இந்த மாத செய்தி

                                              ''...ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.''

                                                                                                               யோவான் 16:20

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இன்று நமது வாழ்க்கை பலவிதமான துக்கத்தினால் நிறைந்து நம் வாழ்வைக் கசப்பினாலும், சஞ்சலத்தினாலும் நிறைந்து நிதானத்தை இழந்து தவிக்கிறோம். தாவீது சங்கீதம் 38:17ல் "..என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது" என்று தனது துக்கத்தினால் தன் நிலையை அறிவித்துள்ளான். தேவனுக்கு ஏற்ற துக்கம் மனம் திரும்புவதற் கேதுவாக இருக்கிறது. லௌகீக துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது என்று 2 கொரி.7:10ல் பார்க்கிறோம். துக்கத்தினால் என் கண் தொய்ந்து போயிற்று' என்று சங். 88:9ல் பார்க்கிறோம். துக்கம் நமது ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கெடுத்து நம்மை என்றும் கண்ணீரின் பாதையில் கொண்டு செல்லுகிறதாய் இருக்கிறது. இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது துக்கத்தை சந்தோஷமாக மாறப்பண்ணுகிற வல்லமையுடைய உன்னத தேவனாக இருக்கிறார்.

நம் வாழ்வில் ஏன் துக்கம் வருகிறது?

இன்று ஏன் எனது வாழ்வில் துக்கம் வருகிறது ? ஏன் இந்தக் கடவுள் இதை அனுமதித்தார்? ஏன் இந்த வேதனை ? இது எத்தனைக்காலம்? என்று உன்னத தேவனைக் குறை கூறி, காலத்தைக் களிக்கின்றனர். சிலர் இன ஜன பந்துக்களின் நிமித்தம் என்று குற்றப்படுத்தி, அனுதினமும் பகையையும், கசப்பையும் வளர்த்து சஞ்சலப்படுகிறார்கள். துக்கத்திற்குப் பல காரணங்கள் உண்டு.

1. லௌகிகத்தினால் துக்கம்

"...லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." 2 கொரிந்தியர் 7:10

இந்த உலகத்திற்கடுத்த காரியங்களில் துக்கம் ஏற்படுகிறதை நன்கு அறிவோம். தாங்கள் நினைத்த வீட்டை, இடத்தைப் பெற முடியாதபடி துக்கம் அடைகிற மக்களுண்டு. என் வேலையில் நான் உயர்வு அடையவில்லையே, என் கையின் பிரயாசங்களில் வெற்றியில்லையே, நான் வெளிநாடு செல்ல முயன்றும் எனக்கு விசா கிடைக்கவில்லையே என்று இதைப்போல பல உலகக் காரியங்களினால் துக்கமடைகிற மக்கள் இன்று ஏராளமாய்ப் பெருகி வருகிறார்கள். நான் பங்கு மார்க்கெட்டில் சேர்த்த என் பணத்தை எதிர்பாராத காரியங்களினால் இழந்து போனேனே என்று துக்கத்தினால் கலங்கும் சகோதரனே, சகோதரியே, இன்று இந்த உலகத் துக்கத்திற்கு இடம் கொடாதே. இது உன் ஜீவனைப் பறித்து விடும்.

ஒரு வாலிபன் இயேசுவிடம் வந்து நித்திய ஜீவனை அடைய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி, கற்பனைகளைக் கைக்கொள்ளச் சொன்னார். அவன் உடனே இவைகளை என் சிறுபிராயத்திலிருந்தே கைக்கொண்டு வருகிறேன். இன்னும் என்ன குறைவு இருக்கிறது என்றான். நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் போய் உனக்கு உண்டான வைகளை விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுடையவனாய் இருந்த படியால், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது துக்கமடைந்தவனாய் போய்விட்டான்.

