சிந்தி செயல்படு

      ''உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால்,

                                                                          நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.''

                                                                                                                                                                                        ஏசாயா 26:3

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

ஒருமுறை வேறொரு நாட்டில் ஊழியங்களைச் செய்ய ஒரு வீட்டாரோடு தங்கியிருந்தேன். ஊழியம் முடித்து வந்தபின் இரவிலே தங்கியிருந்த வீட்டின் தலைவருடைய சகோதரர் என்னைச் சந்திக்க வந்தார். அந்த இடத்திற்கு அருகே காய்கறி கடை வைத்திருந்தார். சில காரியங்கள் பேசினார். ஊழிய காரியங்களை விசாரித்தார். ஆனால் அவர் துக்கத்தோடுதான் இருந்தார். அவரிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டேன். இந்த இராத்திரியிலே ஒரு தவறான காரியத்தைச் செய்ய தீர்மானித்திருக் கிறீர்களே என்றேன். என்னை ஆச்சரியமாய் பார்த்தார். நீங்கள் வாங்கி வைத்திருக்கிற விஷத்தைக் குப்பையிலே போடுங்கள் என்றேன். சற்று அழுகையோடு என்னைப் பார்த்தார். ஏன் உங்கள் மனைவி, பிள்ளைகளைக் கொன்று நீங்களும் சாகவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றேன். வாழ்வதற்கு வழி இல்லை, படுத்து துாங்கி வாழ்வதற்கு ஒரு இடம் இல்லை, என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார். அவருக்கு ஒரு காரியத்தைச் சொன்னேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவை நம்புங்கள், தேடுங்கள்,அவர் உங்களைப் போஷித்து, பராமரித்து, ஆசீர்வதிப்பார் என்றேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை மூன்று முறை சாவின் கூரிலிருந்து மீட்டிருக்கிறாரே என்று சொன்னவுடன் என்னையே பார்த்தார். நெருப்பில் வெந்து சாம்பல் ஆகவேண்டிய உங்களைக் காத்தாரே, என்றபோது அழுகையோடு ஆம் கப்பலில் வேலை செய்திருந்த பொழுது furnace-ல் (அடுப்பு) விழ வேண்டிய போது ஒயர் என்னைத் தடுத்து தள்ளி விழச் செய்தபடியால் தப்பினேன். இன்னொரு முறை நான் தரவேண்டிய பணத்தைத் தராதபடியால், கோபத்துடன் வந்து உன்னைக் கொலை செய்வேன் என்றான். கொலை செய்ய வந்த மனிதன் நின்று கொண்டிருந்த இடத்திற்குக் கீழே குழியில் ஒளிந்து கொண்டீர்கள். அங்கும் கர்த்தர் உங்களைக் காத்தார். இவ்விதமாய் காத்து இதுவரை நடத்தி வருகிற அன்பு தேவனைத் தேடாது சுய நீதியின் செயலால் நஷ்டமும், கஷ்டமும் அடைந்து தவறான தீர்மானம் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இந்தக் காரியத்தை ஒரு போதும் நீங்கள் நினையாதிருங்கள், செய்யாதிருங்கள். கர்த்தரை நம்புங்கள். இன்று அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். கர்த்தாதி கர்த்தர் உங்களையும், வீட்டாரையும் சமாதானத்தோடு காத்துக் கொள்வார். நீங்கள் முழு மனதோடு தேடும் போது அவர் உங்களைக் கைவிடமாட்டார் என்று ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அன்று அவரை அனுப்பி வைத்தேன்.

 

அடுத்தமுறை அப்பகுதி ஊழியங்களைச் செய்ய சென்ற பொழுது, ஒரு வாகனத்தில் என்னை அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்தார். என்ன நடந்தது என்று கேட்டேன். நீங்கள் எனக்கு ஜெபித்த அடுத்த நாள் காலையிலே நீங்கள் Hatton Methodist Churchல் செய்தி கொடுத்து கொண்டிருந்தீர்கள். நானும் பங்கு பெற்றேன். என் இனத்தார் ஒருவர் இந்த வாகனத்தைக் கொடுத்து 5000 ரூபாய் தா. எனக்கு வெளிநாடு ஒன்றில் வேலை கிடைத்திருக்கிறது. இந்த வாகனத்தை ஓட்டி மாத தவணையை வங்கிகளில் செலுத்திவிட்டு நீ ஓட்டி சம்பாதி என்று சொல்லி சென்று விட்டார். நான் கர்த்தரை முழு மனதோடு நம்ப தேட ஆரம்பித்தவுடன், என் குறைகள் என் மனப்போராட்டங்கள் நீங்கி என் தேவைகள் சந்திக்க கர்த்தர் உதவி செய்தார். தங்குவதற்கு வீடும் உண்டு, உடுத்திக் கொள்ள இன்று கர்த்தர் போதுமானதைத் தந்திருக்கிறார். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த காரியங்களைக் கூறினார்.

 

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் குறைவினாலும், உன் கடன் தொல்லையினாலும் இனி வாழ முடியாது என்ற எண்ணம் கொள்ளாது, கர்த்தரை நம்பி அவரைத் தேடி வாழ்வதற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அவரைத் தேடும் மக்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது. அவர் உங்களை ஆசீர்வதிப்பார். கைவிடமாட்டார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                              சகோ.C. எபனேசர் பால்.


E- STORE