ஜெபம்

                                                           கடன் தொல்லை நீங்கி விடுதலை அடைய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். இன்று என்னுடைய வாழ்க்கையில் உள்ள போராட்டமும், பிரச்சனையும் கடன் தொல்லையாகும். நான் அறியாதபடி, உணராதபடி கடன் கிடைத்த இடங்களிலெல்லாம் வட்டி குறைவு என்று கடன் வாங்கியதால் தாங்க முடியாத பாரமாயிருக்கிறது. எனக்கு இருந்த வீட்டை நிலத்தை, நகைகளை விற்று கடனை அடைத்து விடலாம் என்ற தவறான நம்பிக்கையில் கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறேன். கடன் வாங்கின தொகைக்கு வட்டி செலுத்த முடியாதபடியால் புதிய கடனை வாங்கி வட்டியைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு உள்ள கடன் தொகையானது கூடிக்கொண்டே போவதால் சோர்வடைகிறேன். கடன் கொடுத்த மனிதரின் சில வார்த்தைகள் என்னை அதிகமாக துக்கப் படுத்துகிறது. நீதி. 22:7 ல் 'கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை' என்ற வார்த்தை உண்மையானது என்று இப்பொழுது புரிந்து கொண்டேன். கடன்காரன் வீட்டைத் தேடி வரும்போது வீட்டுக்குள் இருந்துகொண்டே, இல்லை, வெளியே போயிருக்கிறார்கள் என்று என் குடும்பத்தாரைப் பொய் சொல்ல வைக்கிறேன். உபா. 15:6 ல் உள்ளபடி 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய். நீயோ கடன் வாங்குவதில்லை...' என்ற வார்த்தையின் ஆசீர்வாதத்தை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறேன். சங். 37:21 ல் துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான் என்ற நிலை இன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்தக் கடன் தொல்லையினால் இரவும் நலமாய்த் துதூங்க முடியவில்லை. ஏன் இந்த வாழ்க்கை, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் வருகிறது. என் உழைப்பெல்லாம் மற்றவர்கள் அனுபவிப்பதற்குப் போய் விடுகிறது. கர்த்தாவே, இன்று நான் இனி கடன் வாங்குவதில்லை என்று உம் பாதத்தில் என்னைத் தாழ்த்துகிறேன். 5 அப்பத்தையும் 2 மீனையும் 5000க்கும் அதிகமானவர்களுக்குப் போதுமானதாக பெருகச் செய்தவரே, இன்று முதல் நான் கையிட்டுச் செய்கிற காரியங்களைப் பெருகச் செய்யும். இந்நாள்வரை என் ஜெபத்தைக் கேட்டு எனக்கும் அற்புதங்களைச் செய்தவரே, இந்த நாளிலும் என் ஜெபத்தைக் கேட்டு என்னை அதிசயம் காணச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். உம்முடைய கிருபைக்காக ஸ்தோத்திரம், உம்முடைய தயவுக்காக ஸ்தோத்திரம். என் கடன் தொல்லை நீங்க எனக்கு உதவி செய்வீர் என்று நம்பி உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஜெபம் கேளும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.


E- STORE