2. நெருக்கத்தினால் வரும் துக்கம்

"...கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.'' சங்கீதம் 31:9

மனிதனுடைய வாழ்வில் ஏற்படும் பற்பல பிரச்சனைகள் அவன் உள்ளத்தை நெருக்கி, நொறுக்கி துக்கத்தினால் அவனை நிறைக்கிறது.இன்று பணப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை, வேலைப்பிரச்சனை, நிந்தைகள், தனிமை, வெறுமை இப்படிப்பட்ட காரியங்கள் மனிதரின் உள்ளத்தை நொறுக்கி, பிழிய வைக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் அவனை நெருக்க, அவன் உள்ளம் சொல்ல முடியாத துக்கத்தினாலும், துயரத்தினாலும் நிறைந்து ஏன் இந்த வாழ்வு என்று அல்லல் அடைகிறான்.

தாவீது தான் வசித்து வந்த எல்லைக்குத் திரும்பி வந்தான். அவன் அப்படியாக திரும்பிய போது அவனது பட்டணம் தீக்கு இரையாகி, மனைவி, பிள்ளைகள், ஆடுமாடுகள் எல்லாம் எதிரியால் சிறை கொண்டு போகப்பட்டதைக் கண்டு கலங்கினான். அவனுடன் இருந்தவர்கள் அவனைக் கொல்ல முற்பட்டார்கள். இப்படிப்பட்ட எதிர்பாராத நெருக்கம் வந்த சமயம் அவனது துக்கம் அதிகரித்தது.

அழுகிறதற்கு தங்களில் பெலன் இல்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். இன்று தேவப்பிள்ளையே! உனது வாழ்வில் ஏற்பட்ட சகல பிரச்சனைகளினாலும், அன்பற்ற சூழ்நிலைகளினாலும் நீ கலங்கி கண்ணீரும், கவலையுமாய், உடைந்த உள்ளத்துடனும் வாழ்ந்து கொண்டு இருக்கலாம். கர்த்தர் உன்னை அறிவார். உன் துக்கத்தை, சுமந்து தீர்த்தவர் இருக்கிறார்; கலங்காதே, நெருக்கத்தினால் வந்த துக்கத்தை இன்றே கர்த்தர் மாற்றுவார்.

3. அருமையானவர்களை இழந்ததினால் வரும் துக்கம்

“...தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்." 2 சாமுவேல் 13:37

 

இன்று நமது குடும்பத்தில் எதிர்பாராத விதமாய் மரித்துப் போகிற மக்களின் நிமித்தம் நமது வாழ்வில் துக்கம் அதிகரித்து நம்மை வாட்டுகிறது. கணவரையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, பெற்றோரையோ நாம் இழக்கும் போது சொல்ல முடியாத துக்கத்தினால் கலங்குகிறோம். நமது மனத்திரையிலே அவர்களின் உருவம் தோன்றி, அவர்கள் பேசியது, செய்தது, சொன்னது இதையே நினைத்தும், சிந்தித்தும் கொண்டிருக்கிறோம். அவர்களின் நண்பர்களையோ உறவினர்களையோ கண்டால் துக்கம் அதிகரிக்கிறது.

 

என்னுடைய இளைய சகோதரன் நோய்வாய்ப்பட்டு திடீரென்று தனது 37ம் வயதில் இறந்து போனான். அவனது பிறப்பிலிருந்து மரணம் வரையுள்ள அனைத்துக் காரியங்களும் ஒரு கதையைப் போல் கடந்து சென்று விட்டது. அவனது மரணம் எனது உள்ளத்தை அதிகமாய் பாதித்தது. அவன் இறந்து இத்தனை நாள், இத்தனை மணிநேரம் ஆயிற்று என்று எண்ணி என்னை அறியாமலே கண்ணீர் சிந்துவேன். கர்த்தரின் ஆவியானவர் என் துக்கத்தை அறிந்து என்னைத் தேற்றினார். உனக்காக நான் பாடுபட்டு மரித்தேனே, உனது ஜீவனை மீட்க என்னையே அர்ப்பணித்தேனே என்று தமது அன்பை வெளிப்படுத்தி, எனது துக்கத்தைச் சுமந்தவர், எனது உள்ளத்தின் துக்கத்தை நீக்கினார். அன்பு சகோதரனே, சகோதரியே உனக்குப் பிரியமானவரின் இழப்பினால் ஏற்பட்ட உனது துக்கத்தைக் கர்த்தர் அறிவார். ஒருபோதும் தவறு செய்யாத கர்த்தர் நிச்சயம் உனது துக்கத்தை மாற்றுவார்.

