இந்த மாத செய்தி

                                                                                         "...அவர் நிமிர்ந்து பார்த்து:

                                        உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

                                                                     அவர் மறுபடியும் குனிந்துதரையிலே எழுதினார்.''

                                                                                                                                                                யோவான் 8:7,8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று நம் வாழ்க்கையில் முதலாவது செய்ய வேண்டிய காரியங்களை மிகுந்த ஆர்வத்தோடு, உற்சாகத்தோடு செய்வது வழக்கம். ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருக்கும்போது, ஒருவளைப் பார்த்து தாயார் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றும், மற்றவளைப் பார்த்து சாப்பாடு மேஜையில் இனிப்பு செய்து வைத்திருக்கிறேன், போய் சாப்பிடு என்று சொல்லும்போது, அவளைப் போய் தண்ணீர் கொண்டு வரச்சொல்லுங்கள். முதலாவது நான் போய் இனிப்பை ருசி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களை அநேக குடும்பங்களில் பார்க்க முடிகிறது. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து வேதத்தின் வழியாக நாம் எவைகளை முதலாவது செய்ய வேண்டும், எவைகளைச் செய்ய வேண்டாம் என்று அனுதின வாழ்க்கைக்குரிய போதனைகளைத் தருகிறார்.

முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள் என்ன?

1. முதலாவது நம் குற்றங்களை உணர வேண்டும்

"...அவர் நிமிர்ந்து பார்த்துஉங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லிஅவர் மறுபடியும் குனிந்துதரையிலே எழுதினார்." யோவான் 8:7,8

ஒரு நாளிலே தேவனுடைய ஆலயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உட்கார்ந்து உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும் படி இப்படிச் சொன்னார்கள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவேண்டும் என்று ஒரு கூட்டம் காத்திருந்தது. ஆனால் இயேசுவோ, குனிந்து தரையிலே எழுதினார். அவரை ஒயாமல் கேட்டுக் கொண்டிருக்கையில், இயேசு கிறிஸ்து நிமிர்ந்து உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். அதைக் கேட்ட குற்றப்படுத்தின மக்கள் தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். இயேசு நிமிர்ந்து, தனித்திருந்த அந்த மகளைப் பார்த்து, * எங்கே ? ஒருவனாகிலும் உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே என்றாள். நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

மற்றவர்களைக் குற்றப்படுத்தித் தங்களை நல்லவர் போல் காட்டி சமுதாயத்தில், சபைகளில், சங்கங்களில் செயல்படுகிற மக்கள் ஏராளம் உண்டு. குற்றம் சாட்டுகிற செயலானது பிசாசினுடையது. 'இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப் பட்டுப்போனான்.' என்று வெளி. 12:10ல் பார்க்க முடிகிறது. நாம் செய்த தவறுகளை, பிழைகளை, குற்றங்களை உணர்வது கிடையாது. தாவீது, 'தன் பிழைகளை உணருகிறவன் யார் ? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.' என்று சங்.19:12ல் சொல்வதைப் பார்க்கிறோம். 'துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.' என்று சங். 19:13ல் விவரித்திருப்பதைப் பார்க்கிறோம்.

இயேசு கிறிஸ்து தன் மலை பிரசங்கத்தில், மனிதனின் வாழ்வில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பல காரியங்களைப் போதித்தார். அவைகளில் ஒன்று, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோரனை நோக்கி, உன் கண்ணில் உள்ள துரும்பை எடுத்துப் போடட்டும் என்று சொல்வதெப்படி ? முன்பு உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு. பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய் என்று சொல்லிய வார்த்தைகளின் சத்தியத்தை அறிந்து, சபையிலும், வீட்டிலும், சங்கத்திலும், சமுதாயத்திலும் செயல்பட நாம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். மற்றவர்களைக் குற்றப்படுத்தி, குறை பேசுவதினால் நாம் பாவம் செய்கிறதினாலும், தேவனுக்குப் பிரியமில்லாதவைகளைச் செய்வதி னாலும் நாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு விடுவோம்.

