறோம். இந்தக் கிருபையினால் அவர் செட்டையின் கீழ் வருவதற்கு இடம்கொடுக்கும் போது, மகிழ்ச்சியும், சுகமும் அடைகிறோம் .

4 )கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம்

"அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." எபேசியர் 2:5

இன்று தேவனுடைய அளவற்ற கிருபையினாலே நாம் இரட்சிக்கப் படுகிறோம். இரட்சிப்பு என்றால் பாவம் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தோடு பரிசுத்தமாய் வாழ்வதற்குரிய செயல், எண்ணம், உணர்வு, சிந்தை உடையவர்களாய் மாறுவதாகும். பாவத்திற்குச் செத்துச் நீதிக்குப் பிழைக்கப்பட்ட வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கையை அருளுவதற்கு குமாரனாகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் அனுப்பப்பட்டார். நம்முடைய நீதியினால் அல்ல. இதுவரை வாழ்ந்த நலமான வாழ்க்கையினால் அல்ல. இந்த இரட்சிப்பை நாம் அடையும்போதுதான் நித்திய ஜீவனை அடைவதற்குத் தகுதி அடைகிறோம். இந்த இரட்சிப்பை அனுதினமும் பாதுகாத்து, புதுப்பித்து முடிவுப்பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிப்பின் நித்திய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இலவசமான இரட்சிப்பினால், நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருந்து தீமை நன்மை எது என்றும், சாபம் ஆசீர்வாதம் என்ன என்றும் அறிந்து புரிந்து கொள்ள முடிகிறது. இயேசு கிறிஸ்துவும் இந்த வாழ்வை நாம் நிறைவாய் பெற்று வாழ்வதற்கு, ' கிறிஸ்துவும் உங்களுக்காக பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியை பின் வைத்துப் போனார்.' 1பேதுரு 2:21ன் படி மாதிரியைப் பின் வைத்துப் போயிருக்கிறார். பாரம்பரிய வாழ்க்கையையும் ஊர்களின் கட்டுப்பாட்டின் வாழ்க்கையையும் விட்டு விலகி, கிறிஸ்துவின் வழி நடக்க நம்மை முற்றிலும் நடத்துகிறவராய் இருக்கிறார். இந்த இரட்சிப்பின் வாழ்க்கையைக் கிருபையினாலே நாம் பெறு கிறோம்.

III கிருபையை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1) கர்த்தரை நம்ப வேண்டும்

"...கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்." சங்கீதம் 32:10

இன்று மனிதனுடைய நம்பிக்கை பணம், பொருள் மீதும், நல்ல படிப்பு, வேலை என்றும் இருப்பதைப் பார்க்கிறோம். கர்த்தரை நம்புவதைக் காட்டிலும், தங்களின் பெலன், ஞானம், அனுபவம் என்ற நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் ஏராளம். சர்வவல்லவரை மாத்திரமே நம்பவேண்டிய மனிதன், இந்த உலகத்தில் உண்டாக்கப்பட்டவைகளின் மீது நம்பிக்கை கொண்டு வேதனையையும், பாடுகளையும், பலவிதமான வியாதிகளையும் அடைகிறான். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று உங்கள் நம்பிக்கை யார் மீது இருக்கிறது? எவைகளின் மீது இருக்கிறது? மனிதன் மரிக்கும்போது, இந்த உலகத்தில் உண்டாக்கப்பட்ட யாதொரு பொருளையும் கொண்டு போவது கிடையாது. இப்புவியில் வாழ்ந்தபோது, அவன் செய்த காரியங்கள் மாத்திரமே அவனுடன் செல்லும்.

ஒருமுறை இராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் தானும் தன் மனைவி பிள்ளைகளும் ஒரு நாட்டில் இருந்து தப்பி வரும்போது, எதிராக இருந்த ஒரு இராணுவவீரனைச் சுட்டுக் கொன்று விட்டார். ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அந்த டாக்டர் மரிக்கும் நேரத்தில் soldier, soldier என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய மகளின் ஆறுதலான வார்த்தைகளும் பாவ மன்னிப்பைப் பெற வேண்டும் என்ற காரியங்களினால் மரிக்கும் தருவாயில் தன் வாழ்வின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, உள்ளத்தின் வேதனைகள் நீங்கி சமாதானத்தோடு, இரட்சிப்பின் சந்தோஷத்தோடு கிறிஸ்துவுக்குள் மரித்தார். இந்த இரட்சிப்பு மாத்திரமே நம்முடன் வரும்.