4. சேதம், வியாதியினால் வரும் துக்கம்

''...என் துக்கம் சொல்லிமுடியாது" யோபு 6:3

யோபு என்ற பக்தன் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான் (யோபு 2:7) அது மாத்திரமல்ல, அவனது செல்வத்தை அவன் இழந்தான். பிள்ளைகள் மரித்தனர். இதினால் அவனது துக்கம் சொல்லி முடியாது என்று புலம்புகிறான். ஆம்! பற்பல சேதம், வியாதி இவைகளினால் நமது துக்கம் அதிகரிக்கிறது. ஒருமுறை ஒரு சகோதரனின் சரீரத்தில் பயங்கரமான வியாதி வேதனையைக் கொடுத்தது. அச்சமயம் அச்சகோதரன் கூறியது இதுதான். எனது பிராண பகைஞருக்கும் இவ்விதமான வேதனை வரவேக்கூடாது என்று தாங்க முடியாத துக்கத்தினாலும், வேதனையினாலும் கதறினான்.

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது துக்கத்தைச் சிலுவையிலே சுமந்து தீர்த்து இருக்கிறபடியால் நாம் கலங்காது கர்த்தரைத் துதிப்போம்.

5.ஆலோசனையை, போதகத்தை அசட்டையாய் ஏற்றுக் கொள்ளாததினால் வரும் துக்கம்

"முடிவிலே உன் மாம்சமும், உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்து கொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே! என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம் பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!" நீதிமொழிகள் 5:11, 12, 13

இன்று ஆலோசனைகளையும், கர்த்தரின் போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மனதில்லாது, பாடுகளைத் தங்கள் வாழ்விலும் சரீரத்திலும் அடையும்போது, துக்கத்துடன் கலங்குகிறார்கள். ஒரு முறை எனது வாழ்வில் மிகவும் சரீரப்பாடுகளும், வேதனைகளும் நேரிட்ட சமயம் நாம் மிகவும் துக்கப்பட்டேன். ஒரு ஊழியத்திற்காக சென்று கொண்டிருந்தேன். அச்சமயம் எனது மூத்தமகன் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்தான். இரவு நேரமாக இருந்தபடியால் துாங்கி விடுவானோ என்று அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தேன். தேவ ஆவியானவர் பின் சீட்டில் உட்கார உணர்த்தினார். நான் உள்ளத்தில் 'கர்த்தாவே, எனது மகன் தனியாக வாகனம் ஒட்டிச் செல்லுகிறான். எந்தப் பிரச்சனையும், தூக்கமும் அணுகாது இருக்க அவன் பக்கத்தில் அமர்ந்து இருக்கிறேன். தயவாய் ஏற்றுக்கொள்ளும்' என்று கர்த்தரின் ஆலோசனைக்கு எதிராக என் சுய நீதியின் காரியத்தைத் தெரிவித்தேன். மீண்டும் தேவ ஆவியானவர் ஆலோசனை அருளினார். ஆனால் எனது சுய விருப்பப்படி காரியத்தைச் செய்தேன். அதின் விளைவு எனது கார் விபத்திற்குட்பட்டது. எனது மூன்று விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனை, துக்கம் ஏற்பட்டது. கர்த்தரின் ஆலோசனையை, ஊழியரின் போதகத்தை நாம் அசட்டை செய்யும் போது அழிவு ஏற்படும். கலக்கம், துக்கமும், துயரமும் நம்மைத் தொடரும். கவலை, கண்ணீர் நிறையும்.

துக்கம் எப்பொழுது சந்தோஷமாக மாறும்?