ஒருமுறை நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் முழு இரவு ஜெபத்தை மாதந்தோறும் நடத்தி வந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு விரோதமாக ஒருவர் குற்றச்சாட்டுகளை, கையொப்பமும் விலாசமும் இல்லாத கடிதத்தை மேல் அதிகாரிகளுக்கும், பள்ளியைச் சார்ந்த அத்தியட்சாதீனத்திற்கும் அனுப்பினார். ஆனால் குற்றஞ்சாட்டுகிற வர்களை குற்றப்படுத்துகிற தேவன், அக்குடும்பத்தில் நினையாத மரணங்கள் ஏற்பட அனுமதித்தார். இன்று நாம் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும், மற்றவர்களின் குறைகள் மாறுவதற்கும் மன்றாடுகிற மக்களாய் மாறுவோம். இதினால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.

2. முதலாவது கர்த்தரைத் தேட வேண்டும்

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." மத்தேயு 6:33

இன்று நம்முடைய வாழ்க்கையிலே நலமான நன்மையான காரியங்கள் என்ன என்று பலவிதங்களில் ஆராய்ந்து அறிந்து, அநேகரின் ஆலோசனைகளைக் கேட்டு, அதைப் பெற்றுக் கொள்வதற்கு முழுமனதோடு நாடுகிற, தேடுகிற மக்களாய் இருக்கிறோம். இதினால் உணவு, உடை சிறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் முழுமனதோடு செயல் படுத்திக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இவைகள் ஒன்றைக் குறித்தும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். முதலாவது கர்த்தரைத் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் கூடக் கொடுக்கப்படும் என்று நமக்கு இயேசு கிறிஸ்து தெரிவித்திருக்கிறார். நம்முடைய கர்த்தரை நாம் தேடும்போது, வேண்டிக்கொள்ளும்போது, நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிக அதிகமான ஆசீர்வாதத்தை அருளுகிறார். நாம் நினைத்த வண்ணமாக நம் காரியங்கள், தேவைகள் சந்திக்கப்படவில்லை என்றால், கடனுக்கு வாங்கியாவது அதை வாங்கிப் பெற்று அனுபவிக்க வேண்டும் என்று ஆவலுடன் செயல்படுகிறோம். ஒருவர் கடன் வாங்கும்போது என் தேவன் இன்னும் என்னை ஆசீர்வதிக்கவில்லை என்று உணராது, மறைமுகமாக தெரிவிப்பதாய் இருக்கிறது. ஏனெனில் உபா. 15:6 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை' என்ற வார்த்தைக்கு மாறாக நம்முடைய காரியங்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதாய் இருக்கிறது.

நான் இரட்சிக்கப்படும் முன்பாக தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்எ ன்ற விருப்பமும் வாஞ்சையும் உடையவனாய் இருந்தேன். இதன் காரணமாக என்னிடத்தில் இருந்த பணத்தை மாத்திரமல்ல, மற்றவர்களிடத்திலிருந்தும் கடன் வாங்கி உதவி செய்ய ஆரம்பித்தேன். கடன் வாங்குவது கர்த்தருடைய வார்த்தையை மீறுவது என்று அறியாதவனாய் மற்றவர்களுக்கு உதவி செய்தேன். என்னுடன் பணிபுரிந்த 13 ஆசிரியர்களிடம் கடன் வாங்கியிருந்தேன். நான் 3 P.F. லோன் எடுத்திருந்தேன். அத்துடன் என் மனைவியின் நகைகளையும் வங்கியில் வைத்து கடன் வாங்கி உதவி செய்து விட்டேன். என்னிடம் கடன் வாங்கினவர்கள் சிலர் அசலை மாத்திரம் கொடுத்தார்கள். வட்டியை நான் கட்ட வேண்டியதாயிற்று. பலர் கொடுத்த பணத்தைத் தருவேன், தருவேன் என்று சொல்லி தாமதித்துக் கொண்டிருந்தார்கள். கடன் வாங்கினவர்களுக்கு மாதத் தவணையையும் தேவைகளைச் சந்திப்பதற்காக அனுதினமும் ஏதாவது பொய்யைக் கூறி, வட்டியையும் குறிப்பிட்ட நாளில் கொடுக்க வேண்டியதிருந்ததால், கடன் வாங்கிக்கொண்டே இருந்தேன்.

என் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து, இந்த வசனத்தின்படியாய் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்கை விசுவாசித்து, கடன் வாங்குகிற காரியத்தை நிறுத்தி விட்டேன். ஒவ்வொரு மாதமும் 108 ஆசிரியர்கள் பணியாற்றின பள்ளிக்கூடத்தில், எனது சம்பளப்பட்டியலில் என் பெயருக்கு நேராக சிவப்புக் கோடு போடப்பட்டிருக்கும். ஆகவே எனது சம்பளத்தில் பணம் பிடிக்க பற்றாததால், நான் என் கையிலிருந்து பணம் கொடுக்க வேண்டிய தாயிருந்தது. கர்த்தருடைய பெரிதான கிருபையால் பல மாதங்களாய் இருந்த சிவப்பு கோடானது அடுத்த மாதமே நீங்கிற்று. காரணம் எனது ஒரு P.F. லோன் முடிவடைந்தபடியால். உள்ளத்தில் இனி கடன் வாங்காதிருப்பது எப்படி என்று எண்ண ஆரம்பித்தேன். பள்ளிக்கூட கோ-ஆபரேடிவ் சொசைட்டியிலிருந்து வெளிவந்து விட்டால், என் கடன் தொல்லை முடிவடைந்து விடும் என்று எண்ணி அதிலிருந்து விலகினேன். எது அதிக வட்டிக்கடனாக இருந்ததோ அதை சீக்கிரம் முடிக்க முழு முயற்சியாய் செயல்பட்டேன். அந்நாட்களில் என்னுடைய சம்பளமும் உயர்ந்து, அரியரும் கிடைத்தபடியால், கடன் குறைய ஆரம்பித்தது. கடன் தொல்லையிலிருந்து கர்த்தர் என்னை முழுமையாய் விடுவித்தார். என் மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் மீட்டுக் கொள்ள உதவி செய்தார். முழு சம்பளமாய் வாங்கின பின்பு என் வேலையை ராஜினாமா செய்து முழுநேர ஊழியராக பணியாற்ற கர்த்தர் நடத்தினார்.

இவ்வாறு என் கடன் தொல்லை நீங்கி வாழ்வதற்கு அடிப்படையாக இருந்தது முதலாவது கர்த்தரைத் தேடுகிற செயலாகும். நானும் என் மனைவியும் 11 மணியிலேயே அந்த நாளில் பெற்ற நலமான காரியங்களுக்காக, நன்மைகளுக்காக நன்றி சொல்ல ஆரம்பித்தோம். இரவு 12 மணி ஆனவுடன் புதிய நாளுக்காகத் தேவனைத் துதிக்க ஆரம்பித்தோம். எங்களோடு ஐக்கியப்பட்டவர்களுக்காக, ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்களுக்காக, என் பிள்ளைகளின் பண்புக்காக, நல் வாழ்வுக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். இவ்வாறு கர்த்தரைத் தேடினபடியால் எல்லாவிதமான காரியங்களிலும் மேன்மையான வைகளை, நன்மையானவைகளைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் உதவி செய்தார்.

3. முதலாவது வசனத்தைச் சொல்ல வேண்டும்

'...பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது தேவவசனத்தைச் உங்களுக்கே சொல்லவேண்டியதாயிருந்தது..." அபோஸ்தலர் 13:46

கர்த்தரின் எச்சரிப்பின் வார்த்தைகளை, வசனங்களைப் பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தில் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள். ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்து போனபின்பு, யூதரிலும், யூத மார்க்கத்திலுள்ள பக்தியுள்ளவர் களிலும் அநேகர் பவுலையும், பர்னபாவையும் பின்பற்றினார்கள். அடுத்த ஓய்வுநாளில் பட்டணத்தார் யாவரும் தேவவசனத்தைக் கேட்குட்படி கூடி வந்திருந்தார்கள். யூதர்கள் ஜனக்கூட்டத்தைக் கண்டபோது. பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்து தூஷித்தார்கள். அச்சமயத்தில் பவுலும் பர்னபாவும் முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது என்றார்கள். நீங்களோ அதைத் தள்ளி, நித்திய ஜீவனுக்கு அபாத்திரராய் தீர்த்துக் கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்றார்கள். புறஜாதியார் இதைக் கேட்டு கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்களே கர்த்தரின் வசனத்தை விசுவாசித்தார்கள்.