 2) தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்

"அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே, ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர் களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." யாக்கோபு 4:6

'தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமின்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது' என்று லேவி. 16:29 ல் பார்க்கிறோம். தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான் என்று லேவி. 23:29 ல் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து தாழ்மையின் கோலமாக இந்த உலகத்திற்கு வந்தார். தாழ்மையுள்ளவனை நோக்கி பார்க்கிறார் என சங்கீதம் 138:6 ல் பார்க்கிறோம். 'நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே எண்ணத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.' என்று மீகா 6:8 ல் பார்க்கிறோம். செப். 2:3ல் தாழ்மையை தேடுங்கள் என்று கூறியிருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார் என்று மரியாள் பாடின பாட்டை லூக்கா 1:48ல் பார்க்கிறோம். தாழ்மையுள்ளவர்களை உயர்த்தினார் என லூக்கா 1:52ல் பார்க்கிறோம். இவ்விதமாய் தாழ்மையுள்ளவர்களை நேசிக்கிற தேவன், சிலுவை பரியந்தம் தன்னைத் தாழ்த்தின தேவக்குமாரராகிய இயேசு கிறிஸ்து, தாழ்மை உள்ள மக்களில் கிருபை அளிக்கிறார். பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். ஆகவே தேவன் விரும்புகிற வண்ணமாய், தாழ்மையுடன் நாம் வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம். நாம் எந்தக்  காரியத்தைச் செய்தாலும் தாழ்மை நிறைந்த உள்ளதோடு செய்யும்போது, அவரே நமக்குள்ளாக உயர்ந்த, வெற்றியுள்ள வாழ்க்கை அருளுவார். தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்வதற்கு தாழ்மையுடன் வாழ்வோம், ஆசீர்வதிக்கப்படுவோமாக.

3)தமக்குப்  பயந்தவர்களுக்கு கிருபையளிக்கிறார்

"பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது." சங்கீதம் 103:11

கர்த்தரின் பெரிதான கிருபையைப் பெற நாம் அவருக்குப் பயந்து நடக்க வேண்டும். கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால், நீதி.8:13 ன் படி தீமையான காரியங்களை வெறுப்பதாகும். இன்றைக்கு மற்றவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணம், விருப்பமாக, வாஞ்சையாக இருப்பவர்கள் அநேகர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம் தேவனுக்குப் பயப்படுகிற பயம் இருக்குமானால் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். தேவன் ஆபிரகாமைப் பார்த்து, ஆதி. 22:12ல் 'உன் புத்திரன் என்றும், உன்  ஏக சுதன் என்றும், பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்' இன்று நாம் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம். அவர் சொன்னபடி செய்வதற்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுப்போமானால், நாம் கர்த்தருக்கு உண்மையாய் பயப்படுகிற மக்களாய் இருப்போம். கர்த்தருக்கு பயந்தவர்களாய் இருக்கும்போது, அவரது கிருபை அருளப்படுகிறது. கர்த்தருக்குப் பயந்த யோபுவின் வாழ்க்கையிலே சாத்தான் எத்தனையோ போராட்டங்களைக் கொண்டு வந்தும், அவன் இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கப்பட்டதைப் பார்க்கிறோம். கர்த்தருக்குப் பயப்படுகிற சிறியோரையும், பெரியோரையும்  அவர் ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். கர்த்தருக்கு நாம் பயப்படும்போது அநேக நன்மைகளை நாம் பெற்றுக்கொள்கிறோம்.

இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராய் ஏற்றுக்கொள்ளும்போது, நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும் என சங்கீதம் 23:6ல் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராய் ஏற்றுக்கொள்ளும்போது, இந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் உண்டாகிறது. இயேசு கிறிஸ்துவை நம் மேய்ப்பராய் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், அவரையே முன் வைத்து வாழ்க்கையை நடத்த வேண்டும். மேய்ப்பன் தன் ஆடுகளுக்கு முன்பாகச் செல்கிற காரியத்தை யோவான் 10:4 ல் பார்க்கிறோம். ஆடுகள் பின் செல்லுகிற ஒரு வாழ்க்கையைப் போல நம் வாழ்க்கை இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறதாய் மாற வேண்டும். என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் எனக்கு பின்னே வருகிறது.

அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று நாம் அவரின் சத்தத்தைக் கேட்கிற மக்களாய் மாற வேண்டும். ஒவ்வொரு மனிதரிலும் சத்தத்தை அறிகிற அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய வாகனங்கள் வீட்டை, அலுவலகத்தை நெருங்கும்போது, சத்தத்தைக் கேட்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். எத்தனையோ பிள்ளைகள் இருந்தாலும், அழுகிற பிள்ளையின் தாயார் ஐயோ ! என் பிள்ளை அழுகிறதே என்று ஓடுவார்கள். இந்த அறிவை எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார். பிராணிகளும் இவ்விதமான சத்தத்தை அறிந்து செயல்படுகிறது. கர்த்தரின் சத்தம் நமக்குள் கேட்கப்பட நாம் சுத்தமாக்கப்படவேண்டும். ஏசாயா 6:7 ல் ஐயோ! அசுத்த உதடுகளுள்ள மனுஷர் மத்தியிலே வாசம் பண்ணுகிறேன் என்று சொன்ன ஏசாயா தீர்க்கதரிசியை பலிபீடத்தின் அக்கினி சுத்தமாக்கினது. அதுமுதல் அவன் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்கிறவனாய் மாறினான். இன்று நாம்  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்தமாக்கப்பட்டவர்களாய் மாறுவோம். அவர் சத்தம் கேட்டு அவர் பின்னாலே செல்கிற ஆடாக மாறுவோமாக. அவரின் கிருபை என்றும் நம்மில் பெருகட்டும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.