1. தேவ சமூகத்தில் வரும்போது சந்தோஷமாக மாறும்

 

"அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்." எரேமியா 31:13

எப்பொழுது இந்த மேன்மையான, மகிமையான மாற்றத்தைக் கர்த்தர் தருவார் என்றால் அவர் சமுகத்தைத் தேடி, நாடி வர நம்மை அர்ப்பணிக்கும்போது. தேவனின் சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், அவருடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு என்று தாவீது சங். 16:11ல் குறிப்பிட்டிருக்கிறார். எந்தப் பாவியையும் புறம்பே தள்ளாத அன்பின் தேவனின் சமுகத்தைத் தேடி நாம் வரும் சமயம், நம்முடைய துக்கத்தைச் சந்தோஷமாக கர்த்தர் மாற்றுவார். கானாவூரில் சாதாரண தண்ணீரை, ருசி மிக்கத் திரட்சை ரசமாக மாற்றியவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாத மகத்துவம் நிறைந்த உன்னத தேவனாக இன்றும் ஜீவிக்கிறார். பாவியை நீதிமானாக மாற்ற வல்லவர் இன்றும் நமக்குள் கிரியை செய்கிறவராகவே இருக்கிறார்.

வனாந்தரத்தை நீர்த்தடாகமாக மாற்ற வல்லவர்; வெறுமையை நிறைவாக்க வல்லவர்; சவுலைப் பவுலாக மாறப்பண்ணியவர் இன்றும் நமது மத்தியில் கிரியை செய்கிறவராக இருக்கிறார். அன்னாள் என்ற மகளைக் குறித்து 1 சாமு.1ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். பிள்ளை யில்லாக் காரணத்தினாலும், நிந்தையினாலும், கண்ணீரும், துக்கமும் நிறைந்து இருந்தவள், தேவ சமுகத்தில் உள்ளத்தை ஊற்றினாள். அவள் துக்கம் மாறியது. இன்று தேவ சமுகத்திற்கு வருவதற்கும், உள்ளத்தை ஊற்றவும் நமக்கு நேரம் இல்லை. டி.வி. காட்சிகளைக் காண்பதும், சினிமா பாடல்களைக் கேட்பதும், You Tube-ல் பார்ப்பதும் உலகப் பிரகாரமான காரியங்களில் நேரத்தை செலவிடுவதும் நமது பிரதானமான காரியமாக இருக்கிறது. தேவ சமுகம் வந்து உள்ளத்தை ஊற்றும்போது, மெய்யாவே தேவ சந்தோஷம் நிறைவாகும். குறைகள் தீரும்.

ஒருமுறை மிகுந்த துக்கத்துடன் ஒரு குடும்பத்தினர் எங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று வந்தனர். திருமணம் ஆகி சில ஆண்டுகள் கடந்து விட்டது. குழந்தை இல்லை என்று கலங்கினர். தேவ சமுகத்தைத் தேடின அந்தக் குடும்பத்தில் கர்த்தர் தடைகளை நீக்கி மூன்று கர்ப்பத்தின் கனிகளை ஈந்தார். தேவ சமுகத்தைத் தேடி நாடிய குடும்பத்தில் குறை தீர்ந்து மெய்யான சந்தோஷம் பெருகிற்று.

நான் இவ்விதமான குறைவுடன் இருக்கிறேன், எனது குடும்பத்தில், என்னில் இந்த வேதனையான நிலை என்று கலங்கும் தேவப்பிள்ளையே! தேவ சமுகத்தைத் தேடு.கர்த்தரைத்  தேடுபவர்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது என்று கூறிய துக்கத்தை நீக்குவார். சந்தோஷமும் மகிழ்ச்சியும் பெருகும்.

2.விடுதலையினால் துக்கம் சந்தோஷமாக மாறும்

"சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும் போது, யாக்கோபுக்குர் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.” சங்கீதம் 14:7

இன்று மனிதன் பலதரப்பட்ட காரியங்களுக்கு அடிமையாகி, விடுதலையில்லாமல் துக்கத்துடன் தன் நாட்களை வீணாக வேதனையாகக் கழித்துக்கொண்டு இருக்கிறான். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் நீங்கள் மெய்யாகவே விடுதலை யாவீர்கள். இன்று மனிதன் மெய்யான விடுதலையைத் தரக்கூடிய இயேசு கிறிஸ்துவை விட்டு விட்டு பல பரிகாரங்களைத் தேடி வேதனையும், பாடும், துயரமும், துன்பமும் அடைகிறான்.