அருமையான சகோதரனே, சகோதரியே, தேவனுடைய வசனம் ஆவியாயும், ஜீவனுமாய் இருக்கிறது. இந்த வசனத்தை அறிந்து கொள்ளும் போது, நமது வாழ்க்கையிலே நற்கனிகளைத் தருகிற மக்களாய் மாறிவிடுவோம். நாம் செய்கிற எல்லாக் காரியங்களிலும் ஜெயம் கொள்ளுகிற மக்களாய் மாறிவிடுவோம். அத்துடன் இந்த ஜீவ வார்த்தைகள் நமக்குள் விடுதலை வருவதற்கு ஆலோசனைகளை அருளுகிறதாய் இருக்கிறது. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் என்ற சங். 50:15ன் படி நமது கஷ்டமான நேரங்களிலே, வேதனையின் போராட்டமான நேரங்களிலே அவரை நோக்கிக் கூப்பிடும்போது, முழுமையான விடுதலையை, சுகத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளுகிற பாக்கியசாலிகளாய் மாறுகிறோம்.

ஒருமுறை ஒரு வாலிபன் நான் எதைச் செய்தாலும் தோல்வியாக இருக்கிறது. எனக்குள் துக்கமும் துயரமும் நிறைவாய்ப் பெருகியிருக்கிறது. அடிக்கடி எனக்குள்ளாக நீ ஏன் வாழ்கிறாய்? என்கிற சத்தமும் எண்ணமும் தோன்றுகிறது. ஏன் இரவு வருகிறது என்று கலங்குகிறேன். எப்பொழுது விடியும் என்று கடிகாரத்தையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தன் போராட்டம் நிறைந்த, குறைவு நிறைந்த, கண்ணீர் நிறைந்த வாழ்வைக் கூறினான். இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையிலே நம் துக்கங்களையெல்லாம் சுமந்து தீர்த்து விட்டார் என்ற சத்தியத்தை அறிந்து கொள்வீர்களானால், உங்கள் பாடுகள் எல்லாம் மாறிவிடும் என்று கூறினேன். அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். அவர் அசட்டைப் பண்ணப் பட்டிருந்தார். அவரை எண்ணாமற்போனோம் என்ற நிலையைக் கூறி, மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் என்ற வார்த்தையைக் கூறி, நீங்கள் வேதத்தைத் தியானியுங்கள். வேதத்தின்படி நீங்கள் செய்யுங்கள். கர்த்தரின் அற்புதமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள் என்று அவனுக்காக ஜெபித்து அனுப்பினேன். ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, இந்த வார்த்தையின்படி செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். அவனுக்குள் அவன் அறியாதபடி சமாதானம் வந்து, அவன் வாழ்வினை மாற்றியது. இரவிலே துதியினால் நிறைந்து கர்த்தரைப் போற்ற ஆரம்பித்தான். அவனது வாழ்க்கையில் இருந்த கசப்புகள், வேதனைகள் நீங்கி, சந்தோஷமும் சமாதானமும் அடைந்தான். அவன் நினையாத வேலையை நினையாத இடத்திலே பெறவும், நல்வாழ்வு வாழவும் சுர்த்தர் நடத்தினார். இந்த வேதவாக்கியத்தினை ஆராய்ந்தறிந்து அதன்படி செயல்படும்போது, பெரிதான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

