ஜெபம்

                                                               தேர்வு எழுதும் பிள்ளைகளுக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். கடந்த ஆண்டினை முடித்து இந்த ஆண்டிற்குள் பிரவேசிக்கச் செய்த தயவிற்காக உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, கிருபையாக நீர் கொடுத்த பிள்ளைகள். தங்களின் முக்கியமான தேர்வுகளை இம்மாதம் முதல் எழுத இருக்கிறார்கள். நீர் ஒருவரே அவர்களைச் செவ்வையாக தங்கள் தேர்வுகளை எழுதி வெற்றி பெறச் செய்ய வல்லவர். எங்கள் பிள்ளைகள் தேர்வுகளை நன்றாக எழுத ஏற்ற சூழ்நிலையைத் தாரும். இயற்கையின் மீது சகலவிதமான வல்லமையுடையவரே. தேர்வு எழுதும் நாட்களில் நல்ல சீதோஷண நிலையைக் கட்டளையிடும். அத்துடன் பிள்ளைகள் தேர்வுக்காக படித்து ஆயத்தமாகும் இந்நாட்களில் எந்த பெலவீனமும், நோயும் அணுகாது காத்து நடத்துவீராக. எந்த விதமான தடையும் பிள்ளைகள் பரீட்சைக்கு ஆயத்தமாகும் காலங்களில் வராது காத்தருளும். சத்துருவாகிய பிசாசானவன் தந்திரமான களைகளை அவர்கள் உள்ளத்தில் விதைத்து, தவறான எண்ணங்களையும், திட்டங்களையும் விதைத்துவிடாதபடி காத்தருளும். மன அமைதியுடனும், மிகுந்த சுகத்துடனும் இந்தத் தேர்வுகளை எழுத தயவு செய்யும். கர்த்தாவே. நீர் ஒருவரே உம்மிடத்தில் விசுவாசத்துடன் ஞானத்தைக் கேட்கும் பிள்ளைகளுக்குச் சம்பூரணமாக ஞானத்தைக் கொடுக்கிறவர் என்று அறிந்து, உணர்ந்து உம்மைத் துதிக்கிறேன். பிள்ளைகளின் கவனம் எந்த விதத்திலும் திசைத் திருப்பப்படாது காத்தருளும். காலத்தை அறிந்து ஏற்ற வண்ணமாய் பிரயோஜனப் படுத்திக்கொள்ள கர்த்தாவே, உதவி செய்யும். அவர்கள் படித்த பாடங்கள் மறந்து விடாதிருக்க கர்த்தாவே, தயவாய் உதவி செய்யும். படித்த பாடங்கள் மனதில் பதியவில்லை என்று கலங்காதபடி. கவலைப்படாதபடி இருக்க கிருபை செய்யும். உம்முடைய தயவினால் நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கும் நல்ல தேர்வு முடிவுகளைத் தந்து அவர்களை ஆசீர்வதியும். கர்த்தாவே, மதிப்பெண் குறைந்து விடும் என்று அவிசுவாசப்படாதபடி, அவர்கள் உள்ளத்தில் நிறைவான சமாதானத்தையும், விசுவாசத்தையும் பெருகச் செய்யும். கர்த்தாவே. பிள்ளைகள் தேர்வு எழுதும் இடத்திற்குத் தக்க சமயத்தில் சென்றுவர எந்தத்தடையுமிராதபடி காத்து நடத்தியருளும். அவர்கள் வெற்றி நிறைந்து. மேலான நல்ல படிப்பைப் படிக்க வழி திறந்தருள வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.


E- STORE