ஒருமுறை ஒரு சகோதரர் தனது மகளின் வேதனையான வியாதி தீரவும், அந்த மகளை வேதனைப்படுத்திய தீய ஆவிகள் விலகவும், உலகப்பிரகாரமான மனிதரை நாடித்தேடி சென்று, அவர் கொடுத்த ஒரு முட்டையைத் தனது வீட்டில் புதைத்தப்படியால் துக்கம் அதிகரித்து மிகுந்த வேதனை அடைந்தார்கள்.

போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு மகனை அவன் பெற்றோர் அழைத்து வந்தனர். அந்த மகனின் நிமித்தம் அக்குடும்பத்தார் மிகுந்த கவலையோடு இருந்தார்கள். அவனுக்கு விடுதலை வேண்டுமென்று, பல மனிதர்களையும் பாரம்பரியமான பல காரியங்களையும் செய்து முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் அவனைக் கொண்டு வந்தார்கள். இயேசு கிறிஸ்து அவனை அற்புதமாய் விடுவித்தார். அந்த மகனில் ஒரு பெரிய மாற்றமும் மகிழ்ச்சியும் உண்டானதை அந்தக் குடும்பத்தினர் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சத்துருவின் சகல தந்திரத்திற்கும் உன்னை விடுவிக்க வல்லவர் இன்றும் ஜீவிக்கிறார். இஸ்ரவேல் மக்களை பார்வோனின் கைக்கு விலக்கி விடுவித்த உன்னத தேவன் இன்றும் ஜீவிக்கிறார். விசுவாசத்துடன் இயேசுவிடம் வந்து பணிந்து, வேண்டிய கானானிய ஸ்திரீயின் மகளில் விடுதலை தந்த இயேசு இன்றும் ஜீவிக்கிறார்.

3. ஜெபத்தினால் துக்கம் சந்தோஷமாக மாறும்

''இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.'' யோவான் 16:24

‘உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்ற இயேசு கிறிஸ்து நம்முடைய துக்கம் நீங்கி, சந்தோஷமடைய அநேக ஆலோசனைகள் நமக்குக் கொடுத்திருக்கிறார். அதில் ஒன்று ஜெபமாகும். ஜெபத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து திட்டமாக நமக்குப் போதனை செய்திருக்கிறார், நமக்கு மாதிரியையும் வைத்திருக்கிறார். கேளுங்கள், கொடுக்கப்படும்' என்ற கர்த்தருடைய வார்த்தையின் படி நாம் பிதாவை நோக்கி நம் ஜெபங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கும் போது, நம்முடைய துக்கம் எப்படிப்பட்ட தாயிருந்தாலும் அதை அவர் மாற்றுகிறவராயிருக்கிறார்.

 

நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். எசேக்கியாவின் குமாரனாகிய மனாசே கர்த்தருக்கு விரோதமாக பாவங்களைச் செய்ததுமல்லாமல் ஜனங்களையும் வழி தப்பிப் போகப்பண்ணினான். கர்த்தர் பேசின போதிலும் கவனிக்காதே போனான். ஆகையால் அசீரிய ராஜாவின் சேனாபதிகள் அவனை முட்செடிகளில் பிடித்து, வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டு போனார்கள். இவ்வாறு நெருக்கப்படுகையில் கர்த்தரை நோக்கிக் கெஞ்சினான். 'அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் பண்ணிக் கொண்டிருக்கிற போது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்' (2 நாளா. 33:13).

ஜெபத்தைக் கேட்கிற தேவன் இழந்த சுதந்தரத்தை மீண்டும் நமக்குத் தந்து, இழந்த சந்தோஷத்தைத் திரும்பத் தருகிறார். "கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக் களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்" (ஏசா. 51:11). இந்த வாக்கின்படி இயேசு கிறிஸ்து ஜெபத்தைக் கேட்டு, நம் சஞ்சலங்களை நீக்கி, மகிழ்ச்சியைத் தருவார்.