இன்னொரு முறை ஒரு வாலிபன், நான் I.T. கம்பெனியில் வேலை செய்கிறேன், சம்பளம் மிகவும் குறைவு. நான் படித்த படிப்புக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கவில்லை. என்னோடு படித்தவர்களின் வீடுகள் கிரஹப்பிரவேஷம், திருமணம் போன்ற அழைப்பிதழ் வரும்போதெல்லாம் எனக்கும் இவ்வாறு வாழ்க்கை அமையுமா என்று கலங்கி கூறினான். அவனுக்கு ஆலோசனையை வேத வாக்கியத்தின்படி கூறினேன். இந்த பூமியிலே தேவன் நம்மைத் துதிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார். இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீர் பரிசுத்தர் என்று உணர்ந்து அறிந்து அவரைத் துதியுங்கள். 'அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்' என்று தாவீது சொன்னபடி உங்கள் வாழ்க்கையிலே தேவனைத் துதிக்க இடம் கொடுங்கள். துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதினால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன் என்ற சங். 18:3ன் வார்த்தைக்கு இடம் கொடுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை 7 தினங்களிலேயே உயர்வையும் மேன்மையும் உண்டாக்குவதைக் கூறி, ஆறுதல்படுத்தி, தினமும் 1 மணிநேரம் முழங்காலில் நின்று கர்த்தர் செய்த நன்மைகளுக்கு நன்றியும் செய்யப்போகிற காரியங்களுக்குத் துதியையும் ஏறெடுங்கள். அவரின் அதிசயத்தைக் காண்பீர்கள் என்றேன். ஆலோசனை பெற்ற அச்சகோதரர், ஆலோசனையின்படியே செய்தபடியால், நினையாத ஒரு பெரிய I.T. கம்பெனியில், அன்று வாங்கின சம்பளத்தை விட ஐந்து மடங்கு உயர்வாகப் பெறுவதற்குக் கர்த்தர் உயர்த்தினார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையிலும் இவ்விதமான வல்ல பெரும் காரியங்களைக் கர்த்தர் செய்து, உன்னை ஆசீர்வதிக்க இயேசு கிறிஸ்து வல்லவராக இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். உன் பாடுகளை ஏற்றவர், உன் வாழ்வில் பரிபூரணத்தைப் பெருகச் செய்வார். உன் எல்லைகளிலே சந்தோஷமும், சமாதானமும் நிறைந்து விடும். 'அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். அப். 17:11ன்படி பெரோயா பட்டணத்தார் நற்குணசாலிகளாய் இருந்தார்கள். தேவவசனம் சத்தியமானது. இந்த தேவ வசனத்தை அனுதினமும் நாம் ஆராயும்போது, அதைத் தியானிக்கும்போது, நம் வாழ்வு கர்த்தருக்குள் வாழ்வதற்கு ஏற்ற பரிசுத்தம் அடைவோம். இன்றே இந்த வேதத்தை நேசிக்க இடம் கொடுப்போம். சமாதானம் பெற்று சுக வாழ்வைச் சுதந்தரிப்போமாக.

4. முதலாவது கர்த்தரைக் கனம் பண்ணுவாயாக

"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு." நீதிமொழிகள் 3:9

அன்பின் தேவப்பிள்ளையே, உன்னுடைய எல்லாச் செய்கையினாலும் கர்த்தருக்கு ஏற்ற சாட்சியாக, அவருடைய நாமம் மகிமைப்படத்தக்கதாக அமைய வேண்டும். இன்று அநேக நேரங்களில் நான் எப்படிக் கர்த்தரைக் கனம் பண்ணமுடியும், எப்படி மகிமைப்படுத்த முடியும், எப்படி அவர் நாமத்தை உயர்த்துவது என்ற கேள்விகள் நமக்குள் தோன்றுகிறது. உன் பொருளையும் உன் எல்லா விளைவின் முதற்பலனையும் கர்த்தருக்குக் கொடுக்கும்போது, நாம் கர்த்தரை கனம் பண்ணுகிறதாய் இருக்கிறது. அநேக நேரங்களிலே ஏதோ கொஞ்சம் கர்த்தருக்கென்று தருகிற வழக்கம், பழக்கம் நிறைவான மக்களிடத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். ஆலயத்திற்குக் கொடுப்பதா, ஊழியத்திற்குக் கொடுப்பதா என்ற கேள்வி வருவதுண்டு. கொடுக்க வேண்டும் என்றுதான் வேதம் நமக்குப் போதனை செய்கிறது. அதை எவ்வாறு திட்டமிட்டு செலவழிக்கின்றனர் என்ற கேள்வி நமக்குள் உண்டாவதினால், நாம் கொடுக்கவே மனதில்லாதிருக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாகிய 'கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். ' லூக்கா 6:38ன் படி மனநிறைவோடு கொடுப்போம். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை மறவாது கொடுப்போமாக.

அன்பின் தேவன் எலியாவை அற்புதமாக வழிநடத்தினார். கர்த்தருடைய வார்த்தையை மிகுந்த தைரியமாக ஆகாப் என்ற இஸ்ரவேல் ராஜாவிற்கு முன்பாக என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறினான். கேரீத் ஆற்றண்டையிலே ஒளித்துக் கொண்டிரு என்ற தேவ வார்த்தையின்படி ஒழிந்து கொண்டான். ஆற்றின் தண்ணீரைக் குடித்துக் கொண்டு, காகங்களால் கொடுக்கப்பட்ட உணவை உண்டு வாழ்ந்தான். காகத்தைக் கொண்டு கர்த்தர் எலியாவைப் போஷித்தார். ஆற்றின் நீர் வற்றிப்போனபின்பு சாறிபாத் ஊருக்குச் செல்ல வழி நடத்தினார். அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்த்து கூப்பிட்டு, நான் குடிப்பதற்குத் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் கொண்டு வா என்றான். கொண்டுவரப்போகிற நேரத்தில் கொஞ்சம் அப்பமும் கையிலே எனக்குக் கொண்டு வா என்றான். பானையிலே ஒரு பிடி மாவும் கலசத்திலே கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல் என்னிடத்தில் வேறொன்றும் இல்லை என்று தன் இயலாமையைக் குறித்துக் கூறினாள். நானும் என் மகனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்று கூறினாள். எலியா அவளைப் பார்த்து, பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படியே ஆயத்தப்படுத்து. ஆனாலும் முதலில் அதிலே ஒரு சிறிய அடையைப் பண்ணி எனக்குக் கொண்டு வா. பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம் என்றான். அத்துடன் கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையில் மா செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தில் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள். அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள்.

நாம் கர்த்தரின் வார்த்தையின்படி முதற்கனியையும், முதற்பலனையும் கர்த்தருக்குக் கொடுத்து அவரைக் கனம் பண்ணும்போது, கர்த்தர் நம்மைத் திரளாய் ஆசீர்வதிப்பார்.

5. முதலாவது உட்புறத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் "...போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு." மத்தேயு 23:26

இன்று நம்முடைய வாழ்க்கையில் வெளியரங்கமான சுத்திகரிப்புக்கு ஏற்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். சிலர் அதிகாலையிலேயே குளித்து, வெளியரங்கமாய்ச் சுத்தப்படுத்திக் கொண்டு, ஜெபிக்கவும், துதிக்கவும், தேவ வசனங்களைத் தியானிக்கவும் இடம் கொடுக்கிறார்கள். வெளியரங்கமான சுத்திகரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதைக் காட்டிலும் உள்ளான இருதயத்தைச் சுத்திகரிப்பது அவசியமாயிருக்கிறது. இந்தச் சுத்திகரிப்பு தான் மிக அவசியம். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். மாற்கு 7:21, 22ன்படி 'மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசை களும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும். தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டு வரும்.' இவைகள் முதலாவது நம் வாழ்வில் சுத்தமாக்கப்பட வேண்டும் என்று திட்டமும் தெளிவுமாய் கூறியிருக்கிறார். மனிதனுடைய இருதயங்களை ஆராய்ந்து அறிகிற தேவனுடைய சமுகத்திலே நாம் எவ்விதமாய் இருக்கிறோம்? வெளியரங்கமாய் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையைப் போல் நம் வாழ்வு இருக்கிறதா?

இயேசு கிறிஸ்துவோ நமது எல்லாப் பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்காக உலகத்திற்கு வந்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகிற்கு வந்தார் என்பதை அறிவோம். நம் பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்காக, பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார் என்று 1பேதுரு 2:24ல் பார்க்கிறோம். எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்ற இயேசு கிறிஸ்து நமக்குள் பாவ மன்னிப்பாகிய மீட்டை உண்டாக்கும்படி தம்முடைய இரத்தத்தைச் சிலுவையிலே சிந்தினார். 'அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்' 1 யோவான் 1:7ன் படி தமது பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். நம் பாவங்களை அவரிடத்தில் அறிக்கை செய்யும்போது, பாவம் மன்னிக்கப்பட்டு, உள்ளான துாய்மை நிறைந்த நல் வாழ்க்கை ஆரம்பமாகிறது. எந்த மனிதன் தன் வாழ்க்கையிலே இந்த சுத்திகரிப்பைப் பெறுவதற்கு இயேசு கிறிஸ்துவை நம்பி, அவர் இரத்தத்தால் கழுவப்படுவதற்கு, சுத்திகரிக்கப்படுவதற்கு இடம் கொடுக்கிறானோ, அவனுடைய வாழ்க்கையானது, 'ஒருவன் இவைகளை விட்டு. தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப் பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.' 2 தீமோ. 2:21ன் படி கனத்திற்குரிய பாத்திரமாயிருப்பான்.

இன்றே சுத்திகரிக்கப்பட நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தரின் கரத்தில் கனத்துக்குரிய பாத்திரமாய் மாறி ஆசீர்வதிக்கப்படுவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                        கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                        சகோ. C. எபனேசர் பால்.


E- STORE