4. அவருடைய வார்த்தையினால் சந்தோஷம்

''உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது..." எரேமியா 15:16

 

கர்த்தருடைய வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் அநேக அற்புதங்களைச் செய்யக்கூடியது. அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். 'அவர் தமது வசனத்தை அனுப்பி, அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். (சங். 107:20). கர்த்தருடைய வார்த்தைகள் வல்லமையுடையது. வார்த்தையினாலே உலகத்தையும், அதிலுள்ளவைகளை யும் உண்டாக்கியவர் தம்முடைய வார்த்தையை நமக்கு அனுதினமும் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார். இந்த வார்த்தைகளை அசட்டை செய்வதினாலே அழிவை அடைகிறோம். இழப்பும் உண்டாகிறது.

ஒருமுறை ஒரு கூட்டத்திற்குப் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். மூன்றரை நேர பயணத்திற்காக நான் என்னை ஆயத்தப்படுத்திச் சென்றேன். அன்று இரவு கூட்டம் முடிந்த பின் மீண்டும் வீடு திரும்ப ண்ேடும். ஒரு சிறிய பையை மாத்திரம் கையில் எடுத்துச் சென்றேன். பையை என் தலைக்கு மேலுள்ள சாமான் வைக்கும் பகுதியில் வைத்தேன். உள்ளத்திலே தேவனைத் துதித்துக் கொண்டே சென்றேன். குறிப்பிட்ட இடம் வந்த போது, அந்தப் பையை அங்கிருந்து எடுக்கும்படி கர்த்தர் உணர்த்தினார். அந்த வார்த்தைகளை அசட்டை செய்து, பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிப் பயணத்தைத் தொடர்ந்தேன். நன்றாகத் தூங்கி விட்டேன். திடீரென நான் இறங்க வேண்டிய இடம் வந்த போது தான் விழித்தேன். பஸ் நின்றவுடனே நான் பையை எடுக்காமலேயே அவசரமாக இறங்கிவிட்டேன். நான் இறங்கியவுடன் தான், என் பை ஞாபகம் வந்தது. பஸ் புறப்பட்டு விட்டது. பஸ்ஸின் பின்புறத்தைத் தட்டிய போதும் பயனில்லாமல் போனது. பையுடன் பைபிளையும் இழந்தேன். உள்ளத்தில் மிகவும் துக்கமடைந்தேன். அந்நாளில்தான் 'நான் உனக்குப் புதிய வேத புத்தகத்தைத் தருவேன்' என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். அந்தப்படியே அடுத்த ஊழியத்தின்போது, ஒரு சகோதரன் புதிதாய் வந்த வேதப்புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார். கர்த்தரின் வார்த்தை நம்மை எச்சரிக்கிறது. அந்த வார்த்தைகள் நமக்குக் கிடைக்கும்போது, அந்த எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்தால் துக்கம் நேரிடாது. சந்தோஷம் நிறைவாய்ப் பெருகும்.

5. பரிசுத்த ஆவியினால் சந்தோஷம் வரும்

"நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக் கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி" 1 தெசலோனிக்கேயர் 1:6

பரிசுத்த ஆவியினால் தேவனின் அன்பும், மெய்யான சந்தோஷமும் நமக்கு அருளப்படுகிறது. இன்று நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றால் நிச்சயம் பெரிய சந்தோஷம் உண்டாகும். சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போம். 'தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.' என ரோமர் 14:17ல் பார்க்கிறோம். '...நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்...' ரோமர் 5:5ன் படி தேவ அன்பு ஊற்றப்பட்டிருக்கிறது. இந்த ஆவியானவர் நம் வனாந்தர வாழ்க்கையை செழிப்புள்ளதாய் மாற்றுகிறார். இந்த ஆவியானவர் நமக்குச் செய்ய வேண்டிய காரியங்களை நமக்குப் போதிக்கிறார். 'கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.'ஏசாயா 58:11ன் படி இந்த ஆவியானவர் நித்தமும் நம்மை நடத்தி வற்றாத நீரூற்றைப்போல ஆசீர்வதிப்பார். அவரால் நித்தமும் நடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப் படுவோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

  கிறிஸ்து இயேசுவின் பணியில்,

 சகோ. C. எபனேசர் பால்.


E- STORE